முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » இருளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியவர்
இலக்கியக் கட்டுரைகள் - இருளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியவர்
- அரசு
சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஏற்படுத்தியது ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன், இடதுசாரிப் பார்வை கொண்ட சுயமரியாதை இயக்க செயல் பாட்டாளர்கள் வரிசையில் மிகவும் முக்கியமானவர். சிப்பிச் சங்குகள், படிமங்கள், விளக்குகள், இசை கருவிகள், கப்பல் தொடர்பான பொருட்கள் மற்றும் வரைபடங்கள், ஆடைகள், மூலிகைகள் இவை தொடர்பான விவரங்கள், படங்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்து தனது வீட்டையே ஒரு கலைக்கூடமாக மாற்றிய இராகவன், தமிழ்நாட்டில் மிக அதிகமாக பழங்காசுகள் சேகரித்தவர். பண்பாட்டின் கூறுகளை அறியும் நுண்தரவுகளாக அவரது சேகரிப்புகள் இன்றும் உள்ளன. அவரது பல்துறை புலமை, அறிவு மட்டுமின்றி பயிற்சியுமுடையது பண்பாட்டுக் கூறுகள் தொடர்பான அவரது ஆய்வுகள் வெறும் தகவல் தொகுப்பாக அமையவில்லை. குறிப்பிட்ட தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளமாகவே அமைந்தன. பழைமை குறித்த வறட்டு ஈடுபாடுடையவராக இல்லாமல், அதற்குள் இருக்கும் சமூக வரலாற்றைச் சுட்டிக் காட்டியவர் சாத்தான்குளம் அ. இராகவன். இராகவனது பயணம் இறுதிவரை தமிழர் அடையாளத்தை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. அவ்வகையில் மயிலை சீனி. வேங்கடசாமி, சாமி, சிதம்பரனார், கா. அப்பாத் துரையார் என்ற திராவிட இயல் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்திய ஆய்வாளர்கள் வரிசையில் அ. இராகவனுக்குத் தனித்த இடம் உண்டு.
கவிராயர் குடும்பத்தில் 1902 ஏப்ரல் 22 அன்று பிறந்தவர் சாத்தான்குளம் அ. இராகவன். ஆசிரியப் பயிற்சி பெற்று 1924 முதல் 1930 வரை சாத்தான் குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலங்களில் பெரியார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, திரு.வி.க., பா. தாவூத்ஷா ஆகியவர்களோடு இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டார்.
1930-இல் ஈரோட்டில் நிறுவப்பெற்ற பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரது மேற்பார்வையில் குடியரசுப் பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 1935இல் இராகவனது ''பெண்ணுரிமையும் மதமும்'' என்ற சிறு நூல் வெளிவந்தது. சமயங்கள், பெண்ணை எவ்விதம் நடத்துகின்றன என்கிற விவாதத்தை முதன்முதலில் இந்நூலில் முன் வைத்தார் இராகவன். மறுமணம், காதல்மணம், சொத்துரிமை, விவாகரத்து, பால்ய மண மறுப்பு போன்றவை குறித்தும் இந்நூலில் மிக விரிவாகப் பேசியுள்ளார். 1930களில் இவ்வகைக் கண்ணோட்டத்தோடு ஒருவர் செயல் பட்டிருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இராகவனது ''கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?'' என்ற கடவுள் மறுப்புப் பிரச்சார சிறு நூல் பல பதிப்புகளைக் கண்டு, இன்றும் விற்பனையில் உள்ளது. இதில் ''கடவுளர் கதைகள்'' எவ்வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்பது குறித்து சுவையாகக் கூறியுள்ளார்.
