முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஷி-ஹூவாங்-தை (கி.மு.259 - கி.மு.210)
ஷி-ஹூவாங்-தை (கி.மு.259 - கி.மு.210)
சீனாவை கி.மு. 238 முதல் கி.மு. 210 வரை ஆண்ட புகழ் பெற்ற சீனப் பேரரசர் ஷி - ஹூ வாங் - தை ஆவார். இவர் தமது படை வலிமையால் சீனாவை ஒருங்கிணைத்தார். பல தீவிரமான சீர்திருத்தங்களைச் செயற்படுத்தினார். சீனாவின் பண்பாட்டு ஒருமைப்பாடு இந்தச் சீர்த்திருத்தங்களால் தான் இன்று வரை நிலைத்திருக்கிறது.
இவர் ஷி - ஹூ வாங் - தை என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கி.மு. 259 இல் பிறந்து கி.மு. 210 இல் இறந்தார். அவருடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு அவர் காலத்தின் வரலாற்றுப் பின்னணியை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும். சீனாவில் சூ அரச மரபினரின் ஆட்சி கி.மு. 1100 இல் நிறுவப் பெற்றது. அந்த அரச மரபினர் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் ஷி - ஹூ வாங் - தை பிறந்தார். இவர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சூ மன்னர்களின் ஆட்சி வலுக்குன்றியது. சீனா ஏராளமான நிலப்பிரபுத்துவச் சிற்றரசுகளாகச் சிதறுண்டு கிடந்தது.
பல்வேறு நிலப்பிரபுக்கள் தங்களுக்குள் அடிக்கடி போரிட்டு வந்தனர். படிப்படியாகப் பல சிற்றரசர்கள் ஒழிக்கப்பட்டனர். போரிட்டுக் கொண்டிருந்த சிற்றரசுகளில் மிக வலிமை வாய்ந்ததாக விளங்கியது நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்த 'ஷின்' அரசு ஆகும். ஷின் அரசர்கள், அரசுக் கொள்கையின் அடிப்படையாகச் சீனத் தத்துவ ஞானிகளின் சட்டச் சித்தாந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிறந்த அரசரின் நன்னெறி நடத்தையின் மூலம் மக்கள் ஆளப்படவேண்டும் என்று சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ் கூறினார். ஆனால், 'ஒரு சார்பின்றி உறுதியாகச் செயற்படுத்தப்படும் கடுத்தமான சட்டங்களின் வாயிலாகவே மக்கள் ஆளப்படவேண்டும்' என்று சட்டச் சித்தாந்தம் வலியுறுத்துகிறது. சட்டங்கள் ஆட்சியாளர்களால் இயற்றப்படுகின்றன; அரசின் கொள்கைகேற்ப அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் சட்டச் சித்தாந்திகள் கூறினர். இந்தச் சட்டச் சித்தாந்தத்தைச் ஷின் அரசர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாகவும், அவர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியின் இயற்கையமைப்பு காரணமாகவும், ஷின் அரசர்களின் திறமை காரணமாகவும் ஷி - ஹூ வாங் - தை பிறந்தபோது, அப்போதிருந்த சீன அரசு விளங்கியது. ஷி - ஹூ வாங் - தை யின் இயற்பெயர் செங். தமது 13 ஆம் வயதில் கி.மு. 246 இல் முறையாக ஆட்சி பீடம் ஏறினார். எனினும் அவரது இளம் வயது காரணமாக, அவர் உரிய வயதை அடையும்வரை பகர ஆளுநரே (Regent) ஆட்சி நடத்தி வந்தார். கி.மு. 238 இல் உரிய வயதடைந்ததும் செங் தமது நேரடி ஆட்சியைத் தொடங்கினார். புதிய அரசர் திறமையான தளபதிகளைத் தேர்ந்தெடுத்தார். எஞ்சியிருந்த சிற்றரசுகள் மீது தீவிரமாகப் போர் தொடுத்தார். அந்த அரசுகளை ஒவ்வொன்றாகப் கைப்பற்றினார். அவற்றுள் கடைசி அரசு கி.மு. 221 இல் அவர் வசமாயிற்று. சீனா முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அவர் அனைத்துச் சீனாவில் அரசராகத் (Wang) தம்மை அறிவித்திருக்கலாம். ஆனால், கடந்த கால மரபிலிருந்து அவர் விலகிச் செல்ல விரும்பினார். 'வாங்' என்ற பட்டப்பெயரை ஒதுக்கிவிட்டு, 'ஷி - ஹூ வாங் - தை' என்ற புதிய பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டார். இந்தப் பட்டப் பெயருக்கு "முதற் பேரரசர்" என்று பொருள்.
