முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » பரமார்த்த குரு கதைகள் » தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது
பரமார்த்த குரு கதைகள் - தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது
திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.
குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி.
போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும் வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள், என்றார், பரமார்த்தர்.
அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர்.
குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன்.
குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால் எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள்.
சுரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத் திலகம் இட்டு அனுப்பினார், குரு.
படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.
நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி.
செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான்.
தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார்.
ஓகோ! மன்னருகூகு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி.
தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார்.
அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான்.
அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி.
அரசாங்க வைத்தியரிடம் போனான், மடையன்.
நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன், என்று கூறினான்.
சரி... சீக்கிரம் ஓடிப் போய் சில மூலிகைகளைப் பறித்து வா, என்றார், வைத்தியர்.
எப்படியும் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று நினைத்தான், மடையன். அதனால், நிதானமாக எழுந்து, நொண்டி போல நடித்தான்.
அடப்பாவி! பாம்பு கடித்த ஆளுக்குப் பச்சிலை பறித்து வரச் சொன்னால், இப்படி நொண்டுகிறாயே? என்று திட்டினார், வைத்தியர்.
மடையனுக்குக் கோபம் ஏற்பட்டது. யாரைப் பார்த்து நொண்டி என்றாய்? இதோ பார் என் பலத்தை, என்றபடி தன் கால்களால் வைத்தியரை எட்டி உதைத்தான்.
தூரப் போய் விழுந்த வைத்தியர், யாரங்கே... என்னை ஏமாற்றிய இவனைத் தூணில் கட்டி வைத்து, சுற்றிலும் நூறு கழுதைகளை அவிழ்த்து விடுங்கள். எல்லாம் சேர்ந்து இவனை உதைக்கட்டும் என்று ஆணையிட்டார்.
தலைமைப் புலவரிடம் போய் சேர்ந்தான், முட்டாள்.
பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை, என்றார் புலவர்.
இவரிடம் குருடனைப் போல் நடித்தால் கடைசி வரையில் வேலையில் இருக்கலாம், என்று முடிவு செய்தான், முட்டாள்.
புலவர் ஓர் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முட்டாளோ, ஒரு கண்ணை மூடிக் கொண்டு, ஒரு கண்ணை உருட்டிப் பார்த்து, கூஜா கோணியுடன் அம்மன ஆலயம் சென்றார், என்று படித்தான்.
அட முட்டாளே! ராஜா ராணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்பதைத் தப்பும் தவறுமாகப் படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா? என்று கேட்டார் புலவர்.
புலவா! என் கண்கள் ஒன்றும் குருடு இல்லை! இதோ பார்! என்றபடி இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள்.
என்னையா ஏமாற்றினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார், என்ற புலவர் இவனை இழுத்துச் சென்று இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார்.
மூடனோ, நேராக அரசனிடமே சென்றான். ஊமை மாதிரி நடித்தால் வேலை கிடைத்து விடும் என்று நம்பி, பேசாமல் நின்றான்.
என்ன வேண்டும்? என்று கேட்டான் மன்னன்.
அப்போதும் பேசவில்லை மூடன்.
நான் கேட்கிறேன். நீ பேசாமல் நிற்கிறாயே? ஊமையா? என்று கேட்டான், அரசன்.
பெப்...பெப்... பே..., என்று ஊமை மாதிரி பேசினான், மூடன்.
ஐயோ பாவம்! ஊமை போலிருக்கிறது, என்றான் மன்னன்.
அதற்குள் பொறுமை இழந்த மூடன் பாவம் பார்த்தது போதும் மன்னா! இந்த ஊமைக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கள், என்று பேசினான்.
அவன் நன்றாகப் பேசுவதைக் கேட்ட அரசன், வாய் இருந்தும் ஊமை மாதிரி நடித்து என்னை ஏமாற்றிய இவன் வாயைத் தைத்து விடுங்கள்! என்று கட்டளை இட்டான்.
குருவும், மண்டுவும் மடத்தில் இருந்தனர். அந்த நான்கு பேரும் வேலையில் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. வேலை முடிந்து, நிறைய பணத்துடன் திரும்பி வருவார்கள். அதனால் பானையில் இருக்கும் பழைய சோற்றை நாய்க்குக் கொட்டி விடு! புதிய சோறாகவே பொங்கிச் சாப்பிடலாம், என்றார், பரமார்த்தகுரு.
அவர் சொன்னபடி சோற்றை வாரி நாய்க்குக் கொட்டினான், மண்டு. சற்று நேரத்துக்கெல்லாம் அழுது புலம்பியவாறு வந்து நின்ற சீடர்களைக் கண்டதும் ஐயோ! இருந்த பழைய சோற்றையும் நாய்க்குப் போட்டு விட்டோம்! இனி எதைச் சாப்பிடுவது? என்று புலம்பியபடி, பசியால் மயங்கி விழுந்தார், பரமார்த்தர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது - பரமார்த்த குரு கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - வேலை, என்றார், தளபதி, மட்டி, என்ன, செவிடன், புலவர், போய், நான், அதனால், முட்டாள், கேட்டான், மாதிரி, என்றான், பழைய, மூடன், பார், மடையன், அதைக், நடித்தால், வைத்தியர், வேண்டும்