முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » இரேனியஸ் அடிகளாரின் செந்தமிழ் இலக்கணம்
இலக்கியக் கட்டுரைகள் - இரேனியஸ் அடிகளாரின் செந்தமிழ் இலக்கணம்
- தத்துவப்பின்னணி - முனைவர் கி. முப்பால்மணி
தமிழ் மொழி இலக்கணம்
தமிழ் மொழி இலக்கணம் என்ற இந்த நூலை இரேனியஸ் அடிகளார் தமது 44-வது வயதில் 1834-ல் வெளியிட்டார். எனினும் 1820-களின் பிற்பகுதியிலேயே இந்நூல் உருவாகி இருந்தது. திருப்பாற்கடல் நாதன் கவிராயர் என்ற தமிழ்ச் சான்றோரிடம் 14 ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்; ஏற்கனவே லத்தீன், ஜெர்மனி, ஆங்கில மொழி மரபுகளில் தேர்ச்சியும் பெறற்றிருந்தார். திருப்பாற்கடல் நாதன் சிறந்த கவிராயர், தெளிந்த மற்றும் தர்க்க சிந்தனை உடையவராக விளங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருத மொழிச் செல்வாக்கிற்கு உட்படாதவராகவும் இருந்தார். இதுகண்டு இந்த உள்நாட்டுச் சான்றோரைத் தேர்ந்து கற்றார். தாம் வெளிதேச சமயம் மொழி சார்ந்தவர், தமது சமயம் பொருட்டு பிறத்தியாருடைய மொழிக்கு இலக்கணம் எழுதுகிறோம் என்ற சுய உணர்வுடையவராகவும் இருந்தார்.
இந்த நூல் எழுதும்போது சில கருத்தியல்களையும் பின்பற்றினார். உள்நாட்டுப் பாணியில் இந்நூல் விளங்கவேண்டும், அன்றாடப் பேச்சுத் தன்மை கொண்ட கொச்சை சொற்களை நீக்கி, சுத்த இலக்கண சொற்களைக் கொண்டு நுட்பமாக அமையவேண்டும், உயர்ந்த கவிதைபாணி இலக்கணமாகத் தமது நூல் திகழவேண்டும், அதே நேரத்தில் பொதுமக்கள் மொழி, பேசும் மொழி அமைப்பை ஒத்து நிற்கவேண்டும் என்பன அவை. இவருக்கு முன் சீகன்பால்கு, பெஸ்கி, வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல்கள் இவ்வாறு இருக்கவில்லை என்ற மதிப்பீட்டையும் இரேனியஸ் வைத்துக் கொண்டிருந்தார். எனினும் வீரமாமுனிவர் எழுதிய தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலைப் படித்தபின்பே தம்முடைய இந்த நூலைக் கற்க வேண்டும் என்று விரும்பினார். இரேனியஸ் இலககணம் கற்றபோது தொல்காப்பியம் அன்று வழக்கில் இல்லை. நன்னூலும் செய்யுளில் இருந்தது. இதற்கு உரை விளக்கமும் தேவையாய் இருந்தது என்ற கருத்தையும் கொண்டிருந்தார். ஆதலால் தமது நூலை உரைநடையில் அமைத்தார். சமஸ்கிருத மொழி வழியாகத் தமிழ் மொழிக்கு இலக்கணம் யாராலும் எழுதப்பட்டிருக்கவில்லை. எனினும் பிராமணர்களால் எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் சமஸ்கிருத கலப்புடையனவாக உள்ளன எனக்கூறினார். சமஸ்கிருதம் கலவாத தமிழ் நடையில் எழுத வேண்டும் என்ற நோக்கத்தைத் தீவிரமாகக் கொண்டிருந்தார். என்றாலும் ஆங்கில மொழி வாயிலாகத் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதினார். எடுத்துக்காட்டுகளைத் தமிழ் மொழியில் அமைத்தார். அப்போது இராணுவத்தலைவர்கள், சமய உபதேசிகள், காவல் துறை ஆணையாளர்கள், வாணிகர்கள், கல்வித்துறை, ஆட்சித்துறை நிர்வாகிகள் ஆங்கிலேயராக இருந்ததால் அவர்பொருட்டு ஆங்கில மொழிவாயிலாகத் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதினார்.
நூல் அமைப்பு
இரேனியஸ் அடிகளார் எழுதிய தமிழ்மொழி இலக்கணம் எழுத்தியல், சொல்லியல், சொல் தொடரியல் என்ற பகுப்போடு, பின்னிணைப்பும் கொண்டுள்ளது.
