முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » என்ன ஆகும் எந்திரிச்சி வந்தா!
பொதுவான கட்டுரைகள் - என்ன ஆகும் எந்திரிச்சி வந்தா!
- கி.ரா. பக்கங்கள்
சாலை வழியாகப் போகிற வருகிற வாகனாதிகளை மறித்து நிறுத்தி, குறிப்பிட்ட ஒரு தொகையை ''வச்சிட்டுப் போ'' என்று கிட்டத்தட்ட ''ஆயுள் முழுக்க'' தண்டம் வசூல் பண்ணுகிறதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
முதல் முதலில் இதைப் பார்க்க நேர்ந்த எனக்கு ஏன் இப்படிப் பண்றாங்க என்ற ஒரு திகைப்பு; பிறகு ஒரு எரிச்சல் எல்லாம் ஏற்பட்டது. விசாரித்ததில் ஒருத்தர் சொன்னார். ''பாலம் கட்டியிருக்காம்ல்ல; கையில இருந்து கூடக் கொஞ்சம் போட்டிருப்போம், ஆக சர்க்கார்லயிருந்து அந்தத் தொகைய நீ வசூலிச்சுக்கொன்னு சொல்லித்தாம். இவனுக வசூல்ப் பண்றானுவ'' என்றார்.
ஆனா, இவங்க எப்பப் பாத்தாலுமில்ல வசூல்ப் பண்ணிக்கிட்டே இருக்காம். இவங்க இதுவரை வசூல்ப் பண்ணுவதை வச்சே பத்துப் பாலம் கட்டிறலாம் போலிருக்கெ!'' இதைக் கேட்டு பேருந்தினுள் இருந்தவர்கள் சிரித்தார்கள்.
இந்த வசூலைப்பற்றி என்ன நியாயம் சொன்னாலும் இந்த மிக நீண்ட வசூல் ஆட்சிக் கட்டிலில் ''கால் நீட்டிச் சாய்ந்து உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டிருக்கும்'' அரசியல் கட்சிகள் பேரிலும் அதிகாரிகள் பேரிலும் மக்களுக்கு ஒரு எரிச்சலையும் கோபத்தையும் நம்பிக்கை இன்மையையும் உண்டாக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை. ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு பெரியவர் எங்களுக்குச் சொன்ன ஒரு கதை இந்தச் சமயத்தில் காரணமில்லாமல் ஞாபகத்துக்கு வருகிறது.
அந்தக் காலத்துல, மங்கம்மா சாலை வழியாக சந்தைகளுக்கு கூண்டுவண்டிகளில் பொருள்களை ஏற்றிக்கொண்டு சாரைசாரையாகப் (லாரிகள் ஏற்படாத காலம்) போகவும் வரவுமாக இருப்பார்கள். சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் அப்போது ஊர்ப்பெருக்கம் கிடையாது. அதனால் மனித நடமாட்டமும் இருக்காது. பார்க்கும் இடங்களிலெல்லாம் காடுகள்தான் தெரியும்.
கப்பிச் சாலை ஏற்படுவதுக்கு முன்னால் சரள்ச் சாலையும் மண்சாலையுமாகத்தான் இருந்தது. குறிப்பிட்ட முக்கியமான இடங்களில் மட்டுந்தான் பொடீக்கற்கள் விரிக்கப்பட்டு அதன்மேல் செம்மண் விரிக்கப்பட்ட கப்பிச்சாலைகள் உண்டு.
இதில் ஒரு அத்துவானக் காட்டின் ஊடாகச் செல்லும் சாலைவழியாக இந்தப் பாரவண்டிகள் போகவர இருந்தன. சாலையை ஒட்டி ஒரு ஆலமரம். மரத்துக்கும் சாலைக்கும் நடுவில் கொஞ்சம் உயரமான மேடு. சாலைக்கு மறுபுறம் நீண்ட, உயரமான பாறை. இந்த இரண்டுக்கும் நடுவில்தான் வண்டிகள் போய், வர வேண்டும். மரத்தின் அடியில் அதை ஒட்டி இருந்த அந்த மண்மேட்டில் ஒருநாள் ஒர ''திடீர்ப்பிள்ளையார்'' போல ஒரு மனுசன் உட்கார்ந்திருந்தான். பீமசேனன் போல உருண்டு திரண்ட உடம்பு, தூரத்திலிருந்து பார்க்கும்போது அவனுடைய கொண்டையும் மீசையும்தான் தெரியும். அடுத்தது அவனடைய திரட்டுவிழிகள், சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் பாட்டு வசத்தில் ஒரு பட்டியல்க் கல். அதன் மேல் ஒரு நீண்ட வீச்சறுவாள்!