1935-ஆம் ஆண்டு வரை பெரியாரோடு இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியவர். ஜீவா சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறி '' சுயமரியாதை சமதர்மக் கட்சியைத் தொடங்கிய போது அவருடன் சென்றார். இவ்வியக்கத்தின் இதழாக ''அறிவு'' என்னும் இதழையும் நடத்தினார். பின்னர் இராகவன் 1937இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மே தினம் குறித்து தமிழில் முதலில் எழுதியவராக இராகவனைக் கூறலாம். 1945 இல் எழுதப்பட்ட இச்சிறு வெளியீடு இன்றும் உயிரோட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு 1947இல் கிடைத்த அரசியல் விடுதலையோடு, சாத்தான்குளம் அ. இராகவனது அரசியல் ஈடுபாடும் குறைந்தது. கொழும்பு சென்று, அங்கு ''சரஸ்வதி அழுத்தகம்'' என்னும் அச்சகம் ஒன்றைத் தொடங்கி வணிகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். இக்காலம் முதல் பல்துறை சார்ந்த கலை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது.
இலங்கையில் இருக்கும்போதே ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி, காசி இந்தியப் பழங்காசு ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டத் தொடங்கினார். இவ்வகைப் பின்புலத்தோடு 1960ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்குத் திரும்பி தமிழகப் பழம் நகரங்கள் தொடர்பான அகழ்வாய்வு விவரங்கள், சிந்து சமவெளி ஆய்வுகள் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, அது சார்ந்த ஆய்வில் முழு நேரத்தையும் ஒதுக்கினார்.
சிங்கப்பூர் ''தமிழ்முரசு'' இதழின் ஆசிரியர் கோ. சாரங்கபாணி கேட்டுக்கொண்டதற்கிணங்க, ''தமிழ் முரசில் தொடராக தமது ஆய்வுகளை எழுதினார் இராகவன். ''தமிழர் பண்பாட்டில் தாமரை,'' ''தமிழ் நாட்டு திருவிளக்குகள்'' என்னும் இரண்டு தொடர்கள் அப்பத்திரிகையில் வெளிவந்தன. விளக்குகள் பற்றிய இவரது ஆராய்ச்சி, பண்பாட்டு வரலாற்றில் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. சாதாரண மனிதர்களின் நம்பிக்கை எவ்விதம் சடங்குகளாக வடிவம் பெற்றன. எவ்விதம் படிப்படியாக சமயங்களால் உள்வாங்கப்பட்டு, வேறு வடிவத்திற்குப் போகிறது என்பதை விளக்குகள் தொடர்பான விவரங்களை முன் வைத்து ஆராய்கிறார் இராகவன். தொல்பழங்காலம் தொடங்கி, இன்று வரை விளக்குகள் எப்படி மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருகின்றன என்பதை இதில் தெளிவுபடுத்தியுள்ளார். கல்வெட்டுகளில், விளக்கு எரிக்க மன்னர்கள் மானியம் வழங்கியது தொடர்பான குறிப்புகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
விளக்கு போன்றே மலர் தொடர்பான பண்பாடும் மனித வாழக்கையில் முக்கிய இடம் பெறுகிறுது. தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகள், கூடுதலாக இயற்கை சார்ந்தது. நீர், பூ ஆகியவை தொடர்பான பண்பாட்டிச் செயல்பாடுகளையும் தமிழ் இலக்கியம் விரிவாகவே பேசுகிறது. இராகவனின் ''தமிழர் பண்பாட்டில் தாமரை'' நூல் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தாமரை என்ற மலர், தமிழரின் பல்வேறு ஊடகங்களிலும் இடம் பெற்றிருப்பது குறித்து இவ்வாய்வு அமைந்துள்ளது. தாமரை மலர் அளவிற்குத் தமிழர்களின் அனைத்து நிலைகளிலும் இடம்பெறும் வேறு மலர் இருப்பதாக அறிய முடியவில்லை.