எழுத்தியலில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பு, உயிர் எழுத்துக்களின் குறில், நெடில் பகுப்பு, மெய் எழுத்துக்களின் வலி, மெலி, இடை இனங்கள், தோன்றல், திரிதல், கெடுதல் ஆகியன விவரிக்கப்படுகின்றன. எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு என்ற வரிசை முறை பின்பற்றப்படவில்லை, மேலும் ஐரோப்பிய வழக்கான ஆதீ வார்த்தையிலிருந்து எழுத்துக்கள் பிறந்து வருகின்றன என்ற நாத முதல் வாதம் பற்றிய பேச்சையும் அப்போது இரேனியஸ் கைகொள்ளவில்லை. அந்த நாத முதல் வாதம் இன்று லோகோ என்றும், மொழிக்கிடங்கு என்றும் கிறித்தவப் படிப்பாளிகளால் விவரிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்துக்களைத் தம்முன்னே வைத்துக் கொண்டு, தாம் கண்டுகொண்டு கண்டதை முதன்மைப் படுத்திக்கொண்டு ஆசிரியரால் எழுத்தியல் விவரிப்பு மேற்கொள்ளப்படுகின்றன.
சொல்லியல் இடைச்சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், என்ற வரிசைமுறை பின்பற்றப்படுகின்றது. பெயர்ச் சொற்களானவை பொது, சிறப்பு, திணை, பால் ஆகியனவற்றைக் காட்டும், வேற்றுமை உருபுகளை ஏற்கும் என்பன விவரிக்கப்படுகின்றன. பெயர்ச்சொற்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றைப் புலப்படுத்துவது இரேனியசால் பேசப்படவில்லை. வினைச்சொற்கள் பகுதி, விகுதி, இடைநிலைகள் கொண்டிருப்பது, காலம் காட்டுவது விளக்கப்படுகின்றன. கூடவே வினைச்சொல்லின் வகைகள் விவரிக்கப்படுகின்றன. தமிழில் வினைமுற்று என்ற நிலையில் அச்சொற்கள் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம் செய்பொருள் என்ற ஆறு பொருளைக் காட்டும், அது இரேனியசால் பின்பற்றப்படவில்லை. சொல்தொடரியல் என்று அவரால் அளிக்கப்படும் விளக்கம் தமிழ்மொழிக்குப் புதியது ஆகும். வேற்றுமைத் தொடர்கள், வினைகள் ஆகியன நடைமுறை வழக்கில் நிலவும் விதங்கள் விளக்கப்படுகின்றன.
கண் முன்னால் காணப்படும் மொழி எவ்வாறு உள்ளது, அது எவ்வாறு பிரயோசனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்ற விளக்கப்பணியே நூலில் சிறப்புநிலை வகிக்கிறது. ஐரோப்பிய மொழி மரபு உணர்ந்தவரை வாசகராகவும், புதியதாகத் தமிழ் இலக்கணம் கற்க முனையும் தமிழ்பயின்ற கிறித்தவப் பாடங்கேட்பவராகவும் முன்னிலைப்படுத்திக் கொண்டு நூல் திகழ்கிறது.
இரேனியஸ் 7-7-1820 ஆம் நாளில் முதல் மிஷனெரியாக திருநெல்வேலிக்கு வந்தார். தமிழ்பேசும் பிற்பட்ட வகுப்பு மக்களிடையே உபதேசப் பணி ஆற்றினார். திருச்சபையின் நற்செய்தியை விளக்கினார். தாம் வளர்த்த ஐரோப்பிய புராடஸ்டண்ட் கருத்தியல்களுக்கு ஏற்ப லூத்தரன் திருச்சபைக் கொள்கைக் கண்கொண்டு தமிழ் மொழி இலக்கணம் நூலை எழுதினார்.
எடுத்துக்காட்டுகளே தரவுகளாக
எழுத்தியலிலும், சொல்லியலிலும் எடுத்துக்காட்டப்படும் சான்றுகள் பொன்+தகடு=பொற்றகடு, காடு+அலர்ந்தது=காடலர்ந்தது, கவண்+நெடிது=கவணெடிது என்ற நீண்ட கால மரபார்ந்த சொற்களை மேற்கொண்ட பாங்கினில் அமைந்துள்ளன. இவைகளோடு கூடவே மனிதர்கள் நல்லவர்களல்ல, பாவஞ் செய்தான், முழங்கால்படியிட்டான், சபை, மாட்சிமை, ஞான போசனம், சுத்த இருதயம், புறப்பொருள் போன்ற சொல்லாட்சிகளைத் தமது சுயசமயம் காட்டும் பொருட்பாங்கில் இரேனியஸ் மேற்கொண்டார். இது ஏற்கனவே இலக்கணம் அறிந்தவர்களுக்கும், தமிழ் மரபுடைய சுதேசிப்புலவர்களுக்கும் புதியன.
சொல் தொடரியலில் எடுத்துக்காட்டாக மேற்கொள்ளப்படும் வரித்தொடர்கள் மேலும் புதுமையும், வீரியமும், தீவிரமும் தாங்கிப் பொலிகின்றன. அஞ்ஞானிகளுக்கு ஞானத்தைப் போதித்தான், பிராமணர் சனங்களுக்குப் பொய்களைச் சொல்லுகிறார்கள், தேவகட்டளையை உங்களுக்கு அறிவிப்பேன், இவ்வுலகத்தில் மனித அவதாரம் பண்ணினவருமாய், மனிதர் யாவரும் செய்த பாவங்களை நிவர்த்திக்கும் படிக்குத் தமது சீவனை விட்டவருமாய்த் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரமகதியைச் சம்பாதித்தவருமாயிருக்கிற இரட்சகரை யெல்லாருஞ் தோத்திரஞ்செய்வார்களாக என்பவைகளாக அவை அமைந்துள்ளன. இந்தப் பாங்கினில் உள்ள வரிகள் இலக்கண எடுத்துக்காட்டுகளாக இருந்தாலும் சமூக, சமய தத்துவச் சிறப்புகளைப் புலப்படுத்தும் தரவுகளாகவும் உள்ளன.
