முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » மறுவாசிப்புத் தளத்தில் - குறள்
இலக்கியக் கட்டுரைகள் - மறுவாசிப்புத் தளத்தில் - குறள்
- வே. சிவகுமார்
மக்களின் வாழ்க்கைச் சூழல், அதன் அடிப்படையிலான மனிதச் சித்தரிப்பு, நடைமுறை, பண்பாடு என்னும் பல தளங்களில் செயல்படும் பரந்துபட்ட வாழ்வின் மறு பிரதியே இலக்கியம் எனலாம். அத்தகைய பிரதிகளின் ஒன்றாக திருக்குறளைக் எடுத்துக் கொண்டு "வாசிப்பு வேறாயிருக்கும் பொழுதுதான் விவரிப்பு வேறாய் இருக்க முடியும்'' என்னும் கோட்பாட்டுக்குட்படுத்தி, அக்காலக் கட்டத்தில் சமூகநிலையுடனான கருத்தாக்கங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிரதிக்கும் அதனுடனான படைப்பாளியின் வாழ்க்கைப்படி நிலைக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்டு இரண்டையும் ஒரே தளத்தில் வைத்து நோக்க, பிரதியின் பழைய வடிவத்தில் புதிய பரிமாணத்தைக் காண முடியும். இந்த புதிய பரிமாணம் பிரதிக்கும் காலத்திற்குமான இணை நிகழ்வா அல்லது எதிர் நிகழ்வா என நோக்குகையில் இணை நிகழ்வாக நின்று வாசகனின் உள்வாங்களுக்கு அர்த்தப்படும் பொழுது அது சில காலங்களிலேயே மறைந்து விடுகின்றது. ஆனால் பிரதியை எதிர்நிகழ்வா படைக்கப்படும் பொழுது அக்காலத்தில் அது நிராகாரிக்கப்படாலும் எதிர்கால வாசகனின் உள்வாங்களுக்கு புதிய புதிய பரிமாணத்தையும் வாழ்வியல் உடையதாகவும் அமைந்து விடுகின்றது. இதனை எல்லாக் காலங்களிலும் எல்லா இலக்கியங்களிலும் காண முடிகிறது.
திருக்குறள் எனும் பிரதியை வாசிப்புக்குப்படும்பொழுது அதன் எதிர்நிகழ்வை ஒவ்வொரு குறட்பாவிலும் காணமுடியும். இருப்பினும் படைப்பாளி தன் மன உணர்வை பிரதியின் கால நிகழ்வோடு பலமுறை சமரசம் செய்து கொள்ளவே முயன்றிருப்பதை அதனுடைய தடங்களைப் பல இடங்களிலும் பதிவும் செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
''புலவு நரறும் என் தலைதடவி,'' ''சிறுகட் பெரினே எம்கீயும் மன்னே, பெருகட் பெரினே யாம்பட தாம் மகிழ்ந்துன்னும் மன்னே'', ''கையும் காகம் தூக்கந் தூக்கும், ஆடியிற் பாவை போல'' என கள்ளுண்ணல், புலால் உண்ணல் போன்ற அன்றாட பழக்கவழக்கங்களையும், பரத்தையர் ஒழுக்கம் போன்ற நடைமுறையையும் தமிழரது வாழ்விலும் அதன் பிரதியான சங்க இலக்கிய நூல்கள் முழுவதும் காண முடிகிறது. அந்தப் பிரதிகளின் வழியாகத் தோன்றியதே திருக்குறள் எனும் பிரதி. மேலும், சமணம், பௌத்தம் கால் ஊன்றி இருந்த காலக் கட்டத்தில் புதிதாக வைதீக சமயம் தோன்றியபொழுது அதனை எதிர்த்துப் பிரதிகளைப் பதிவு செய்ய வேண்டிய தேவையும் அப்படிப் பதிவு செய்யும் பொழுது நிகழ்காலக்காரர்களின் வாழ்வோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவையும் அக்கால பிரதிக்கு அமைந்திருக்கும்.