உலக நடப்பியலில் பெரும்பாலும் இப்படியான கம்பீரமான மனுசர்களுக்குக் குரல்மட்டும் கீச்சுக் குரலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் படுபாவிமனுசனுக்கோ உருவத்தைப் பார்க்கிலும் துணிப்பாகக் கர் என்று வாய்த்திருந்தது குரல். அவன் இவர்களைப் பார்த்த பார்வையிலேயே வண்டிகளை அவனுக்கு நெருக்கத்தில் நிப்பாட்டினார்கள். அவர்களுடைய கைகளில் மாடுகளை இழுத்து நிறுத்திய பிடிகயிறுகள். ரொம்பச் சரி என்பதுபோல இவனுடைய தலைஅசைப்பு, ம்.. என்று முனகும் இளக்காரமான குரல்..
''என்ன வச்சிருக்கெ மடியில?''
''பாக்கு வெத்திலெ''
''அதெ நீயெ வச்சிக்கொ; பையெ எடுடா.''
சிறிய பொட்டணமாகத் தெரிந்த துணிப்பையை மடியிலிருந்து எடுத்தான் வண்டியோட்டி. அப்போது நாணயங்கள் மட்டும்தான். நோட்டுகள் கிடையாது.
''எம்புட்டுப் பணம் வச்சிருக்கெ''
''முப்பது'' பணம்''
''ஒத்தெப் பணத்தெ மட்டும் எடுத்து இந்த அறுவா மேலெ வச்சிட்டு நகரு.''
உத்தரவு என்பது போலத் தலையசைத்து விட்டு மரியாதையாக ஒரு பணத்தை மட்டும் எடுத்து வைத்துவிட்டு நகர்ந்தது வண்டி. அடுத்த வண்டியும் அப்படியெ.
நல்லவேளை. அம்புட்டுப் பணத்தையும் குடுத்துட்டுப் போடானு சொல்லாமெ மகராசன் ஒத்தப் பணத்தோட விட்டானெ! இப்படி நினைத்துத் திருப்திப்பட்டார்கள் வண்டிக்காரர்கள். இப்படியாக சாலை வழியாக சந்தைகளுக்குப் போகவர உள்ள வண்டிகளுக்கும் ஒவ்வொரு பணம் என்று வசூல் செய்தான் அந்த அறுவாக்காரன்.
அந்தக் காலத்திய ஒரு வெள்ளிப் பணத்தின் மதிப்பு மிக அதிகம். ஆரம்பத்தில் எந்தவித முணு முணுப்பும் இல்லாமல் இந்த வசூல் இதமாக நடந்து வந்தது.
நாளாக ஆக வண்டிக்காரர்களுக்கு என்ன செய்ய என்று தெரியாமல் மனசுக்குள் சங்கடப்பட்டுக் கொண்டே கொடுத்து வந்தார்கள். தப்பித்து விலகிப் போக வேற வண்டிப் பாதைகளும் கிட்டத்தில் இல்லை. சந்தைகளில் சரக்குகளை இறக்கிவைத்து விட்டு மறு பாரத்துக்குக் காத்திருக்கும் போதும் கொண்டு வந்த கட்டுச் சோற்றுப் பொட்டணங்களை அவிழ்க்கும்போதும் இடைவழிகளில் தங்கும் வண்டிப் பேட்டைகளில் ஓய்வின்போதும் அவர்களிடையே அந்த அறுவாக்காரனைப் பற்றிய பேச்சு எதாவது ஒருவடிவத்தில் வந்துவிடும். அந்த வண்டிக்காரர்களில் ரெண்டுபேர் ''தெக்கத்திக்காரர்கள்'' என்று இருந்தார்கள். வெகுதுரப் பயணம் என்பதால் மாற்றி மாற்றி வண்டி ஓட்டுவார்கள் பேச்சுத் துணைக்கும் வசதி.
''லேய், அந்த அறுவாக்காரனை கவனிச்சியா, தாயோளிது, ராஜா கணக்கவில்லா இருக்காம்!''
