தொலைந்து போனவர்கள்
- இ. பாண்டி
தூரத்தில் தெரிகின்ற
மேகங்களைப் போலவே
உன் நினைவுகளும்
கலைந்ததும்
மறைந்து விடுபவையாய்...!
கார்த்தி பஸ்ஸை விட்டு கிருஷ்ணாபுரம் காலனியில் இறங்கியபோது ஹேமா ஞாபகம் வராமல் இல்லை. மனதில் அழுத்திக் கிடந்த உணர்வுகள் தமிழ் மண்ணை மிதித்தும் பீறிட்டு வெளிக்கிளம்பிய போது அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பஸ் கிளம்பியபோது எழுந்த தூசி முகத்தில் படிந்ததைக் கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுத் திரும்பியபோது ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. மெதுவாய் டீக்கடைப்பக்கம் கொட்டகைத் தூணருகே சாய்ந்து நின்று தெருவை நோட்டமிட்டான். நினைவுகள் மின்சார வேகத்தில் முன்னோக்கிச் செல்ல மெதுவாய்க் கண்களை மூடிய கார்த்திக்கு மகாத்மா காந்தி நகர் மெல்லிய பாசியாய்க் கண்முன் படிந்தது.
மகாத்மாகாந்தி நகரில் தான் ஹேமாவின் வீடு இருந்தது. அங்கிருந்துதான் பெரியார் வந்து, பெரியாரிலிருந்து எஸ்.வி.என். காலேஜில் பி.பி.ஏ., படித்தாள். ஹேமா பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர். அவளுடைய தாய்மொழி கன்னடம். பிராமின் பேமிலி. அப்பரம்பரைக்கே உரிய வார்ப்பான மஞ்சள் தேகம். மின்மினிப்பூச்சியாய்க் கண்கள், துருதுருப்பாய் இயங்கும் இடை, நிலவு முகம் என்று சங்க இலக்கியத்தில் இருந்து உவமைகள் கடன் வாங்கும் அளவுக்குச் சந்தனத்தில் கடைந்தெடுத்த தங்கச் சிற்பம் என்றெல்லாம் சொல்லுமளவுக்கு அவளுடைய அழகு இருந்தது. கார்த்தியும் அங்குதான் பி.பி.ஏ., படித்தான். அவனுடைய வகுப்பில்தான் ஹேமாவும் வந்து சேர்ந்தாள். முதல் முதலாய் வேகமாய் வகுப்பறையில் நேருக்கு நேராய்ச் சந்தித்தபோது அவனது கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அப்படியே அசந்துபோய் நின்றுவிட்டான். அப்படியொரு அழகான, அமைதியான குளிர் வீசும் நிலவை, குட்டித்தேவதையை அவன் அதுவரை பார்த்ததில்லை. முதன் முதல் பார்த்த பார்வையிலே அவள் முகம் பளிச்சென நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. அன்று வகுப்பறையில் என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அதை அவன் ஆராய்ச்சி செய்யவும் விரும்பவில்லை. அவள் முகம் மட்டும் பட்டாம் பூச்சிபோல, அடிக்கடி கண்ணில் நின்று கண்ணாமூச்சி காட்டியது.
கண்டதும் காதல் என்கிற கணக்கில் உடனே நோட்டை எடுத்துப் படபடவென்று ஒரு ஹைக்கூ கவிதையை எழுதி வைத்தான்.