சமூக நிலையில் உழவு, விதைப்பு, அறுவடை, நெல்லாக்கல், விற்றல், வரிப்பணம் செலுத்துதல், அரசுக்கு சனங்கள் கீழ்ப்படிதலின் அவசியம், பிராணர்களுக்குச் சூத்திரர் தாழ்வாக இருத்தல், சேனைகள் கலவரத்தை உள்நாட்டில் அடக்குதல், வெளிநாட்டில் கொள்ளையிடல் போன்றவற்றைக் காட்டுகின்றன. அதிகாரம், வரி, கூலி, பணம், பிரயோசனம் ஆகிய கருத்தமைப்புகள் மேலான நிலை வகிக்கின்றன.
சமயநிலையில் அவபக்தி, துன்மார்க்கம், விக்கிரக ஆராதனை, பாவவழி, கர்த்தர் இரட்சிப்பு, பைபிள், சபை, சன்மார்க்கம், ஆகியன கருத்தமைப்புகள் மேனிலையில் திகழ்கின்றன.
தத்துவ நிலையில் புறப்பொருள், பஞ்ச பூதங்கள், படைப்பு, பிரயோசனம், ஆத்மா, மனிதன், இறை மகிமை ஆகியன ஊடாட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. பிரயோசனம் என்பதற்கான அர்த்தம் இங்கே முக்கியமாகப் பார்க்கவேண்டும். என்பவர் தமது நூலான வேத அகராதியில் பிரயோசனம் = profit, utility என்று எழுதினார்.
புறப்பொருளும், பராபரனும்
இக உலகியற் பொருள்கள், இயற்கைப் பொருள்கள், புறப்பொருட்களாகும். இரேனியஸ் இவைகளைப் பண்டங்கள், பதார்த்தங்கள் என்று அழைக்கிறார். இரும்பு, செம்பு, ஈயம், பொன் ஆகிய இவை போன்றன. இவையல்லாமல் நிலம், நீர், தீ, வளி, சூரியன், நட்சத்திரங்கள் ஆகிய பிரபஞ்சப் பொருள்களும் உள்ளன. மேலும் பொன்னால், கல்லால், மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களான படைப்புகளும் உள்ளன.
பிரபஞ்சப்பொருட்களும், இக உலகியற்பொருட்களும் இரேனியஸ் கொள்கைப்படி பராபரனால் படைக்கப்பட்டவை ஆகும். இவை பராபரனுடைய மகிமையை அறிவிக்கின்றன. இத்தனை பிரகாசமாய்த் தோன்றிய சூரியன் பராபரனுடைய மகிமையை அறிவிக்கிறான். நட்சத்திரங்கள் பிரகாசமாயும், ஒழுங்காயும் நடக்கின்றன. இந்த ஒழுங்கில் அவைகளினுடைய சுய விதிகள், போக்குகள் உள்ளன. பராபரன் அவற்றைப் படைத்தான்; அவைகள் சுய தீர்மானத்தில் நிலவுகின்றன. பூமி சூரியனைச் சுற்றுகிறது. பிற கோள்களும் அப்படியே. இவற்றை வானவியல் சோதிடசாஸ்திரம் - கற்பிக்கிறது. கோபர் நிக்கஸ், கெப்ளர் ஆகியோர் கண்டுணர்ந்த விதிகள் அப்போது ஐரோப்பாவில் கற்கப்பட்டு இருந்தன. இதில் உற்றுணரவேண்டிய ஒன்று உள்ளது. வானவியல் பொருட்களில், இக உலகியற்பொருட்களில் - நவகிரகங்கள், பஞ்ச பூதங்கள் - ஆகியவற்றில் பராபரன் தங்கி இருக்கவில்லை, பொருட்கள், அனைத்தும் பொருட்கள் தான். பராபரன் மேலான பராபரன்தான். மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள் கூட அப்படியே. விக்கிரகத்திற்குக் கண்ணிருந்தும் தெரியாது; விக்கிரக ஆராதனைக்கு விரோதமாய் எழுதினான் என்று இரேனியஸ் எழுதிய தொடர்கள் குறிப்பிடத்தகுந்தன. படைக்கப்பட்ட பொருள்களிலும், செய்யப்பட்ட பொருள்களிலும் பராபரன் குடியிருக்கவில்லை. பொருள்கள் வேறு, பராபரன் வேறு. தாசிகள் பொன்னாலான சுவாமிக்கு முன்பாக நடனம் பண்ணுவது அவருடைய மதிப்பில் பாவவழி ஆகும். விக்கிரக ஆராதனை அவரது நோக்கில் துன்மார்க்க அவபக்தி ஆகும்.