''ஆமா, ராஜாவும் ஒரு வசூல்க்காரந்தானெ வே...''
''எப்பிடி இவம் திடீர்னு முளைச்சாம்; நட்ட நடூப் பாதையில வந்து!''
''அவனுக்குனு அமைஞ்ச இடத்தெப் பாரேம்; எதுக்க ஒரு வண்டி வந்தாலும் விலகிப் போக முடியாம அப்பிடி ஒரு இடுக்காட்டமா!!''
''அதுசரி; அப்படி என்ன அசையாமெ குத்துக்கல் போல அதே சீரா உக்காந்திருக்காம் எப்பப் பாத்தாலும்?'' இப்படித்தான் அவனுக்கு எதிராக ஒரு எதிப்பேச்சு இருந்தது ஆரம்பத்தில் பற்றி எரியிறதுக்கு முன்னாடி புகையுமெ அப்படிப் புகைந்து கொண்டே இருந்தது.
''ஏம்பா உக்காந்தவம் எந்திரிக்க அனயம் நேரம் ஆகுமா?''
''ஏய்.... அவம் எந்திரிக்க வேண்டாம் டேய்; உக்காந்த மானிக்கே அந்த வீச்சறுவாளை எடுத்து வீசுனாம்னு வையி, நம்ம கதெ என்ன ஆகும்!''
''அட வீசி எறிஞ்சா, லாயக்கா விலகிட்டுப் போறம்; இருக்கிற ஒத்த அறுவாளெ வீசி எறிஞ்சிட்டுப் பெறகு பொட்டியாரு என்ன பண்ணுவானாம்?''
''ஏ, பக்கத்துல கல்லுகளெக் குமிச்சி வச்சிருப்பாம்வே; அம்புட்டுத் தெம்மாளியாவா இருப்பாம் இந்த எடுப்பு எடுத்தவம்?''
சாமப்பொழுது கடந்துவிட்டால் அறுவாக்காரனை அந்த இடத்துல பார்க்க முடியாது. வெட்டனு விடிஞ்சிட்டா சக்குனு வந்து உக்காந்துருவாம் பாவிப் பயல்.
அந்தத் தெக்கத்திக்காரர்களில் ஒருத்தனுக்கு, எப்பிடியாச்சும் இந்த அறுவாக்காரனை வேவு பாக்கணும்னு தோன்றிவிட்டது.
ஒரு அந்தி நேரத்தில், அந்த வண்டித் தொடர் அந்த இடத்துக்கு வருவதற்குக் கொஞ்ச தூரத்திலேயே அதில் ஒருத்தன் இறங்கிக்கொண்டான். வண்டிகள் வழக்கம்போல் ''தெண்டம்'' தந்துவிட்டுப் போய்விட்டன.
அறுவாக்காரனுக்குத் தெரியாமல் இவன் பின்னாலகூடி வந்து அந்த ஆலமரத்தில் ஏறி, வசதியான ஒரு தாடிக் கொப்பில் உக்கார்ந்து கொண்டான். நேரம் இருட்டப் போகும்வேளை. இவனைப் போலவே ஒரு மொக்கச்சிப் பொம்பளை, ''மாமோவ் ஏ மாமோவ்'' என்று செல்லமாக் கூப்பிட்டுக் கொண்டே வந்து அவனுக்குப் பக்கத்தில் உக்காந்து அவனுக்குப் குடிக்க ஏதோ தந்து, பிறகு இருவரும் அவள் கொண்டு வந்த பிளாப்பெட்டியிலிருந்து எடுத்து எடுத்துத் தின்பது தெரிந்தது. பிறகு இருவரும் வெத்திலை போட்டுக் கொண்டார்கள்.
அந்தப் பெட்டியினுள், கொண்டுவந்த சிறு பாத்திரங்களைப் போட்டுக்கொண்டு, வசூலான பணத்தைப் பெட்டணமாகக் கட்டி எடுத்து வைத்துக் கொண்டார்கள். பிறகு அந்த அறுவாளை எடுத்து, எடுத்துக்கொண்டு போக வசதியாக மரத்தின் மேல் கொத்தி வைத்துவிட்டு அவன் அவனைப் போய் ஆவிசேர்த்துக் கட்டிப் பிடித்தாள்.