ஷி - ஹூ வாங் - தை அரியணை ஏறிய உடனே பல முக்கிய சீர்திருத்தங்களைக் கொணரலானார். சூ அரச மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த ஒற்றுமையின்மையை ஒழிக்க அவர் உறுதி பூண்டார். பிரபுத்துவ அரசு முறையை அடியோடு ஒழித்துவிட முடிவு செய்தார். அவரது ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்பு 36 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஓர் ஆளுநரைப் பேரரசர் நியமித்தார். ஆளுநர் பதவி பரம்பரையாக இருந்து வந்ததும் ஒழிக்கப்பட்டது. பேராசை கொண்ட ஓர் ஆளுநர் தமக்கெனச் சொந்தமாகச் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டு வலிமை பெறுவதைத் தவிர்க்கும் நோக்குடன், ஆளுநர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு வேறு மாகாணங்களுக்கு மாற்றப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் இராணுவத் தலைவரும் இருந்தார். அவரையும் பேரரசரே நியமித்தார். அவரையும் பேரரசர் தம் விருப்பம் போல் பதவி மாற்றம் செய்யலாம்; அல்லது பதவியிலிருந்து நீக்கிவிடலாம். குடியியல் மற்றும் இராணுவ ஆளுநர்கள் இருவருக்குமிடையே சமநிலையை ஏற்படுத்துவதற்காக மூன்றாவதாகவும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இவரையும் மையே அரசே நியமித்தது. விரிவான முறையில் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. மாகாணத் தலைநகர்களை மையத் தலைநகருடன் இணைக்கும் சாலைகள் போடப்பட்டன. எந்த மாகாணத்திலாவது கலவரம் தோன்றுமானால், அங்கு மைய அரசின் இராணுவத்தை விரைவாக அனுப்புவதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பழைய அரச குடும்பத்தினர் அனைவரும் தமது சொந்த தலைநகரான ஹ’சியன் யாங்கில் குடியேற வேண்டும் என்றும் ஷி - ஹூ வாங் - தை ஆணையிட்டார். முன்னாள் அரச குடும்பத்தினரின் நடவடிக்கைகளைத் தாம் நேரடியாக கண்காணித்து வருவதற்காகவே இந்த ஏற்பாடு.
ஆனால், சீனாவில் அரசியல் மற்றும் இராணுவ ஒருமைப்பாட்டை நிறுவுவதுடன் மட்டும் ஷி-ஹூ-வாங்-தை மன நிறைவு கொண்டு விடவில்லை. வாணிக ஒற்றுமையை ஏற்படுத்தவும் அவர் விரும்பினார். நாடு முழுவதிலும் ஒருங்கிணைக்கப்பட்ட எடைகள் மற்றும் முகத்தலளவை முறையைச் செயற்படுத்தினார். நாடு முழுவதற்கும் பொதுவான நாணய முறையைக் கொண்டு வந்தார். கருவிகளையும் திட்டப்படுத்தினார். சாலைகள், கால்வாய்கள் அமைப்பதை மேற்பார்வையிட ஏற்பாடு செய்தார். சீனா முழுவதற்கும் பொதுவான ஒருங்கிணைந்த சட்டமுறையை ஏற்படுத்தினார். எழுத்து மொழியையும் செந்திறப்படுத்தினார்.
இந்தப் பேரரசின் நடவடிக்கைகளில் பெரும் பழிப்புக்குள்ளான ஒன்று கி.மு. 213இல் இவர் பிறப்பித்த ஓர் ஆணையாகும். சீனாவிலிருந்த நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி இவர் ஆணையிட்டதே அந்த நடவடிக்கையாகும். இவ்வாறு எரியூட்டுவதிலிருந்து வேளாண்மை, மருத்துவம் போன்ற துறைகள் பற்றி எழுதப்பட்ட தொழில் நுட்ப நூல்களுக்கும், ஷின் அரசின் வரலாற்று ஆவணங்களுக்கும், சட்ட சித்தாந்திகளின் தத்துவ நூல்களுக்கும் மட்டுமே விதிவிலக்களிக்கப்பட்டன. இவை நீங்கலாக, கன்ஃபூசியசின் கோட்பாடு உட்பட மற்ற தத்துவஞானிகள் அனைவருடைய நூல்களையும் எரித்து விட ஆணையிடப்பட்டது. இந்த ஆணையின் மூலம் அப்போது செல்வாக்குப் பெற்றிருந்த போட்டிச் சித்தாந்தங்கள் அனைத்தையும் - முக்கியமாகக் கன்ஃபூசியசின் சித்தாந்தத்தை அழித்துவிட அவர் விரும்பினார். ஆனால், பின்னர், மனம் மாறி எரிப்பதற்கு ஆணையிடப்பட்ட நூல்கள் அனைத்தையும் தலைநகரிலிருந்த அரசவை நூலகத்தில் வைக்கும்படி ஆணை பிறப்பித்தார்.
