முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » இரேனியஸ் : வாழ்வும் எழுத்தும்
இலக்கியக் கட்டுரைகள் - இரேனியஸ் : வாழ்வும் எழுத்தும்
- ஆர்.எஸ். ஜேக்கப்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவர் தொ. பரமசிவன் அவர்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட கருத்தாய்வுக் கட்டுரை.
தமிழ் நாட்டோடும், தமிழ் மொழியோடும் கிறித்தவம் கொண்ட தொடர்பு ஐந்து நூற்றாண்டு காலப் பழமையினையுடையது. இத்தொடர்பில் தமிழராகவே மாறிப்போன ஐரோப்பியக் கிறித்தவர்கள் பலருண்டு. வீரமாமுனிவர், பேராயர் கால்டுவெல், ஜி.யு. போப் என அவர்களில் சிலரே தமிழ் மக்களுக்கு பெரிதும் அறிமுகமாயுள்ளனர். சீர்திருத்தத் திருச்சபையினரில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களில் கால்டுவெல்லுக்கும், போப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர் இரேனியஸ் அடிகளார். எழுத்து மொழியோடு மக்களின் பேச்சு மொழியினையும் அதன் உயிர்ப்போடு விளங்கிக் கொண்ட ஆற்றல் மிக்கவர்.
இரேனியஸ் எழுதிய தமிழ் இலக்கண நூலும் மொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் குறித்த ஆங்கில நூலும் தமிழ் மொழி ஆய்வாளர்களுக்கு இன்றும் வேண்டிய சில புதிய செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்விக்கு அவர் இட்ட அடித்தளம் வலிமையானது.
தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் நினைக்கப்படாமல் போய்விட்ட இப்பெருந்தமிழரை எம் தமிழியல் துறை நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தது. இரண்டாயிரமாவது ஆண்டில் பிப்ரவரி திங்கள் இரண்டாம் நாள், இரேனியஸ் அடிகளாரின் தமிழ்ப்பணி குறித்து ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அழைக்கப்பட்ட அறிஞர்கள் ஐவரும் மிகச்சிறப்பான முறையில் கட்டுரைகளை வாசித்தளித்தனர். அவர்களில் ஆர். எஸ். ஜேக்கப் தொகுத்தளித்த இரேனியஸ்: வாழ்வும் எழுத்தும் என்ற கட்டுரை கூடல் வாசகர்களுக்காக இதோ...
முன்மொழி :
அருள் தொண்டர் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் சென்னைக்கும், நெல்லைக்கும் கிடைத்த அருட்கொடை திருச்சபை மக்கள் அவரை இரேனியஸ் என்றே அன்புடன் அழைக்கிறார்கள். திருமறையாளர்கள் "திருநெல்வேலி அப்போஸ்தலன் ரேனியஸ்" என்று கூறுகிறார்கள். அப்போஸ்தலன் என்றால் தூதுவன் என்று பொருள். தூதுவனுக்கான அனைத்து இலக்கணங்களையும் ஒருங்கே அமையப் பெற்றவர் ரேனியஸ், அவரது வாழ்வும், எழுத்தும் என்பன தொண்டும் தியாகமும் தூய்மையுமே ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி அவரது வாழ்வும் எழுத்தும் இரண்டறக் கலந்துள்ளன.
அன்னாரின் இருபத்தி நான்கு ஆண்டுகளின் வாழ்வை எண்ணுங்கால் ரேனியஸ் அடிகளாரின் தனி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, குருத்துவப்பணி, ஆன்மீக ஆதாயப்பணி, அருளுரைப்பணி, சபைகளைக் கட்டுதல், சபை மேய்ப்புக் கண்காணிப்புகள், நிறுவனங்களை நிறுவுதல், அவைகளைத் திறம்பட நடத்தல், ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி தருதல், தினமும் தெருப்பிரசங்கங்கள் செய்தல், இடையறாது நூற்களை எழுதுதல், அறிவு நூற்களை எளிய நடையில் கொடுத்தல், கடைசி வினாடிவரை வேதாகம மொழிபெயர்ப்பு இவ்விதமாகப் பல முனைகளில் அவரது ஊழியம் விரிந்து பரந்து வியாபித்துள்ளது. இவரது வாழ்வும் எழுத்தும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை.
மானுட நேயத்திற்கு விரோதமான செயல்கள், கொத்தடிமைத்தனங்கள், சாதியக் கொடுமைகள், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுதல், மூடபக்தி இவைகளைக் காணுந்தோறும் கொதித்து எழுந்தார். அவர் உருவாக்கிய ஆலயங்கள், பள்ளிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பாதுகாப்புக்கான கூடங்களாக அமைந்திருந்தன. தமிழ் மக்களுக்கு அறிவு உண்டாகும்படி அவர் படைத்த நூல்கள் அனைத்தும் அவரது ஆழமான எழுத்தாண்மைக்குச் சான்று பகர்வதாக உள்ளன.
அவரைப் பற்றிய செய்திகள் வெகுகாலம் மக்களுக்குத் தெரியாமலே ஆங்கில அறிக்கைகளுக்குள்ளே அடங்கிக் கிடந்தன. நெல்லைத் திருமண்டில வரலாற்றறிஞர் அருட்திரு. டி.ஏ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் முப்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டுச் சேகரித்துப் பதிப்பித்த நூல் "நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ்" என்பதாகும். அவரது ஐந்நூறு பக்க நூலினை நான் ஐம்பது பக்கமாக 1993-ல் சுருக்கி எழுதி வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஆதாரம் அவ்விரு நூற்களுமே.
இரேனியசின் வாழ்வும், எழுத்தும் முப்பரிமாணங்களைக் கொண்டவை. ஊழிய உழைப்பு, எழுதிய நூற்கள், அவரது அன்றாட நாட்குறிப்புகள் ஆகியவையே அவை.
பிறப்பும் தமிழ்நாட்டுக்கு வருகையும் :
1790-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இன்றைய ஜெர்மனியில் பிரஸ்ய நேரியன் வெல்டர் என்ற ஊரில் பிறந்தவர் இரேனியஸ் தனது ஏழாம் வயதில், இராணுவத்தில் பணிபுரிந்த தந்தையை இழந்தார். இவரது உடன் பிறந்தவர் ஐவர். விதவையான தாயின் வளர்ப்பு அவரை மனிதநேயம் மிக்கவராக்கிற்று. 1811-ல் மறைபரப்பும் திருப்பணியில் சேர உறுதி கொண்டு பெர்லின் நகரில் 15-மாதங்கள் இறையியல் பயிற்சி பெற்றார். 1812-இல் சுவிசே லூத்தரன் திருச்சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார்.