தாடிக் கொப்பில் உக்காந்து கொண்டிருந்வன். ''அட பயபிள்ளைகளா, நல்லா இருட்டுறதுக்கு முன்னாடி என்னெ கொள்ளெ போகுது!'' என்று தான் நினைத்தான். பிறகுதாம் தெரிந்தது பொட்டியாருடை பூளாக்கு!
''அட பாவிப்பயலே குடியக் கெடுத்தானே...'' அவனுடைய இடுப்புக் கீழே ஆடித் தொங்கியது ஆலமரத்தின் மெல்லிய விழுதுபோல இரண்டு குழந்தைக் கால்கள்!!
அவனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள். அந்த மொக்கச்சி. பெட்டியை அவள் இன்னொரு கையில் எடுத்துக்கொள்ள, மரத்தில் கொத்தி வைக்கப்பட்டிருந்த வீச்சறுவாளை, இடுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ''பிள்ளையாண்டான்'' எடுத்துக் கொண்டான்.
தெத்திக்காரனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். ''யானை குசுவுது விலகிக்கோங்கோ யானை குசுவுது விலகிக்கோங்க'' என்கிற கதைதான் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அவர்கள் போனபிறகு இவன் கீழெ இறங்கி நடந்துபோய் தனது வண்டிகளோடு சேர்ந்து கொண்டான்.
ரெண்டுநாள் கழித்து அந்தக் கூண்டு வண்டிகளின் வரிசை அதே சாலையில் திரும்பி வந்தன. வரிசையின் முன்னத்தி வண்டியில் இதே தெக்கத்திக்காரர்கள் வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள்.
அறுவாள் மீசைக்காரன் அதே தோரனையில் கனகம்பீரமாக பாத்துக் கொண்டிருக்கிறான் வரும் வண்டிக்காரர்களை, வண்டிகள் வந்து கொஞ்சம் தள்ளியே நின்றன.
என்னது! என்பதுபோல, கொஞ்சம் தலைசாய்ந்தது அந்தத் திருட்டு முழியால் ஒரு முழி முழித்தான். இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தான். அழுத்தி ஒரு செருமல் செருமிக்கொண்டான்.
தொண்டையிலிருந்து ''ம்''... ஒலி மட்டும் ஒரு தலையசைப்புடன் வெளிவந்தது. பிறகு,
''என்னடா பயபிள்ளைகளா; என்னாச்சி ஒங்களுக்கு?''
''ஒண்ணும் ஆகலெ!'' தெக்கத்திக்காரன் பதில்.
''கொண்டாந்து தர்றது?''
''அப்போ பணத்தை கொண்டாந்து தர்றது?''
''தரலாந்தாம்....''
''ம்''
''பெருங்கால் பிடிச்சிக்கிட்டது. சித்தெ நீங்கதாம் வந்து வாங்கிட்டுப் போயிருங்களேம்...''
இப்படி ஒரு ''குண்டு'' தன்னைப் பார்த்து வரும் என்று அறுவாக்காரன் சொப்பனத்துலயும் எதிர்பார்த்திருக்கமாட்டான்!
''செரி; செரி. ஒனக்குத்தாம் பெருங்கால் பிடிச்சிருக்கு; அந்நா ஓம் பக்கத்துல உக்காந்திருக்கானெ அவனுக்கு என்ன வந்தது?''
''அவனுக்கு அப்பிடித்தானாம்''
கோவம் வந்துவிட்டது இவனுக்கு... ''லேய் சிறுக்கிபிள்ளைகளா என்னெப் பாத்தா ஒங்களுக்கு எளக்காரமாத் தெரியுதா; இந்தமானைக்கு எந்திரிச்சி வந்தா ஒங்க கெதி என்ன ஆகும்னு தெரியுமாலே''
''தெரியும்! அதனாலெதாம் சொல்றோம்; வந்து வாங்கிட்டுப் போயிருங்கனுட்டு'' அறுவாளை எடுத்தான். உயர்த்திக் காட்டி ''இப்பொ நீங்க இங்கெ வரலே, நடக்கதே வேறெ''
அவர்கள் அசையாமல் அப்படியே இருந்து கொண்டு அவனுடைய ''ஆட்டத்தை'' பார்த்துக் கொண்டே கொஞ்சம் இருந்தார்கள்.
