முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » கலை உயிர்தெழும் கிராமம்
இலக்கியக் கட்டுரைகள் - கலை உயிர்தெழும் கிராமம்
- இந்திரன்
ஒரிசாவில் ஆதிவாசிகளின் கிராமம் ஒன்றில் ஒரு பெண்மணி தன் குடிசையின் வெளிப்புறத்து மண் சுவற்றில் ஓவியம் ஒன்றைத் தீட்டிக் கொண்டிருந்தாள். அவள் வாழும் அந்தக் குடிசையின் உட்புறத்தை வெளிச் சுவற்றில் ஓவியமாக்கிக் கொண்டிருந்தாள். அதன் ஒரு மூலையில் ஒரு பாட்டில் சாராயம், மாமிசம், பீடி, சுருட்டு ஆகிய ஓவியம் வரையப்பட்ட அநாயசத் தன்மையை கண்டு வியந்து கொண்டிருந்த நான், அதன் அர்த்தம் என்னவென்று அவளிடம் கேட்டேன். அவள் சொன்னாள்: ''எனது வீட்டிற்குள் நோயைப் பரப்பும் தீய ஆவிகள் நுழைந்துவிடாமல் செய்து கொண்டிருக்கிறேன். அந்தத் தீய ஆவிகளுக்குப் பிடித்தமான பொருள்களான சாராயம், மாமிசம் போன்றவற்றை வெளிச் சுவரில் ஓவியமாகத் தீட்டுகிறபோது அவை அவற்றை விரும்பி வெளிச் சுவற்றிலேயே தங்கி விடும் எனவே, உள்ளே நுழையாது.''
நான் அசந்து போனேன். பிறகான எனது கேள்விகளின் மூலம் நான் தெரிந்துகொண்டது என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டது. அந்த ஆதிவாசிகளின் சமூகத்தில் ஓவியம் என்பது ஒரு தனிப்பட்ட தொழிலாக இல்லை. ஓவியக் கலைஞர்கள் என்கிற ஒரு தனியான மனிதர்களும் இல்லை. மேற்சொன்ன காரணத்தைப் போல, பல்வேறு சமூகக் காரணங்களுக்காக ஓவியம் அங்கு பயிலப்படுகிறது. ஓவியன் சமூகத்தின் ஒரு அங்கம்.
நாகரிகமான சமூகங்களில் ஓவியக் கலைஞனின் இடம் எங்கே இருக்கிறது? கலை என்பது அன்றாட செயல்பாடுகளிலிருந்து விலகி யாருக்கும் சொந்தமில்லாத ஒரு தீவில் சென்று உட்கார்ந்து கொண்டுவிட்ட பிறகு, ஓவியன் தானே தனக்கு உருவாக்கிக் கொண்ட தனிமையில் வீழ்ந்துவிட்டான். கலை விமர்சனம் என்பது தனிப்பட்ட சிலரால், அவர்களது விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப செய்யப்படுவது என்றாகிப்போன பிறகு, கலைக்கு ஒரு சமூகத்தின் கூட்டு ரசனை இல்லாமல் போகிறது கலைஞர்களுக்கு சமூகத்தின் ஒட்டு மொத்தமான ரசனை ரீதியான அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.
Cholamandal - An Artists Village என்கிற 400 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம் காலம் சென்ற கலை விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ் என்பவரால் தொகுக்கப்பட்டு, ஆக்ஸ்போர்ட் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதில் எஸ்.பி. ஜெயகர் என்கிற சோழ மண்டல ஓவியர் குறித்த எனது கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. தேசிய அளவிலும், உலக அளவிலும் பெயர், பெற்ற சோழ மண்டல ஓவியர்களின் நிலை பற்றிய கட்டுரைகள் வண்ண ஓவியங்களோடும் பல அரிய புகைப்படங்களோடும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கலை வரலாற்றாசிரியர்களின்/ ஓவியர்களின்/ விமர்சகர்களின் கட்டுரைகளோடு இந்த நூலைக் கொண்டு வந்திருக்கும் சோழ மண்டல ஓவியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - குறிப்பாக இதற்காக தனிச் சிரமம் எடுத்து அயராது உழைத்து சாதித்து இருக்கும் சிற்பி எஸ். நந்தகோபால் தனிப்பட்ட பாராட்டுக்கு உரியவராகிறார்.
