வாசமற்ற மலர்கள்
- கோ. கனிமொழிமரகதம்
மதியம் 12 மணி கத்தரி வெயிலு சுளீர்னு மண்டையப் பொளக்கறாப்ல அடிச்சுச்சு. மாயனுக்கு உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருந்துச்சு. இருந்தாலும் என்ன செய்வது வயித்துப் பொழப்பைப் பார்க்கணுமே. இந்த வெயிலுக்கு தர்பூசணியும், வெள்ளரிக்காயும் போட்டா நல்லா லாபம் கிடைக்கும்னு டவுன்ல சொன்னத வச்சு தனக்குன்னு இருந்த 5 காணி நிலத்துல மாயன் வெள்ளரியும், தர்பூசணியும் விதைச்சான். எல்லாக் கிணத்துலயும் தண்ணிவத்திப் போனாலும் மாயன் கிணத்துல மட்டும் இந்த வெயில் காலத்துலயும் சும்மா வெள்ளியை உருக்கி விட்ட மாதிரி சலசலனு இருக்கும்.
மாயன் தண்ணியத் தொறந்து விட்டுகிட்டே இந்தக் காய்களைக் கொண்டுபோயி உழவர் சந்தைனு ஒண்ணு வந்திருக்கு அதுல போட்டா லாபம் கிடைக்கும்னு விவசாய ஆபிசரு சொன்னாக. அதமுதலச் செய்யணும்! இந்த புரோக்கர் வெடுவானிப்பயக்கிட்ட காச அழுவணும்னு தேவையில்ல மீதியை ரோட்ல கூறு போட்டு வித்தாக்கூட கைல நாலு காசு கிடைக்கும்னு நினைச்சுகிட்டு வேலையைப் பார்த்தான் மாயன். நெல்லைத் தவிர ஒண்ணும் போட மாட்டான். எப்பவாவது தக்காளி போட்டா போடுவான்.
மாயன் மடையை அடைச்சுட்டு தோட்டத்தப் பார்த்தான் "பிஞ்சும், பூவுமா, புதுசா கல்யாணமான பொண்ணு கணக்கா சும்மா தளதளனு இருந்துச்சு. சரி இந்தத் தடவையாச்சும் ஆண்டவன் வழிகாட்டட்டும்"னு வேண்டினான். கொஞ்சம் காசு கிடைக்கும். இதவச்சு வர்ற தைக்குள்ள இரண்டாவது புள்ள கல்யாணத்த முடிச்சுடணும்னு கணக்குப்போட்டான்.
மாயனுக்கு 2 பொம்பளப்புள்ளைக ஒரு பையன் மாயனோட பொண்டாட்டி சின்னாத்தா. மூத்த பொம்பளப்புள்ள செல்லத்த போன வைகாசியில தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான் இங்கதான் பக்கத்துல இருக்குற பழையனூர்ல. ஏதோ அவனால முடிஞ்ச சீர் சினத்தி செஞ்சு அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு. 2 வது புள்ள முருகாயி அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டுல தான் இருக்கா. மாயனோட கடைசிப்பையன் குமார். 12வது வரைக்கும் படிச்சுப்புட்டு வேலை வெட்டிக்குப்போகாம மைனரு மாதிரி ஊர் சுத்திகிட்டு திரியறான். அவனுக்கு வீட்டப்பத்தியும் கவல இல்ல. எதைப்பத்தியும் கவல இல்ல. டிப்டாப்பா டிரஸ் பண்ணிகிட்டு கலெக்டரு உத்தியோகத்துக்கு போற மாதிரி கிளம்பிடுவான். எங்க போறான் என்ன செய்யறான்னு தெரியாது. போன மாசந்தான் ஏதோ கட்சியில இளைஞரணியில சேர்ந்தன்னு சொல்லிகிட்டு திரிஞ்சான்.
மாயனுக்கு வயிறு பசித்தது காலையில நீராரத்தண்ணியக் குடிச்சுப்புட்டு கருக்கல்ல கிளம்பினவன் தான். வந்ததுல இருந்து களை எடுக்கிறது. தண்ணி பாய்ச்சறது, மருந்து அடிக்கிறதுன்னு வேலை இருந்துக்கிட்டேயிருக்கு.
தூரத்துல சின்னாத்தாவும் முருகாயியும் வருவது தெரிஞ்சுக்க சின்னாத்தாவோட கைப்பதம் யாருக்கும் வராது. ரெண்டு மொளகாயக்கிள்ளிப் போட்டு புளியக்கரைத்த ஊத்துனாக்கூட அவ்வளவு ருசியா இருக்கும். நினைக்கியிலேயே நாக்கில் எச்சி ஊறுச்சு. முருகாயிக்கு எப்பயும் வயல்ல சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால ஆத்தாவோட எப்பவும் வந்திருவா. மூணு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க.
