முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » புனிதமான கடவுள்களும் தீட்டுப்பட்ட தெய்வங்களும்...
இலக்கியக் கட்டுரைகள் - புனிதமான கடவுள்களும் தீட்டுப்பட்ட தெய்வங்களும்...
- சு. வெங்கடேசன்
மதங்கள் உருவாக்கிய கடவுள்களும், மக்கள் உருவாக்கிய தெய்வங்களும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. காலங்காலமாய் ஆதிக்கக் கருத்தியலை நிலை நிறுத்தவே மதங்களும், கடவுள்களும் பயன்பட்டு வருகின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகவே மக்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கி வருகின்றனர். லட்சக்கணக்கில் இருக்கும் கிராம தெய்வங்களில் ஒன்று கூட பள்ளிக்கொண்டு படுத்த நிலையிலோ, நித்திய சைனீயத்திலோ, ஆழ்ந்த தவக்கோலத்திலோ இருப்பதில்லை. எல்லாமே துடிப்புடன், ஆத்திரம் பொங்க, சினம் கொப்பளிக்கத்தான் இருக்கும். ஏதோ ஒரு வகையில் ஆதிக்க வன்முறைக்கு எதிரான சினத்தை அடையாளப்படுத்துபவைகளே இந்த தெய்வங்கள். எனவே வேதங்களில் இருந்து உதித்த தெய்வங்களும் எதிரெதிர் வர்க்கங்களை சமய உலகில் பிரதிபலிப்பவைகளே!
மதங்கள் உருவாக்கிய கடவுள்கள் ஆலயத்திற்குள் தான் இருக்கும். அந்த ஆலயமானது ஆகமப்படிதான் அமையும். ஆகமமானது சிவாகமங்கள் இருபத்தெட்டு, சைவ உபாகமங்கள் நூற்றிபதின் மூன்று, வைஷ்ணவாகமங்கள், வைகாநசம், பாஞ்சராத்ரம் என்று வகைப்படும். இவற்றில் எந்த ஆகமப்படி ஆலயம் கட்டப்படுகிறதோ அவற்றின் படியே பிரதிஷ்டை, நித்திய பூஜை, நைமித்திக பூஜை, திருவிழாக்கள், தீஷைகள், மந்திரங்கள் முதலியவை நடைபெறும். மக்கள் உருவாக்கிய தெய்வங்கள் கண்மாய்க்கரை, கருவேலமரம், ஒத்தைப் பனை, நட்ட நடுக்கல், சுடுகாட்டு மூலை, ஆலமர உச்சி, ஊர் எல்லை, பாம்புப்புத்து, வேல்கம்பு, மரப்பெட்டி, காதலகருகமணி, கூரச்சேலை என இவற்றிலே தான் இருக்கும். இருக்கும் இடம் போய் வருவதற்கான வசதிகளைப் பொறுத்து அவற்றின் பூசைகள் அமையும்.
மதங்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆகமமுறைப்படி அர்ச்சகர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் அது நித்தியம், நைமித்திகம், காமிகம் என மூன்று வகைப்படும். நித்திய பூஜை யென்பது நாள்தோறும் செய்யப்படும் பூஜையாகும். அது பகலில் நான்கு காலங்களும் இரவில் நான்கு காலங்களுமாக எட்டுக்காலப் பூஜையாகப் செய்யப்படும். அல்லது பகலில் மூன்று, இரவில் மூன்று என ஆறுகாலப் பூஜையாக செய்யப்படும். அல்லது பகலில் இரண்டு இரவில் இரண்டு என நான்கு காலப்பூஜையாக செய்யப்படும். ஆனால் நித்திய கண்டத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் சோற்றுக்கே வழியில்லாத நிலையில், ஆறு கால பூஜை செய்ய வழியுமில்லை, நாதியுமில்லை யாதலால் தங்களின் தெய்வத்திற்கே அந்தப் பழக்கமில்லையெனத் தெரிந்து, வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் அல்லது தேவையையொட்டி கூடுதலாக ஒன்றிரண்டு முறை படையலிட்டு பூஜை செய்கிறார்கள்.