1814-ல் சென்னை வந்துசேர்ந்த இரேனியஸ் அடிகளார் தரங்கம்பாடியில் ஐந்து மாதகாலம் ஊழியப் பயிற்சியும் தமிழ்மொழிப் பயிற்சியும் பெற்றார்.
தொடக்ககாலப் பணி :
1814-ல் சென்னை வந்த இரேனியஸ் ஜார்ஜ் டவுணில் ஒரு வாடகை வீட்டில் தங்கி தம் இறைப்பணியை ஆரம்பித்தார். அவர் குடியிருந்த வீட்டு வளாகத்தில் வழிபடு தெய்வங்கள் சிலை வடிவிலிருந்தன. அங்கு வந்த மக்களிடம் அன்போடு பழகினார். சிறு உரையாடல்களைக் கனிவோடு அவர்களுடன் நிகழ்த்தினார்.
1814 ஏப்ரல் 12 முதல் ஒரு சிறு ஜெபக்கூட்டம் அவ்வீட்டில் உருவானது. அங்கு 46 பேர் வருகை தந்தனர். ஏப்ரல் 28 ஞாயிறு அன்று முதல் ஆராதனை நடந்தது. அதுவே ஞாயிறுப் பள்ளியாகவும் பயன்பட்டது. ரேனியஸ் முதலில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தால் அதுவே பள்ளியாகவும், ஆராதனைத் தலமாகவும், ஓய்வுநாள் வகுப்பாகவும், சமூகக்கூடமாகவும் விளங்கும். இதுவே அவரது வழக்கமாக இருந்தது. வேலை இல்லாத நாட்களில் சோம்பிக் கிடத்தல், சாதி வேறுபாடுகள் - ஆகிய பண்புகளைத் தாம் அறிந்த தமிழ் மக்களிடம் அவர் பெருங்குறைகளாகக் கண்டுணர்ந்தார். களைய வேண்டிய பண்புகளாக அவரால் முதலில் அடையாளம் காணப்பட்டவை இந்த இரண்டும் தான். திருச்சபை மக்களிடம் இவைகளைக் களைந்து எறிய அவர் எண்ணினார். வேலை இல்லாத நாட்களில் பிற சிறிய தொழில்களைச் செய்யுமாறு தம்மை நாடிய மக்களுக்கு அவர் உபதேசித்தார்.
சென்னை நகரில் வசித்து வந்த ஒரு பக்தி உள்ள டச்சுக் குடும்பத்தைச் சேர்ந்த 'அனி' என்ற பெண்ணைத் தம் இருபத்தைந்தாம் வயதில் (1816 மார்ச் 7 ஆம் நாளில்) அவர் திருமணம் செய்து கொண்டார்.
சிறுசிறு துண்டு அறிக்கைகளின் வழியாக மக்களிடம் சமூக, சமயச் செய்திகளைக் கொண்டு செல்ல முடியும் என்பதை முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் இரேனியஸ் அடிகளாரே. இந்த எண்ணத்தைச் செயலாக்க Madras Tract Society என்ற அமைப்பினை 1818 இல் அவர் நிறுவினார். (பின் வந்த ஒரு நூற்றாண்டுக்காலத்தில் இம்முறை தமிழ்நாட்டுச் சமூக, சமய, அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தினைப் பெற்றது என்றால் மிகையாகாது) தாம் எழுதிய துண்டறிக்கைகளை எழுத்தறிவில்லாத மக்களிடம் படித்துக் காட்ட கிறிஸ்தியான் என்ற ஒரு வாசகரையும் (Reader) நியமித்தார்.
இரேனியசிடம் முதன் முதலாகத் திருமுழுக்குப் பெற வந்தவர் இரு மனைவிகளை உடையவர், ஒரு மனைவியை நீக்கிவிட்டு ஒழுக்கமாக வாழவேண்டும் என்று வந்தவரிடம் அவர் கண்டித்துரைத்தார். வந்தவர் ஓடிவிட்டார். அடுத்து கிறிஸ்தவராக ஆசை கொண்டு வந்தவர் மிகுந்த சுயநலக்காரர். அதற்கு "இங்கு இடமில்லை" என்று கூறி அவரை அனுப்பி விட்டார். இப்படிப் பல நிகழ்வுகள். இரேனியஸ் தம் சமயப்பணியில் மிகவும் சோர்வுற்றார் எனினும் உண்மையானவர்களும் இருந்தார்கள். இறுதியில் அவருடன் ஐந்து குடும்பங்கள் மட்டுமே நிலைத்து நின்றன. சென்னையில் முதல் கிறித்தவர்கள் இவர்களே. எனினும் இரேனியஸின் நற்பண்புகளில் சபை நாடோறும் வளர்ந்தது. தெலுங்கர், ரோமானியர், தமிழர் எனப் பல மொழியினரும் அவரை விரும்பி நாடி வந்தனர்.
ஜார்ஜ்டவுணில் 1819 ஜீன் 30-ல் ஓர் ஆலயம் கட்ட அவர் கால்கோள் நாட்டினார். அன்று காஞ்சிபுரம் சென்றார். அங்கு வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பலர் தீவிர பக்தியின் காரணமாகத் தங்கள் உடலை வருத்தி வழிபடுவது கண்டு அவர் நெஞ்சம் குமுறினார். காஞ்சிபுரத்தில் சில பிராமணர்கள் வந்து இரேனியசிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவ்வூரில் ஒரு ஆங்கில-தமிழ்ப் பள்ளியை நிறுவினார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.
இரேனியசின் பெருமுயற்சியால் 1817 நவம்பர் 5 ஆம் நாளில் சென்னையில் ஒரு வேதாகமக் சங்கம் நிறுவப்பட்டது. அப்போது நடைமுறையில் இருந்து பெப்ரிஷியஸ் மொழி பெயர்ப்பான தமிழ் வேதாகமம் மக்கள் பேசும், புரியும் மொழியில் இல்லாததினால் 1815 நவம்பர் 15 ஆம் நாள்முதல் அதன் திருத்தப்பணியை ஆரம்பித்த இரேனியஸ் தம் இறுதிமூச்சுவரை அப்பணியைச் செய்து வந்தார். உதவிக்கு ஒரு தமிழாசிரியரை எப்போதும் உடன் வைத்து இருந்தார்.
போராட்ட வாழ்வு :
1815 மே மாதம் சென்னையில் முதல் பள்ளியை நிறுவினார். பின்பு பள்ளிகள் பெருகத் தொடங்கின. கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. சென்னையில் செமினரி ஒன்றை ஆரம்பித்தார். ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி என்று இந்நாளில் உள்ளவைகளே அன்று 'செமினரி' எனப்பட்டன. தமிழைத் தரத்துடன் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்க தமிழ் இலக்கண நூல் ஒன்றினை மிக எளிய முறையில் எழுதினார். பாடநூல்கள் சிலவும் தமிழில் எழுதி வெளியிட்டார். ஆற்காடு, சிற்றூர், வேலூர் என்று பல ஊர்களுக்கும் அலைந்தார். சமண மதத் தலைவர்களையும் சந்தித்தார். இவ்வரிய பணிகளுக்கு மத்தியில் பழைய, புதிய ஏற்பாட்டு வரலாறுகளையும், கிறித்தவ சித்தாந்தத்தையும் வினாவிடையாக எழுதினார்.