கிணத்துத்தண்ணியில கை கால், முகம் எல்லாம் கழுவிட்டு துண்டுனால துடைச்சுகிட்டே, என்ன சின்னாத்தா என்ன சாப்பாடு வாசன மூக்கத்துளைக்குதே; அட ஒண்ணுமில்லைங்க, மேல்வீட்டு பெரியாத்தா கொஞ்சம் அயிரைமீன் கொடுத்தாக. அதைக் குழம்புவச்சி, கஞ்சி கொண்டு வந்துருக்கேன். அப்ப சீக்கிரம் போடு, இப்பவே நாக்குல எச்சி ஊறுது.
சின்னாத்தா கும்பாவுல கஞ்சிப்போட்டு பூசணி இலையில அயிரமீன் வச்சி மாயனுக்கு வெயிலுக்கு இதமா இருந்துச்சு. மூன்று பேரும் சேர்ந்து வயிறார சாப்புட்டாக சின்னாத்தாவும், முருகாயியும், பாத்திரத்தெல்லாம் கழுவிட்டு "அப்ப நாங்க போறோம் நீங்க சித்த நேரம் உறங்கிட்டு வாங்க"னு சொல்லிட்டுப் போனாக.
மாயனுக்கும் அசதியாத்தான் இருந்துச்சு. அப்படியே வேப்பமரத்து நிழல்ல படுத்து உறங்கிட்டான் திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா வெயிலு கொஞ்சம் இறங்கியிருந்துச்சு மாயன் மம்பட்டி, மத்த சாமானெல்லாம் மோட்டார் ரூம்ல வச்சுப்புட்டு வீட்டுக்குப் போனான். வர்ற வழியில ஊரணிப்பக்கம் பெரிய தேவர் பாத்துப்புட்டாரு" என்ன மாயா! நம்ம குமாரு கட்சியில சேர்ந்துட்டாம்போல ஒரே வெள்ளையும் சொள்ளையுமா திரியறான் கேட்டா செயலாளர், அது இதுங்கறான்." அடப்போங்கப்பே அவக்கிடக்கான் வௌரங் கெட்ட நாயி, அப்பு, கட்சியல்லாம் சோறுபோடாது தினம் உழைச்சாத்தான் வயிறு நியைற சாப்பிட முடியும். நானும் வீட்ல உட்கார்ந்துர்ரேனு வச்சுக்கங்க, இவனக் கொண்டாந்து காசு கொடுக்கச் சொல்லுங்க பாப்பம். அப்படியே கொண்டாந்தாலும் அது அடுத்தவனக் கொன்னு தாலியறுத்தக் காசாத்தான் இருக்கும். அப்பு, உங்ககால அரசியல் வேற. இந்தக்கால அரசியல் வேற, ஒருத்தன் ஆட்சிக்கு வந்தா மொத்தமா அடிக்கிறான் இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கிறான். போங்கப்பே! அவன் கெட்டுச் சீரழியப்போறான் நான் வர்றப்பே. என் பொழப்பப் பார்க்கணும் பெரியதேவர் சிரிச்சிகிட்டுப் போனாரு.
வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாயன். சின்னாத்தா ஏய் புள்ளே! உள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்க? குளிக்கத் தண்ணி எடுத்து வை. சின்னத்தா தொட்டியில தண்ணியக் கொண்டு வந்து ஊத்துனா. மாயன் குளிச்சுகிட்டிருக்கும் போது உள்ளாற ஏதோ சத்தம் கேட்டுச்சு. அவன் மகன் குமாரு தான். அவன் ஆத்தாகிட்ட சண்ட போட்டுகிட்டிருந்தான். "அம்மா காசு கொடுக்குறியா இல்லையா தலைவருக்கு பொறந்த நாளு சால்வை வாங்கணும் காசு கொடு".
"போடா வக்கத்த நாயே. இங்க கோவணத்துணிக்கே வழியக் காணமா இவன் எடுபட்ட நாய்க்கு சால்வை வாங்கறானாம் சால்வை. அந்த மனுசன் வெயில்லகிடந்து மாடா உழைக்கிறாரு இவன் இப்பத்தான் வெள்ளையும், சொள்ளையுமா அலையிறான். ஒரு சல்லிக்காசு கிடையாது போடா வெளிய. மாயன் திரும்பிக் கூட பார்க்காம குளிக்சுகிட்டு இருந்தான் போன வாரமே இவுக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பேச்சுவார்த்தையில்லை.