புறப்பொருட்கள் நட்சத்திரங்கள், பொன், செம்பு, இரும்பு, ஈயம், சாஸ்திரக்கல்வி என்பன எல்லாம் பிரயோசனத்திற்காக உள்ளன. வானம் உயரமாயும், மகிமையாயும், பிரயோசனமாயும் இருக்கிறது; ஆதியில் மகாதேவனால் உண்டாக்கப்பட்டவைகளுமாய், எப்பொழுதும் பூலோகத்தாருக்கு மிகுந்த பிரயோசனங்களைக் கொடுக்கிறவைகளுமாய் இருக்கிற நட்சத்திரங்கள் பற்றிய சோதிட சாஸ்திரக்கல்வி பிரயோசனமானது. சோதிட சாஸ்திரம் மனிதனால் உண்டாக்கப்பட்டது. இப்படி ஒரு பிரயோசன நிலையில் அணுகுமுறையில் புறப்பொருள் உட்படுத்தப்பட்டுள்ளது. இது பிரயோசன மற்றும் பயன் வழித்தத்துவம் ஆகும்.
ஒரு பொருளாகிலும் வீணாக அல்ல, ஒரு பிரயோசனத்திற்காகவே உண்டாக்கப்பட்டிருகிறது என்பது இரேனியஸ் கருத்து.
புறப்பொருள்கள் மட்டுமல்லாது கூலிக்காரர், ஊழியக்காரர் கூட முதலாளிகளின் பிரயோசன நிலைக்குட்பட்டவரே. பணத்திற்கு வேலை செய்யும் நிலை உருவாகிவரும் சமூக நிலைமையை இரேனியஸ் அறிந்தவரே. நமக்குக் கட்டளையிடப் பட்டவைகளை எல்லாவற்றையும் செய்தபின் நாம் அப்பிரயோசனமான ஊழியக்காரர் ஆவோம் என்பது அவரது சொற்றொடர்கள் பயன்வழி, பிரயோசன நோக்கமைந்த தத்துவமே இது.
புறப்பொருட்களில் பராபரன் இல்லை, அவை மனிதப் பயன் வழிப்பட்ட பிரயோசனத்திற்குட்பட்டவை என்பவை தேயிசம் - DESIM - ஆகும். பதினேழாம் நூற்றாண்டில் செர்பரி நகரில் வாழ்ந்த ஹெர்பர்ட் என்ற ஆங்கிலேயர் இதன் தந்தை ஆவார், வால்டேர், ரூஸ்ஸோ ஆகியோர் இதை அனுசரித்தனர். லாக்கி - Locke - என்ற ஆங்கில அறிஞரும் தேயிசத்தைப் போற்றினார். இவர் மீதும், இவர் அரசு பற்றிய எழுதிய நூல் மீதும் இரேனியஸ் நல்ல மதிப்பைக் கொண்டிருந்தார். வேத அகராதி எழுதிய என்ரிபவர் கூடத் தேசக் கருத்துக்களை அனுசரித்தார். இந்தத் தேயிசனம் என்ற தத்துவ இயலானது இயலுலகப்பொருள்கள் பற்றி விளக்கும்போது அப்போதைய கிறித்தவ இயலால் அனுசரிக்கப்பட்டது என்பதே இங்கே எடுத்துரைக்கத்தக்கது.
ஆத்மாவும், மனிதனும்
மனிதனானவன் ஆத்மா, சரீரம் உடையவன். இரண்டும் தனித்தனி, வேறு வேறும் கூட ஆதியில் உடலான மண்கொண்டு உண்டாக்கப்பட்டது, ஆத்மாவானது பராபரனது ஆவி கொண்டு தரப்பட்டது. மனித ஆத்மாவானது அறிவு, யோசனை உடையது என்ற கருத்துடையவராக இரேனியஸ் இருந்தார். அறிவானது ஒன்றைப் பெறும் கருவி; யோசனையானது அறிவால் பெற்ற பொருளைப் பற்றிக் கொள்ளுதற்கான கருவி. இது அவரது சொந்த கருத்து. அவர் காலத்தில் ஆத்மாவானது மனம், புத்தி என்ற பகுப்பைக் கொண்டுள்ளது என்ற கருத்துரை கிறித்தவ இயலில் இருந்தது, அதனையும் இரேனியஸ் ஏற்றுக் கொண்டார். மனம் ஆசைகளை உண்டாக்கும், அந்த ஆசைகளைப் புத்தி அடக்கிக் கீழ்ப்படுத்தி ஆளவேண்டும் என்ற ஈடுபாடும் கொண்டிருந்தார். கூடவே, மனம் உடலை நடத்துகிறது, ஆனால் எப்படி நடத்துகிறது என்பது இரேனியஸிற்கு ஒரு கேள்வியாகவே இருந்து கொண்டு இருந்தது. அந்த வகை நம்மால் சொல்லக் கூடாத இரகசியமாய் இருக்கிறது என்று மட்டும் விடையாக உணர்ந்திருந்தார்.
