முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » வாழ்க்கைக்காகக் கண்ணாமூச்சி ஆடும் கலைகள்
இலக்கியக் கட்டுரைகள் - வாழ்க்கைக்காகக் கண்ணாமூச்சி ஆடும் கலைகள்
- மு. ராமசாமி
ஒரு கலையின் வாழ்வும் தாழ்வும் அது வாழும் சமூகம் அதன்மேல் வைத்திருக்கிற அக்கறையைப் பொருத்துதான். அக்கறை கொள்ளாத சமூகத்திடமிருந்து சொல்லாமல் கொள்ளாமல் அக்கலை விடை பெற்றுக் கொள்வதென்பது எளிய சமூக விதி. ஒன்றின் இருப்பும் அதன் தேவையும் அதன் சமூகப் பயன் பாட்டைப் பொருத்ததுதான். சமூக இயக்கத்திற்கு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதன் தேவை இருக்கும்போது அது உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேக்கம் எதிர்ப்படுகையில், வீர்யம் நிறைந்த கலைஞன் தன் சக்தியை விருதாவாக்காமல், தன் கலை வாழும் வகை தேடித் தொடர்ந்து வன்மத்துடன் அச்சமூகத்திடம் கலகம் புரிந்து கொண்டேயிருப்பான். அந்தக் கலகம், சரியான திசைவழிச் செல்கையில் அவன் அக்காலச் சமூக விடுகதைக்கு விடை சொல்லக்கூடியவனாயிருப்பான். கலகத்திற்கான சக்தி அவனிடம் போதாமையாயிருக்கையில், அவன் வாழும் வகைதேடி வேறு தொழில்களில் முகம் புதைத்துத் தன் வாழ்வின் விடுகதைக்கு விடைதேடிக் கொண்டிருப்பான். எல்லாக் கலைக்கும் கலைஞருக்கும் இதுதான் பொதுவிதி.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது. இந்த முரண்பாட்டைப் புரிந்துகொண்டு, சமூக அக்கறையுடன் நல்லதை அடையாளங்கண்டு, அதைச் சமூக மேன்மைக்குப் பயன்படுத்துகிற நிலையிலேயே, சமூக அக்கறையற்ற கெட்டது தானாய்க் கழன்று கொள்ளும். ''மரமானது கனியினால் அறியப்படும். கலையானது அதன் சமூகப் பயன்பாட்டினால் உணரப்படும்! ஆக, நல்லதை அடையாளங்காண, சமூகவளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள, நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்திற்கும் கலைக்குமான வரவு, சமூக மாற்றங்களினூடாக எப்படிப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்கிற உள்ஒழுங்கை, சமூகமும் கலைஞனும் தங்கள் மன ஊடாட்டத்தினூடே எவ்விதம் புரிந்து, தன்வயமாக்கிக் கொள்கின்றனர் என்பது முக்கியம்.
பொம்மைகளை வைத்துக் கதை சொல்வது எல்லாக் காலங்களிலும் குழந்தைகளுக்கானதுதான். குழந்தைகளுக்கான வசீகரங்களுடன் அது அமைய வேண்டியது அவசியம்! அந்த வசீகரம் புதிய தொழில் நுட்பத்தில் அமைந்திருப்பதால்தான் ''கார்ட்டூன் நெட்வொர்க்கில் குழந்தைகள் இன்று அப்பிக் கிடக்கின்றனர். இந்த மண்ணிற்கான, பொம்மைக் கூத்துகள் ''தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவைக் கூத்தும்'' இன்னும் தங்கள் வாழ்க்கைக்காகக் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!
''நெய்தற் பரப்பில் பாவையைக் கிடத்தி'' விளையாடிய சங்க மரபு நமக்குண்டு. ஆயின் அது பாவைகூத்தில்லை ''கையுங் காலுந்தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை'' கண்ணாடி உருவத்தைத்தான் குறிக்கிறது. ''மரப்பாவை சென்று வந்தற்று'', ''மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று'' என்றெல்லாம் திருக்குறள் குறிப்பிடுவது ''பொம்மலாட்டம்'' என்றழைக்கப்படும் ''மரப்பாவைக் கூத்து.'' தோற்பாவைக் கூத்தினும் தொன்மையானதாக இது நமக்குச் சுட்டப்படுகிறது. ''தோற்பாவைக் கூத்தாட்டாய்ச் சுழல்கின்றேனை'' என்று எட்டாம் நூற்றாண்டுத் திருவாசகத்தில்தான் இது முதன் முதலாய்க் குறிப்பிடப்படுகிறது. தோலால் பொம்மை செய்து அதை ஆட்டுவித்துக் கதை நடத்துவது இது. ஆட்டுத்தோலால் ஆனவை இங்குள்ள பொம்மைகள். பொம்மைகளின் அசைவுகளுக்கேற்பப் பல்வேறு குரல் மாறுபாடுகளுடன் கதை நடத்துவது தமிழகத்தைப் பொருத்தவரை ஒருவர் மட்டுமே.
