முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » எங்கே போகிறார்கள் எழுத்தாளர்கள்?
இலக்கியக் கட்டுரைகள் - எங்கே போகிறார்கள் எழுத்தாளர்கள்?
ஆற்றிலோ, அணையிலோ குதிக்கிற தற்கொலைச் செய்தி வெளியுலகுக்கு விரைவாகத் தெரிய வரும். ஆனால் சிறுகச் சிறுக உயிர் போக்கும் பசிக் கொடுமை, பட்டினிச் சாவு வெளியே தெரிய வராது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்டு வனத்துக்குள் வைக்கப் பட்ட சமயம் ; சில நாள்கள் கழித்து அவருடைய மீட்புக்காக குரல் கொடுக்க, கன்னட முன்னணி எழுத்தாளர்கள் சிலர் சென்னை வந்திருந்தார்கள். தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனைச் சந்தித்து வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்டுத் தர வேண்டுகோள் விடுத்தார்கள்.
சென்னையில் மூன்று நாள் தங்கி இந்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எழுத்தாளர்களாகிய எங்களைச் சந்திக்க விரும்புவதாக அவர்கள் தரப்பிலேயே தெரிவிக்கப் பட்டது. நாங்களும் சந்தித்தோம். அன்று தமிழகம் வந்த அவர்கள் அனைவரும் தங்களைச் 'சமூகப் பொறுப்புள்ள' எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
இதே எழுத்தாளர்கள் 22.9.2002 அன்று மைசூரில் ஒன்று திரண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்து இனவெறிக் கோஷங்களுடன் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.
நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது தமிழ் எழுத்தாளர்களுடன் தொடர்பு கொள்ள முயன்ற கன்னட எழுத்தாளர்கள, இப்போது ஏன் அத்தகைய தொடர்புக்கு முயற்சி செய்யவில்லை? தமிழகத்தின் உண்மை நிலை என்ன என்பதை இலக்கியவாதிகளிடம் இருந்து இலக்கியவாதிகள் தெரிந்து கொள்ள அவர்களை எது தடுத்தது? அன்று தமிழகம் வந்த அவர்கள் 'கன்னட, தமிழக மக்களின் இதயங்களை இணைக்கிற பொறுப்பு எழுத்தாளர்களுக்கு இருக்கிறது' என்றெல்லாம் பேசினார்கள். தண்ணீர் போதாமையால் உண்டான துயரங்களை இரு மாநிலங்களும் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது? அதற்கான பாதையைத் தங்கள் மக்களுக்கு செப்பனிட்டுத் தந்து வழி நடத்துவது எப்படி என்பதைக் கர்நாடகக் கலை, இலக்கியவாதிகள் செய்திருக்க வேண்டும். மாறாக மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள் துணை போயிருக்கிறார்கள். இதன் காரணமாக, 'அரசியல்வாதிகள் வழி இவர்களின் வழி' என்றாகிவிட்டது.
அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். அடுத்த தலைமுறைகளை - இனி வரும் நூற்றாண்டுகளைப் பற்றிச் சிந்திக்கக் கடமைப் பட்டவர்கள் எழுத்தாளர்கள்.
சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் என்பார்கள். சாதி, சமூக, இன, மன, வெறி அமைப்புகளால் பொது மக்கள் வெறியூட்டப் படும் சூழ்நிலையில், அப்பிரச்சினையில் உள்ளிறங்கி எதிர் வினையாற்ற அவர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு எதிர் வினையாற்றி நியாயத்தின் பக்கம் நிற்பவர்களாகத் தங்களைக் கருதினால், அந்தக் கலை இலக்கியவாதிகள் கீழ்க்காணும் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் செயல் பட்டு வருகிற, செயல் படுத்தப் படுகிற, 'நதிநீர் ஆதார சர்வ தேச ஒப்பந்தப் படி' சிந்து நதி நீரைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்காமல் பக்ராநங்கல் அணையில் இந்தியா தேக்கி வைத்துக் கொள்ள முடியுமா? கங்கை நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் பங்களாதேஷ•க்கும் இடையே 1996 - ல் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. சாதாரண காலங்களில் நீரைப் பங்கிட்டுக் கொள்வதுடன், நீர் வரத்து குறைவான, பற்றாக் குறைக் காலங்களிலும் பங்களாதேஷ•க்கு உள்ள உரிமையை இந்தியா ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டு உள்ளத. இந்த உடன் படிக்கையில் கையெழுத்திட்டவர் வேறு யாருமல்ல. 'ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்துக்குத் தர மாட்டோம்' என்று பேசும் முன்னால் பிரதமர் தேவெ கௌட தான். பங்களாதேஷ•க்கு ஒரு நீதி. அண்டை மாநிலம் தமிழகத்துக்கு வேறொரு நீதி!
இந்தக் கேள்விகளைக் கையிலெடுத்துக் குரல் எழுப்பியிருக்க வேண்டிய கர்நாடக எழுத்தாளர்கள், குறைறந்த பட்சம் செய்திருக்க வேண்டியது, 'கொந்தளிப்பான கட்டம் அமைதியடையட்டும்' என்று ஒதுக்கம் கொண்டிருக்க வேண்டும். மாறாக, கொந்தளிப்புக்கு இரையாகி அவர்களும் ஊர்வலம் போயிருக்கிறார்கள்.
