முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » முதலாம் ஜஸ்டீனியன் (கி.பி.483 - கி.பி.565)
முதலாம் ஜஸ்டீனியன் (கி.பி.483 - கி.பி.565)
பேரரசர் ஜஸ்டீனியன் ரோமானியச் சட்டத்தைத் தொகுத்ததற்காகப் புகழ் பெற்றவர். அச்சட்டத் தொகுப்பு அவரது காலத்தில் நிகழ்ந்தது. ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு சட்டவியலில் ரோமானியர் பெற்றிருந்த படைப்பாற்றல் திறத்தைப் பேணிப் பாதுகாத்தது. அதுவே பிற்காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் சட்ட வளர்ச்சிக்கு அடிகோலியது. வேறு எந்தச் சட்டத் தொகுப்பும் உலகில் அத்தகைய விளைவை ஏற்படுத்தியதில்லை எனலாம்.
ஜஸ்டீனியன் 483 இல் இன்றைய யூகோஸ்லாவியாவிலுள்ள டாரசீயம் எனுமிடத்தில் பிறந்தார். அவர் ஜஸ்டின் திரேஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தறிவற்ற உழவர் ; படையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னரானார். உழவர் குடும்பத்தைச் சேர்ந்த ஜஸ்டினியனும் கல்விகற்று, முதலாம் ஜஸ்டீன் மன்னரின் உதவியால் விரைவாக முன்னேறினார். மகப்பேறு இல்லாத ஜஸ்டின் மன்னர் 527 ஆம் ஆண்டில் ஜஸ்டீனியனைத் தம்முடன் இணையரசராக நியமித்தார். அவ்வாண்டின் இறுதியில் ஜஸ்டீன் இறந்தார். அது முதல் 565 இல் தாம் இறக்கும்வரை ஜஸ்டீனியனே தனிப் பேரரசராக ஆட்சிப் புரிந்தார்.
ஜஸ்டீனியன் பிறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன் 476 ஆம் ஆண்டில் ஜெர்மானியமிலேச்சர் குலங்களின் தாக்குதலால் மேற்கு ரோமானியப் பேரரசு குலைந்து சரிந்தது. கான்ஸ்டான்டி நோப்பிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசே நிலைத்து நின்றது. இழந்த மேற்குப் பகுதிகளைத் திரும்பக் கைப்பற்றி ரோமானியப் பேரரசை மீட்க வேண்டுமென்று ஜஸ்டீனியன் உறுதி பூண்டார். பேரரசராக இருந்தபோது அவர் தமதாற்றலைப் பெரிதும் அதற்காகவே செலவழித்தார். இத்திட்டத்தில் அவர் ஓரளவு வெற்றி பெற்றார். இத்தாலி, வட ஆஃப்ரிக்கா, ஸ்பெயினின் ஒரு பகுதி ஆகியவற்றை அவர் மிலேச்சரிடமிருந்து திரும்பக் கைப்பற்றினார்.
ஆயினும் ஜஸ்டீனியன் இப்பட்டியலில் இடம் பெறுவதற்கு அவருடைய வெற்றிகள் காரணமல்ல; ரோமானியச் சட்டத்தை அவர் தொகுத்ததே காரணமாகும். ஜஸ்டீனியன் தாம் அரியணையேறிய மறு ஆண்டாகிய 528லேயே பேரரசின் சட்டங்களைத் தொகுப்பதற்கென ஒரு குழுவை அமைத்தார். அக்குழு 529ஆம் ஆண்டில் ஒரு தொகுப்பை வெளியிட்டது. பிறகு அது திருத்தியமைக்கப் பெற்று 534 ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப் பெற்றது. அப்போது அத்தொகுப்பில் இடம் பெறாத முந்திய கட்டளைகளும் சட்டங்களும் நீக்கப்பட்டன. இத்தொகுப்பே கோர்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ் எனும் சட்டத் தொகுப்பின் முதற்பகுதியானது. டைஜஸ்ட் எனப்படும் இரண்டாம் பகுதி புகழ் பெற்ற ரோமானிய சட்ட நூலாசிரியர்களின் கருத்துகளின் சுருக்கம். அதுவும் அதிகார பூர்வமானதே இன்ஸ்டிடியூட் எனப்படும் மூன்றாம் பகுதி சட்டம் பயிலும் மாணவர்களின் பாட நூல். ஜஸ்டீனியன் இறந்த பிறகு நோவெலே எனும் நூலாக வெளியிடப் பெற்றது.
ஜஸ்டீனியன் பல போர்களிலும். ஆட்டசிப் பணிகளிலும் ஈடுபட்டிருந்ததால், சட்டத் தொகுப்பைத் தாமே தீட்ட முடீயவில்லை. ஜஸ்டீனியனின் ஆணைகேற்ப தீட்டப் பெற்ற தொகுப்பை பெரும் வழக்கறிஞரும் சட்ட வல்லுநருமான திரிபோனியனின் மேற்பார்வையில் சில சட்ட அறிஞர்கள் வரைந்தனர்.