"தமிழருக்கு ஒரு நிருபம்" என்று ஒரு சிறு நூலை வெளியிட்டார். அது தமிழ் மக்களை விழித்தெழச் செய்யும் அற்புத நூலாகும். ஆங்கிலத் துண்டு அறிக்கைகளை அவ்வப்போது தமிழாக்கம் செய்து இலவசமாக விநியோகித்தார். அக்காலத்திய இறுக்கமான தமிழ் உரைநடை எளிமைப்படுத்தப்பட வேண்டும். என்ற உணர்வினைத் தமிழ் அறிஞர்களின் மனத்தில் உருவாக்கிய அரிய முயற்சி இதுவாகும்.
ஆதியாகமம் என்ற விவிலியத்தின் முதல் நூலை எளிய தமிழில் மொழிபெயர்ப்பு செய்து முடித்தார். அச்சு இயந்திர வசதிகள் போதுமானபடி இல்லாத காலம். எனவே தம் கையாலேயே எழுதிப் பல படிகளை எடுத்தார்.
"மனந்திரும்பு, கடவுளை அறிந்து கொள்" என்ற இரேனியஸின் போதனை அன்றைய மக்களுக்குப் புதுமையாக இருந்தது. சித்தாம்பூர் என்ற ஊருக்குள் அவர் செல்லும்போது இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. "வெள்ளைக்காரன் வீட்டுக்குள் வந்தால் தீட்டு" என்று எண்ணிய மக்கள் அவரை வீட்டுக்குள் அழைக்கவில்லை. அவர் மீது இரக்கம் கொண்ட ஒருசிலர் நள்ளிரவில் பாய்களைப் பல்லக்கின் மீது போட்டு அவர் தலைநனையாதபடி செய்தனர்.
1818 செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கப்பெற்ற "சென்னை துண்டுப் பிரசாரக் கழகம்" என்ற நிறுவனத்தை லண்டன் கழகத்துடன் இணைத்தார். வாசிப்புப் பழக்கம் பரவலானது.
1818 அக்டோபரில், சென்னையில் பயங்கர காலரா நோய் பரவியது. பலர் மாண்டனர்; பலர் ஊரைவிட்டு ஓடினர். இரேனியஸ் முதலுதவியைத் தைரியத்துடன் செய்தார். பல உயிர்களைக் காப்பாற்றினார். காலரா நோய்த்தடுப்பு பற்றி ஒரு துண்டறிக்கை எழுதி அச்சிட்டு மக்களுக்கு விநியோகித்தார். வாசகர்களை அனுப்பி படித்துக் காட்டவும் செய்தார்.
இரேனியஸ் லுத்தரன் முறைப்படி அருட்பொழிவு பெற்றவர். அக்காலத்தில் சென்னை சி.எம்.எஸ் சங்கத்திற்கும் லண்டன் தாய்ச் சங்கத்திற்கும் கருத்துவேறுபாடு எழுந்தது. ரேனியஸால் ஆங்கிலிக்கன் முறைமைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன்விளைவாக இரேனியஸ் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். ரேனியஸ் மிகுந்த வேதனைக்குள்ளானார். ஆயினும் அது, "இறைச்சித்தம்" என்று கருதி பணியினைத் தொடர்ந்தார்.
அவரது சென்னை ஊழியம் அரைகுறையில் நின்றது. சாதி பேதத்தை அறவே ஒழிக்க முயன்றதும் அவரது இட மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். இரேனியஸின் வாழ்வு போராட்டமாகவும், அவரது எழுத்து புதுமையாகவும் இருந்தன.
நெல்லைக்கு நல்ல காலம் :
1820 ஜூன் 2 ஆம் நாள் ரேனியஸ் குடும்பத்தாரோடு புறப்பட்டு திருச்சி, மதுரை முதலிய இடங்களில் தங்கிக் தங்கி முப்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு ஜூலை 7 ஆம் நாள் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். இரேனியஸிற்கு நெல்லை நகரத்தில் வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை. "வெள்ளைப்பரங்கிக்கு ஏது வீடு" என்று மறுத்தனர். இறுதியாக இவரது முன்னோடியாக நெல்லையில் பணிசெய்த ஹாப்ஸ் ஐயர் தம் பங்களாவை விலைக்குக் கொடுத்தார். ஏறத்தாழ நாற்புறமும் ஆயிரம் மீட்டர் நீளமுள்ள கோட்டை மதில்களைக் கொண்ட பாளை நகர் ஊழியத்தை இரேனியஸிடம் ஹாப்ஸ் ஐயர் ஒப்புவித்தார். இது 1820 ஆம் ஆண்டின் நிகழ்வாகும். இரேனியஸ் 1822 ல் நெல்லை வண்ணார்பேட்டையில் முதல் பள்ளியைத் தொடங்கினார். ஆசிரியர் சங்கரலிங்கம் ஆண்டுக்கு சம்பளம் ரூபாய். 14, மாணவர்கள் 17 பேர்.
திருநெல்வேலி, மேலப்பாளையம், குறிச்சி, தச்சநல்லூர் என்று பள்ளிகளும் சபைகளும் ஆலயங்களும் பெருகத் தொடங்கின. பாளையங்கோட்டையில் நிறுவிய செமினரி பள்ளியில் சாதி வேறுபாடு கடுமையாகத் தலை தூக்கிய போது இரேனியஸ் பள்ளியை மூடினார். சாதிவெறியை வேரோடு ஒழிப்பதில் இரேனியஸ் உறுதியாய் இருந்தார். செமினரியில், ஆங்கிலம், தமிழ், கணக்கு, விவிலியம் ஆகியவை கற்றுத் தரப்பட்டன. அதுவே இன்றைய பிஷப்சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஆகும். 1823 இல் பெண்களுக்கு அவர் ஒரு செமினரியைத் துவக்கினார். பல ஊர்களில் இருந்தும் தெரிந்தெடுத்த 39 பேர் அப்பள்ளியில் பயின்றனர். இரேனியஸின் துணைவியார் அனி அம்மாள் அப்பள்ளியில் தலைவி. அனைத்துப் பாடங்களையும் போதித்தார்கள். அதுவே இன்றைய மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி. இந்தியாவிலேயே பெண்களுக்கென விடுதியோடு கூடிய தனிப்பள்ளி முதலில் நாகர்கோவிலும் இரண்டாவது பாளையங்கோட்டையிலும் தான் தொடங்கப்பட்டன.