ஆனால், திருக்குறள் பிரதியை அதனின் முரண்பட்ட எதிர்நிகழ்வாகக் காணமுடிகிறது.
புலால் உண்ணாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, சூது என்னும் பழைய மனித வாழ்க்கை நிகழ்வுகளைத் தனது பிரதியில் கடுமையாகவே சாடுகிறார்.
''தூஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்''
என கள் உண்பவரை இறந்தவருக்கு சமமான நிலையிலேயே வைத்து நோக்குகின்றார். குறிப்பாக, ''பிறப்பொக்கும்'' (972) ''மேற்பிறந்தா ராயினுங்'' (409) போன்ற குறப்பாக்கள் மனுவுக்கு எதிராக விடப்பட்ட சவாலாகவேத் தோன்றுகிறது.
''வள்ளுவப் பெண்ணிய'' நோக்கில் பிரதியை உள்வாங்கினால் சில முரண்பாடுகளும் அவிழ்க்கவியலாத முடிச்சுகளும் வாசகனுக்குத் தோன்றுகிறது. ஆனால், அவைகள் முரண்பாடுகளே அல்ல. ஆண் நோக்கு எழுத்தாளர்களிடமும் சிந்தனையாளர்களிடமும் உண்டு. ஒரு பிரதியின் மூலத்தை வாசகன் தன் உள்வாங்களுக்கு ஆட்படுத்தும் முன் பிரதியின் காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். குறிப்பாக, வரையறையற்ற புணர்ச்சிக் காலத்திலிருந்து வரைமுறையுடைய புணர்ச்சிக் காலத்திற்கு மாறியபொழுது ''குடும்பம்'' என்னும் கருத்தாக்கம் உருப்பெற்றது. அப்போது ஆண் தனது அதிகார எல்லையை விரிவுபடுத்திக் கொண்டான். அதனால் பெண் அடுத்த நிலைக்கு மாற்றப்பட்டாள் அல்லது தானாக ''மாறிக்கொண்டாள்'' குறிப்பாகத் ''தனி உடைமை'' என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டபொழுது வஞ்சிக்கப்பட்ட இனம் பெண் இனமே. இதனை, பல புராண காலக் கதைகளில் கண்கூடாகக் காண முடிகிறது.
இதே காலகட்டத்தில் உருவான திருக்குறள், அதற்கு நேர்மாறான கருத்தையே முன் வைக்கின்றது. ஆனால் அதன் உரையாசிரியர்கள் தங்களது காலத்தேவைக்கு அல்லது புரிதலுக்கு ஏற்ப மாறக் கருத்தையே கூறிவந்துள்ளனர்.
''பெற்றுமவற்றுள் யாமறிவதில்லை அறிவ றிந்த
மக்கட் பேறல்ல பிற'' - எனும்
குறளுக்கு ''அறிவறிந்த மக்கள்'' என்னும் தொடருக்கு உரையாசிரியர்கள் அறியனவற்றை அறிய பெண்களுக்கு உரிமையில்லை'' எனவே ''அறிவறிந்த மக்கள்'' என்பது ஆண்மக்கள் குறிக்கும் எனக் கூறுகின்றார். ஆனால், ''ஒருவன் அடையக்கூடியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பெறுவதைவிடச் சிறந்தொன்று இருப்பதாக தாம் அறியவில்லை'' என்றே கூறுகின்றனர். அதாவது பொதுவாக மக்கள் என்ற முறையிலேயே கூறுகின்றார்
''பிறன் பொருளாள் பெட்டெழும் பேதமை ஞாலத்து
அறப்பொருள் கண்டார் கண்இல்''
பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் இயல்புகள் அறிந்தவர்களிடத்து இல்லை என்னும் உரையாசிரியர்களின் விளக்கத்தில் அமையும் ''பிறன் பொருளாள்'' - என்னும் தொடர் பெண்ணை இரண்டாம் தரமாக ஒரு அஃறிணைப் பொருள்போல் ''பொருள்'' என்னும் நிலையில் வைத்து நோக்காமல் ''இல்லாள் இள்ளறத்தானுக்கு உறுதிப்பொருள்'' என்னும் நிலையிலேயே கொள்ள வேண்டும். தலைவனுக்குக் கிடைத்த பெரும்பொருள்'' (பெரும்புதையல்) என்றே உணர வேண்டும்.