சிலம்பிற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) தன் உரையில், ''விநோதக் கூத்தில் ஒன்றாக இழிகுலத்தோர் ஆட அகத்தியன் வகுத்ததாக''த் தோற்பாவைக் கூத்தைக் குறிப்பிடுகிறார். எட்டாம் நூற்றாண்டிலேயே நமக்குக் குறிப்பிருந்தும், இன்று தமிழகத்தில், 17ஆம் நூற்றாண்டில் மராட்டியத்திலிருந்து தமிழகம் வந்த ராவ்ஜிக்களில் ஒரு பிரிவினரான மண்டிகர், வாக்டுகர் போன்றோர் மட்டுமே தோற்பாவை நிழற்கூத்திற்குச் சொந்தங் கொண்டாடுவதும், கேரளத்தில் நம் தமிழ் பூர்வீகமுடையவர்கள் பகவதி அம்மன் கோயில் கூத்து மாடங்களில் கம்பராமாயணப் பாடல்களை மலையாள உச்சரிப்பில் பாடி, தோற்பாவை நிழற்கூத்தை நடத்திக் கொண்டிருப்பதும் விநோதத்தை வரவழைப்பவை தோற்பாவை நிழற்கூத்து எனும் பெயர்'' Leather Shadow puppet show'' எனும் ஆங்கிலத்தின் தமிழ்ச் சொல்லாக என்னால் சூட்டப்பட்டது.
சலவைக்காரரிடம் வெள்ளை வேட்டி வாங்கி, ஊர் பொதுவில் தோற்பானை நிழற்கூத்து நடத்தி, ஊர் கொடுத்த சீதனத்தை வாங்கி, கூத்தும் கலைஞரும் உயிர் வாழ்ந்திருந்தது ஒரு காலம். ஏமாந்த அனுபவங்களும், நுழைவுச் சீட்டுக்கட்டணம் என்பதன் அறிமுகங்களுமாக, ''ஊர்ப் பொதுமுறைக்கு விடை கொடுக்கத் தொடங்கினர். தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள் 1973ம் ஆண்டின் இறுதியில் நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் கூத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியபொழுது, ஊர் ஊராகச் சென்று தோ.பா.நி கூத்துக் கலைஞர்கள் பலரை, அவர்களது கூத்து வெளிகளிலேயே சந்தித்திருக்கி றேன். பெரிய ''டேரா கட்டி மறைத்து, அதற்குள் அமரக் கட்டணம் வசூலித்துத் தோற்பாவை நிழற்கூத்து நிகழ்த்தப்பட்டதந்தக் காலம். கடிவாளத்தைத் தளர்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகச் சகுனம் பார்த்துக்கொண்டிருந்த நேரம் என்றும் அதைக் குறிப்பிடலாம். அதனால்தான் இசை நடனத்திற்கு இடம் பெயரத் தொடங்கியிருந்தும் அதை வெளிப் படையாக என்னிடம் சொல்லக் கூச்சப்பட்டிருந்தனர். ஆயினும் தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞனுக்கோ தலைசாய்க்கச் சொந்த இடம் இல்லாதிருந்தது அன்று!
1995இன் இறுதியில் இந்திரா காந்தி தேசியக் கலை மையத்திற்காகப் பொம்மலாட்டக் கலைஞர்கள் பற்றிய பரப்பாய்வு மேற் கொண்டபோது, 1973 - 78 களில் நான் சந்தித்திராத பல்வேறு தோ.பா.நி கூத்துக் கலைக் குடும்பங்களும் நான் சந்தித்திருந்த குடும்பங்களும் தங்களது கூத்து வெளிகளைத் தொலைத்துவிட்டு, தங்கள் எரவானங்களில் தோற்பாவைகளைச் சொருகிவிட்டு வேறு தொழில்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர். தலைசாய்க்க அவர்களுக்குச் சொந்த வீடு உண்டாகியிருந்தது. இசை நடனம் ஆடுவதைச் சொல்வதில் எந்தக் கூச்சமும் அவர்களுக்கு இல்லாதிருந்தது இப்பொழுது.