இரேனியஸ் கால நெல்லை மாவட்டம் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இரேனியஸ் பயணத்தில் சற்றும் சலியாது உற்சாகமாகப் பணியாற்றினார். கிராமம் கிராமமாக, ஊர் ஊராகச் சென்றார். அவர் காலடி படாத இடம் இல்லை எனலாம். மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறித்தவம் தழுவினர். நெல்லை நகரத்தில் குற்றாலம் சாலையில் உள்ள ஒரு ஜெபக் கூடத்தில் உயர் சாதி மக்கள் பலர் வந்து இரேனியஸிடம் கேள்விகள் கேட்டனர். தர்க்கம் செய்தனர், உரையாடல்கள் நிகழ்த்தினர்.
இரேனியஸ் எழுதி வெளியிட்ட ஞானோபதேச வினாவிடையை பரவலாக மக்கள் படித்தனர். நெல்லைக்கும், நாகர்கோவிலுக்கும் சேர்த்து ஒரு துண்டுப்பிரசுர சங்கத்தை அவர் நிறுவினர். அச்சு அடிக்கும் தாள் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்டது. துண்டுப் பிரதிகளின் வாசகங்களைச் சந்தி பிரித்து எளிமையாக்கிக் கொடுத்திருந்தார். இதனால் பாமர மக்களின் படிப்பறிவு வளர்ந்தது. வசன நடையும், ஓர் இலக்கிய உருவம் கொண்டது. இரேனியஸின் துண்டுப்பிரதிகள் குமரி முதல் சென்னை வரை சென்றன.
இரேனியஸ் நெல்லை வந்தபிறகும் 14 ஆண்டுகள் தொடர்ந்து திருநெல்வேலியிலிருந்து திருப்பாற்கடல்நாதன் என்பாரிடம் தமிழ் பயின்றார். கடைசிவரை தமிழைக் கற்றுக் கொண்டே இருந்தார். திருப்பாற்கடல் நாதருக்கு ஆங்கிலம் அறவே தெரியாததால் இதனைத் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்.
"திருப்பாற்கடல் நாதனுக்கு ஆங்கிலம் அறவே தெரியாதது நமக்கு மிகவும் சாதகமாக இருந்தது எப்படியெனில் தமிழைத் தமிழ் மரபிலேயே கிரகித்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்று எழுதினார். (திருமதி சரோஜினி பாக்கியமுத்து எழுதிய விவிலியமும் தமிழும் பக்கம் 103)
இரேனியஸ் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இரேனியஸின் நாட்குறிப்புகள் அனைத்தும் அவரின் சமூகப்பணியின் மேம்பாட்டுக் குறிப்புகளாகவே உள்ளன. இவை தனித்து ஆராயத்தக்கன.
1823, 24, 25 ஆம் ஆண்டுகளில், ஒடுக்கப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் நெல்லைப்பகுதியில் கூட்டம் கூட்டமாகக் கிறித்தவம் தழுவினர். இதனைக் கிறித்தவ வரலாற்று ஆசிரியர்கள் வெகுஜன இயக்கம் என்கின்றனர். பனை ஏறிய மக்கள் பனை ஏடுகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தனர். நெல்லையில் நடந்த இந்த விழிப்புணர்வு இயக்கம் உலக வரலாற்றில் இதுவரை கண்டிராதது என்று கூறப்படுகிறது. சபைகள் பெருகப் பெருக துன்பங்களும் பெருகின. பிரச்சனைகள் நிறைந்தன. அது குறித்து இரேனியஸ் தம் நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்.
"சாத்தான் சீறுகிறான், ஆனால் அவன் தோல்வி அடைவான். கர்த்தர் வாசலைத் திறப்பாரானால் யார் அதை மூடுவான்?". இவ்விதமாக அவரது நாட்குறிப்புகளும், ஆவணக் குறிப்புகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவை ஒரு தனி ஆய்வுப் பகுதியாகும்.
அருள் ஏராளம் :
இரேனியஸ் தம் விரிவான கல்வித் திட்டங்களுக்கு பாளையங்கோட்டையில் போதிய இடம் கிடைக்காமல் திணறினார். அதனை அறிந்த வெங்கு முதலியார் திருநெல்வேலி பாளையங்கோட்டை நெடுஞ்சாலைக்கு வடக்கில் இருந்து கட்டிடங்களோடு கூடிய பெரும் வயல்வெளியை 750 ரூபாய்க்கு விலைக்குக் கொடுத்தார். அன்று இது மிகக் குறைந்த விலையே. 5 குதிரைகள் கட்டும் லாயமும், குளிக்கும் அறைகளோடு கூடிய சிறு குளமும் அங்கு இருந்தன.
பெருமகிழ்ச்சி அடைந்த இரேனியஸ் கடவுளுக்குத் தம் நன்றிப் பெருக்கை ஏறெடுத்தார். அக்காலத்தில் பெரும் புகழ் பெற்ற சுலோச்சன முதலியாரும் இரேனியஸின் நண்பராய் இருந்தார். அவர் மிஷனரிகளிடம் கல்வி கற்றார். நெல்லை நகரில் ஆங்கிலப் பள்ளி நிறுவ அவர் உதவி செய்தார்.
பெண்களுக்கான செமினரி பள்ளியைத் திருமதி இரேனியஸ் கண்காணித்தார். அதில் பயின்ற பெண்களின் வம்சாவழியினர் இன்றும் உலகம் முழுவதும் உயர்நிலையில் உள்ளனர். அப்பள்ளி பற்றி இரேனியஸ் எழுதிய நாட்குறிப்பை மிகச் சுருக்கமாகத் தருகிறேன். "இப்பள்ளியை இந்தியாவில் ஒரு புதுயுகம் எனலாம். பெண்கள் தங்களையும் தங்கள் இல்லங்களையும், சுத்தமாகவும், ஒழுங்காவும் வைத்துக் கொள்ளக் கற்பிக்கிறோம். தெளிந்த புத்தியும், உண்மையும் உள்ள மாணவிகளாகவும், தாய்மார்களாகவும் விளங்கத்தக்கவர்களாக அவர்களை உருவாக்குகிறோம்".
1825 டிசம்பர் 8ல் ரேனியஸின் குழந்தை ஒன்று மரித்தது அவரைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. நாட்டு நலப்பணிக்காகப் பாடுபட்ட இரேனியஸ் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தமிழ் மண்ணில் புதைக்கவில்லை; விதைத்தார்கள். அதன் அறுவடையே இன்று நாம் காணும் கல்வியின் மேம்பாடு.
பாளை கதீட்ரல் ஆலயம் இப்போது இருக்கும் இடத்தில் ஒரு சிறிய ஆலயத்தை இரேனியஸ் 1826 ஜனவரியில் தொடங்கி ஜூன் மூன்றாம் நாள் கட்டி முடித்தார். அதுவே இன்றைய திரித்துவ ஆலயம் எனப்படும் ஊசிக் கோபுரம் ஆகும். (அதன் பிறகு பல மாற்றங்கள் பெற்றுள்ளது.)