''தெய்வம் தொழாள்'' என்னும் குறட்பாவில் சில உரையாசிரியர்கள் ''தெய்வத்தை தொழாதவளாய்த் தன் கணவனைத் தெய்வம் என நினைத்து அவனைத்தொழுது காலையில் துயில் எழுகின்றவள் பெய்யென்று சொல்ல மழைபெய்யும்'' என விளக்கம் தருகின்றனர். ''தொழாள்'' என்னும் சொல்லும் மண்டியிட்டு வணங்குதல் என்னும் பொருளில் அல்லாது கணவனை மனத்தால் போற்றுபவள் எனப் பொருள்படும். அதாவது உள்ளத்தால் அடங்கிப் போற்றுவதையே குறிக்கிறது. இதன் மூலம் அதன் எதிர்மறையான பொருளைப் பார்த்தால் ''ஒருவனுக்கு ஒருத்தி'' என்னும் குடும்ப கோட்பாட்டுணர்வே முன்னிற்கிறது..
''சிறை காக்கும் காப்பு'' என்பதில் ''சிறை'' என்னும் தொடர் பழைய மரபுகளிலும் பண்பாட்டிலும் அடைத்துவைத்துக் காத்தல் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய நிகழ்வு என்பதினை வலியுறுத்தவும். சுயவலிமை மிக்கவள் பெண். தன்மானம் மிக்கவள். அப்படிப்பட்ட பெண்ணுக்கு எதற்கு ''சிறை'' எனவும், பெண்களை வீட்டில் அடைப்பதால் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என நினைப்பது தவறாகும். நல்ல அறிவாலும் பண்பாலும் ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்வதே சரியான காப்பாகும் எனக் கூறுகின்றார்.
''மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்''
வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவு பெரும் பதவி உயர்வில் இருந்தாலும் மனைக்கு விளக்காகிய நற்பெண்டு இல்லையெனில் அவற்றால் எந்தபயனும் இல்லை எனக் கூறுகின்றார் இதன்சிறப்பினை ''மங்கலம் என்ப மனைமாட்சி (60)'' எத்துணைச் சிறப்புத் தருகின்றார்.
பொதுவாக, ''கற்பு'' என்னும் சிந்தனையை, ''பிறன்மனை நோக்காத பேறாண்மை கண்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு'' எனும் குறளில் போர் செய்கின்ற காலத்தில் வாழுகின்ற வீரர்களும், அவர்களுடைய பரத்தையார் ஒழுக்கமும் அனுமதிக்கப்பட்ட காலத்திலும் கூட அதன் எதிர்வினையாகவே இதனைப் பதிவு செய்கின்றார்.
இல்வாழ்க்கைக்கு அடுத்தபடியாக ''வாழ்க்கை துணை நலம்'' என்றே அதிகாரத்திற்குத் தலைப்பாகுகின்றார். ''துணை'' என்னும் சொல்லின் இணையான பொருளை ''பெரியாரைத் துணை கோடல்'' என்னும் அதிகார தலைப்பிலேயே ஆசிரியரின் சொல்லாடலை உணரமுடிகின்றது. ''துணை'' கொள்வதென்பது பெரும்பாலும் உயர்ந்தோர்களை அல்லது மதிக்கத்தக்க கூடியவர்களையோ அல்லது வணக்கத்தக்கக் கூடியவர்களையோ கொள்வது ஆகும். அதே தளத்தில் நின்றே வள்ளவனும் இச்சொல்லாடலை வாசகனுக்குப் புலப்படுத்தியிருக்க வேண்டும்.