1984இல் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை விருது என் ''தோற்பாவை நிழற்கூத்து'' நூலுக்குக் கிடைத்த போதும், இக்கலையின் மீதான விருப்பு சமூகநிலையில் தூண்டப் பெற்றிருக்கவில்லை 1994இல் நிஜநாடக இயக்கம் தயாரித்த தரம் வீர் பாரதியின் ''அந்தாயுக்'' நாடகத் தமிழ்ப் பிரதியான ''இருள்யுக''த்தில் கதை நகர்த்தும், பாத்திரங்களை விமர்சிக்கும் பகுதி திரு. துரைராஜ் ராவ், அவன் பையன் முருகேசன் ராவ் ஆகியோரைக் கொண்டுத் தோற்பாவை நிழற்கூத்தின் மூலம் வடிவமைக்கப்பெற்றிருந்தது. தொடர்ந்து நவீன நாடக முயற்சிகளில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கவும் முடியவில்லை.
1996-97 களில் தோற்பாவை நிழற்கூத்தின் மறுசீரமைப்பிற்கான ஒரு திட்டத்தைத் தூக்கிக்கொண்டு, அதற்கு உதவிகேட்டு ஒவ்வோரிடமாக அலைந்துத் திரிந்தும் யாரும் அதற்குச் செவிகொடுக்கவில்லை. 2000இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளிட்டுள்ள ''இராமாயணம் - தோற்பாவை நிழற்கூத்து'' நூலின் முன்னுரையில் அத்திட்டத்தை விளக்கமாக நானே வெளியிட்டிருந்தும், இன்னும் அதற்கொரு விடிவுகாலம் எந்தத் திசையிலிருந்தும் வரவில்லை.
1997 செப்டம்பரில் அன்றைய உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முதுமுனைவர் இராமர் இளங்கோ, தோற்பாவை நிழற் கூத்துப் பயிலரங்கு ஒன்றைத் தென்னகப் பண்பாட்டு மைய நிதி உதவியில் என் ஒருங்கிணைப்பில் சென்னையில் நடத்தினார். அதில் பயிற்சிபெற்ற மதுரையைச் சேர்ந்த இராஜ்குமார் பயிலரங்கு கொடுத்த உத்வேகத்தில் தோ.பா.நி. கூத்தின் நிலைமாற்றி ''உயிர்ப்பாவை'' என்றொரு குறும்படம் எடுத்தார். ''உயிர்ப்பாவையும்'' நிலை தோற்பாவையின் நிலையாகி, அவர் வீட்டு அலமாரிக்குள் அப்படம் இடம் பிடித்துக் கொண்டதுதான் நடந்தது. அதில், நான்தான் பாவையாட்டி. தோ.பா.நி. கூத்துக் கலைஞர் முருகன்ராவும் தலைகாட்டியிருந்தார். பயிலரங்கு நடைபெற்று 7 ஆண்டுகளான நிலையில், அதில் பயிற்சி பெற்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கெதிரிலுள்ள ''டாஸ்மார்க்'' கடை மேற்பார்வையாளராய் இருப்பதாகச் சந்தித்தது. தோ.பா.நி. கூத்துக் கலைஞர்களின் திசைமாறிய இன்றைய நிலையை நினைவிற்குக் கொண்டு வருவதாக இருந்தது.
2000இல் ''அழகி'' திரைப்படத்தில் கணப்பொழுதே வந்தாலும் தோ.பா.நி. கூத்து. பார்ப்பவர் மனதில் வித்தியாசமாகப் பதியும்படி இருந்தது. இதற்கு முன் 1997 அல்லது 1998இல் கேரளாவில் நடந்த உலகத் திரைப் பட விழாவிற்கான அங்கீகரிக்கப்பட்ட இலச்சினையாகத் தோற்பாவை நிழற்கூத்து அமைந்திருந்தது. திரைப்படத்தின் தொன்மை அது என்பதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. ''நாட்டுப்புறப் பாட்டு'' என்கிற படத்தில் நாட்டார் கலைகளைப் பட்டியலிடுகையில் தோ.பா.நி. கூத்து எனும் பெயர் அழுத்தம் கொடுத்து உச்சரிக்கப்பட்டது. ஆயினும் இவை யாவற்றின் காரணமாகவும் தோ.பா.நி. கூத்தானது. அக்கலைஞர்களின் வயிற்றில் கூழ் ஊற்றும் திராணியைப் பெற்றிருக்கவில்லை என்பதே நடைமுறை உண்மை.