நான் பசையில்லை
இருந்தும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது
உன் முகம்
அப்புறமென்ன கவிதை ஊற்று தேனாய்ப் பாய்ந்தது. காதல் பறவை சிறகடித்து வானில் எழுந்து. கோடை குளிர்காலமாகியது. குளிர் கார்காலமாகியது, தென்றல் சுட்டது, தீ குளிர்ந்தது. மொத்தத்தில் உலகத்தின் இயல்பு நிலைகள் அனைத்தும் மாறி அவனது காதலுக்காகக் காமதேவனால் சிருஷ்டிக்கப் பட்டதுபோல் ஒரு திரிசங்கு சொர்க்கலோகம் உருவாகியது. அதில் அவனே இராஜா, அவனே காதல் மந்திரி, தந்திரி எல்லாம். ஹேமாதான் அவன் கனவுக் கன்னி என்று ஆயிற்று. இப்படியே நாட்கள் உருண்டன. படிப்பில் மனம் லயிக்கவில்லை. சதாசர்வமயமும் ஹேமா சுப்ரபாதமாகவே விடிந்தது. மழையடித்தால் ஹேமா, புயல் அடித்தால் ஹேமா, வெயிலடித்தால் ஹேமா என்று பார்க்குமிடமெல்லாம் ஹேமா உருவமே நின்றது. இளமை முறுக்கில், இன்பக் கிறுகிறுப்பில் எதிர்கால வாழ்க்கை ஒன்று இருப்பதே கார்த்திக்கு மறந்து போனது. அடுத்தடுத்து எழுதிய டெஸ்ட் பரீட்சைகள் செமஸ்டர் என்று எல்லாம் அரியர் விழுந்தது. (அதை இட்டு நிரப்புவதற்கு எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் ஆனது அடுத்த விஷயம்) ஹேமா ஞாபகத்திலேயே இது எல்லாம் நடந்து முடிந்தது. ஒருதலைக் காதலை வளர்த்தானே தவிர, அந்தக் காதலைப்போய் அவளிடம் மனம் விட்டுச் சொல்வதற்கு அவனுக்குத் தெம்பு வரவில்லை. இரண்டு மூன்று முறை சொல்ல முயற்சித்து அது பெரிய தோல்விகளிலேயே முடிந்தது. காரணம் அவனுக்கு முன்பே ஹேமாவை ஐந்து பேர் நான் முந்தி, நீ முந்தி என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணகுமார், கருணாகரன், ஆனந்த், சுரேஷ், நாச்சியப்பன் என்று மாதாமாதம் அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போனது. அவர்களோடு போட்டி போட்டு, இவன் காதலைச் சொல்லி வடிகால் தேடுவதற்கு ஒரு வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, கருணாகரனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் உள்ளூர் தாதாக்களின் செல்வாக்கு இருந்ததால் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று பாதியிலேயே முழுக்குப் போட்டுவிட்டான். அத்தோடு ஹேமா அத்தியாயமும் அவன் மனத்திலிருந்து முடிந்துபோனது. ஒரு வழியாய் இதயத்தில் படிந்த காதல் ரணங்களை ஆற்றி அரியர்ஸ் எல்லாம் முடித்து அடித்துப்பிடித்து சிபாரிசின் மூலம், மதுரைக் காமராஜ் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ., படிப்பதற்கு இடம் கிடைத்தபோது உண்மையில் கார்த்திக்கு தான் வாழ்வில் ஒரு இமாலயப் சாதனை செய்துவிட்டோம் என்று தோன்றியது.
ஆனால் விதி அத்தோடு அவனை விடவில்லை. அவன் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை அங்குதான் இது தொடங்கி வைத்தது. அவன் எதிர்பாராத அளவுக்கு இன்னொரு கவிதைப் பெண்ணாய், தாரிணி வந்தாள். அப்படியே அவன் பழைய காதல் சரித்திரப் பக்கங்களைப் புரட்டிப்போட்டாள். ஒரு பெண்ணால் உண்டான காயத்தை இன்னொரு பெண்ணால்தான் ஆற்ற முடியும் என்பது மாதிரி, ஏற்கனவே ஹேமாவினால் அடிபட்டிருந்த இதயம் அவளைப் பார்த்ததும் அவளிடத்தில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது. அது என்ன மாயமோ தெரியவில்லை. காதலின் ரசவாத வித்தை இது என்று சொல்லவேண்டும். வள்ளுவன் உரைத்ததுபோல் ஹேமா விட்டுச் சென்ற தீக்காயங்களை இட்டு நிரப்புவதற்கென்றே தாரிணி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே, ஏதோ ஒரு முன்ஜென்ம சாபல்யம்போல் அவளது உறவு அவனுக்கு வாய்த்து, தறிகெட்டுத் தடுமாறியது நெஞ்சம், அவள் அன்புப் பார்வையிலும், பேச்சிலும், மறுபடியும் ஒரு காதல் அரவணைப்பைத் தேடிக்கொண்டது. முதல் காதலைப்போலவே, மனசுக்குள்ளேயே இதையும் வளர்த்தான். முன்பிருந்த அதே பயம் இப்போதும் அவனை ஆட்டிப்படைத்தது. சகோதரி போல் சிரித்து பழகுகிறவளிடம் போய் எப்படி படக்கென்று, காதலைச் சொல்வது என்று மனம் தவியாய்த் தவித்தது. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. முதற்காதல் போல் இதுவும் ஒருதலையாய், கைக்கிளையாய் தவக்களையாய்ப் போய் விடும் என்ற பயத்தில், ஒருநாள் அதிக முயற்சி செய்து, ரொம்ப யோசித்து அவளைத் தனியே கேண்டீனுக்கு அழைத்து, டீ, கட்லெட், வடை எல்லாம் வாங்கிக் கொடுத்து காதலைச் சொல்லப்போகையில், தாரிணியின் அம்மாவுக்கு சீரியஸ் என்று போன் வர, தாரிணி அத்தோடு போனவள்தான்; திரும்பி யுனிவர்சிட்டிக்கு வந்தபோது, அவளது கல்யாணப் பத்திரிகையோடு உள்ளே நுழைந்தாள். தாரிணிக்குச் சொந்த ஊர் செக்காணூரணி. அவளது அம்மாவுக்கு முடியாமப் போன நேரத்திலேயே அவளது முறை மாமனை முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கல்யாணத்திற்கு முடிவெடுத்து விட்டார்கள். தாரிணி, அவள் கல்யாணப் பத்திரிகையைக் கார்த்தியிடம் நீட்டியபோது அவனது காதல் மாளிகை அன்றோடு தவிடு பொடியாகிப் போனது. அப்புறமென்ன கண்ணீரை மொய்யாக்கி எங்கிருந்தாலும் வாழ்க என்று நெஞ்சில் ஓர் ஆலயம் ஜெமினிபோல் பாடி வாழ்த்திவிட்டு வீடு வந்து விட்டான். இரண்டு நாள் காலேஜ் போகாமல் வீட்டிலேயே படுத்துக்கிடந்தான். அப்புறம் ஒருவழியாய் அவள் ஞாபகத்தை மறந்து எம்.பி.ஏ., முடித்துக் கஷ்டப்பட்டு, ஆந்திராவில் ஒரு கம்பெனியில் அஸிஸ்டன்ட் டைரக்டராய்ப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாரிணி, ஹேமா என்ற பெண்கள் எல்லாம் மறந்து போனார்கள். நெஞ்சின் ஆழத்திலிருந்து, இதய வாசலிலிருந்து அவர்கள் எல்லாம் படிப்படியாய்த் தொலைந்து போனார்கள்.
இந்தப் பத்து வருடத் தனிமை வாழ்க்கையால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. முன்பிருந்த இன்பேச்சுவேஷன் என்று சொல்லப்படுகிற இனக்கவர்ச்சி இப்போது இல்லை. இப்போதுகூட பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்படியெல்லாமா சிறு குழந்தைத்தனமாக நடந்து இருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய புன்னகை மட்டும் இதழ்களில் இழையோடுகிறது. கார்த்தி திடீரென்று யாரோ திட்டுவதைக் கேட்டான். டீக்கடைக்காரர் இவனைப் பார்த்துச் சத்தம் போட்டார். 'தம்பி எவ்ளோ நேரமா கத்தறது கொஞ்சம் தூணவிட்டு ஒதுங்கி நில்லப்பா, கழிவுத்தண்ணிய வெளியே ஊத்தணும்' என்று வொல்லிவிட்டு இவன் பதிலைக்கூட எதிர்பாராது ஊற்றினான். இன்னும் ஓரிரு கணங்களில் மறந்துபோய் விடும். காதல் என்பதே வாழ்க்கை அல்ல, ஆனால் பகுதி. காதலை விதைத்தவர்கள் தொலைந்து போனாலும், காதல் பாதிப்பு மட்டும் என்றும் இருக்கும் என்ற நினைப்பில் கார்த்தி வீடு நோக்கி நடந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொலைந்து போனவர்கள், ஹேமா, காதல், அவன், எல்லாம், அவள், தாரிணி, முகம், அவளது, மறந்து, போனது, இன்னொரு, அத்தோடு, மனம், காதலைச், ஒட்டிக்கொண்டது, வீடு, கார்த்திக்கு, வந்து, அவனது, கார்த்தி, நெஞ்சில், மட்டும், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்