கிறித்தவ இயலின்படி ஆத்மா அபூர்வமானது, நித்தியமானது. ஆத்மாக்கள் பல; வேறு, வேறு, ஒரு ஆத்மாவுக்கு ஓர் உடல் மட்டுமே உண்டு. எந்த நிலையிலும் இன்னொரு உடலை அடையாது. ஆத்மா மனம், புத்தி என்ற கூறுகளைக் கொண்டது. மனம் சுதந்தரமானது நல்லது கெட்டது, புண்ணியம் பாவம் சன்மார்க்கம் துன்மார்க்கம் ஆகியவற்றில் ஒன்றை வேண்டும் என விருப்பமும், வேண்டாம் என வெறுப்பும் கொள்ளும் சுதந்தரம் படைத்தது. ஆனால் 1830கள் தொடங்கி மனமானது பகுத்தறிவு கொண்டுள்ளது என்ற கருத்துரு பிரபலமானது. ஆத்மா சுயாதீனமானது. சுயசுதந்திரம் உடையது. தனது செயலுக்கு, தான் உத்திரவாதி, கணக்குக் கொடுக்க வேண்டிய வாழ்வில் நிலவுகிறது. அதனாலேயே தனது வழியைத் தேர்வு செய்யும் சுயபொறுப்பில் உள்ளது. தேவபக்தி அல்லது அவபக்தி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும். தம் கால மக்களிடையே அவபக்தி, விக்கிர ஆராதனை, துன்மார்க்கம் ஆகியன குடிகொண்டு இருந்ததை இரேனியஸ் இங்கு எடுத்துக்காட்டுகிறார். மிகுந்த அன்பு உள்ளவராகிய கர்த்தாவினாலே மகிமையாய்ப் படைக்கப்பட்ட மனிதர் யாவரும் அவரை மறக்கிறார்கள். ஆதலால் மெய்யான சுவாமிக்குக் கீழ்ப் பணியவேண்டும் என ஆவலுடன் நாடினார். அவருடைய தமிழ்மொழி இலக்கண நூல், தனது எடுத்துக்காட்டுகளில் சன்மார்க்க முயற்சி, நற்செய்தி, தேவகிருபைகளைப் புலப்படுத்துகிறது. ஆத்மாவானது இந்தவுலகத்தின் இன்ப துன்பங்களை அறிந்து அனுபவித்த பின்னர்தான் பரலோக ஆசை கொள்ளும் என்ற கருத்தியல் இரேனியஸ் காலத்தில் புகழ்பெற்றிருந்தது. அதே சமயத்தில் தான் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப சுவர்க்கம், நரகங்களில் அடுத்த பலனை அடையும் என்பதை இரேனியஸ் கிறித்தவ இயலின் பங்களிப்பாக எடுத்துரைத்தார்.
எனினும் அப்போது, மனிதன் பகுத்தறிவு சுயாதீனம், இரண்டும் உடையவன் என்ற கருத்துரையைப் புராடஸ்டண்ட் கிறித்தவ சபையாளர் தமிழகத்தில் புதியதாகப் பேசத் தொடங்கியிருந்தனர். பகுத்தறிவுக் கருத்துரைகள் இங்கிருந்த இந்து, சைவ சமயம் சார்ந்த பிறத்தியாரை நோக்கி இடையறாது தீவிரமாக உரைக்கப்பட்டன, சுயாதீனம் இந்தியக் கிறித்தவர்களை நோக்கிப் பேசப்பட்டது. இரேனியஸ் அதன் முன்னோடி, அவரது தமிழ்மொழி இலக்கணம் இதைத் தாங்கியுள்ளது.
தத்துவப் பின்னணி
பராபரன் நித்தியமானவன், மெய்யானவன், சுயம்பானவன், உருவமில்லாதவன். அவன் ஒருவனே ஆவான். தொடக்கம் முடிவு அற்றவன். புறப்பொருள்கள் படைக்கப்பட்டவை. மட்டுமே அவை அளவு, எல்லை, வடிவம் உடையவை. சுயமான பண்புகள் உடையவை.
அளவும், வடிவமும் மாற்றமும் இருப்பதால் அழிவன.
ஆத்மா உடலுக்குக் கொடுக்கப்பட்டது. மாறாதது, அழியாதது. சுயாதீனம் சுயசுதந்தரம் உடையது. செயலுக்குச் சுயபொறுப்புக் கொண்டது.
இந்த இரண்டிலும் பராபரன் தங்கவில்லை அளவற்றவன். சுயம்பானவன் என்ற முறையில் அளவுள்ள, வடிவப்படுத்தப்பட்ட, செய்யப்பட்ட பதார்த்தங்களில் பண்டங்களில் அடங்க மாட்டான், இருப்புக் கொள்ள மாட்டான். அழிவற்றவன், அழிவுள்ளவைகளில் நிலவுவதில்லை.