மதங்கள் உருவாக்கிய கடவுளுக்கான ஆலய நிர்மாணங்கள் ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தர்தம் என நான்கு வகைப்படும். சில ஆலயங்களில் திருடுவதன் பொருட்டு அசுத்தம் நிறைந்த பொருள்களோடு திருடர்கள் புகுந்துவிட்டால் ஆலயம் தீட்டுப்பட்டு விடும். அத் தீட்டை நீக்கும் பொருட்டு சம்ப்ரோசணச் சடங்கு செய்யப்படும். அதுவே அந்தர்தம் ஆகும். ஆனால் மக்கள் உருவாக்கிய தெய்வத்திற்கான சிலையானது ஏதோ ஒரு கோயிலில் இருந்து திருடிக் கொண்டுவரப்பட்டதேயாகும். திருடிக் கொண்டுவரப்பட்ட சிலைக்கே சக்தி அதிகம் என்பதுமக்களின் நம்பிக்கை. காரணம் சிற்பசாஸ்திரங்கள் கீழ் சாதியிருனருக்கு சிலை செய்ய ஒரு போதும் அனுமதித்ததில்லை. எனவே சிலை வேண்டுமென்றால் திருடித்தான் கொண்டு வர முடியும். அது மட்டுமல்ல திருடப்போன போது இறந்து போனவர்களும், திருட்டைத் தடுக்க காவலுக்குப் போனபோது இறந்து போனவர்களும்தான் உழைக்கும் மக்களின் தெய்வங்களில் கணிசமானவர்கள்.
மதங்கள் உருவாக்கிய கடவுளுக்கு பூஜை செய்பவர் உடல் சுத்தமும், உடல் சுத்தமும் உடையவராக இருக்கவேண்டும். உடல் சுத்தத்திற்கு நீராடுதல், தோய்ந்துலர்ந்த ஆடைகட்டுதல், விபூதி உருத்திராக்களும் அணிதல், நாமதாரணம், துளசி மணிமாலை அணிதல் முதலியன இன்றியமையாததாகும். உளச் சுத்தத்திற்கு ஐம்புலனடக்கலும், தீஷை பெறுதலும், அவசியமாகும். இவ்வித சுத்திகளை பஞ்ச சுத்தி என கூறுவர். அதாவது ஆதம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, லிங்க சுத்தியாகும். இவற்றின் மையப் பொருள் பூஜை செய்யும் ஆச்சாரியன் தனது உடம்பைத் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிபோல சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆனால் மக்கள் உருவாக்கிய தெய்வங்களோ கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், வீசும் சாற்றிலும், அடர்ந்த பனியிலும், வெட்ட வெளியில் ஆகாசம் பார்த்து, ஆள் அரவமற்ற காட்டுக்குள்ளே தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பவை. போன ஆண்டு மாசிக்களரிக்கு விளக்குப் போட்டபொழுது தேய்த்துவிட்ட எண்ணெய் பிசுபிசுப்பு, அதன் மீது ஆண்டு முழுவதும் படிந்த தூசிகள், பறவைகளின் எச்சம், இவற்றோடு இயற்கையின் அரவணைப்பில் ஏகந்த வெளியில் நின்று கொண்டிருக்கும். தெய்வம் எப்படியோ, அப்படியே பூசைகளும், வருட முழுவதும் உழைத்து கசடுகளேறி கன்னிப்போன கைகளால் சிலையின் மேல் இருக்கும் தூசி துப்படைகளைத் தட்டிவிட்டு, கொஞ்சம் தண்ணி தெளித்து கழுவி எண்ணெய் தேய்த்து விடுவான் தெய்வத்திற்க்கு.