பன மட்டையில மழை பெஞ்ச மாதிரி தொறுதொறுனு முனங்கிக்கிட்டே குமாரு வெளியே போனான். அவன் போனவுடன் தான் மாயன் உள்ளுக்குள்ள வந்தான். மனைவி சின்னாத்தா அழுதுகிட்டிருந்தா "ஆம்பளபுள்ள பொறந்துட்டான் கஞ்சி ஊத்திக் காப்பாத்துவான்னு பாத்தா இவன் ஏதோ அட்ரஸ் இல்லாத நாய் வேட்டியல்ல புடிச்சிகிட்டு திரியறான் இவன் வம்புனா என்னாகுறது. ஹீம் - என்னைக்குத்தா இந்த மாரியாத்தா கண்ணத் தொறப்பாளோ! இந்தப் பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் பொழப்பு நாய்ப் பொழப்பாவுல்ல இருக்கு.
மாயன், "சரி விடுறி! விறைச்சுகிட்டு எங்க போகப் போறாரு, சோத்துக்கு இங்க தான் வரணும். நாளைக்கு அவன் தலைவருனு சொல்லிகிட்டு திரியற நாயை செயில்ல தூக்கி போடப் போறாக. இவன் என்ன பண்ணப்போறானாம். அவன் பொண்டாட்டிபுள்ள குட்டிக எல்லாம் நல்லா இருக்குது. இவன் தான் சீப்பட்டுச் சீரழியப் போறான். போகட்டும் விடுடி சோத்தப்பாரு.
ஒரு மாதம் சென்றிருக்கும். இப்பெல்லாம் குமாரு வீட்டுக்கே வர்றதில்ல டவுன்லயே இருக்கறதா செய்தி.
இப்ப தர்பூசணியும், வெள்ளரியும் நல்ல அறுவடை செய்யும் பதத்தில இருந்துச்சு. நல்ல தளதளனு பார்க்க நல்லா இருந்துச்சு. சனிக்கிழம உழவர்சந்தைக்கும் கொண்டுபோனா கூட்டம் நிறையவரும். பெரிய பெரிய ஆபிசருக எல்லாம் வந்து வாங்கிட்டுப்போயிருவாக. வியாபாரத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தான் மாயன்.
மாயனுக்கு இடி இறங்குனாப்ல இருந்துச்சு. புள்ள பொறந்து பேர்வைக்கப் போகையில செத்துப் போன கணக்கா இருந்துச்சு மாயனுக்கு, பெரியதேவருக்குன்ன அவருபாட்டுக்கு சொல்லிபுட்டாரு. அவுரு நல்ல வசதிவாய்ப்பா இருக்காரு ஹீம் எம்பொழப்பு நாய் பொழப்பு கழுதப் பொழப்பாவுல்ல இருக்கு. நாம் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது.
மாயனுக்கு 2 நாளா ஒண்ணுமே புரியல பாடுபட்டு பக்கப்பட்டு விளையவச்சத நல்ல விலைக்கு வித்தாத்தானே கையப்பிடிக்காம இருக்கும். கடன, உடன வாங்குனத அடைக்க முடியும். எப்படியோ அறுவடை முடிஞ்சுருச்சு.
மறுநாள் மாயன் மாட்டுவண்டியில தர்பூசணியும், வெள்ளரியையும், ஏத்திக்கிட்டு டவுனுக்குப் போனான் பஸ்சுல போனா லக்கேசுக்குன்னு தண்டம் அழுவணும் அதனால குறுக்கால போன சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சுகிட்டு வண்டிய விரசா விட்டான் கூட ஒத்தாசைக்கு சின்னாத்தா, முருகாயி ரெண்டு பேரும் வந்தாக கூட்டு ரோட்ட தாண்டி போகையிலேயே ஏதோசலசலனு சத்தம் போட்டுச்சு மாயனுக்கு கதக்குச்சு. தூரத்துல கட்சிக்கார பயலுக, சோடாப்பாட்டிலு கைச்செயினு அருவா கத்தினு வச்சுகிட்டு எல்லாரையும் வழிமறிச்சு அடிச்சிட்டிருந்தாணுக என்ன ஏதுனு ஓடிவந்தவன்கிட்ட மாயன் விசாரிச்சான் யாரோ அரசியல் தலைவர செயில்ல போட்டாங்களாம் அதுக்கு அந்த கட்சி ஆளுக மறியல் பண்றாக அங்கிட்டு போகாதிகன்னு சொல்லிட்டு அவுர்ற வேட்டிய கையில புடிச்சுகிட்டு ஓடினான்.
மாயன், "ஏய் பிள்ளைகளா அப்படியே படுத்துக்கிடுங்க. நான் வண்டிய அந்த நாய்க கண்ணுல படாம வரசா விட்டுறேன்.