மக்கள் உணர்ச்சி எதுவாக இருந்தாலும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை, நீதியின் மாண்பை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது கூட இவர்கள் பார்வையில் படவில்லை போல! உச்ச நீதிமன்றத் தீர்ப்பானாலும் காவிரி நதிநீர் ஆணைய முடிவானாலும், மக்களின் உணர்ச்சியைக் காட்டி ஒதுக்கி வைக்கிறார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா. இந்திய நாட்டை அரசியல் சட்டமோ, நீதியோ ஆள வேண்டிய தில்லை. கூடிக் கிளர்ச்சி செய்கிற மக்களே இவற்றைத் தீர்மானிக்கிறார்கள் என்கிற போக்கில் போகிறார் அவர்.
பெயரளவுக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தினைக் கூட கர்நாடக அரசு மதிக்கத் தயாராயில்லை. தீர்ப்பாணையம், காவிரி ஒழுங்கமைப்பு ஆணையம், பிரதமரின் வேண்டு கோள், இறுதியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இவற்றில் எதையுமே மதிக்க மாட்டோம் என கர்நாடக அரசு வெளிப்படையாகவே சொல்கிறது. தங்கள் மாநில விவசாயிகளுக்கு உண்மையை எடுத்துக் கூறி நியாயத்தை நிலை நாட்ட வேண்டிய அரசும், சிந்தனையாளர்களாக இருக்க வேண்டிய இலக்கியவாதிகளும் மக்களின் இனவெறி உணர்வுகளுக்கு பின்னால் கைகட்டி நிற்கிறார்கள்.
தமிழகத்தில் லட்சோப லட்சம் விவசாயிகளை, படிப்படியாக மரணக் குகைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது வறட்சி. ஆற்றிலோ அணையிலோ குகிக்கிற தற்கொலைச் செய்தி வெளியுலகுக்கு விரைவாகத் தெரிய வரும். ஆனால் சிறுகச் சிறுக உயிர் போக்கும் பசிக் கொடுமை, பட்டினிச் சாவு வெளியே தெரிய வராது. தன் இனத்து, தன் இடத்து விவசாயிகளுக்காகக் கைகோர்த்த இந்த எழுத்தாளர்கள், தமிழகத்து விவசாயிகள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப் படுவதைக் கண்டு பரிதவிக்கக் கூட இல்லை; மாறாக ஏளனமும் எள்ளலும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள்.
இவை யெல்லாம் ஒருபுறம் இருக்க இங்கே நமது தமிழக எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்?
இரண்டு விஷயங்கள் தான் : ஒன்று தமிழ் எழுத்தாளர்கள் 'தேசப் பற்றில்' எல்லை கடந்தவர்கள்; சுய அடையாளம் (இனப்பற்று) அழிந்த 'எல்லை கடந்த தேச பக்திக்குச்' சொந்தக்காரர்கள். இரண்டாவது - சமூகத்திலிருந்து எவ்வளவு தூரம் தொலைவில் நிற்கிறோமோ அவ்வளவுக்கு எழுத்து உன்னதம் எய்தும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.
ஒவ்வோர் ஆட்சியின் போதும் மக்களின் பிரச்சினைகள் தீவிரப்பட்டுக் கொண்டே போகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தேயிலைத் தோட்ட விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோருடைய கழுத்திலும் பிரச்சினையின் கத்திகள் பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் உயிர் கருகும் வாசனை, இன்னும் நம் எழுத்தாளர்களின் 'மிருதுவான' கதவுகளைத் தட்ட வில்லையா? கட்சிகளின் கஞ்சித் தொட்டி, பிரியாணி லாவணியில் மக்கள் அசிங்கப் படவில்லையா?
"எந்த இயக்கமும் சரியான திசை வழியில் செல்லவில்லை. காவிரிப் பிரச்சினையில் கூட ஒன்று படாத அரசியல் கட்சிகள் இருக்கிற போது, எங்கள் ஒற்றுமை எப்படிச் சாத்தியமாகும்" என்று எழுத்தாளர்கள் சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் மக்கள் பிரச்சினைக்காக ஒன்று பட்டுக் குரல் உயர்த்த எந்த முன்னுதாரணங்களும் வேண்டியதில்லை!
தேடல் தொடர்பான தகவல்கள்:
எங்கே போகிறார்கள் எழுத்தாளர்கள்? - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - எழுத்தாளர்கள், மக்களின், தெரிய, மக்கள், கர்நாடக, வேண்டிய, ஒன்று, இலக்கியவாதிகள், கன்னட, உயிர், பட்டினிச், நீரைப், வரும், விவசாயிகள், உச்ச, அரசியல், இருக்க, மாறாக, தண்ணீர், போது, கொள்ள, குரல், வேண்டும், பங்கிட்டுக், அன்று