முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » மூலிகைச் சாகுபடியில் அவல நிலை
பொருளாதாரக் கட்டுரைகள் - மூலிகைச் சாகுபடியில் அவல நிலை
இந்தியா - பரந்த பெரிய நாடு மட்டுமல்ல. பலவகையான தட்பவெப்ப நிலவரங்களையும் பல்வேறு மண்பாங்குகளையும் கொண்ட பூமி. வடக்கே இமயச் சாரலிலிருந்து தெற்கே குமரிமுனை வரையில் வெவ்வேறு விதத் தாவர இனங்கள் மண்டிக் கிடக்கின்றன. இவற்றுள் அபூர்வ மூலிகைகளும் அடக்கம். பாரதத்தின் இயற்கை வளத்தின் தனி அழகு இது.
அதிலும் குறிப்பாக இமயச் சாரல்களிலும் தென்னகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அபூர்வ மூலிகைச் செடிகள் நிறைந்துள்ளன.
ஆயினும் மூலிகைச் செடி வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு முறையான திட்டங்கள் இல்லாததால் உலகச் சந்தையில் நமது பங்கு இந்த அம்சத்தில் குறைவாகவே இருந்து வருகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மூலிகைப் பொருளியல் துறையின் ஆய்வுகளிலிருந்து இந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது. பல்வேறு மருந்துகள் தயாரிப்புக்கும் அழகுச் சாதனங்கள் உற்பத்திக்கும் பயன்படக்கூடிய மூலிகைச் செடிகளின் ரகங்கள் சுமார் 8,000 வரை நமது நாட்டில் இருந்து வருகின்றன. இவை அபூர்வ ரகங்களும் கூட.
பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலுள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் நமது நாட்டு மூலிகைச் சாறுகளை வாங்குவதில் அண்மைக்காலத்தில் மிகுந்த சிரத்தை காட்டி வருகின்றன. இம் மூலிகைகளை - இந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யாமல், இத்தாலி நிறுவனங்கள் மூலம் அக் கம்பெனிகள் இறக்குமதி செய்து வருகின்றன.
உலகெங்குமுள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான முக்கிய மூலிகைப் பொருள்களில் 40 சதவிகிதம் இந்தியாவிலும் சீனாவிலும் கிடைக்கின்றன. ஆயினும் சர்வதேச மூலிகைச் சந்தையில் சீனாவே முதலிடத்தை வகித்து வருகிறது. இந்தியாவோ இதில் இருக்குமிடமே தெரியவில்லை.
மருந்து தயாரிப்புக்கு உலக அளவில் ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மூலிகைகள் தேவைப்படுகின்றன. ஆனால் இதில் இந்தியாவைச் சேர்ந்த மூலிகை நிறுவனங்களின் பங்கு தற்பொழுது ரூ. 1,480 கோடி மட்டுமே. இதற்கு என்ன காரணம்? சாகுபடிக் கட்டத்திலிருந்து ஏற்றுமதிக் கட்டம் வரை தற்பொழுது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. சாகுபடியிலும் பதனிடும் முறைகளிலும் நவீன உத்திகளை முறைப்படிக் கடைப்பிடித்தால் மூலிகைகள் ஏற்றுமதி மூலம் ரூ. 4,000 கோடிக்கும் அதிகமாக அன்னியச் செலாவணியை நமது நாடு ஈட்டுவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
நமது நாட்டில் மூலிகைச் செடிகள் பெரும்பாலும் காடுகள், மலைச்சாரல்களிலிருந்து பெறப்படுகின்றன. முறையாகச் சில விவசாயிகளே சாகுபடி செய்கிறார்கள். நாடு முழுவதிலும் தரிசு நிலங்கள் ஏராளமாகப் பொட்டல்களாகக் கிடந்து வருகின்றன. அந்த மண்பாங்குக்கு ஏற்ற மூலிகை ரகங்களை விவசாய நிபுணர்களின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்து முறையாகப் பயிர் செய்தால் உலக அரங்கில் நம்மால் பெரிய இடத்தை நிச்சயம் கைப்பற்ற முடியும்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு அவலமும் களையப்பட வேண்டும். மூலிகைச் செடிகளை முறையாகப் பயிரிடுகின்ற விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதில்லை. ஏனெனில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள கம்பெனிகளும் இடைத்தரகர்களும் மூலிகைப் பொருள்களை விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்து, ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கொள்ளை விலையில் விற்று வருகிறார்கள். இதனால் விவசாயிகளிடையே மூலிகைச் சாகுபடியில் ஆர்வம் குறைந்து வருவதில் வியப்பில்லை. இந்நிலையில் சாகுபடிக் கட்டத்திலிருந்து ஏற்றுமதி வரையில் நிலவரங்களைத் திருத்தி அமைக்க அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்தாலொழிய, சர்வதேசச் சந்தையில் நமக்குரிய இடத்தைப் பிடிப்பது சிரமமே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூலிகைச் சாகுபடியில் அவல நிலை - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - மூலிகைச், நமது, வருகின்றன, ஏற்றுமதி, மூலிகைப், சந்தையில், அபூர்வ, நாடு