அறிவு நூல்கள் :
இரேனியஸின் உழைப்பு மிகக் கடினமானது. ஒரு பக்கம் வேதாகம மொழி பெயர்ப்பு, இன்னொரு பக்கம் துண்டுப் பிரசுரங்களை எளிமையாக எழுதுவது, பிறிதொரு பக்கம் கிறித்தவ இலக்கியப் பணி.
இரேனியஸ் செய்த "வேதசரித்திரம்" என்ற தமிழாக்க நூல் செமினரி பள்ளிகளில் முக்கியப் பாடப்புத்தகமாகப் பயன்பட்டது. 1820இல் சுவிசேஷ சமரசம் என்ற ஒரு பெரிய நூலையும் எழுதினார். மாணவர்கள் உலக அறிவைப் பெறவேண்டும் என்ற எல்லை இல்லாத் தாகத்தில் பொது அறிவு நூற்களை வெளியிட்டார். அதில் வரலாறு, தாவரம், மண்வளம், கனிப்பொருள்கள் பற்றி தெளிவாக எழுதினார்.
அவரது நூல்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை சிலவற்றின் பெயர்கள் இவை :
1. வேத உதாரணத்திட்டு
2. உருவ வழிபாடு
3. சூரிய மண்டலம்
4. இயற்கையின் நிகழ்வு
5. கால இயலும் வான இயலும்
6. புதிய கோட்பாடு
7. சமயத்துவம்
8. பூமி சாஸ்திரம்
9. தமிழ் இலக்கணம் (ஆதாரம் தமிழ் வரலாற்றில் கிறித்தவம், பக் 105)
ஸ்மாலி என்பவர் 1822 இல் எழுதிய "இந்திய யாத்திரிகன்" என்ற நூலை அவர் திருத்திக் கொடுத்து அச்சிட உதவி செய்தார். ஞானதீட்சை பெறுவோரை ஆயத்தக்காரர்களாக்கி அடிப்படை ஞானத்தைப் புகட்டிய அவர் எழுதிய "ஞானப்போதிப்பு" என்ற நூல் அவர் காலத்திற்குப் பிறகும் திருத்தொண்டர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
புதிய சபைகள் உயர் சாதியினரின் தொல்லைக்கு உள்ளாயின. இதனைத் தவிர்க்க விரும்பி இரேனியஸ் நிலங்களை விலைக்கு வாங்கி புதுக் குடியிருப்புகளை ஏற்படுத்தி நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்ற பெயர்களை அவற்றுக்குச் சூட்டி அந்நாளிலேயே சமத்துவ சமாதானக் குடியிருப்புகளை அமைத்தார்.
1827இல் "வேதாகமக மொழிபெயர்ப்பு விதிகள்" என்ற ஆங்கில நூலை எழுதினார். அது மொழிபெயர்ப்பாளர்களுக்கு இலக்கணம் போன்றும், கைநூல் போன்றும் அமைந்திருந்தது. இந்தியாவில் மொழிபெயர்ப்பியல் சிந்தனைக்கு அந்நூல் ஒரு முன்னோடி முயற்சியாகும்.
1827 இறுதியில் "விக்கிரக வணக்கம்", "மானிட வரலாறு" என்ற நூற்களை எழுதினார். அப்போது நெல்லைத் திருமண்டிலத்தில் 109 சபைகள் தோன்றி இருந்தன.
துண்டுத்தாள் வெளியீட்டுச் சங்கம் இரேனியஸ் எழுதிய பிரதிகளை இலட்சக்கணக்கில் அச்சடித்து இலவசமாகக் கொடுத்தது. அவரது துண்டுப்பிரசுர ஊழியம் நெல்லைக்கு வடக்கே நூறு மைல் தொலைவில் உள்ள கம்பம் வரை பரவி பலர் பயனடைந்தனர்.
தீங்கநுபவி :
ஒரு குழந்தையின் திருமுழுக்கு காரணமாக எழுந்த கருத்து வேறுபாட்டில் இங்கிலாந்து "திருச்சபை ஊழியர் கழகம்" (CMS) இரேனியஸ் மீது வெறுப்பைக் கக்கியது. இரேனியசின் செமினரியில் கற்ற சற்குணம், யோசேப்பு என்ற இருவர் அக்காலத்தில் யாழ்ப்பாணம் சென்று உயர் கல்வி கற்றனர். மேற்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பெற்ற முதல் தமிழ்க் கிறித்தவ மக்கள் இவர்களே.
1830 மே பத்தாம் நாள் இரேனியஸின் அருமைத் தாயாரும், ஒரே தங்கையும் மரித்துப்போன செய்தி வந்தது. இரேனியஸ் தம் இளம் வயதில் தம்மை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தபோது தன் தாயின் அன்பு முகம் நோக்கி மனம் மருண்டு நின்றார். அப்பொழுது "ஒருவன் தன் தாயையாவது, தகப்பனையாவது என்னிலும் அதிகமாக நேசித்தால் அவன் எனக்குப் பாத்திரன் அல்ல" என்ற வேத வசனத்தால் தெளிவு கண்டு ஊழியத்தைத் தொடர்ந்ததை நினைத்துப் பார்த்தார். "மிஷனெரிப் பணியில் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடம் ஏது" என்று தம் நாட்குறிப்பில் எழுதிவிட்டு வேதனைகளை உள்ளடக்கிக் கொண்டு தம் ஊழியப் பாதையைத் தொடரலானார்.
அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் கல்கத்தாவிலிருந்த பேராயர் ஒருவரே கிறித்தவ மக்களின் சமய வாழ்விற்கு பொறுப்பாகவிருந்தார். பெருகி வரும் திருச்சபையை லண்டன் சி.எம்.எஸ் சங்கம் தடுத்து நிறுத்துவது போல் இரேனியஸிற்குத் தோன்றியது. அவர் ஒரு வழி செய்தார். திறமையான ஏழு உபதேசிமாரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தாமே அருட்பொழிவு செய்ய அதிகாரம் தரும்படி சென்னை கமிட்டிக்கு எழுதினார். திருச்சபைக்கும் இரேனியசிற்கும் கொள்கை முரண்பாடுகள் முற்றின.
சுத்திகரிப்பு :
மானுடவாழ்வில் ஒழுக்கம் தலையாயது என்று போதித்து வந்தார்; திருச்சபைக்குள் அதனைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார். தலைவன் கோட்டை சபையில் ஒருவன் ஒரு விதவையின் பசுவைத் திருடிக் கொண்டு போனான். அதனைத் திரும்பக் கொடுத்து விடும்படி இரேனியஸ் கேட்டார். அவன் மறுக்கவே அவனைச் சபையை விட்டு நீக்கினார். மேல் நடவடிக்கை எடுத்தார்.