''இப்பொ எந்திரிச்சிவந்தா என்ன ஆகும் தெரியுமா'' என்பதையே மாறிமாறிச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே அறுவாளை ஆட்டி ஆட்டி அவன் போடுகிற அந்த ஆதாளியப் பார்க்க சிரிப்பாகவும் பரிதாகமாகவும் இருந்தது அவர்களுக்கு. இதற்குள் வண்டிக்காரர்கள் எல்லோரும் இறங்கி வந்து கூடிவிட்டார்கள் அவனைச் சுற்றி.
அந்த ''வீரன்'' இப்பொ ஒரு வேடிக்கைப் பொருளாகி விட்டான். அறுவாக்காரனுக்கு பயம் வந்து விட்டது. அவர்களுடைய எள்ளான சிரிப்பைப் பார்த்து. ஆட்டம் நின்றது. அவர்கள் காலடியில் அரிவாளைப் போட்டு விட்டு, அவமானத்தால் நாணமும் கண்ணீரும் வந்தது. பரும் உடல் குலுங்க அழுதபடியே தலைக்குமேல் ரெண்டு கைகளையும் எடுத்துவைத்துக் கும்பிட்டான்.
அப்படியே மண்ணில் முகம்படி ''காப்பாத்தணும் என்னக் காப்பாத்தணும் என்று வாய்விட்டுக் கேட்டான்.
''என்னோட பிழைப்பு இப்படி ஆயிறிச்சி'' என்றான். தெக்கத்திக்காரர்கள் நெருங்கிவந்து அவனைத் தேற்றினார்கள்.
பயனில்லாத தனது சூம்பிய கால்களைக் காட்டினான். பார்த்ததவர்களுக்கு அப்போ என்றிருந்தது. அவர்களில் ஒரு பெரியவர் சொன்னார்:
''நீ என்ன செய்வெ. கடவுள் ஒன்னெ இப்படிப் படைச் சதுக்கு சரீ; போகுது. அறுவாளெத் தூரப் போட்டுட்டு, நீ உக்காந்துட்டு மட்டும் இரி. ஏண்டதெ நாங்க ஒம் மடியில போட்டுட்டுப் போறொம்.''
வண்டிக்கு அரைப்பணம் வீத்ம் தந்துவிட்டுப் போனார்கள்.
அதிலிருந்து அந்த மண்மேட்டில் அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் எல்லா வண்டிக்காரர்களும் போகிற போக்கில் அரைப் பணம் கால்பணம் என்று வீசிவிட்டுப் போவார்கள். அதன்பிறகு, கொஞ்ச நாள் கழித்து அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு சாமிசிலை வந்து உட்கார்ந்தது.
அட! என்று சொல்லி அதே காசுகளை வண்டிக்காரர்களோடு போகிற வருகிறவர்களும் வீசிவிட்டு ஒரு கும்பிடும் போட்டுவிட்டுப் போனார்கள்.
அதன்பிறகு கொஞ்சநேரம் கழித்து ஒரு உண்டியல் பெட்டியும் வந்து உட்கார்ந்து கொண்டது.
பாரம் சுமக்கும் மாட்டுவண்டிகள் மறைந்து லாரிகள் ஓட ஆரம்பித்து விட்டன. லாரி ஓட்டுனர்களும் போற போக்கில் காசுகடிளை எறிந்துவிட்டுப் போனார்கள்.
இப்போது ஒரு கோயில் முளைத்து பூசாரியும் வந்துவிட்டான். இப்படித்தான் கதை முடிந்து, கத்தரிக்காய் காய்க்கிறது!
நன்றி: தீராநதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்ன ஆகும் எந்திரிச்சி வந்தா! - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அந்த, வந்து, என்ன, எடுத்து, அவனுக்கு, கொஞ்சம், கொண்டு, அவன், பிறகு, பணம், வந்தது, சாலை, கொண்டான், மட்டும், கொண்டே, வசூல், வந்த, அறுவாக்காரனை, இப்பொ, போனார்கள், கழித்து, அறுவாளை, போகிற, தெக்கத்திக்காரர்கள், விட்டு, அந்தக், தெரியும், முன்னால், உட்கார்ந்து, நீண்ட, வண்டிகள், அந்தத், வண்டி, வசூல்ப், பார்க்க, அவனுடைய, இப்படி