2001 வாக்கில் தோ.பா.நி. கூத்துக் கலைஞர்கள் பற்றி, கலைகளுக்கான இந்திய நிறுவனம் (IFA) நிதி உதவியில் ''நீ எங்கே?'' எனும் ஆவணப்படம் எடுத்த ரமணியின் முயற்சியையும் இத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆயின், படம் எடுத்தோம், பட விழாக்களுக்குப் போனோம் என்று மட்டுமில்லாமல் தோ.பா.நி கூத்துக் கலைஞர்களின் வயிற்றுப் பாட்டிற்குச் சிறுஉதவி, மாணவர்களிடை அறிமுகம் ஆகியவை இதன்மூலம் நடத்திருப்பதை நினைக்கவேண்டும். ஆயின் அவர் எத்தனைக் காலத்திற்கு யார் யார் உதவியில் ஊர் ஊருக்கு இதைக் கொண்டு சென்று கொண்டிருக்க முடியுமென்று தெரியவில்லை. அவருடைய ஒளிப்படக்கருவி இன்னொரு புதியதைத் பதிவு செய்யும் தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கையில் தவித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கான நீரைத் தேடியே அவர் அலைந்து கொண்டிருப்பது அவருக்குச் சிரமமான காரியம். அவர் இன்னொரு ஊடகத்தின் படைப்பாளியாயிருப்பதால் வருகிற அவதி அது.
கலைதான் அவர்களின் வாழ்க்கையாயிருக்கிறது. நிகழ்த்துக்கலை என்பதால் சமூக உறுப்பினர்களின் பங்கேற்பு அதற்கு அவசியமாகிறது. அதில் ஏற்படுகின்ற சிக்கல் கலையின், அஸ்திவாரத்தையே ஆட்டத் தொடங்குகிறது. ஆயினும் தோ.பா.நி. கூத்தெனும் படைப்பு ஊடகத்தில் உடல் வேர்க்கப் பாடுபடும் இக்கலைஞன், வயிற்றுப்பாட்டை மட்டுமே காரணம் காட்டி, படைப்பு மனநிலையை எரவானத்தில் சொருகி விட்டு, வெறும் பாசிமணி ஊசிகளை விலைக்கு வாங்கி அதை வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவ நினைத்துத் தன் சக்தியைச் செலவிடுவதில் முழுச் சம்மதமில்லை!.
அந்நியர் - சிறுபான்மையினர் - சமூகப் பொருளாதார நிலையில் தாழ்த்தப்பட்டோர் என்கிற உணர்வில், அண்டிப் பிழைக்கிற மனநிலையில் இருக்கிற இவர்களைப்போலவே இவர்களின் கலையும் கீழ்நோக்கித் தாழ்வாகவே பார்க்கப்படுகிறது. அக்கலையை அண்ணாந்துப் பார்க்க வைக்கிற அதிசயத்தைத் தொலைக் காட்சி ஊடகங்கள் அக்கரையுடன் செய்ய - குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் இடமளிக்க முன் வரவேண்டும். அதன் மூலம் அக்கலைப்கொரு சமூக அங்கீகாரம் கிடைக்கும், அதற்கேற்பத் தங்கள் கதைகளைப் புதுப்புது பொலிவுடன், தொழில் நுணுக்கச் சிரத்தையுடன் நிகழ்த்தவேண்டிய அவசியத்திற்கு அக்கலைஞர்கள் ஆளாவார்கள். இரு பரிமாண ஊடகங்களான தொலைக் காட்சியும், திரைப்படமும் தோ.பா.நி. கூத்திற்குத் தோள் கொடுக்க முடியும்.
குழந்தைகளின் கல்விப் பணியை மகிழ்ச்சிச் சூழலில் அற்புதமாக்கும் இத் தோ.பா.நி கூத்தானது காலமாற்றத்திற்கேற்ப, புதிய புதிய மாற்றங்களுடன் உலாவரத் தோற்பாவை, மரப்பாவை, கையுறைபாவை விரல் பாவை போன்ற பொம்மைக் கூத்துகளின் பரிசோதனைக்கூடம் அல்லது பொம்மலாட்ட மையம் ஒன்று அமைத்துப் பொம்மலாட்டத்தையும், குழந்தைக் கல்வியையும் கண்காணித்து வரவேண்டும்.
