முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » தமிழிசை மீட்ட சுந்தரப்பாணர்
இலக்கியக் கட்டுரைகள் - தமிழிசை மீட்ட சுந்தரப்பாணர்
- வே.மு. பொதிய வெற்பன்
கலைஞர்களையும் ஆய்வாளர்களையும் பொறுத்தவரைக்கும் ஒருவருக்கு எதிராய் வேலை பார்ப்பவர் மற்றவர் என்று சொல்வார்கள். கலை - இலக்கிய வரலாற்றில் இதற்கு மாறாக, கலைத்திறமும் புலமைநெறியும் தலை மயங்கி ஒரு சேர இயங்கிய கலை ஆளுமைகள் அபூர்வமாய் தான் காணக் கிடைக்கின்றனர். இந்த வகையில் கொடுப்பினையாக நமக்கு வாய்த்தவர் முத்தமிழ் அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார். தமிழிசைச் களத்தில், பாதங்கள் மிதியாத தளங்களில், கன்னிச் சுவடுகள் பதித்து, ஒரு தனிப் பயணியாய், புதுப் பாதைகள் அமைத்த பொன்னேருழவர் அவர். தமிழிசையைப் பண்முறை தழுவிய திருமுறை இசை, பழந்தமிழ் இலக்கிய இசை, பாரம்பரிய நாட்டார் இசை என்று மீட்டெடுத்த தன்னேரிலாக் கலைப் பேரொளி. ஜிப்பா, கடுக்கன் பூண்ட செவி, கழுத்தில் கட்டிய உத்திராட்சம், நீறு பூசிய நெற்றி, அம்மைத் தழும்பேறிய முகம், அசிரத்தையாக உடுத்திய நான்கு முழு வேட்டி - இத்தகைய கோலத்தில், வந்திறங்கிய ஊரில் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, எந்த ஊர் நிகழ்வுக்கும் வந்து சேர்வார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். துளி கூட பந்தா அவரிடம் இருக்காது.
திருவாரூர்ப்பாணி எனும் தொல்லிசை உயர்தனிச் செவ்வியலில் திகழ்ந்தமையால் ''தென்கை உயர்தனிச் செவ்விசைப் புலவர்'' எனவும், பாடல் வல்ல பாணராய் ''ஏழிசைத் தலைமகன்'' எனவும், தேவாரம் முதலான பண்முறைகளைத் தொடர்ந்து ஆராய்ந்ததால் ''பண்ணாராய்ச்சி வித்தகர்'' எனவும் பன்னிரு திருமறைப் பயிற்சி, பெரிய புராணத் தொடர் சொற்பொழிவு ஆகியவற்றுக்காக ''திருமறைச் செல்வர்'' எனவும் அவர் போற்றப்பட்டார். ஆபிரகாம் பண்டிதரின் ''கருணாமிர்த சாகரம், பேரா. சாம்பமூர்த்தியின் ''இசை நூல்'' விபுலானந்தரின் ''யாழ்நூல்'' மற்றும் செந்தமிழ், தமிழ்ப் பொழில் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், பாவாணரின் ''செந்தமிழ்ச் செல்வி'' வேர்ச்சொல் கட்டுரைகள் ஆகியவைதான் சுந்தரேசனாரின் இசை குறித்த ஆராய்ச்சிகளுக்கு உந்து விசை. தொடர்ந்து பழந்தமிழ் இலக்கிய, இலக்கணப் பயிற்சி, திருவனந்தபுரம், இலக்குமணப்பிள்ளை, கந்தசாமி தேசிகர், வேப்பத்தூர் பாலசுப்பிரமணியர், குடந்தை ராமச்சந்திரர் ஆகியோரிடம் பயின்ற இசைப் பயிற்சிகள் உரமூட்டி வழிகாட்டின. சுந்தரேசனாரின் இசைத் தமிழ் சொற்கள் குறித்த ஆராய்ச்சிக்குப் பாவாணரின் வேர்ச்சொல் வழிமுறையே வழி வகுத்திருக்கிறது. ''பண்டைய இசைத் தமிழ்ச் சொற்களை ஆராயப் புகுகின்ற எனக்கு பாவாணர் அவர்கள் கண்டுணர்த்தும் வேர்ச்சொல் வழிமுறையே பெரிதும் பேருதவியாக இருக்கிறது'' என அவரே தம் ''வேந்தம்'' இதழ் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1947-ல் திருக்கொள்ளம்புதூரில் ''யாழ்நூல்'' அறங்கேற்று விழா நடைபெற்றது. அவ்விழாவின் சிறப்புச் சொற்பொழிவாற்றினார் சுந்தரேசனார். அவரது உரை விபுலானந்தரை மிகவும் கவர்ந்துவிட்டது. 103 பண்களின் பெயர்களை நிகண்டு நூல்களிலிருந்து செய்துவிட்டோம். அவற்றுக்குரிய ஏற்ற, இறக்க இசை நிலைகளையும் கணித முறையில் நிறுவி விட்டோம். ஆனால், எப்பெயருக்கு எவ்வுரு என்பதை நூல் அளவை இல்லாமல் எம்மால் செய்ய இயலவில்லை. இனி அப்பணியை முறையாக இசை பயின்ற சுந்தரேசனாரிடமே விடுகிறேன்'' என அத்தருணத்திலேயே ஒப்படைத்தாராம்.