மதங்கள் உருவாக்கிய கடவுளுக்கான பூஜைகள் சோடசோபசாரங்கள் என்று அழைக்கப்படுகின்ற பதினாறு உபச்சாரங்களாக செய்யப்பட வேண்டும். எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சல் பொடி, பஞ்ச கவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சை, பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம், இவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அதுவே சோடசோபசாரங்களில் ஒன்றான ''அபிஷேகம்'' ஆகும். ஆனால் ஆடு, மாடு, கோழி, காட்டு மிருகங்கள், வளர்ப்பு பிராணிகள் என எல்லாம் குடிக்கிற, மனிதர்களும் குளித்து அழுக்கு நீக்க பயன்படுத்துகிற, வீசும் காற்றிலே பறந்து வந்து விழும் தூசிகள், மரப்பட்டைகள், பறவை இறக்கைகள் என எல்லாம் மிதந்து கிடக்கிற குளத்துத் தண்ணீரை ஒரு கையால் கலக்கிவிட்டு, கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீர் மோந்து, சிலைக்கோ, வேல்கம்புக்கோ, நடுக்கல்லுக்கோ, மரத்தின் அடிப் பகுதிக்கோ ஊற்றுவதுதான் மக்கள் உருவாக்கிய தெய்வங்களுக்கு நடக்கும் ஒரே அபிஷேகம்.
மதங்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு செய்யப்படும் நைவேத்தியத்திற்கு நெல்லரிசி, கோதுமை, முளை அரிசி, இவை உத்தமம். வெள்ளை அரிசியை விட சிவந்த நெல்லரிசி நிவேதனத்துக்கு மிக உத்தமம், நெல், கல் உமி, ரோமம் இவை அரிசியில் கலந்திருக்கக் கூடாது. சுத்த அன்னம், பாயசம், பொங்கல் முதலிய சித்திரான்னங்களும் நிவேதனக்கு உகந்தவையாகும். ஆத்மாவின் குணமாகிய அகங்காரம், சங்கற்பம், கோபம், மோகம் இவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதை இது குறிக்கிறது என்பது கருத்து...
பல பீடத்தில் நிறுத்தப்பட்ட கருங்கெடாயின் தலையில் தண்ணீர் தெளித்தவுடன் அது தலையை குலுக்கும். உடனே ''உத்தரவு குடுத்திருச்சு டோய்...'' எனச் சொல்லி கடா வெட்டப்பட்டு தலை தெய்வத்தின் பாதத்தில் வைக்கப்படும். இன்னும் சில இடங்களில் காலை அறுத்து அதன் வாயில் கவ்வவிட்டு தலையை வெட்டி படையலிடப்படும். சேவலின் தலையை வெட்டி அதன் உடலை ஒரு குச்சியால் குத்தி தெய்வத்தின் முன் படையலிடப்படும். பன்றியின் தலையை வெட்டி பலியிடப்படும். இன்னும் சில இடங்களில் பன்றியின் வயிற்றைக் கிழித்து உள்ளே பொங்கும் இரத்தத்தை இரண்டு கைகளால் அள்ளி அப்படியே தெய்வத்தின் மீது தெளிக்கப்படும். எருமையை வெட்டி தலை படையலிடப்படும். சினையாட்டியின் வயிற்றைக் கிழித்து குட்டியை எடுத்து பலி கொடுக்கப்படும். இவற்றோடு நெல்லுச் சோறும், பயிறு வகைகளும் படையலிடப்படும். இது மனிதனின் உணவுப் பழக்க வழக்கம், அவனுக்கு கிடைக்கிற பொருள், அவனது தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தெய்வத்திற்குப் படைத்து அப்படியே தாங்களும் உட்கொள்வதாகும். இது ஆத்மாவின் குணத்தை குறிப்பதல்ல. வாழ்வின் குணத்தைக் குறிப்பது. இருப்பின் நிலையை உணர்த்துவது. மேலே இருக்கும் தெய்வத்திற்கு படையலிட்டு திருப்தி படுவதல்ல. கீழே வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவாய் படையலிட்டு பசியாற்றிக் கொள்வதாகும்.