இதைக் கருத்தில்கொண்டு குழந்தைகளுக்கான ஒரு மணி அளவுள்ள சிறுசிறு நிகழ்வுகளை - பஞ்சதந்திரக் கதைகள் இதற்குப் பெருந்தீனியாயமையும் கண்களை உறுத்தாதபடி விளக்கொளியை அழகியலுடன் பயன்படுத்தும் திறமை மேம்படுத்த ஆய்வுச் சூழலை உருவாக்கத் வேண்டும். பொம்மைகளை உருவாக்கத் தோலின் விலை தடையாயிருக்கும் நிலையில் அதற்கிணையான புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம்தானே உருவாகும். தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள, இந்தச் சந்தைப் பொருளாதாரச் சமூகத்தில் வசதியானதை எளிமையானதை நோக்கியே எல்லாச் சமூக முயற்சிகளும் படைப்பு முயற்சிகளும் காய் நகர்த்துவதைப்போல தோ.பா.நி. கூத்தும் நம்மை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி மறுசுழற்சியில் புதிய அழகியப் பொம்மைகள் செய்ய வேதியியல் ஆய்வாளர்களின் உதவியை நாடலாம். இவற்றைச் சோதனை முறையில் செய்து பார்க்க கலைக்கென்று கை நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு தங்கள் பஞ்சம் பிழைத்துவரும் நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் முன்வரவேண்டும்.
கிராமங்களிலுள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கானப் பாடங்களைத் தோ.பா.நி. கூத்து அல்லது பொம்மலாட்டம் வழி நடத்தச்செய்து அக் கலைகளுக்கு உதவலாம். அதற்குப் பள்ளிக் கல்வித்துறை, வழிமுறைகளை வகுத்துத் தரலாம் அல்லது சக்திவாய்ந்த நிறுவனங்கள் நலிந்த பள்ளிகளைத் தத்தெடுத்து அங்குள்ள குழந்தைகளுக்கு தோ.பா.நி. கூத்து அல்லது பொம்மலாட்டத்தின் வழி, பாடங்களைக் கற்றுத் தர முனையலாம். இதன் மூலம் ஆசிரியரும் பாவையாட்டியும் இணைந்து செயலாற்றும் கூட்டறிவு உருவாகும் ஆசிரியர் கலைஞராவது ஒரு கட்டத்தில் நிகழும்.
வருகைதரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்குச் சில குறிப்பிட்டக் கலை எனும்படி வகைப் பிரித்து, தோ.பா.நி. கூத்தைத் தென் மாவட்டங்களின் சுற்றுலாப் பகுதி ஒன்றில் ஒவ்வொரு வாரத்தின் குறிப்பிட்ட நாளிலும் ஒவ்வொரு குழுவைக்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தலாம். அலங்காரப் பொருட்களாகத் தோற்பாவைகள் விற்பனைக்கு வைக்கலாம். இதன் மூலம் அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.
வெள்ளைத் தோலர்கள் இரசிக்க ஆரம்பிக்கையில் நம்மவர்கள் நம்மை அதிசயித்துப் பார்த்துக்கொள்வது நிகழும். இதன் மூலமாகவும் நம் கலையின் மதிப்பு உயரும். கலைஞர்கள் மகிழ்ச்சிதரும் தங்கள் கலையை விட்டுவிலகி இன்னொன்றைத் தேட முனைய மாட்டார்கள். தங்கள் கலையை இன்னமும் வீர்யமுடன் புதிய உலகிற்கேற்பப் புதுமுறையில் அமைத்துத்தர ஆயத்தப்படுவார்கள்! இம் முயற்சிகளில் எதிர்ப்படும் சவாலைச் சந்திக்கும் ஆர்வங்கொண்ட உறுதி படைத்தவர் எத்திசையிலிருந்து குரல் கொடுத்தாலும் அதற்குச் செவிகொடுக்கத் தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள் வானம் பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர்.
நன்றி: புதிய பார்வை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கைக்காகக் கண்ணாமூச்சி ஆடும் கலைகள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தோற்பாவை, சமூக, கூத்து, தங்கள், கலைஞர்கள், கூத்துக், நிழற்கூத்து, அல்லது, அதில், எனும், மூலம், இடம், அவர், கூத்தும், தோற்பாவைக், இதன், ஆயினும், ஒவ்வொரு, உலகத், பயிலரங்கு, நிலையில், வாழும், உதவியில், படைப்பு, நிழற்கூத்துக், சென்று, அவன், மரப்பாவை, ஆயின், என்கிற, எல்லாக், செய்து, மட்டுமே, வேண்டும், விடை, வாங்கி, கலையின், சமூகப், நான்