உணவுப் பழக்கம் - பருப்புக்கீரை
- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்
வெயிற் காலத்தில் பூமி சூடாவது போல மனித உடலும் சூடாக இருக்கும். இக்காலத்தில் திடீரென மழை பெய்தால் பூமியில் மேல்பகுதியில் புழுக்கம் தோன்றுவது போல உடலிலும் புழுக்கம் தோன்றும். இதனால் பலவீனமடைந்த உடலில் அம்மை, அக்கி, போன்ற நோய்கள் தோன்றும் என்பது சித்த மருத்துவ கருத்து. அக்கி, அம்மை போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவதாகும்.
அக்கி வந்தவர்களுக்கு கிராமங்களில் காவிக்கல்லை நீரில் அல்லது பாலில் பாதிக்கப்பட்ட இடங்களில் குழைந்து பூசுவது வழக்கமாக காணப்படுகிறது. கிராமத்திலுள்ள சில முதியவர்கள் இவ்வாறு அக்கி கண்டவர்களுக்கு காவிக்கல்லை பூசி வருவதை சேவையாக செய்கின்றனர். அக்கி கண்ட இடங்களில் கசிவு பிறருக்கு பட்டால் அக்கி பரவும் என்று கருதப்படுவதால் இதனை தொடாமல் அக்கிக்கு எதிர்பு சக்தி மிகுந்த பெரியவர்கள் மட்டுமே இதனை தொட்டு சிகிச்சை அளித்தனர். இவ்வாறு காவிக்கல்லை பூசுவதால் அக்கி பெரிதாகாமல் இருக்குமே தவிர எரிச்சல் உடனே குறையாது.
எரிச்சலும் உடனே குறையவேண்டும்! அக்கியும் உடனே குணமாக வேண்டுமா! கவலையே வேண்டாம்! பருப்புக்கீரை தெரியுமா? உங்கள் அக்கியை குணப்படுத்தும் மூலிகை மட்டுமல்ல அக்கித் தழும்புகளையும் மாற்றும் அதிசய மூலிகை. டேலியம் ட்ரையாங்குலே என்ற தாவரவியல் பெயர் கொண்ட பருப்புக்கீரை வயலைக் கொடி என்றும் அழைக்கப்படுகின்றது. ஊசி போன்ற சற்று கனமான இளம்பச்சை நிற இலைகளையும் உச்சியில் இளஞ்சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கீரை வகையை சார்ந்த சிறு செடிகள் தான் பருப்புக்கீரை. சாதரணமாகவே மார்க்கெட்டுகளில் கிடைக்கும் இந்த கீரையை சத்துக்காக சமையலில் மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பருப்புகீரை இலைகளை ஆய்து நீரில் அலசி நன்கு அரைத்து அக்கி கண்ட இடங்களில் மீது அடைபோல் தடவி வர வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வர எரிச்சல் தணிந்து அக்கி கொப்புளங்கள் மறைந்து குணமுண்டாகும். பருப்பு கீரையால் உடலில் வெப்பம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
பருப்பு கீரையை பருப்புடன் சேர்த்து மசியலாக செய்து சாப்பிட உடல் வெப்பம் தணியும். அதிக உடல் உஷ்ணத்தினால் தோன்றும் மலச்சிக்கல் நீங்கும். வெயிலில் கடுமையாக அலைந்து திரிந்து வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தால், வீட்டினுள் நுழைந்தவுடனேயே தலை வலிக்க ஆரம்பித்து விடும். இந்த தலைவலியை சிரசூலை என்பர். சூரதயுதத்தால் தலையில் குத்துவது போன்ற தலைவலி ஒரு நாள் முழுவதும் நீடித்து காணப்படும். இதற்கு பருப்பு கீரை இலைகளை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றி, பிடறி, கழுத்து பகுதிகளில் தடவி பற்று போட வேண்டும்.
பருப்பு கீரை சாற்றை அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி வர வியர்க்குருக்கள் பட்டுப் போய்விடும். எரிச்சல் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். பருப்புகீரை செடிகளை விதைகள் மூலம் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ வளர்த்து வரலாம். பருப்பு கீரை உங்கள் வீட்டு தோட்டத்தில் இருப்பது முதலுதவி பெட்டி, இருப்பதற்கு சமமாகும். தீப்புண்கள், சொறி சிரங்கு உள்ள இடங்களில் பருப்பு கீரை முழுச் செடியையும் நீரில் அலசி அரைத்து மேலே தடவி வரவேண்டும். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதுடன் ''செப்டிக்'' ஆகாமல் தடுக்கப்படும்.
மலச்சிக்கலில் சிரமப்படும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், பருப்பு கீரை மசியலாகவோ அல்லது அவியலாகவோ செய்து கொடுத்து வர மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலும் பலமாகத் தொடங்கும். பருப்பு கீரை முழுச்செடியையும் இளநீர் அல்லது மோர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி நீராகாரத்துடன் கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாவதுடன், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன நீங்கும். பருப்பு கீரை விதைகளை பொடித்து 2 கிராம் அளவு இளநீரில் கலந்து சாப்பிட கழிச்சலினால் ஏற்பட்ட உடல் பலஹீனம் தீரும். அம்மை, அக்கி, வியர்குரு, நீரெரிச்சல், ஆறாத புண்கள் உள்ளவர்கள் பருப்புக்கீரையை சமைத்து சாப்பிட்டு வருவதுடன் மேலேயும் தடவி வந்தால் வெப்ப நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பருப்புக்கீரை - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - அக்கி, பருப்பு, கீரை, அரைத்து, தடவி, இடங்களில், எரிச்சல், அல்லது, செய்து, அம்மை, உடல், காவிக்கல்லை, நீரில், உடனே, பருப்புக்கீரை, இவ்வாறு, தோன்றும்