முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » கிரிமினல் அரசியலுக்குப் பரிவா?
பொதுவான கட்டுரைகள் - கிரிமினல் அரசியலுக்குப் பரிவா?
இந்திய உயர்நிலை நீதிமன்றங்களில் பொதுநலன் சம்பந்தப்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்து கொள்வதற்கான நெறிமுறைகள் இருந்துவருவதால், பல்வேறு பிரச்சினைகளில் தீர்வுக்கு வழிபிறக்க ஏதுவாகிறது. ஆனால், இந்த நெறிமுறைகளை அற்பக் காரணங்களுக்காகவோ அல்லது விளம்பரவெளிச்சத்தைப் பெறுவதற்கான குறுக்கு வழியாகவோ எவராவது கடைப்பிடிக்கத் துணிந்தால் நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்கொள்ளவும் நேரிடும்.
அப்படியிருக்க, கிரிமினல் அரசியல்வாதிகள் மீது பரிவு காட்டக்கூடிய தோரணையில், உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் செய்து கொண்ட பொதுநலன் சம்பந்தப்பட்ட மனு ஒன்று விசாரணைக்கு வந்தபொழுது, நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருப்பது ஒருவகையில் ஆச்சரியமே! தற்பொழுது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 மற்றும் 9-வது பிரிவுகள் கிரிமினல் பேர்வழிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்கின்றன. கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களை - தேர்தல்களில் போட்டியிடத் தகுதியற்றவர்களாக இப்பிரிவுகள் நிர்ணயிக்கின்றன. இந்த இரு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே நீக்கிவிடவேண்டும் என பெண் வழக்கறிஞரின் மனு கோருகிறது.
இம்மனுவை பொதுநலன் சம்பந்தப்பட்டதாக எப்படிக் கருதமுடியும்? வேண்டுமானால் கிரிமினல் பேர்வழிகள் அல்லது கிரிமினல் அரசியல்வாதிகள் சார்பில் அவர்களுக்காக - அவர்களுடைய நலன்களைக் கருதித் தொடரப்பட்ட வழக்காக வேண்டுமானால் இதனைக் கருதலாம்.
முதலில், சட்டத்தில் இந்த இரு பிரிவுகளும் சேர்க்கப்பட்டிருப்பது எதற்காக? கிரிமினல் பேர்வழிகள் அல்லது கிரிமினல் அரசியல்வாதிகளால் பொதுவாழ்வு சீரழிவதை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து நிறுத்துவதற்காகத்தான். சட்டத்துக்கு விரோதமான குற்றங்களைச் செய்தவர்கள் - சட்டங்களை இயற்றக்கூடிய அதிகாரம் படைத்த - இறையாண்மையுடைய நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளில் கௌரவமான மக்கள் பிரதிநிதிகளாக அமர்வதை அனுமதிக்கலாமா? இதைவிட ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் வேறு எந்த விதத்திலும் இழிவுபடுத்த முடியாது. சட்ட ஆட்சிக்கு ஆக்கம் சேர்க்கக்கூடிய தொழிலில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் ஒருவரே - கிரிமினல் பேர்வழிகள் மீது பரிவுகாட்டக்கூடிய விதத்தில் இப்படி ஒரு மனுவை செய்து கொண்டிருப்பது வினோதமே!
ஆயினும் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு - இம்மனுவில் கண்டிருந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. அது மட்டுமன்றி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8, 9-வது பிரிவுகளை நீக்கினால், அதனால் நாசகர விளைவுகள் ஏற்படும்'' என்று நீதிபதிகள் எச்சரித்ததுடன் நிற்கவில்லை. கிரிமினல் பேர்வழிகள் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக இப்போது அமலில் உள்ள சட்ட விதிமுறைகளை மேலும் கடுமையாக்குமாறு கோரக்கூடிய விதத்தில் இந்த மனுவைத் திருத்தி அமைத்து தாக்கல் செய்யுமாறு'' நீதிபதிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் கிரிமினல் அரசியலுக்கு முடிவு கட்டுவதில் கண்டிப்புக் காட்டுவது எவ்வளவு அவசியம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்த்தியுள்ளது. தற்போதைய தேர்தல் நெறிமுறைகளின்படி, தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் ஒவ்வொருவரும் அவருக்குக் கிரிமினல் பின்னணி இருந்தால் அந்த விவரங்களை வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தில் தருவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஆக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு அனுசரணையான விதத்தில் இப்படி ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்திருப்பதே அவலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரிமினல் அரசியலுக்குப் பரிவா? - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கிரிமினல், பேர்வழிகள், அல்லது, சட்ட, விதத்தில், பொதுநலன், செய்து, தாக்கல், மக்கள்