ஆத்மாவில் பராபரன் குடிகொள்ளவில்லை. மனித சரீரத்தில் அவன் நிலவவில்லை. ஆத்மா மட்டுமே உண்டு; ஓர் இடத்தில் இரண்டு இருப்புக்கொள்ளுதல் ஆபத்து.
மனிதனின் உருவாக்கம், படைப்பு என்ற முறையில் மொழியிலும் பராபரன் இருப்புக் கொள்ளவில்லை.
அப்போதைய வரலாற்றுக் காட்சி
அன்றைய கிறித்தவ இயலில் தேயிசமும், பிரயோசன மரபும் தத்துவநிலை விளக்கங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. பராபரன் தனி, புறப்பொருள்கள் தனி; வேறு, வேறும் கூட அப்படியே தெய்வமானது தமது அளவில்லா சுபாவத்தின் இயல்பினால் எங்கும் வியாபித்திருந்தாலும், சகல வஸ்துக்களும் அவரிடத்தில் அடங்கினாலும், அவர் அதுகளில் நிறைந்து இருந்தாலும் அதுகளோடு ஒன்றாகாது அதைப்பற்றிய அவருடைய சர்வவியாபகம் அந்த வஸ்துக்களின் சுபாவத்தை மாறுபடுத்துகிறதும் இல்லை. அதுகளை மேன்மைப்படுத்துகிறதும் இல்லை. என்றாலும் ஒரு வஸ்து இன்னொரு வஸ்துவினுள் புகாது என்பதில் உறுதியாகக் கிறித்தவக்கொள்கை நின்றது. புறப்பொருள்களின் ஒழுங்கு, கிராமம், நியதி என்பன அவைகளின் பன்மைத் தன்மையை உறுதி செய்வதோடு, சுயாதீனத்தையும் புலப்படுத்துகின்றன. இப்படி இருந்தபடியே தாழ்ந்த வஸ்துக்கள் உயர்ந்த வஸ்துக்களுக்குக் கீழ்ப்படியவும், சிறியதுகள் பெரியதுகளுடைய சுக நன்மைப்பிழைப்பு முதலிய பிரயோசனத்துக்கு உதவவும் உள்ளன. அதெப்படி என்றால் பொம்மனும், திம்மனும் எனக்காக வேலை செய்யும்போது அவருக்கு ஒரு பிரயோசனம் ஏற்பட்டுள்ளது. அந்தவேலைக்குத் தக்க கூலியாய் இரண்டு பணத்தை இருவருக்கும் தரும் போது, வேலை செய்த அந்த இருவருக்கும் ஒரு பிரயோசனம் ஏற்பட்டுள்ளது. இப்படியே விசாரித்தோமானால் அவனவன் தான்தான் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான் என்றே கூற வேண்டியுள்ளது. அதெப்படியென்றால் வேலை பண்ணுகிறவன் தான் பண்ணுகிற வேலை நிமித்தமாகத் தனக்குப் பிரயோசனம் வரத்தக்கதாக வேலை செய்கிறான். வேலை சொல்பவன் நன்மை அடைவதற்கு அந்த வேலையாள் முதலாவதாக முயற்சிக்கிறான் என்றும் சொல்லத்தகாது. வேலை சொல்பவன் பணம் கொடுப்பதினாலே தனக்குப் பிரயோசனமான நன்மை வரவேண்டும் என்று நினைப்பானேயொழிய, வேலை செய்பவன் பிழைக்கவேண்டும் என்று நினைக்கமாட்டான். பல்லக்கைச் சுமக்கிறவனும் பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் அவனவன் தான் பிரயோசனத்திற்கு முயற்சி செய்கின்றனர் என்றே சொல்லத்தகும். இது ராபர்ட் டிநொபிலியினது விளக்கம். வேலை முடிந்தபின் வேலையாள் பிரயோசனமற்றவன் ஆகிறான். நமக்குக் கட்டளையிடப்பட்டவைகள் எல்லாவற்றையும் செய்த பின்பு நாம் அப்பிரயோசனமான ஊழியக்காரர் ஆவோம் என்பது இரேனியஸினது எடுத்துக்காட்டு. இதில் இந்திய வினைக் கொள்கை, அதனால் நிறுவப்படும் பல பிறவி உண்டு என்ற நம்பிக்கை ஆகியன விலக்கப்படுகின்றன. கீழானவர், மேலானவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர், பல்லக்கைச் சுமப்பவர், பல்லக்கில் அமர்ந்தவர் ஆகிய சமூக நிலைகளை விளக்க நல்வினை, தீவனைக் கருத்தியல்கள் மேற்கொள்ளப்பட்டன. கூலி கொடுப்பவர், அதுவும் பணமாகக் கொடுப்பவர், அதைக்கூலியாகப் பெறுபவர் என்ற நிலை சமூகத்தில் இங்கு ஏற்பட்டபோது கூடவே பிரயோசன வாதமும் விளக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டது. கிறித்தவ இயல் அப்பணியைக் கைக்கொண்டது. கூலி தந்து உழைப்பைப் பெறுவது, கூலிக்கு உழைப்பை விற்பது என்ற சமூக நிலை ஏற்பட்டபோது பிரயோசன வாதம் மேலோங்கியது.