1832 ஆம் ஆண்டு மகாகொடிதாய் இருந்தது. காலரா நோய் நெல்லை மாவட்டத்தில் பல உயிர்களைக் கொள்ளை கொண்டது. தூத்துக்குடி, திருவில்லிப்புத்தூர், தென்காசி, சிவகாசி என்று எங்கும் பரவி கிராமங்களிலும் கோர தாண்டவமாடியது. இரேனியசும், ஷாப்டரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அயராது உதவிசெய்தனர். காலரா பற்றிய அவரின் துண்டுப்பிரசுரங்கள் நல்ல பலன் தந்தன. அறியாமையால் காலராவில் மடிந்த மக்களை எண்ணி இரேனியஸ் துயருற்றார்.
1832 இல் பூமி சாஸ்திரம் என்ற அறிவியல் நூலை (750 பக்கங்களுக்கும் அதிகம்) எழுதினார். தொழிற்புரட்சியின் விளைவாகப் பிறந்த புதிய அறிவொளியினை அந்நூலில் அவர் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார். உலகம் மாயை என்ற தத்துவத்தை மறுதலித்தார். விக்கிரக வழிபாட்டை எதிர்த்தார். மனிதன் அறிவில் தேறவும், இனிதாக வாழவும் கற்றுக் கொடுத்தார்.
"திருச்சபை" என்னும் பொருள் பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை இரேனியஸ் திறனாய்வு செய்து மேல் கமிட்டிக்கு அனுப்பி இருந்தார். அது லண்டன் தலைமைத் தலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. கள்ளிக்குளம் என்ற ஊரில் உள்ள சபையார் தங்கள் வீட்டுப் பெண்களை ஆலய ஆராதனைக்கு அனுப்ப மறுத்தனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த இரேனியஸ் பெரும்பாடுபட்டார். புதிய குடியேற்றங்களான அன்பின் நகரம், ஆரோக்கியபுரம், விசுவாசபுரம், கடாட்சபுரம், அனுக்கிரகபுரம் ஆகிய இரேனியஸ் உருவாக்கிய நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் கல்வியறிவில் உயர்ந்து மிகச் சிறப்புடன் விளங்கின. ஊர்களின் பெயர்களைப் பண்புப் பெயர்களால் அமைத்தது இரேனியஸின் உயர் பண்பை பளிச்செனக் காட்டுகின்றது.
இரேனியஸ் தாம் நிறுவிய சபைகள், தம் சொந்தக் காலில் நிற்க விரும்பினார். "சமய சகாயநிதி" என்றொரு நிதிநிலையை ஏற்படுத்தி சபைகளை உறுதிப்படுத்தினார். "கைம்பெண்கள் சங்கம்" என்று அவர் ஏற்படுத்திய ஒரு நிதி ஆதாரம், பாதிக்கப்பட்ட விதவைகளைப் பராமரித்தது.
தர்மசகாய சங்கத்தின் உதவி கொண்டு ரேனியஸ் 1834, 35 களில் மாணிக்கபுரம், இரட்சண்யபுரம், சௌக்கியபுரம் முதலிய புதுக்குடியேற்ற கிராமங்களை நிறுவினார். அவர்களுக்கு சமூகக் கொடுமைகளில் இருந்து விடிவு கிடைத்தது. சௌக்கியபுரம் மக்கள் மூன்று ரூபாய் செலவில் தங்களுக்கென ஒரு அழகான சிற்றாலயத்தைக் கட்டி முடித்தனர்.
இரேனியசின் குடும்பம் :
இரேனியஸ் ஐயரின் பிள்ளைகள் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை இரேனியஸிற்கு யோசியா, சார்லஸ், பிரதெரிக்லுத்தர், தீமோத்தேயு, லூயி என்ற 5 ஆண்களும், கேத்தரின், தியோடோஷியா, லிதியா, சாரா, எமிலி என்ற 5 பெண்களும் பிறந்தார்கள். தியோடோஷியாவும், லூயியும் சிறு வயதில் இறந்து போனார்கள். யோசியா, சார்லஸ், லுத்தர் மூவரும் ஸ்காட்லாந்தில் கல்வி கற்று வந்தனர். மூத்தவளான 18 வயது கேத்தரினுக்கும் 25 வயதான முல்லர் ஐயருக்கும் 1834 ஆம் ஆண்டு துவக்கத்தில் பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. மூத்தமகன் சார்லஸ் இங்கிலாந்தில் கல்வியை முடித்து 1845ல் லண்டன் நகர் அத்தியட்சபேராயர் இடத்தில் உதவிக் குருவாக அருட்பொழிவு பெற்று சி.எம்.எஸ் மிஷனெரியாக 1847 முதல் 1850 வரை திருநெல்வேலிச் சீமையில் சுவிசேஷபுரத்திலும், டோனாவூரிலும் சமயத் தொண்டு ஆற்றினார்.
இரேனியஸ் ஒரு நல்ல தந்தை, தம் பிள்ளைகளைப் பெரிதும் நேசித்தார். தம் துணைவியாரிடம் மிகவும் பிரியமாக இருந்தார். நெல்லையைச் சுற்றி ஊழியம் செய்யும்போது தம் துணைவியாரை அழைத்துச் செல்வதில்லை. தூர இடங்கள் செல்லும்போது மட்டும் கூட்டிச் செல்வார்.
இரேனியசின் துணைவியார் ஓர் உத்தம மனைவி. கணவனை கருத்துடன் கவனித்து வந்தார். ஊழியப் பாதைக்கு உறுதுணையாக இருந்தார். பெண் கல்விக்குப் பெரிதும் தொண்டாற்றியவர் அவர். வேலைக்காரர்களுக்கும், மாணவ-மாணவியர்க்கும் அவர் ஓர் அன்பு தாயாக விளங்கினார்.
பிரிவும், பிளவும் :
லுத்தரன் திருச்சபை-சி.எம்.எஸ். திருச்சபை என்ற கொள்கை முரண்பாடு அதிகமானது. 1835 மே 18 ஆம் நாள் இரேனியஸ் அடிகளாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இரேனியஸ் எழுதிய ஒரு சிறு நூல் மதிப்பீட்டின் மூலம் தாய்ச் சங்கத்தார் அவருடன் உள்ள தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், அவருக்குப் பதிலாக டக்கர் ஐயர் திருநெல்வேலித் திருச்சபைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரைந்து வருகிறார் என்றும் செய்தி இருந்தது.
இரேனியஸ் கண் கலங்கினார். மக்கள்கூடிக் குமுறினர். இரேனியஸ் சபையைப் பிரிக்க விரும்பவில்லை. தாம் கட்டிக்காத்த சபைகளையும், நிறுவனங்களையும் கண்ணீரால் காத்தார். அப்படியே ஒப்புவித்தார்.