சோழ மண்டல ஓவியர் கிராமத்தோடு கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்புள்ளவன் என்ற வகையில் சோழ மண்டல ஓவியர் கிராமத்தின் மாறி வரும் பரிணாம வளர்ச்சி என்னுள் பல்வேறு நினைவுகளை, கேள்விகளை எழுப்புகிறது. 1944 -ல் ''புரோகிரசிவ் பெயிண்டர்ஸ் அசோசியேஷன் என்பதை ஓவியர் கே.சி.எஸ். பணிக்கரும் மற்றவர்களும் அமைத்தபோது ஓவியக் கலைஞன் சந்திக்கும் தனிமையைக் கணக்கிலெடுத்துக்கொள்ளவே செய்தனர். ஓவியர்கள் தனித் தனித் தீவுகளாக இயங்காமல், கூட்டாக இயங்க வேண்டும் என்கிற உணர்வு தலை தூக்கியது. இதற்கு நமது இந்திய மரபு ரீதியாக ஏராளமான உதாரணங்கள் உண்டு. அஜந்தா ஓவியங்கள் என்ற உன்னதமான கலை சாதனைகளைச் செய்தவர்கள், எந்த தனிப்பட்ட ஓவியரும் அல்ல. பல்வேறு ஓவியர்கள் இணைந்த கலைஞர்களின் கூட்டங்கள் அவற்றைச் சாதித்தன.
சென்னையில் பிப்ரவரி 1964-ல் ஓவியக் கலையைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட ஓவிய சிற்பக் கலைஞர்கள் ஒன்றுகூடி, பொருளாதார பிரச்னைகள் தங்கள் கலையைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று விவாதித்தார்கள். அரசுப் பணிகளிலும், பல வணிக நிறுவனங்களிலும் தங்கள் பொருளாதாரப் பிரச்னைகளுக்காக நுழைந்து விட்டாலும், ஓவியர்கள் தங்களது கலையை இழந்துவிடும் அபாயம் நிகழ்ந்துவிடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்கள். தங்களது கலையை முழு சுதந்திரத்துடன் மேற்கொள்வதற்காக தங்களது வாழ்வில் ஒருநாளின் ஒரு சில மணி நேரங்களைப் பயன்பாட்டுநிலை கொண்ட கைவினைப் பொருள்களைச் செய்வதற்குச் செலவிட்டு, அதைக் கொண்டு பொருளீட்டுவது சிறந்தது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 1966- ஏப்ரல் 13ம் நாளன்று 10 ஏக்கர் நிலம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மகாபலிபுரம் போகும் வழியில் கடலோரத்தில் விலைக்கு வாங்கப்பட்டது. 1966- மே மாதம் முதல் கட்டமாக ஏழு ஓவியக் கலைஞர்கள் அந்தப் பகுதியில் குடியேறி தங்கள் கலைப்படைப்புகளில் ஈடுபட்டார்கள். ''சோழமண்டல ஓவியர் கிராமம்'' எனும் கலை கிராமம் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இயங்கத் தொடங்கியது. இவர்கள் பீங்கான் கைவினைப் பொருள்களிலிருந்து ''பாத்திக்'' துணி அச்சுகள் வரை பல்வேறு செயல்களில் ஈடுபட்டு பொருளீட்டி, பொருளாதார சுதந்திரத்தோடு ''தங்களது உள்மனத்தேடலான ஓவியத்தில், சிற்பத்தில் ஈடுபட்டார்கள், ''பொன்னை, பொருளை, புகழை விரும்பிடும் என்னை, கவலைகள், தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்'' என்று மகாகவி பாரதி சொன்னதைத்தான் சோழ மண்டல ஓவியர்கள் செய்தார்கள். தனது கலையோடு தொடர்புடைய கைவினைப் பொருட்களை உருவாக்கத் தலைப்பட்டார்கள். இதன் மூலமாக அவர்கள் அடைந்த சுதந்திரம் அளவற்றது.