1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் இசை ஆசிரியராகவும், 1952 முதல் 1955 வரை அண்ணாமலை பல்கலையில் தேவார இசை ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் சிலம்பின் வரிப்பாடல்கள், ஆய்ச்சியர் குரவை முதலானவற்றைப் பண்முறை வழுவாமல் பாடுவதும், அரங்கேற்றுக் காதையின் திட்ப நுட்பங்களைத் தெளிவாக விளக்கிப் பாடம் நடத்துவதும் அப்படியொரு அழகுடன் இருக்கும் என்று சொல்வார்கள். அக்காலத்தில், சிலம்பில், அரங்கேற்றுக் காதைப் பகுதியை பாடமாக நடத்த ஆசிரியர் எவருமில்லாததால், அப்பகுதி நீங்கலாகவே புலவர் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என்பதை நோக்கும் போது சுந்தரேசனாரின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. கற்றோர் அவை கல்லூரி மாணவர்களிடையே கலாட்டாக் கேளிக்கை மன்றம், கல்லா மாந்தர் சிற்றூர் சபை..... என எல்லா அவைகளிலும் அவையறிந்து பாடும் அவரது கலையால் கச்சேரி, களை கட்டிவிடும்.
முதல் ஐந்திசைப் பண்கள், முதல் ஐந்திசை நிரல், முதல் ஆறிசை நிரல், முதல் ஏழிசை நிரல், இசைத் தமிழ் பயிற்சி நூல் என சுந்தரேசனாரின் சில நூல்களே வெளியாகியுள்ளன. இன்னமும் வெளிவராத அவரது நூல்களின் பட்டியல் மிகப் பெரியது. ''நித்திலம்'' பத்திரிகையில் ''காவியங்களில் இசை நாடகம்'' ''இசைத் தமிழ் நுணுக்கம்'' என்ற தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். ''இசையெனப்படுவது இயம்புங்காலை / ஒத்துணர் ஒலியின் நீட்சியதாகும்'' என இசைக்கு - இலக்கணம் வகுத்தது அவரது ''இசைத் தமிழ் நூற்பா'' தொடர்ந்து இசைக் கருவிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ரீதியிலேயே அவர் நாட்டார் வழக்காற்று இசைக் கருவிகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்த முயற்சித்தார். இப்பணி நிறைவுறும் முன்பே நின்று போக நேர்ந்தது நமக்குப் பேரிழப்பே. திருக்குடந்தைத் திருமுறை மன்றம். ஆடுதுறை அப்பர் அருள் நெறிக் கழகம், மயிலாடுதுறை தெய்வத் தமிழ் மன்றம்... முதலான அமைப்புகளே சுந்தரேசனாரின், இசைப் பொழிவுக்கு மகாலிங்கம், அவரைப் போற்றி உதவி வந்தது மட்டுமல்லாமல் அவரது காலத்துக்குப் பிறகும் அவரது துணைவியார் சொர்ணத்தம்மாளுக்கு மாதாமாதம் உதவி வந்தார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ.சுப. மாணிக்கனார் துணைவேந்தராயிருந்த போது ''தமிழியற் புல''த்தில் ''இளங்கோவடிகள் இசைத்திறம்'' பற்றிய ஆய்வுப் பணியில் சுந்தரேசனாரை ஆட்படுத்தினார்.
மதுரை பல்கலைக்கழகம் சென்றபோது அவரைக் கண்ணிமை போல் காத்து நின்ற, அவரது துணைவியாரின் அரவணைப்பில் இருந்து, சுந்தரேசனார் தனித்திருக்க நேர்ந்தது. அச்சூழலில் அவரை ஆட்கொண்ட மஞ்சள்காமாலை அவர் குருதியில் கலந்து, அவரை நாம் இழக்கும்படி செய்துவிட்டது. அவரது இசை வாரிசுகளான இலிங்கம் சகோதரர்கள் திருவத்துரை லால்குடியில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் அவருக்கு விழா எடுத்து துறைபோன கலைஞர்களுக்கு ''பெரும்பாண நம்பி", ''பெரும்பாண நங்கை'' என விருதுகள் வழங்கி வருகின்றனர். அவரது இசை ஆய்வின் அடுத்த பரிமாணமாக முனைவர் வீ.ப.கா. சுந்தரத்தின் இசைத் தமிழாய்வுப் பணி தொடர்ந்தது. சுந்தரேசனாரின் பண்ணாய்வுப் பணிகள் குறித்த ஆய்வினை தமிழ்ப் பல்கலைக் கழக இசைப் பேராசிரியர் அங்கையற்கண்ணி மேற்கொண்டுள்ளார். அவரது இசையை பாண்டிச்சேரி ''பிரஞ்சு இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டாலஜிக் காரர்கள் பதிவு செய்திருப்பதாகக் கேள்வி. ப. சோழநாடன் பதித்துள்ள சுந்தரேசனால் குரலிசை குறுந்தகட்டை, ''சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை'' வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அவரது கட்டுரைகளையும் தாமரைச் செல்வி பதிப்பகம் வெளியிட இருக்கிறது. இவையெல்லாம் கேட்க சந்தோசம் தரும் செய்திகள்.
இப்போதும் பூம்புகாரில் சித்ரா பௌர்ணமி முழுநிலவில் சுந்தரேசனார் மீட்டிவிட்ட திங்கண் மாலை ரீங்கரிக்கின்றது. ஆரூர்ப்பாணி வழிவந்ததே ஆனபோதிலும் அவரது சுயம் சுடரும் தன்மைமிக்க சுந்தரப்பாணியினை நாம் இனிகுடந்தைப் பாணி என்றே வழங்கலாம்.
நன்றி : குமுதம் தீராநதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழிசை மீட்ட சுந்தரப்பாணர் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அவரது, இசைத், சுந்தரேசனாரின், தமிழ், அவர், சுந்தரேசனார், எனவும், இசைப், மன்றம், நிரல், குறித்த, கட்டுரைகள், தொடர்ந்து, இலக்கிய, பயிற்சி, நூல், சொல்வார்கள், வேர்ச்சொல்