முன் ஜென்மம், மறு ஜென்மம் ஆகியன இரேனியஸ் தத்துவ மரபில் இல்லை. எனினும் ஒரு மனிதன் மறுபடியும் பிறக்காவிட்டால் மோட்ச இராச்சியத்தைக் காண மாட்டான் என்பது அவரது எடுத்துக்காட்டு வரி, மறு சென்மம் என்பது தேவகிருபையால் இருதயம் சீர்பட்டு மனந்திருந்திச் சமய மாற்றமாகிக் கிறித்தவ விசுவாசமுள்ள நன்னடக்கையாய் இவ்வுலகிலேயே நடப்பது, இதுவே மறுபிறப்பும் கூட என்பதாக என்ரிபவர் கூறும் விளக்கம் அன்று இருந்தது.
தேயிசக் கிறித்தவ இயலின்படி, படைக்கப்பட்ட மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே, மீண்டும் இன்னொரு தடவை மனிதப்பெண் வயிற்றில் உருவாகிப்பிறக்கும் அடுத்த பிறவி என்பது இல்லை, அதே நேரத்தில் உடல்வேறு, உயிர்வேறு. இப்படியாக தேயிசமும், பிரயோசன மரபும் பிரபஞ்சத்தில் அனைத்தினுள்ளும் கடவுள் அகமும், புறமும் நிறைந்து ஒன்றென உள்ளது என்று கூறும் இங்கிருந்த சூஃபிசம், சித்தர், அனுபூதியாளர், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மரபுகளையும் மற்றும் புறப்பொருள்களும், மனித வாழ்வு மட்டும் உண்மை எனக்கூறும் உலகாயதம் போன்ற தத்துவ மரபையும் விலக்கும் பொருட்டுக் கிறித்தவ இயலில் வீறுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
1830களுக்குப்பிறகு இந்த தேயிசம், பிரயோசன விளக்கம் இரண்டும், இந்தியாவில் பரவிய ஆங்கிலேய நேர்க்காட்சிவாதத்தில் சங்கமமாகி 1990 வரை திடமுடன் நின்று திகழ்ந்தன. இதனை மறுத்தபடிதான் வள்ளலார், மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தர் ஆகியோர் உருவாகி விளங்கினர். அந்தச் சிறப்பமைந்த வரலாற்றில் அதன் தொடக்க காலத்தில் இரேனியஸ் தேயிசம், பிரயோசன விளக்கத்தத்துவப் பின்னணியைக் கொண்டு ஒளிவிட்டார்.
நேர்காட்சி வாதம் பற்றி இரேனியஸ் அறிந்திருக்கலாம். லாக்கி - Locke பற்றி அவர் அறிந்திருந்தார் என்பது கொண்டு காம்டி, ஹ’யூம் போன்ற நேர்க்காட்சியாளர் பற்றியும் அவர் தெரிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும் இவர்களோடு ஜே.எஸ். மில், ஹெர்பர்ட் ஸ்பென்சர், பெந்தம் ஜெரோம் போன்றோர் இரேனியஸ் காலத்திற்குப் பிறகு, இங்குப் பிரபலமடைந்தனர்; அவர்களது ஆங்கிலேய நேர்க்காட்சிவாதம் தத்துப் பொலிவோடு இங்குக் கிறித்தவ இயலில் விளக்கம் பெற்றது.
நேர்க்காட்சி வாதம் இங்கிலாந்தில் புகழ்பெற்றது. வணிகர், ஆட்சியாளர், இராணுவ அதிகாரிகள், கல்வியாளர், சமயபோதகர் ஆகியோருடைய கருத்தியல்களில் பொலிவுதந்தது. இதற்கு முகாந்திரமாக ஜெர்மனியின் ஹாலே இறையியல் பள்ளியில் பயிற்சி பெற்ற குருமார்கள் ஆட்சி பெற்றிருந்த லூதரன் சபை சமயப்பணி செய்த இடத்தில் ஆங்கிலேய சபை குருமார்கள் பணி செய்வது இரேனியஸ் காலத்தில் ஆரம்பமானது. பிஷப் டானியல் காரி (177-1837) மற்றும் பிஷப் ஜார்ஜ், ஜான் டிரவர் ஸ்பென்சர் (1799-1866) ஆகியோருடைய ஆட்சிக்காலங்களில் உறுதிபெற்றது. கங்கை நதிபாயும் இடமெல்லாம் இருபக்கமும் கிறிஸ்துவ ஆலயங்கள் நிறைந்து, இருபக்கத்து நிலங்களைக் கிறித்தவர்கள் சாகுபடி செய்து புளிய மரங்களின் அடியில் நின்று கொண்டு ஞான கீதங்களையும், ஞானப்பாட்டுக்களையும் பாடும் காலம் சீக்கிரம் வரும் என்று பிஷப் காரி எதிர்நோக்கினார். பிஷப் காரியானவர் டென்மார்க், ஜெர்மனி தேசங்களிலிருந்து வரும் மிஷனெரிமாரை நியமிப்பதை விட்டு ஆங்கிலேய மிஷனெரிமாரையே நியமிப்பது நலம் என்று கருதினார்; இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த ஐரோப்பிய ரத்த சம்பந்தமுள்ளவர்களைப் பயிற்றுவித்துப் பட்டம் கொடுப்பது நல்லமுறை என்று கண்டார். நற்குணம் பொருந்திய இந்தியக் கிறித்தவர்களை சிறப்பான விதமாய் வேதசாஸ்திரப் பயிற்சி செய்வித்துப் பட்டங்கொடுப்பது அவசியம் என்று முதன்முதலில் கண்டறிந்தவர் பிஷப் ஸ்பென்ஸர்தான். மேலும் ஐரோப்பியர் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆகையால் இந்தியர்களே இந்தியாவை கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்று சமயம் கிடைத்தபோதெல்லாம் இந்தியர்களுக்குப் பட்டம் கொடுத்தார். பிஷப் ஸ்பென்ஸரால் பட்டம் கொடுக்கப்பட்டவர்களில் அருட்திரு. போப், கால்டுவெல், என்ரி பவர் ஆகியோர் தமிழ் உலகில் புகழ்பெற்றவர் ஆவர். இவர்களிடம் நேர்காட்சி வாத இயல்புகள் பிறத்தியாரை நோக்கிப் பேசும்போது பொலிவு பெற்றன.