விளக்குகள், தாமரை குறித்த ஆய்வுகளைப் போன்றே அணிகலன்கள் குறித்த ராகவனது ஆய்வும் முக்கியமானது. இவரது ''தமிழ்நாட்டு அணிகலன்கள்'' என்ற நூல், பின்கண்ட வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் கிடைக்கும் தாதுப் பொருட்களுக்கும் தமிழ்நாட்டு அணிகலன்களுக்கும் உள்ள உறவு, அணிகலன்கள் செய்யப் பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் கருவிகள், தலை அணிகள் முப்பத்திரண்டு, பெண்களின் அணிகள் நாற்பத்தொன்று, காது அணிகள் முப்பத்தெட்டு, கழுத்து அணிகள் ஐம்பத்தொன்பது, கை அணிகள் முப்பது, கைவிரல் அணிகள் பதின்மூன்று, இடை அணிகள் எட்டு மற்றம் குழந்தைகளுக்கான அணிகள் என்று விரிவாக தமிழர்கள் அணியும் அணிகலன்கள் பற்றிய ஆய்வு இந்நூல். இதில் அணிகலன்கள் மூலம் பண்டைத் தமிழரின் தொழில்நுட்பம் மற்றும் அரசியல் பொருளாதாரம் குறித்தும் ஆராய்கிறார் இராகவன். கல்வெட்டுச்சான்றுகள், சிற்ப நூல் சான்றுகள் ஆகியவற்றின் துணையோடு சுமார் ஐந்நூறு அணிகலன்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும் தந்துள்ளார். இந்நூலின் துணை கொண்டு, தமிழர்களின் அணிகலன்கள் குறித்த அகராதி ஒன்றையே உருவாக்க முடியும்.
''இசையும், யாழும்'' என்னும் நூல், தமிழிசை குறித்த வரலாற்றுப் பாங்கான ஆய்வை முன் வைக்கிறது. தமிழர்களின் இசை பண்பாட்டு வரலாற்றைக் காட்டுகிறது. இராகவனது பழந்தமிழ் இலக்கியப் புலமையை இந்நூல் வழி அறிய முடியும். தமிழர்களின் இசை வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களையும், இருபத்து நான்கு வகை யாழ் பற்றியும் ஐந்து வகையான வீணைகளைப் பற்றிய வீணைக்கும், யாழுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும். இந்நூலில் எழுதியுள்ளார். இலங்கை நண்பர் ராம. ஈசுவரமூர்த்தி அவர்களின் உதவியோடு, உலகம் முழுவதுமுள்ள அருங்காட்சியகங்களிலிருந்து இராகவன் சேகரித்த யாழ் தொடர்பான படங்கள் அரிய தகவல்களாக உள்ளன.
தமிழர்களின் தொழில்நுட்பம் மற்றம் உலகம் தழுவிய வணிகம் ஆகியவற்றைக் கூறும் நூல். ''நம் நாட்டுக் கப்பற்கலை,'' வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, இன்று வரை கப்பல் கட்டும் கலை மற்றும் கப்பல் வணிகம் பற்றிய நீண்ட வரலாற்றை இந்நூல் முன்வைக்கிறது. பல்வேறு வகைப்பட்ட மக்கள் குழுக்கள், பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி கப்பல் கட்டுவது பற்றி இந்நூலிலுள்ள அரிய செய்திகள் மூலம் கப்பல் என்ற கருவியின் பல பரிமாணங்களை உணர முடியும். கப்பல் தொடர்பாக இவர் சேகரித்துத் தந்துள்ள பழ மொழிகள், கப்பல் பண்பாட்டின் தொடர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளன. தமிழர்களின் நீர் அரன், கடற்படை, உரோம நாட்டுடன் நமக்கு இருந்த உறவுகள், பூம்புகாரில் இருந்து யவனச்சேரி ஆகியவை தொடர்பான இலக்கியச் சான்றுகளையும் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது, நாற்பத்தாறு பழங்கால மரக்கலங்களின் எண்ணெய் வண்ணப் படக்காட்சி ஒன்றையும் நடத்தினார் இராகவன்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கித் தமிழர்களின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்து வருகிறது. இப்பெயர்ச்சியால் உருவாகும் மனநிலைகளை ''அலைவு உழற்சி'' என்று சொல்கிறோம். இன்றைய இந்தோனேசியா, அன்றைய சாவகத் தீவுகளுக்குத் தமிழர்கள் சென்றுள்ளனர். அந்த வரலாற்றை, ''தமிழக - சாவகக் கலைத் தொடர்புகள்'' என்னும் நூலில் இராகவன் வெளிப்படுத்தியுள்ளார். சைவக் கோயில்கள் அங்கு உருப்பெற்று, நெடுங்காலம் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளதையும் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக் கலை மரபு சாவகத்தில் உள்ள தமிழர்கள் கால மாற்றத்தில் பெற்றுள்ள மாற்றங்களையும் தமிழர்களின் பொம்மலாட்டம் இன்றும் அங்கு வாழ்வது தொடர்பான விவரங்களையும் பதிவு செய்துள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பான விரிவான வாசிப்பை மேற்கொண்டுதான் இந்நூலை அவர் உருவாக்கியிருக்க வேண்டும்.
