பொதுவான கட்டுரைகள் - விழித்தெழும் பெண்ணினம்
- ராஜ் இருதயா
வரதட்சிணை எதிர்ப்புப் போர் தொடுத்து இந்தியப் பெண்ணின விடுதலைக்கு ஒரு புதிய முன்னோடியாகச் செயல்படுகிறார்கள் சில துணிச்சல் மிக்க பெண்கள். இது பெண் விடுதலைக்கு ஒரு புதிய அத்தியாயமாக அமைந்து உள்ளது.
வரதட்சிணை அரக்கனின் கொடூர விஸ்வ ரூபங்கள் பெண்களையும், பெண் வீட்டாரையும் வாழ்க்கைக் கடலில் மூழ்கடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. பெண்களின் திருமணம் ஒரு வியாபாரமாக்கப்பட்டிருப்பது இந்திய கலாசாரத்தின் அடிமைப்படுத்தும் கூறுகளில் ஒன்றே. வரதட்சிணை வியாபாரத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் அரசாக, அநீதிக் கை ஓங்கி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
வரதட்சிணைப் போராட்டத்தில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு சில பெண்களின் துணிச்சலான செயல்பாடுகள், பெண் விடுதலையான நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைக்கின்றன. பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற பயந்த உலகில், விவேகமாக, வீரமாகச் செயல்பட்டு உள்ள சில பெண்களே இன்றைய பெண் விடுதலைக்கு வித்தியாசமாக விளக்கம் எழுதி இருக்கின்றார்கள்.
இவர்களின் புதுமையான, புரட்சிச் செயல்பாடுகள் பெண்களை அடிமைப்படுத்தும் வரதட்சிணையின் அநீத அமைப்பு முறைகளை அம்பலப்படுத்தி உள்ளன. நுகர்வுவெறிக் கலாசாரம் நிறைந்த உலகமயமாக்கலில், வரதட்சிணை வியாபாரம் ஓகோவென ஓடிக்கொண்டு இருக்கின்றது. ஐஏஎஸ் அதிகாரி மாப்பிள்ளைக்கு 50 லட்சம், டாக்டர் மாப்பிள்ளைக்கு 40 லட்சம், கம்ப்யூட்டர் - பொறியியல் கற்ற மாப்பிள்ளைக்கு 30 லட்சம் என்று திருமணச் சந்தையில் மாப்பிள்ளைகள் விலை போகும் சரக்குகளாக நிறுத்தப்படுகின்றனர். படித்தவர்களும் கற்ற முட்டாள்களாக மாற்றப்பட தங்களை அனுமதிப்பது அவர்கள் படித்த கல்வியையே அவமதிப்பதாகும். பாமர கிராம மக்களிடையேயும் வரதட்சிணை தலைவிரித்து ஆடுவதை மறுக்கமுடியாது. இன்று இந்தியாவிலே மொழி, மதம், ஜாதி, கல்வி, மாநிலம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைப்பது வரதட்சிணையே.
வரதட்சிணை வாங்கும் மாப்பிள்ளைகள் கவனிக்க: திருமணச் சந்தையிலே விலை போகின்றவர்கள் பெண்கள் அல்ல. நீங்கள் தான்.
திருமணச் சந்தையில் சரக்காக விற்கப்படுவதைத் தன்மானம், மனித மாண்பு, சுய கௌரவம் உள்ள எந்த இளைஞனும் கண்டு வெட்கப்படுவான். வரதட்சிணைக்கு நான் எதிரியே; வரதட்சிணை வாங்குவது நான் அல்ல, என் வீட்டார் தான் விரும்பிக் கேட்கின்றார்கள் என்ற தேய்ந்த ரெக்கார்டை ஓட்டிக் கொண்டு, போலி புரட்சி பேசுவதை நிறுத்துங்கள். அநீத அடிமை அமைப்பிற்கு நீங்கள் அடிமைகள் ஆக்கப்படுவதை உணர்ந்து சுதந்திரம், சுய சிந்தனை, சுய கௌரவம் காக்கும் மனித நேய இளைஞனாக மாற உங்களுக்கு துணிவு இருந்தால் புதிய சமுதாயத்தின் விருட்சங்களாக மாறுவீர்கள்!
வரதட்சிணைக் கொடுமையால் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 9,500 பெண்கள் இறக்கின்றனர். 1990-2000-த்தில் மட்டும் வரதட்சிணைச் சாவு 1980-1990-ல் இருந்ததை விட 39 விழுக்காடு உயர்ந்துள்ளது. வரதட்சிணை வன்கொடுமைகள் 225 விழுக்காடு ஏறியுள்ளது. பெங்களூர் போன்ற ஐடி நகரத்தில் ஒவ்வொரு நாளும் நான்கு பெண்கள் வரதட்சிணைக்குப் பலியாகின்றனர்.
வரதட்சிணை கொடுத்தும் வாழா வெட்டியாக மாற்றப்படுபவர்கள் பெண்களே! வரதட்சிணை கொடுக்க முடியாததால் திருமணச் சந்தையில் விலை போகாமல் தங்களது வாழ்க்கையை வேதனையில் அன்றாடம் நகர்த்திக் கொண்டு இருப்பவர்களும் பெண்களே! இந்தத் துயரத்திற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா? புரட்சி, மாற்றம் என்பவை எல்லாம் அடிபட்ட மக்களிடம் இருந்தே வெளிப்பட்டிருப்பது வரலாற்று உண்மை. பெண்களுக்கு எதிரான வரதட்சிணை வன்கொடுமை ஒழிக்கப்பட, முதலில் முன்வர வேண்டியவர்கள் பெண்களே!
சட்டம் தருகின்ற வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திட, விவேகமும் துணிச்சலும் நிறைந்த வீரப் பெண்மணிகள் வரதட்சிணை பேசப்படும் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி சட்ட நீதி பெற்றிடத் துணிவோடு செயல்பட வேண்டும். வரதட்சிணை கேட்கும் மாப்பிள்ளை வீட்டார்கள் இன்னும் அதிகமாக கைது செய்யப்படுவது வரதட்சிணை ஒழிப்புக்கு உத்வேகம் அளிக்கும்.
கல்யாணம் ஆகாத பெண்ணே - உன்
கதிதனை நீ நிச்சயம் செய்க கண்ணே!
என்னும் பாரதிதாசனின் வரிகளை வரலாறாக மாற்றிட வீரப் பெண்மணிகள் விழித்தெழுந்து செயல் படட்டும்.
நன்றி : (கட்டுரை ஆசிரியர் சென்னை அருட்கடல் இறையியல் மையத்தின் பேராசிரியர்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழித்தெழும் பெண்ணினம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வரதட்சிணை, திருமணச், பெண், பெண்களே, பெண்கள், சந்தையில், விலை, விடுதலைக்கு, லட்சம், மாப்பிள்ளைக்கு, கொண்டு