மதங்கள் உருவாக்கிய கடவுள்களை யாரும் நேரடியாக வழிபாடு செய்ய முடியாது. அதற்கென்று இறைவனால் படைக்கப் பட்டதாகச் சொல்லப்படுகின்ற பிராமண சாதியை சேர்ந்தவர்தான் பூசகராக முடியும். ஆனால் மக்கள் உருவாக்கிய தெய்வத்திற்கு பூசகருக்கென தனிச் சாதி கிடையாது. வணங்குகிறவர்களில் ஒருவர் தான் பூசகாரக இருப்பார். அதே போன்று, மதங்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு சமஸ்கிருதம் தான் மொழி. அதுதான் தேவ பாஷை, வேறு மொழியிலே வழிபாட்டு மந்திரம் சொன்னால் கடவுள் தீட்டுப்பட்டு விடும். புனிதம் கெட்டுவிடும். ஆனால் மக்கள் உருவாக்கிய தெய்வங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது, சமஸ்கிருதம் என்றால் என்னவென்று தெரியாது. பக்கத்துக் குளத்தில் தவளைகள் கத்துவதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளுமோ அதேபோல் தான் இதையும் அர்த்தப்படுத்திக் கொள்ளும். தாய்மொழி வழிபாடுதான் அதற்கானது.
மதங்கள் உருவாக்கிய கடவுள்களின் கைகளில் இருப்பதெல்லாம் சக்ராயுதம், வஜ்ஜிராயுதம், பிரமாஸ்திரம், காலதண்டம் முதலியவைகள் தான். இது எதுவும் மனிதர்களிடம் இல்லை. இவைகளெல்லாம் எப்படி இருக்குமென்று கூடத் தெரியாது. இறைவன் என்ற பிம்பத்தோடு இணைத்து மனிதனின் கற்பனைகளில்தான் இவைகளெல்லாம் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் மனிதர்கள் உருவாக்கிய தெய்வங்களின் கையில் இருப்பது வேல்கம்பு, சாட்டக் கம்பு, வெட்டறுவா, வீச்சறுவா, சூலாயுதம், வளரி, குத்தீட்டி போன்றவைகள் தான். இவைகளெல்லாம் இன்றும் மனிதர்களிடம் இருக்கின்றது. ஏனென்றால் மக்கள் வணங்கும் தெய்வங்கள் அனைவரும் ஏற்கெனவே மனிதர்களாக இருந்ததால்.
மதங்கள் உருவாக்கிய கடவுள்கள் அர்த்த ஜாம பூஜை முடித்து பள்ளியறைக்குள் சென்று விட்டால் மறு நாள் காலை பள்ளியெழுச்சி பாடியபின் தான் எழுந்திருந்து வெளியில் வருவார். இரவினில் அவர் வரமாட்டார். கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புதுவருடம் பிறப்பதை முன்னிட்டு மக்களெல்லாம் கோயிலுக்குப்போய் வழிபாடு நடத்தினார்கள். ''இன்று நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்'' என கோயில்களில் போர்ட் எழுதிப்போட்டார்கள். உடனே சங்கராச் சாரியார் அறிக்கை விட்டார். ''இந்து மத சாஸ்திரப்படி'', இரவு பூஜை முடித்து கடவுள் பள்ளியறைக்குப் போய்விட்டால் மறு நாள் காலை பள்ளியெழுச்சி பாடியபின் தான் எழுப்ப வேண்டும். அதற்கிடையில் நடுநிசியில் கோயில் கதவுகள் திறக்கக் கூடாது. ஏனென்றால் அது தீய சக்திகள் உலவுகிற நேரமாகும் என்றார். இதே கருத்தையே இராமகோபாலன் மற்றும் இல.கணேசனுடைய அறிக்கைகளும் தெரிவித்தன.