ஒருத்தன் கருகருனு கருவாக்கட்டை மாதிரி இருந்தவன். "டேய் அங்கபார்றா ஒருத்தன் நமக்கு டிமிக்கி கொடுத்துட்டுப் போறான். புடிங்கடா டேய் அடிறா வண்டியச் சாயுடா ஒரே கூச்சலு. அழுரக 10 நிமிசத்துக்குள்ள அம்புட்டும் முடிச்சு போச்சு மாயன் பொம்ளப்பிள்ளைகளை அடிக்கவர்றாகளே தடுக்கப்போக அவனுக்கு நெஞ்சுல வெட்டு, புருஷனுக்கு ஏதாவது ஆயிரப் போவுதுனு சின்னாத்தா தடுக்கப்போக அவளுக்கும் வெட்டு முருகாயி மயக்கமாயிட்டா.
2 உசுரும் 1 நிமிசத்துல அடங்கிப்போச்சு கன்னஞ்செவந்தபுள்ள கட்டழகி பெத்தபுள்ள செய்யதறியாம திகைச்சுப் போயிநின்னா தர்பூசணியும், வெள்ளரியும் ரோடெல்லாம் கிடந்துச்சு. மாயன் ரத்தமும், தர்பூசணித் தண்ணியும் ஒண்ணாக் கலந்துச்சு.
அப்பத்தான் சீராட்டிப் பாராட்டி சீரு செய்யப் போற ஆத்தாளப்பறிகொடுத்து வகை செய்யப்போற அப்பனப்பறிகொடுத்த முருகாயி அண்ணணப் பாத்துப்புட்டா அவன் அங்கிட்டு முக்குல எவனையோ புடிச்சு அடிச்சுகிட்டு இருந்தாய் டேய்! எங்க தலவர செயில்ல போட்டாங்க நீங்க கவலையில்லாம திரியறியா உன்ன உரிச்சுப் பொலி போடறேன்பாரு. முருகாயிக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
அண்ணன நோக்கிப்போனா, "டேய்! இங்க பார்றா உங்க அப்பன் ஆத்தா செத்துச் சீரழிந்து கிடக்காக நீ இன்னொருத்தன அடிக்கிறயிடா. நீங்கள்ளாம் உருப்பட மாட்டியளா? நாசமாப்போவீக! அப்பன் ஆத்தாவுக்கு உதவவேணாம் இப்படி உயிரோ கொள்ளி வச்சுட்டியே பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ!....... முருகாயி ஒரு பாட்டம் பாடி முடிச்சா.
காரியமெல்லாம் முடிஞ்சு 1 வாரமாச்சு குமாரு வீட்டுப்பக்கமே வரல துக்கத்துக்கு வந்த சனங்கள்லாம் காக்கா, குருவி கணக்கா பறந்து போயிருச்சுக. அவ அக்காவையும் புருசன்காரன் வந்து சாக்கு போக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டான்.
முருகாயி தனித்துப்போனா.... சொந்தமிருந்து சீண்டாதவளாயிட்டா அழகா இருந்தாலும் வாசமில்லா மலர யாரும் சீந்தமாட்டாக அப்படியாயிருச்சு முருகாயி நிலம இப்படி எத்தனையோ முருகாயிக தெருக்குத்தெரு, ஊருக்குஊரு இருக்காக.
அடுத்தநாள் செய்தியில் - "தலைவரின் கரம் கறைபடியாத கரம் எனவே விடுதலை" என்று பெரிய எழுத்தில் வந்தது. அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை சுருட்டிக் கொண்டு, நடித்துக் கொண்டு அமோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் வெறிபிடித்த ஓநாய் கூட்டமாய் தொண்டர் இனம் திரிகிறது. இவை நிற்கும் வரையில் நம் நாட்டில் வாசமற்ற மலர்களே அதிகமாய்?.......
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசமற்ற மலர்கள், மாயன், ", மாயனுக்கு, என்ன, இருந்துச்சு, சின்னாத்தா, முருகாயி, அவன், தான், இவன், வந்து, தர்பூசணியும், மாதிரி, காசு, குமாரு, நல்ல, டேய், பெரிய, அரசியல், கொண்டு, கொஞ்சம், இருக்கும், போனான், இங்க, செயில்ல, அந்த, அப்படியே, சால்வை, ஒருத்தன், திரியறான், ஒண்ணு, கணக்கா, வெள்ளரியும், கிடைக்கும்னு, போட்டா, நல்லா, புள்ள, இருக்கு, பேரும், எல்லாம், ரெண்டு, போறான், எங்க, சீக்கிரம், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்