ஆனால், ஓவியனுக்கான இந்த சுதந்திரம் குறித்த கருத்துகள், நமது மண்ணுக்கு உரியவை அல்ல. இவை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான கலைஞன் குறித்த கருத்துகள். ஓவியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக வாழ வேண்டுமென்று கனவு கண்டவர் ஓவியமேதை வின்சென்ட் வான்கா. இதனால், ஓவியன் தனித்து நிற்பதும், சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பதுமான நிலை பிரான்சிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் உலகம் முழுவதும் பரவியது. நமது தமிழ் மண்ணையும் அது விட்டு வைக்கவில்லை.
கே.ஏ.எஸ். பணிக்கரின் சோழ மண்டலம் குறித்த கனவு மிகவும் சுவாரஸ்யமானது ஒருபுறம் அவரது கனவு மேலை நாடுகள் ஜோடித்து வைத்த கலைஞனையும், அவனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்கிறபோது. மறுபுறம் இந்திய மண்ணுக்கே சொந்தமான கூட்டமாக வாழும் கலைஞர்களின் மரபையும் அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறார். கே.சி.எஸ் பணிக்கரின் ஓவிய பாணிக்கும் கூட இதுதான் அடிப்படை எண்ணமாக இருந்திருக்கிறது.
50 களின் இறுதியில் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து உருவான பல கலைஞர்கள் கே.சி.எஸ். பணிக்கருடன் இணைந்து சோழ மண்டல ஓவியர் கிராமத்தை உருவாக்கினார்கள். இங்கு ஓவியர்களே தங்கள் நிலத்தை விலைக்கு வாங்கினார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கட்டினார்கள். வீடுகள், ஓவியக் கூடங்கள், கண்காட்சி வைப்பதற்கான சித்திரகூடம், நாடக அரங்கு என்று பலவற்றை அவர்கள் தங்களாகவே உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தார்கள். இன்று ஆசியாவிலேயே இப்படி ஒரு ஓவியர் கிராமம் கிடையாது என்று சொல்லுமளவுக்கு சோழ மண்டல ஓவியர் கிராமம் திகழ்கிறது.
இப்போது ஒரிசாவின் ஆதிவாசி கிராமத்தில் ஓவியம் தீட்டிய ஆதிவாசிப் பெண்ணுக்கு வருவோம். சென்னை சோழ மண்டல ஓவியர் கிராமத்தில் வாழ்ந்து 1988-ல் நோய்க்கு இரையாகி மறைந்த அர்ணாவாஸ் என்கிற பெண் ஓவியரையும் எடுத்துக்கொள்வோம். அர்ணாவாஸ் தீட்டிய ராமாயண கதாபாத்திரங்கள், எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களோடும் சம்பந்தப் பட்டவை அல்ல. ஆனால், ஆதிவாசிப் பெண்ணின் ஓவியம் என்பது சடங்குகளோடு முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டது.