மக்கள் உருவாக்கிய தெய்வங்களுக்கு நடக்கிற வழிபாடு, கொடையெல்லாம் நள்ளிரவில்தான் நடைபெறும். மாசிக்களறியன்றோ அல்லது வேறெந்த நாளுமோ பகலில் வேலைகளுக்குப் போய்விட்டு வந்து இரவுதான் சாமியை கும்பிட மக்கள் வருவார்கள். கெடாவெட்டு, இரத்தபலி, படையிலிடுதல் என எல்லாம் இராத்தீரி முழுவதும் நடக்கும். இதுதான் வழக்கம்.
சங்கராச்சாரியின் வார்த்தைப்படி, அவர் சொல்லும் இந்து மதத்தின் அர்த்தப்படி மக்கள் உருவாக்கிய தெய்வங்கள் அனைத்தும் தெய்வங்களல்ல, தீய சக்திகள். நள்ளிரவு பூதங்கள் இராட்சஷர்கள் ஆகும்.
பசுவின் கோமியம் கூட புனிதமானது. ஆனால் எருமையின் பால் கூட தீட்டானது என்று சொன்ன வைதீக வெறியர்கள், பிராமணர்கள் என்ற மனிதர்கள் கூட புனிதமானவர்கள். ஆனால் உழைக்கும் மக்களின் தெய்வங்கள் கூட தீட்டானது எனச் சொல்லி ஓதுக்கினார்கள். கருப்பணசாமி ஐயர் என்றோ, மாடசாமி அய்யங்கார் என்றோ பெயர்கூட வைத்துக் கொள்வதில்லை. காரணம் பெயரானாலும் மொழியானலும், மனிதனானாலும், சாமியானாலும் தீட்டு தீட்டுதான்.
தீட்டு, புனிதம் என்ற ஆதிக்க வர்க்க மதிப்பீடுகளை நிராகரித்தவைகள் மக்கள் உருவாக்கிய தெய்வங்கள். எனவே தான் நம் தெய்வங்களையெல்லாம் தீட்டு என ஒதுக்கியது வைதீகக் கூட்டம். மனிதர்களை ஊருக்கு வெளியே ஒரு கூட்டத்தையும், தெருவுக்கு வெளியே ஒரு கூட்டத்தையும், வீட்டுக்கு வெளியே ஒரு கூட்டத்தையும் நிறுத்தியது போல; மக்கள் உருவாக்கிய தெய்வங்களையும் ஊர் எல்லையில் ஒரு கூட்டத்தையும், கோட்டைக்கு வெளியே ஒரு கூட்டத்தையும், கோயிலுக்கு வெளியே ஒரு கூட்டத்தையும் நிறுத்தியது.
நன்றி: கருப்பு கேட்கிறான் கெடா எங்கே?
தேடல் தொடர்பான தகவல்கள்:
புனிதமான கடவுள்களும் தீட்டுப்பட்ட தெய்வங்களும்... - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - உருவாக்கிய, மக்கள், மதங்கள், தான், பூஜை, இருக்கும், கூட்டத்தையும், செய்யப்படும், தெய்வங்கள், சுத்தி, வேண்டும், செய்ய, வெளியே, வழிபாடு, படையலிடப்படும், வெட்டி, தலையை, நித்திய, அல்லது, பகலில், மூன்று, நான்கு, காலை, தெய்வத்தின், தீட்டு, தெய்வங்களுக்கு, தெரியாது, நள்ளிரவு, இவைகளெல்லாம், சமஸ்கிருதம், ஆகும், இரண்டு, நாள், இரவில், கொண்டு, வகைப்படும், கடவுள்களுக்கு, படையலிட்டு, உடல், அப்படியே, அபிஷேகம், முழுவதும், எண்ணெய், வெளியில், எல்லாம்