1835 ஜூன் 19 ஆம் தேதி புறப்பட்டு ஜூன் 29 ஆம் தேதி சென்னைத் துறைமுகம் சேர்ந்தார். ஆற்காடு நகரைத் தலைமைத் தலமாக்கினார். "ஜெர்மன் இவாஞ்சலிக்கல் மிஷன்" என்ற புதிய அமைப்புடன் ஊழியத்தை ஆரம்பித்தார், அவருடன் சென்ற 15 ஊழியர்களும் உற்சாகமாகச் செயல்பட்டனர். கிராமம் கிராமமாகச் சென்ற, சமய, சமுதாயப் பணிகளை ஆரம்பித்தனர். ஆனாலும் இரேனியஸ் ஐயரால் நெல்லையை மறக்கமுடியவில்லை. நெல்லையிலுள்ள உபதேசிமார் பார் அவருக்கு உற்சாகமூட்டி திரும்பவும் நெல்லைக்குக் கட்டாயம் வந்துவிடும்படி எழுதினர்.
நெல்லை மீதிருந்த பாசத்தால் இரேனியஸ் மீண்டும் செப்டம்பர் 25 ஆம் நாள் புறப்பட்டு திருச்சியில் 10 நாட்கள் தங்கிவிட்டு அக்டோபர் 22 ஆம் நாள் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். ஊழியர்கள் உற்சாகம் கொண்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமான வரவேற்பு இல்லை. சிலர் அவர் மீண்டும் வந்ததை விரும்பவில்லை. எனவே பாளையங்கோட்டையை விடுத்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பணியைத் தொடர்ந்தார்கள். ஆற்றுக்கு மேற்பக்கம் உள்ள சபைகள் இரேனியஸ் பக்கம் திரும்பின. பிரிவினை அதிகரித்தது; குழப்பநிலை உருவானது; சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.
மீண்டும் தொண்டு தீவிரமடைந்தது. சபை, பள்ளி, கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். "திருநெல்வேலியின் காரியம் தெய்வத்தின் காரியம்" என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்.
இறுதி மூச்சுவரை :
1837 புத்தாண்டு. உபதேசிமார்களைக் கூட்டி மூன்று சங்கங்களை நிறுவினார்.
ஜெர்மானிய நற்செய்திச் சங்கம்
வேதாகம துண்டுத்தாள் பிரசுர சங்கம்
சமாதான சங்கம் - ஆகியவையே அவை.
புதிய சபைகள் தோன்றின. புதிய எழுச்சி ஏற்பட்டது. 1837 மே மாதம் " தெய்வீக சாராம்சம்" என்ற ஒரு நூலை எழுதினார். விவிலியப் பகுதியான ஏசாயா என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
1837 ஜூலை மாதத்தில் அவரது குழந்தை அனிடாரதி மரணமுற்றது. 47 வயது இரேனியஸை இம்மரணம் அதிகமாக உலுக்கியது.
இரண்டு இரண்டு பேராய் கிராமங்களுக்குச் சென்று ஒருவர் துண்டுப் பிரதிகளை விநியோகிக்க, மற்றவர் படித்துக் காட்டி விளக்கம் சொல்வார். இவ்வாறு செய்யும் "யாத்திரிகர் சங்கம்" நன்கு செயல்பட்டது. கிராமங்களில் வாசகர் வட்டம் வளர்ந்தது.
பேர்ப்பிலான் குளம் பகுதியில் மேற்குப் புதூர் என்னும் இடத்தில் ஒரு புதுச்சபையை அவர் நிறுவி விட்டு நெல்லைக்குத் திரும்பினார். அதுவே அவரது கடைசி சபை. இரேனியஸிற்கு இரத்தாசயத்தில் நோவு உண்டாயிற்று. இரேனியஸின் நாட்குறிப்பு 1838 மே 9 ஆம் தேதியோடு முடிகிறது. அதில் காணப்படும் கடைசி வாசகம் இப்படி உள்ளது.
"இன்று மாலை கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு பெற்றேன். எனக்கு நல்ல சுகமில்லை. இன்று உஷ்ணம் அதிகம்".
இதுவே அவரது கடைசி வரிகள். மே மாதம் 25 ஆம் நாள் வரை தம் பணிகளை உற்சாகமாகச் செய்தார். ஸ்காட்லாந்தில் இருந்து அவரது பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவருக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. 1838 ஜூன் 3 ஆம் நாள் இரேனியஸிற்கு இரத்த அழுத்தம் அதிகமானது. அட்டைகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டு அவரது இரத்த அழுத்தத்தைக் குறைத்தார்கள். அதிலும் பயன் இல்லை.
1838 ஜூன் 5 காலையில் பத்துமணிக்குக் கடிதங்கள் அனைத்திலும், கையொப்பமிட்டார். பிற்பகல் இரண்டு மணிக்குத் தன் உணர்விழந்தார். குடும்பத்தினர் கட்டிலைச் சுற்றி அமைதியோடு நின்றனர். 1838 ஜூன் 5 மாலை 7.30 மணிக்கு இரேனியஸின் உயிர் அமைதியாகப் பிரிந்தது. மதவேறுபாடின்றி பாளையங்கோட்டை நகர மக்கள் கூடினர். பாளை ஊசிக்கோபுரத்தின் மணி துக்கமாக ஒலித்தது. "இஸ்ரவேலின் ஒரு பிரபு இன்று விழுந்தார்" என்று மகாசத்தமாய்க் கூறி மக்கள் அழுதார்கள். ஏழாம் தேதி காலை அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அடைக்கலாபுரம் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஷாப்டர் ஐயர் அடக்க ஆராதனை நடத்தினார்.
தெருத்தெருவாகச் சென்று நற்செய்தி அறிவித்த அவரது கால்கள் ஓய்வு எடுத்தன. "நற்செய்தியை அறிவியாது இருந்தால் எனக்கு ஐயோ" என்பதே அவர் வாழ்வின் உயிர் மூச்சாய் இருந்தது. அவரது கல்லறையில் தமிழில் எழுதப்பட்ட குறிப்பு இவ்வாறு உள்ளது.
"சார்லஸ் இரேனியஸ் ஐயரவர்கள் 1790 ளூ நவம்பர் மீ 5 தீ புருசிய தேசத்தில் பிறந்து 1814 சூலாயி மீ 4 உ சென்னைப் பட்டணத்தில் சேர்ந்து அத்திசையிலும், விசேஷமாகத் திருநெல்வேலி நாட்டிலும் 1838 சூன் மீ 5 தீ வரைக்கும் நல்ல சேவகத்தைப் பண்ணி நித்தியராச்சியத்துக்குட்பட்டார்"
"நீதியென்னும் கிரீடத்தை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்தநாளிலே யெனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பின யாவருக்கும் தந்தருளுவார்" உதீமோ, ச.அ.
"சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்" என்று ரோமர் 10:15 கூறுகிறது.
இரேனியஸ் அடிகளாருக்குத் தமிழ் இலக்கணம் கற்றுக்கொடுத்தத் திருப்பாற்கடல்நாதர் பாடிய இரங்கற்பாவிலிருந்து இரு அடிகளை மட்டும் தந்து முடிக்கிறேன்.
"காசினி தன்னில் ஆதித்தன்
கிரணம் போல் அறிவைப் பரப்பிய இரேனியூசு"
இணைப்பு :
இரேனியஸ் ஐயர் எழுதிய சில தமிழ் நூல்களுக்கான குறிப்புகள்...
1. வேதாகம சரித்திர வினாவிடை (1818 மே, 30)
இந்நூலின் பெரும்பகுதி பழைய - புதிய ஏற்பாட்டு ஆகமங்களில் சரித்திர ரீதியான கேள்விகளும் விடைகளுமே. பத்துக் கற்பனைகள், கர்த்தருடைய ஜெபம், பரிசுத்த நற்கருணை, விசுவாசப்பிரமாணம் ஆகியன இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
2. கிறிஸ்து மார்க்க சித்தாந்த வினாவிடை (1818)
கடவுளின் தன்மை, மனிதனின் இயல்பு, இரட்சிப்பின் திட்டம் என்னும் மூன்று சித்தாந்தங்களின் மீது வினாவிடை வடிவத்தில் எழுதப்பட்டது.
3. வேதசரித்திரம் (1818)
வாட் என்பவர் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு
4. சுவிசேஷச் சமரசம் (1820)
இந்நூல் ஏழு பாகங்களை உடையது. முதல் பாகத்தில் கிறிஸ்துநாதர் பற்றிய பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ளன.
இறுதியாக ஏழாம் பாகத்தில் அப்போஸ்தலர் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு முடிவுவரை கிறிஸ்து மார்க்க வியாபக சரித்திரமும், இரட்சகரின் இரண்டாம் வருகையும், நியாயத்தீர்ப்பின் உறுதியும் எழுதப்பட்டுள்ளன.
5. ஞானப்போதிப்பு
ஞானஸ்நானத்துக்குத் தம்மை ஆயத்தப்படுத்துவோர் கற்கவேண்டிய வேதாகம சித்தாந்த - கிறிஸ்தவச் சன்மார்க்க வினா விடைகள்.
6. சீர்தூக்கல் (1831)
"திருச்சபையும் அதன் பணிப்பெண்களும்" என்ற நூல்பற்றிய மதிப்பீடு.
7. கிறிஸ்து மார்க்க நிச்சயித்துவம் : (1834) 1852 ல் மறுபதிப்பு.
319 பக்கங்கள் கொண்ட சிறந்த நூல்
8. தெய்வீக சாராம்சம் (1838)
இரேனியஸ் காலமாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு இந்நூல் எழுதப்பட்டது. 39 பக்கங்கள் உள்ள இந்நூல் 1842 இல் மறுபதிப்பானது.
9. வேதாகமத் துணைநூல்
பிக்கர்ஸ் டெத் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு
1. எபிரேய இலக்கணம் (தமிழில்)
2. பூகோள சாஸ்திரம் (தமிழில்)
3. தமிழ் இலக்கணம் (தமிழில்)
4. சிற்றறிஞர் குறிப்பிடம் (தமிழில்)
5. சரித்திரம் (தமிழில்)
6. தர்க்கம் (logic) (தமிழில்)
7. தமிழ் இலக்கணம் (ஆங்கிலத்தில்)
8. வேதாகம முடிவுரை (தமிழில்)
9. புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு (தமிழில்)
10. பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு (தமிழில்)
11. ஞான யோசனை விளக்கம் (தமிழில்)
12. தெலுங்கு இலக்கணம், பிரஞ்சு இலக்கணம் - என்று 12 நூல்கள் - இவை தவிர நூற்றுக்கணக்கான தமிழ்த் துண்டுப் பிரசுரங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரேனியஸ் : வாழ்வும் எழுத்தும் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இரேனியஸ், ", அவர், தமிழ், அவரது, தமிழில், எழுதிய, இரேனியஸின், மக்கள், எழுதினார், நாள், நெல்லை, கொண்டு, சென்னை, இலக்கணம், உள்ள, ஜூன், மொழிபெயர்ப்பு, இருந்தார், நூலை, சிறு, வேதாகம, ஐயர், சங்கம், நூல், அதுவே, சபைகள், செய்தார், ரேனியஸ், மக்களிடம், நிறுவினார், இருந்து, தேதி, இரேனியசின், கொண்ட, சென்னையில், செய்து, பலர், மொழி, வந்து, துண்டுப், சார்லஸ், திருச்சபை, அவரை, லண்டன், எழுத்தும், செமினரி, நல்ல, வாழ்வும், பக்கம், கிறித்தவ, பெரும், நாட்குறிப்பில், பழைய, காலரா, மீது, பற்றி, அக்காலத்தில், இரேனியஸிற்கு, ஏற்பாட்டு, கற்றுக், இல்லை, தங்கள், இடம், வந்தார், உயர், அங்கு, ஊழியம், கடைசி, எழுதி, நவம்பர், இன்றைய, மாதம், அறிவு, நூற்களை, மக்களுக்கு, கிறித்தவம், மக்களின், ஆங்கில, திருநெல்வேலி, வயதில், பற்றிய, முதலில், பாளையங்கோட்டை, அதில், அன்று, சாதி, இன்று, தாம், வந்த, அவன், கிறிஸ்து, மார்க்க, உதவி, சேர்ந்தார், இந்நூல், கொடுத்தார், பாளையங்கோட்டையில், பாளை, இப்படி, விட்டு, கல்வி, சென்று, இடத்தில், வந்தது, சாஸ்திரம், என்னும், கூடிய, இரண்டு, என்பவர், ஆங்கிலம், மீண்டும், மூன்று, வினாவிடை, கூறி, நகரில், ஏழாம், ஆண்டு, பெற்றார், ஊழியப், பேர், ஆரம்பித்தார், ஆதாரம், நூல்கள், அப்போஸ்தலன், முறையில், ஐந்து, எளிய, இவரது, அனைத்தும், உருவாக்கிய, வாடகைக்கு, இல்லாத, வெளியிட்டார், பள்ளி, பள்ளியை, காலம், அருட்பொழிவு, இருந்தன, அறவே, ஆலயம், வளர்ந்தது, படித்துக், வரலாற்றில், தம்மை, வந்தவர், அனுப்பி, அவருடன், மிகவும், புறப்பட்டு