இந்த நேர்காட்சி வாத இயல்புகள் இரேனியஸ் காலத்தத்துவப் பின்னணியின் முதிர்ச்சி ஆகும்; இவர் மூலமாக, அவை தமிழகத்தில் தமது பயணத்தைக் கடந்து வந்தன. தமிழ் மொழி இலக்கணம் நூலின் சொல் தொடரியல் சார்ந்த எடுத்துக்காட்டுகள் இதைப் புலப்படுத்துகின்றன.
ஆதார நூல்கள்
1. A. GRAMMAR of TAMIL LANGUAGE - C.T.E. RHENIUS. 1853.
2. நித்திய ஜீவன் சல்லாபம் - ராபர்ட்டிநொபிலி. (பதிப்பு. 1964)
3. ஆத்ம நிர்ணயம் - ராபர்ட்டி நொபிலி. பதிப்பு. 1963.
4. வேத அகராதி - என்ரிபவர். 1841.
5. சமய பரீட்சை - ராபர்ட்ப்ரென். 1858.
6. சத்திய வேத பரீட்சை - புதுவை சென்மவிராக்கினி மாதாகோவில். 1846.
7. புனர் ஜென்ம ஆட்சேயம் - ராபர்ட்டி நொபிலி. பதிப்பு - 1963
8. சென்னை அத்தியட்சாதீனத்தின் சதாப்த சரித்திரம் - எஸ்.கே. தேவசிகாமணி. 1935.
பார்வை நூல்கள்
1. கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு - சபாபதி குலோந்திரன். 1967
2. விவிலியமும் தமிழும் - சரோஜினி பாக்கியமுத்து. 1991.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரேனியஸ் அடிகளாரின் செந்தமிழ் இலக்கணம் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இரேனியஸ், தமிழ், இலக்கணம், மொழி, பராபரன், கிறித்தவ, வேலை, பிரயோசன, தமது, கொண்டு, என்பது, ஆத்மா, பிரயோசனம், ஆகியன, ஆகும், விளக்கம், அந்த, வேறு, இல்லை, பிஷப், இலக்கண, நூல், எனினும், எழுதிய, மனம், கொண்டிருந்தார், சமூக, தான், அவரது, வாதம், செய்த, தத்துவ, ஆகிய, ஆங்கிலேய, அவபக்தி, செய்யப்பட்ட, அவர், மனித, ஆத்மாவானது, காலத்தில், ஆகியோர், பொருள்கள், நட்சத்திரங்கள், இயலில், மட்டுமே, நிலை, எழுதினார், அப்போது, மேலும், நூல்கள், என்பன, ஆங்கில, சமயம், மொழிக்கு, ஐரோப்பிய, வேண்டும், உள்ளது, கூடவே, காலம், நிலையில், சமஸ்கிருத, உண்டு, இருந்தார், தாம், கருவி, உடையது, கூலி, இன்னொரு, புத்தி, தனது, நேர்காட்சி, பொன், நூலை, பட்டம், பதிப்பு, பிறவி, நிறைந்து, முயற்சி, நன்மை, சுயாதீனம், மாட்டான், இரண்டும், பற்றி, விவரிக்கப்படுகின்றன, அப்படியே, எழுத்துக்களின், கொண்டுள்ளது, துன்மார்க்கம், விக்கிரக, காட்டும், என்றும், மனிதன், பற்றிய, படைக்கப்பட்ட, சொல், செய்யும், தேயிசம், இவர், என்ரிபவர், புறப்பொருள், ஊழியக்காரர், அவருடைய, தமிழ்மொழி, புறப்பொருள்கள், ஆராதனை