முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » உயிர் காக்கும் புகையிலை!
பொதுவான கட்டுரைகள் - உயிர் காக்கும் புகையிலை!
- எஸ். சக்குபாய்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புகையிலைத் தொழில் நன்கு காலூன்றி வேர்விட்டு விரிந்து பரந்துள்ளது. பணக்கார நாடுகளைப் போலவே ஏழை நாடுகளும் புகைப்பதில் ஆழ்ந்து கிடக்கின்றன. புகையிலையாலும், புகைப்பதாலும் மக்கள் பட்டு வரும் துன்பதுயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் புகையிலை அரக்கனுக்குப் பலியாகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பாக்கட் சிகரெட் வீதம் ஓராண்டுக்குப் புகைப்பவர்களது நுரையீரல்களுக்கு 1225 மி.மீ அளவுக்கு தார் சென்று சேருகிறதாம். தாரில் மட்டும் 4000த்துக்கும் மேற்பட்ட ரசாயனப்பொருட்கள் இருக்கின்றன. அதில் 37 ரசாயனப்பொருட்கள் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை. காற்றில் புகை கலந்து விட்ட பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறுவதில்லை. எனவே புகைக்கும் கணவனின் அருகிலிருக்கும் (கர்ப்பமாக இருக்கும்) பெண்ணும், குழந்தையும் புகை கலந்த காற்றால் பாதிக்கப் படுகின்றனர். அதிகம் புகை பிடிப்பதனால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது.
புகையினால் ஏற்படும் கெடுதலை உணர்ந்து கொண்ட நல்லறிஞர்கள் பலர், பிரசாரத்தின் மூலம் புகையிலையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைத்து வரும் அதே வேளையில், புகையிலையை நல்ல விதமாகப் பயன்படுத்த முடியுமா என்று ஆராயவும் தலைப்பட்டனர். சில பத்தாண்டுகளுக்கு (1979) முன்பாகவே இந்த ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. அதன் பயன்தான் புகையிலிருந்து புரதச் சத்தைப் பிரித்தெடுக்கும் முயற்சி. பூர்வாங்க ஆய்வுகளின் முடிவுகள் மிகவும் நம்பிக்கை தருவதாக உள்ளன. மூன்று வகையான புரதங்கள், புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் குணநலன்கள் ஆராயப்பட்டன.
புகையிலையை ரசாயன முறைக்கு உட்படுத்தி வடித்தெடுக்கும்போது முதலில் கிடைப்பது கரையும் திறனுள்ள நிறம், ருசி, மணம் ஏதுமற்ற புரதமாகும். இது ஓர் அபூர்வமான புரதமாகும். இப் புரதச்சத்து முட்டையின் வெள்ளைக்கரு, பால், சோயா, நவதானியம் இவற்றிலிருக்கும் புரதத்தை விட மேன்மையானது. ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் (கொலஸ்ட்ரால்) குறைக்க வல்லது. டயாலிசிஸில் இருக்கும் சிறுநீரக நோயாளிக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டாவதாகப் பிரிக்கப்படும் புரதம் சத்துமிகுந்த சூப்கள், பானங்கள் தயாரிக்க உதவும். கடைசியாகக் கிடைக்கும் புரதத்தைத் திடவுணவு வகைகளுடன் சேர்த்து உண்ணலாம். கால்நடைகள், கோழிகள் இவற்றிற்குத் தீவனமாகவும் தரலாம். சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட இந்தப் புரதங்கள் இன்னும் சில ஆண்டுகளிலேயே பெருமளவில் தயாரிக்கப்பட்டு உலகச் சந்தைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.
எந்தவிதப் பக்கவிளைவுகளோ, ஒவ்வாமையோ இல்லாத இந்தப் புகையிலைப் புரதங்களை லாபகரமாகத் தயாரிக்கும் காலம் தொலைவில் இல்லை. புகையிலையைப் புரதத்திற்காகப் பயிரிடும்போது இப்போது பயிரிடுவதைவிட நெருக்கமாகப் பயிர் செய்யலாம். அப்போது செலவு ஒரு மடங்கு குறைகிறது; அதே சமயம் அதிலிருந்து கிடைக்கும் புரதத்தின் அளவு 4 மடங்காக அதிகரிக்கிறது. இளஞ்செடிகளில் உள்ள இலைகளில் நிக்கோடின் அளவு மிக மிகக் குறைவு. நேற்று வரை உயிர்க்கொல்லியாக நாம் அறிந்திருந்த இந்தப் புகையிலை இன்று சாப விமோசனம் பெற்று உயிர்க்காக்கும் உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்பட முடியும் என்று ஆராய்ச்சிகள் புலப்படுத்திவிட்டன. ஏ.ட.ய. எனப்படும் கிருமியினால் பெண்களின் கருப்பையில் உண்டாகும் புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளில் ஆண்டுதோறும் இந்த நோய்க்கு இரையாகும் பெண்களின் தொகை 2.5 லட்சமாகும். பயன் கிடைக்க வேண்டுமென்றால் ஒருவருக்கு 3 முறை இத் தடுப்பூசியினைப் போட்டாக வேண்டும். இன்றைய தேதியில் இதற்கு மொத்தம் ரூ.15,000 விலையாகிறது. இது வளரும் நாடுகளைப் பொறுத்தவரை அதிகம்தான். ஆனால் மரபீனித் தொழில்நுட்பம் அடிப்படையில் புதிய புரதத்தை புகையிலையில் உற்பத்தி செய்து, தடுப்பூசி மருந்து தயாரிக்க வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியடைந்தால் மிக மிகக் குறைந்த விலையில் (சில ரூபாய்கள் மட்டுமே) இத் தடுப்பூசியைத் தயாரிக்கலாம். புற்றுநோயை உண்டாக்கும் புகையிலையே வேறொரு புற்றுநோய்க்கு மருந்தைத் தருவது வியப்பல்லவா? புகையிலையின் விதைகளிலிருந்து பெயிண்ட் தொழிலுக்கு வேண்டிய எண்ணெய் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வருகிறது. புகையை ஒழித்துவிட்டால் அத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலகோடித் தொழிலாளிகளை என்ன செய்வது? அதேபோல் புகையிலையைப் பயிர் செய்யும் விவசாயிகள் கதி என்ன என்ற கவலை இனிவேண்டாம்! அப்படியே அவர்களைப் புகையிலையிலிருந்து புரதம் எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தலாம்.
புகை பிடிப்பதாலும், புகையிலையை மெல்லுவதாலும், பொடி போடுவதாலும் ஏற்படும் கேடுகளைச் சில விளம்பரங்கள் மூலம் டி.வி.யில் காட்டி வருகின்றனர். அதற்கு நல்ல பலன் கிட்டியுள்ளதாகச் சொல்கின்றனர். அதே நேரத்தில் சினிமாவில், டிவி தொடர்களில் தோன்றும் நடிகர்கள் சிகரெட் புகைப்பதை ஒரு பெரிய சாதனையாகக் காட்டாமல் இருப்பது - இளவட்டங்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர் காக்கும் புகையிலை! - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - புகை, இந்தப், நல்ல, புகையிலையைப், வரும், புகையிலையை