ஆற்றல் மிகுந்த ஜஸ்டீனியன் ஆட்சித் துறைச் சீர்த்திருத்தங்களிலும் ஈடுபட்டார். அரசாங்கத்தில் காணப்பபட்ட ஊழல்களைக் களைவதிலும் ஓரளவு வெற்றி பெற்றார். அவர் வாணிகத்திற்கும் தொழில் துறைக்கும் ஊக்கமளித்தார். பெரிய பொதுக் கட்டிடங்களைக் கட்டினார். அவரது ஆட்சியில் பல கோட்டைகள், மடாலயங்கள், (கான்ஸ்ட்டான்டிநோப்பிளிலுள்ள புகழ்மிகு ஹேகிய சோஃபியா ஆலயம் உட்பட) கோவில்கள் கட்டப் பெற்றன அல்லது புதுப்பிக்கப் பெற்றன. அவர் கட்டிடங்களைக் கட்டியதாலும், போர்கள் பல புரிந்ததாலும் வரி விதிப்பு அதிகரித்தது. அதனால் மக்களின் வெறுப்பும் அதிகமானது. 532 ஆம் ஆண்டில் எழுந்த புரட்சி (நிக்கா கிளர்ச்சி) அவரது அரியணையையே ஆட்டியது. அப்புரட்சியை அவர் அடக்கிய பிறகு அவரது ஆட்சிக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆயினும் 565 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது மக்களிடையே ஓரளவு மகிழ்ச்சி நிலவியது.
ஜஸ்டீனியனுக்கு அவருடைய திறமைமிக்க துணைவியார் தியடோரா பெரிதும் உதவியாக இருந்தார். அவரைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் பொருந்தும். தியடோரா 500 ஆம் ஆண்டில் பிறந்தார். இளமையில் அவர் நடிகையாகவும் அரசவையணங்காகவும் இருந்தார். மணம் புரியாமல் ஒரு குழந்தை பெற்றார். இருபது வயதான பிறகு அவர் ஜஸ்டீனியனுடன் தாம் அரியணையேறுவதற்கு ஈராண்டுகளுக்கு முன் அவரை மணந்து கொண்டார். அவர் தம் மனைவியின் திறமைகளை நன்குணர்ந்து அவரைத் தம் முக்கிய அறிவுரையாளராக்கி பல தூதாண்மைப் பொறுப்புகளை வழங்கினார். ஜஸ்டீனியன் பல சட்டங்களை இயற்றுவதற்கும், மகளிரின் உரிமைகளையும் நிலையையும் உயர்த்தும் சட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் அவர் ஓரளவு காரணமாக இருந்தார். 548 ஆம் ஆண்டில் அவர் புற்று நோயினால் இறந்தது ஜஸ்டீனியனுக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது. ஆயினும் பிந்திய 17 ஆண்டுகளிலும் ஆட்சி ஓரளவு வெற்றிகரமாகவே நடைபெற்றது. எழிலும் அறிவும் நிறைந்த தியடோராவைப் பல கலைஞர்கள் கலைப் படைப்புகளாக வடித்தனர்.
சட்டத் தொகுப்பின் காரணமாகவே ஜஸ்டீனியன் இப்பட்டியலில் இடம் பெறுகின்றார். அது ரோமானியச் சட்டத்தை அதிகாரபூர்வமாக எடுத்துரைக்கிறது. பல நூற்றாண்டுகளாக அது பைசாண்டியப் பேரரசில் சிறப்பிடம் பெற்றிருந்தது. மேற்கு நாடுகள் அதை 500 ஆண்டுகளாக மறந்துவிட்டன. ஏறக்குறைய 1,100 ஆம் ஆண்டில் ரோமானிய சட்டத்தை, குறிப்பாக இத்தாலியப் பல்கலைக் கழகங்களில், திரும்பவும் படிக்கத் தொடங்கினர். இடைக்காலத்தின் இறுதியில் ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு ஐரோப்பா கண்டத்தின் சட்ட முறைகளின் முக்கிய அடிப்படையானது. இது நிகழ்ந்த நாடுகளில் எழுதப்பெற்ற சட்டமுறை இருக்கிறதென்கிறோம். இதற்கு மாறாகப் பொதுவாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் நிலவும் முறையை எழுதப்பெறாத பொதுச் சட்டமுனை என்கிறோம். ஜஸ்டீனியனின் சட்டத் தொகுப்பு எங்கும் முழுவதும் ஏற்பப்படவில்லை. ஆயினும், ஐரோப்பாவின் பெரும் பகுதியில் அதன் பகுதிகள் சட்டத்துடன் இணைக்கப் பெற்றன. மேலும் அது சட்டப் படிப்பு பயிற்சி, ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையுமானது. நாளடைவில் ஐரோப்பிய அரசுகளல்லாத பல அரசுகளும் உரிமையியல் சட்டங்களை ஏற்றதால், ஜஸ்டீனியனின் சட்டம் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியது.
எனினும், ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படக் கூறுதல் தவறாகும். ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பைத் தவிர வேறுபல சட்டங்களும் உரிமையியல் சட்ட வளர்ச்சிக்கு உதவியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒப்பந்தம் சார்ந்த சட்டங்களை ரோமானியச் சட்டத்தை விட வணிகர்களின் நடைமுறைகளிலிருந்தும், வணிகர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலிருந்தும் மிகுதியாகப் பெறப்பட்டவை. ஜெர்மானிய சட்டமும் கிறிஸ்துவமறைச் சட்டமும் அரசாங்கச் சட்டங்களும் சட்டமுறைகளும் பெரிதும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இன்று எழுதப்பெற்ற சட்டங்களுடைய நாடுகளில் முக்கிய சட்டங்கள ஜஸ்டீனியன் சட்டத் தொகுப்பை ஒத்திருக்கவில்லை எனலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலாம் ஜஸ்டீனியன் (கி.பி.483 - கி.பி.565), அவர், ஜஸ்டீனியன், சட்டத், ஆண்டில், சட்ட, ஓரளவு, ஜஸ்டீனியனின், நாடுகளில், சட்டத்தை, பிறகு, ரோமானியச், ஆயினும், அவரது, ரோமானியப், தொகுப்பு, தொகுப்பின், பெற்றன, இருந்தார், முக்கிய, சட்டங்களும், சட்டங்களை, தொகுப்பை, பெற்றார், பகுதி, இடம், இறுதியில், தாம், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்