சோழ மண்டல ஓவியர் கிராமத்தைப் போலவே, பூரி நகருக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் ரகுராஜ்பூர் ஓவியர் கிராமத்திலும் முழுவதும் ஓவியர்கள்தான் வாழ்கிறார்கள். ''படசித்ரா'' எனும் ஓவிய மரபை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது ரகுராஜ்பூர், வறுமைதான். ஆனால், கிராமத்தை விட்டு வெளியேறாமல் ஓவியர்களாகத்தான் வாழ்வோம் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், அந்த கிராமத்து ''பட்சித்ரா'' ஓவியர்கள். ரகுராஜ்பூரின் மூத்த தலைமுறை தங்களுக்கு அடுத்த தலைமுறையை இயல்பாக ஏற்படுத்தி வளர்த்தெடுக்கிறது. ஆனால், சோழ மண்டல ஓவியர் கிராமத்தின் நிலை என்ன? எங்கே அதன் அடுத்த தலைமுறை? எஸ். நந்தகோபாலுக்கு அடுத்த தலைமுறை சிற்பி என்றும், பி.எஸ். நந்தன் படைக்கும் பாறைச் சிற்பங்களின் அடுத்த தலைமுறை சிற்பி என்றும் சோழ மண்டபத்தில் யாரைக் குறிப்பிடுவீர்கள்? ஜேக்கப் ஜெபராஜ், பி.ஓ. சைலேன் போன்ற இளைஞர்களைத் தவிர ஓவியத்தை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டவர்கள் யார்? மரியா எனும் மிகச்சிறந்த சுடுமண் சிற்பக் கலைஞரை வளர்த்தெடுக்க சோழ மண்டலம் செய்த முயற்சி என்ன?
சோழ மண்டலத்திலிருந்து நான் நேசித்த ஜே.எம். கோபால் எனும் ஓவியர் மறைந்தபோது, எனது நெஞ்சில் எழுந்த கேள்விகள் பல. ஓவிய உலகில் தனக்கெனத் தனியான இடம் நிறுவிக்கொண்ட ரெட்டப்ப நாயுடு தனது இறுதிக் காலத்தில் சோழ மண்டலத்தில் உயிர் நீத்தபோதும் சரி, சுல்தான் அலி, அர்னாவாஸ், ஜெயபால் பணிக்கர் என்று ஒவ்வொரு ஓவியரும் மறைகிறபோதும் சரி, இவர்களது இடங்கள் அடுத்த தலைமுறையினால் நிரப்பப்படாமலேயே இருக்கிறதே என்கிற ஆதங்கம் மனதில் தோன்றுவதை யாரும் மறுக்க முடியாது. அர்ணாவாஸ் என்கிற பெண் ஓவியர் மறைந்த பிறகு, அடுத்த தலைமுறையில் நெருப்போடு கூடிய ஒரு பெண் ஓவியரை வளர்த்தெடுக்க சோழ மண்டலம் என்ன செய்தது.
சோழ மண்டல ஓவியர் கிராமம் இன்று தனது புகழின் உச்சத்தை எட்டி இருக்கிறது. ''சோழ மண்டலம் - ஓர் ஓவியர் கிராமம்'' எனும் ஆங்கிலப் புத்தகம் இதற்கொரு சான்று. தமிழகத்து ஓவிய வரலாற்றில் சோழ மண்டலத்திற்கு தனியான இடத்தை இந்தப் புத்தகம் நிறுவுகிறது. ஆனால், சோழ மண்டலம் ஓவியர் கிராமம் தமிழகத்தின் இளைய சக்திகளை வளர்த்தெடுக்கும் ஒன்றாக என்றைக்குத் தனது கதவுகளைத் திறக்கப்போகிறது என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாக நம்முன் நிற்கிறது.
நன்றி: தீராநதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலை உயிர்தெழும் கிராமம் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஓவியர், மண்டல, கிராமம், ஓவியர்கள், என்கிற, ஓவியக், ஓவியம், அடுத்த, ஓவிய, எனும், மண்டலம், தனிப்பட்ட, தலைமுறை, தங்களது, தனது, என்ன, தங்கள், குறித்த, என்பது, எனது, நான், கலைஞர்கள், பல்வேறு, பிறகு, கனவு, நிலை, அர்ணாவாஸ், பெண், வெளிச், கொண்ட, இடம், சென்னை, சமூகத்தின், அல்ல, நமது, ஓவியன், புத்தகம், கைவினைப், தனியான, சிற்பி