''கோநகர் கொற்கை'' என்னும் நூலில் பூம்புகார், முசிறி, உரையூர், கருவூர் ஆகிய நகரங்கள் சார்ந்த அகழ் வாய்வில் கொற்கையின் இடம் குறித்து ஆய்வு செய்கிறார். ஆதிச்ச நல்லூர், அரிக்காமேடு அகழ்வாய்வுப் பொருட்களோடு கொற்கையின் தொடர்பைக் காட்டுகிறார். இதே கண்ணோட்டத்தில் ''அதிச்ச நல்லூரும் பொருநை நதி நாகரிகமும்'' என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் பல புதிய தகவல்களை வெளிப்படுத்துகிறது.
கோநகர் கொற்கை நூலின் உள் அட்டையில் வரவுள்ள நூல்களாக பின் கண்ட பட்டியல் உள்ளது. ''இறைவனின் எண் வகை வடிவங்கள்,'' ''தமிழ்நாட்டுப் படைக்கலன்கள்,'' ''தமிழ்நாட்டுக் காசுகள்.'' தமிழ்நாட்டு ஓவியம்,'' ''சிந்துவெளித் திராவிட நாகரீகம்'' ஆகியவை. இந்த ஐந்து நூல்களும் இன்று வரை கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதாக அறிகிறோம். 1981 மார்ச் 8 அன்று இராகவன் காலமானார். ஆனாலும் இன்று வரை இப்பெரியவரின் முழு ஆய்வுகளும் வெளிவராமல் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழிப்புணர்வைக் காட்டுகிறது.
நம்பிக்கை - சடங்கு - வழிபாடு - கலைப் பொருட்கள் என்ற புரிதலுக்கு இவரது ஆய்வுகள் பெரிதும் அடிப்படையாக அமைகின்றன. இவரால் உருவாக்கப்பட்ட கலைக்கூடம், இவர் சேகரித்த நூல்கள், சேகரித்த காசுகள் ஆகிய அனைத்தும் இப்போது என்ன நிலையில் உள்ளன?.. இவ்வினாவிற்கான பதில் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை இதற்கு யார் காரணம்? நாம்தான்
நன்றி: தீராநதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியவர் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தொடர்பான, இராகவன், தமிழர்களின், நூல், அணிகள், கப்பல், என்னும், சுயமரியாதை, அணிகலன்கள், தாமரை, குறித்த, இராகவனது, பண்பாட்டு, விளக்குகள், குறித்து, தமிழ், பற்றிய, இன்று, பல்வேறு, ஈடுபாடு, மலர், இருந்து, சாத்தான்குளம், இன்றும், இடம், இவரது, சேகரித்த, முடியும், இந்நூல், ஆகியவை, உள்ள, தமிழ்நாட்டு, தமிழர்கள், இதில், இயக்கத்தில், எவ்விதம், தமிழர், ஆய்வுகள், பொருட்கள், அவரது, இந்நூலில், முன், தொடங்கி, சார்ந்த, அங்கு, அரசியல், குறித்தும், ஆய்வு