''மக்கட்பேறு'' என்னும் அதிகாரத்தை உரையாசிரியர்களின் மேலாக்கில் பிரதியை வாசிக்காமல், மூல நூலின் மூலம் மறு வாசிப்புக்குட்படுத்தினால் இருவருக்கும் பொதுவான சிந்தனையே கொண்டுள்ளார் என உணரமுடிகிறது.
கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே சுவர்க்கம் அடைவாள், பெண்ணுக்கொன்று ''நோன்பு'' போன்ற தனியுடைமை இல்லை என்றும் மற்றும் துறவறம் மூலமே சொர்க்கம் எய்த முடியும் என்ற நிலையும் மனு கூறும் கருத்தினை மறுத்து இல்வாழ்க்கையில் இருந்து உரியமுறையில் வாழ்ந்தாலே துறவில் நிகரானது என்னும் சிந்தனையினையும் விதைக்கின்றார்.
''வரைவின் மகளிர்'' எனும் தொடரை ஒருவனுக்கு உரிமையாதலன்றி ஒழுக்க வரையயையின்றி வாழ்வோரைக் குறிக்கத் தொடரை பயன்படுத்தியுள்ளார். மேலும் இவ்வதிகாரத்தில் ''பண்பில் மகளிர்'', ''பொருள் பெண்டிர்'' ''மாயமகளிர்'' என்னும் தொடர்போன்ற ஒன்பதுத் தொடர்களை கையாளுகின்றார். ஒன்பது தொடருமே கடும் சொற்களாகவே உள்ளன.
சங்க இலக்கியம் குறிப்பாம் '' பரத்தை '' எனும் சொல்லாடலை எல்லாருமே கையாளவில்லை. அதற்கு நேர்மாறாக,
''பெண்ணிலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்டார்
நண்ணேன் பரத்த நின் மார்பு'' - என
''பரந்த'' என்னும் சொல்லை ஆண்மகனை நோக்கி உரைக்கின்றார். மேலும், மகளிரை நாடிச்சென்று உறவுகொள்ளும் நிலையில் மகளிரைப் பழிக்காமல் மாறாக ''நிறைநெஞ்சம் இல்லவர்'' ''திருநீக்கப்பட்டார்'' என்னும் தொடர்களில் ஆணை நோக்கி அவரது பழி நீள்கின்றது.
வள்ளுவப் பிரதியை புதிய புரிதலுக்கு உட்படுத்தும் சிலர் ''பெண்ணுரிமை'' மறுக்கப்பட்டிருக்கிறது என்ற நேர்க்குரலோடு தங்களது உரையினை நிகழ்த்துகின்றார். வேதம் கேட்கும் உரிமையும், பெண் துறவிகள் குறித்த சிந்தனையும் பெண்ணுக்கு இல்லை என்ற சிந்தனையினை விதைத்த காலத்தில், அதற்கு மாறான பெண்ணியச் சிந்தனையினை விதைத்திருக்கின்றார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெண்ணுக்குத் துறவு இல்லை என்ற காலத்திலும் பரத்தையர் குலப்பெண் துறவு மேற்கொண்டு புனித லட்சியத்தை வென்றாக நாம் உணரும் மணிமேகலை போலவும், ஒரு குலப்பெண் அரசவை படியேறி, வாதாடி வென்றதாக நாம் உணரும் சிலப்பதிகாரத்தைப் போலவும் இதுவும் அக்காலத்தில் மாற்றுக்காலக் கருத்தை விதைத்த புரட்சி செய்த ''வாழ்வு நூல்'' என்றே உணரமுடிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மறுவாசிப்புத் தளத்தில் - குறள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - என்னும், எனும், பிரதியை, அல்லது, பெண், இல்லை, கூறுகின்றார், துணை, வேண்டும், பிரதியின், திருக்குறள், என்றே, முடிகிறது, பொருள், மக்கள், எனக், உரையாசிரியர்கள், சிறை, பதிவு, பழைய, வைத்து, முடியும், உள்வாங்களுக்கு, பொழுது, வாழ்க்கை, மேலும், அதற்கு