தீவிரமான அயல்நாட்டுக் கொள்கையொன்றையும் ஷி-ஹூ-வாங்-தை செயற்படுத்தினார். நாட்டின் தென் பகுதியில் விரிவாகப் படையெடுத்துப் பல பகுதிகளை வென்றார். அவர் வெற்றி கொண்ட பகுதிகள் இறுதியில் சீனாவுடன் இணைக்கப்பட்டன. வடக்கிலும், மேற்கிலும் கூட அவருடைய படைகள் பல வெற்றிகளைப் பெற்ற போதிலும், அங்குள்ள மக்களை நிரந்தரமாக வெற்றி கொள்ள அவரால் இயலவில்லை. எனினும், அவர்கள் சீனாவுக்குள் தாக்குதல்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக சீனாவில் வட எல்லைகளிலிருந்த பல்வேறு எல்லைச் சுவர்களை இணைத்து சீனப் பெருஞ்சுவர் என்னும் மாபெரும் சுவரை எழுப்பினார். இந்தச் சுவர் இன்றும் நீடித்திருக்கிறது. இந்தக் கட்டுமானங்களுக்காகவும் தொடர்ச்சியான அயல்நாட்டுப் போர்களுக்காகவும், கடுமையான வரிகளை விதிக்க நேர்ந்தது. இதனால் இவர் மக்களின் வெறுப்புக்குள்ளானார். இவருடைய இரும்புக்கர ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வது இயலாதிருந்தமையால் இவரை கொலை செய்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் ஒன்றுகூட வெற்றி பெறவில்லை. எனினும், ஷி-ஹூ-வாங்-தை கி.மு. 210 இல் இயற்கையாகவே மரணமடைந்தார்.
ஷி-ஹூ-வாங்-தைக்குப் பிறகு அவருடைய இரண்டாவது புதல்வன், எர்-ஷி-ஹூ-வாங்-தை என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். ஆனால் எர்-ஷி-ஹூ-வாங்-தை தம் தந்தையைப் போன்று திறமை வாய்ந்தவராக இருக்கவில்லை. அவருடைய ஆட்சிக்கு எதிராகப் பல புரட்சிகள் தோன்றின. நான்கு ஆண்டுக்களுக்குள்ளேயே அவர் கொல்லப்பட்டார். அரண்மனையும் அரச நூலகமும் தீக்கிரை யாக்கப்பட்டன. ஷின் ஆட்சி அடியோடு வீழ்ச்சியடைந்தது.
ஆனால் ஷி-ஹூ-வாங்-தை ஆற்றிய அரும்பணிகளை யாராலும் அழிக்க முடியாது. அவருடைய கொடுங்கோலாட்சி முடிவுற்றதாகச் சீனர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆயினும், அவருக்கு முன்பிருந்த குழப்பமான ஆட்சி திரும்பவர அவர்கள் விரும்பவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த ஹான் அரச மரபினர் ஷின்-ஷி-ஹூ-வாங்-தை ஏற்படுத்திய அடிப்படை நிருவாக அமைப்பு முறையை அப்படியே வைத்துக் கொண்டார்கள். உண்மையில் ஷின்-ஷி-ஹூ-வாங்- தை ஏற்படுத்திய ஆட்சிமுறைதான் சீனாவில் அவருக்குப் பின்பு 2100 ஆண்டுகள் வரை நீடித்தது. ஷின்-ஷி-ஹூ-வாங்-தை கொண்டு வந்த சில சட்டங்களில் கடுமையான ஹான் பேரரசர்கள் மட்டுப்படுத்தினார்கள். சட்டச் சித்தாந்தம் மக்கள் ஆதரவை இழந்தது. கன்ஃபூசியசின் கொள்கை அரசச் சித்தாந்தமாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஷி-ஹூ-வாங்-தை உருவாக்கிய பண்பாட்டு மற்றும் அரசியல் ஒருமைப்பாடு மாற்றப்படவில்லை.
சீனாவுக்கும் உலகுக்கும் ஷி-ஹூ-வாங்-தையின் முக்கியத்துவம் இப்போது நன்கு புலனாகும். சீனாவில் பெரும் பரப்பளவைக் கண்டு மேலை நாட்டினர் எப்போதுமே மலைத்துப் போயிருக்கிறார்கள். எனினும், சீனாவின் வரலாற்றின் பெரும் பகுதியில் சீனாவின் மக்கள் தொகை ஐரோப்பாவையிட அதிகமாக இருந்ததில்லை. ஐரோப்பா எப்போதுமே பல்வேறு நாடுகளாகப் பிரிந்து இருந்தது. சீனா தனியொரு நாடாக இணைந்திருந்தது. சீனாவின் புவியல் அமைப்பு காரணமாக எவ்வித வேற்றுமையும் நிலவவில்லை. அரசியல் மற்றும் சமூகக் காரணங்களினால் மட்டுமே வேற்றுமை நிலவியது. மலைத் தொடர்கள் போன்ற உள்நாட்டுத் தடங்கள், ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று சீனாவிலும் இருக்கின்றன. சீனாவின் ஒருமைப்பாட்டிற்கு ஷி-ஹூ-வாங்-தையின் சாதனை மட்டுமே காரணம் என்று கூற இயலாது. சூயி-வென்-தை போன்ற வேறு பலரும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார்கள். எனினும், ஷின்-ஷி-ஹூ-வாங்-தையின் பணி தலையாயது என்பதில் ஐயமில்லை.
ஷி-ஹூ-வாங்-தையின் மிகுந்த திறமையும், புகழும் வாய்ந்த லீ-எஸ்சூ என்ற முதலமைச்சர் இருந்தார். இவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஷி-ஹூ-வாங்-தை பற்றிய எந்த விவாதமும் முழுமை பெறாது. உண்மையைக் கூறுவதாயின் பேரரசரின் கொள்கைகளில் லீ-எஸ்சூவின் தாக்குறவு மிகப் பெருமளவில் இருந்தமையால், ஷி-ஹூ-வாங்-தை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் சீர்திருத்தங்களுக்கான பெருமை யாரைச் சாரும் என்று அறிந்து கொள்வதே கடினமாக உள்ளது. அதை அறிந்து கொள்வதற்கு முயலாமல், அவ்விருவரின் கூட்டுச் சாதனைக்குரிய பெருமை முழுவதையும் ஷி-ஹூ-வாங்-தைக்குச் சார்த்திக் கூறவே விரும்புகிறேன். (ஏனெனில், லீ-எஸ்சூ ஆலோசனைகளைக் கூறியிருந்தாலும், அவற்றின் மீது இறுதி முடிவு எடுத்து, அவற்றைச் செயற்படுத்தியவர் பேரரசரே ஆவார்).
ஷி-ஹூ-வாங்-தை நூல்களை எரிக்க ஆணையிட்டதன் காரணமாக, அவரைப் பிற்காலக் கன்ஃபூசிய எழுத்தாளர்கள் பழித்துத் தூற்றினார்கள். அவரைக் கொடுங்கோலன் என்றும், மூடநம்பிக்கையுள்ளவர் என்றும், தீங்கு செய்வதில் ஆர்வமுடையவர் என்றும் முறைகேடாகப் பிறந்தவர் என்றும், திறமையற்றவர் என்றும் வசை மொழி கூறினார்கள். ஆனால், இதற்கு மாறாக, சீனப் பொதுவுடைமைவாதிகள் இவரை முற்போக்குச் சிந்தனையாளர் எனப் போற்றினார்கள். மேலை நாட்டு எழுத்தாளர்கள், நெப்போலியனுடன் ஷி-ஹூ-வாங்-தையை ஒப்பிட்டுக் கூறினார்கள். ஆனால், ரோமானியப் பேரரசை நிறுவிய அகஸ்டஸ் சீசருடன் ஷி-ஹூ-வாங்-தையை ஒப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இவ்விருவரும் நிறுவிய பேரரசுகள் ஏறத்தாழ ஒரேயளவு பரப்பினையும், மக்கள் தொகையினையும் கொண்டிருந்தன. ஆனால், அகஸ்டஸ் நிறுவிய பேரரசு மிகக் குறுகிய காலமே நீடித்தது. அத்துடன் அவர் ஏற்படுத்திய ஒருமைப்பாடு நெடுங்காலம் நீடிக்கவில்லை. மாறாக அகஸ்டஸைவிட மிக அதிகமான பரப்பளவு ஷி-ஹூ-வாங்-தை தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அவர் ஏற்படுத்திய ஒருமைப்பாடு 2100 ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்று இன்றும் நீடிக்கிறது. இந்த வகையில் அகஸ்டஸைவிட ஷி-ஹூ-வாங்-தை அதிகச் செல்வாக்கு மிக்கவர் என்பதில் ஐயமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷி-ஹூவாங்-தை (கி.மு.259 - கி.மு.210), வாங், அவர், ஷின், என்றும், இவர், எனினும், சீனாவில், ஆட்சி, மக்கள், சட்டச், காரணமாக, அவருடைய, சீனாவின், கொண்டு, தையின், பெரும், ஏற்படுத்திய, அரசு, தமது, அறிந்து, ஒருமைப்பாடு, சீனா, அனைத்தையும், அரசியல், மட்டுமே, செயற்படுத்தினார், கன்ஃபூசியசின், நிறுவிய, பேரரசர், வெற்றி, சாலைகள், விரும்பினார், அரசின், அந்த, ஆட்சியின், சீனப், காரணமாகவும், அவரது, பல்வேறு, வந்தார், இந்தச், வேறு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்