முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » அறிஞர் டேவிட் பாக்கியமுத்து
இலக்கியக் கட்டுரைகள் - அறிஞர் டேவிட் பாக்கியமுத்து
- ஜே.ஆர்.வி. எட்வர்ட்
டேவிட் பாக்கியமுத்து என்பது இலக்கிய உலகில் பிரபலமாக இருந்திருக்க வேண்டிய பெயர். அவ்வளவு காரியங்கள் அவர் செய்திருக்கிறார். பத்திரிகை மற்றும் இலக்கிய கூட்டங்கள் நடத்தியது சார்ந்த அவரது செயல்பாடுகளும் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவர் பிரபலமாக இல்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அவரை மறைந்திருந்து செயலாற்றிய சாதனையாளர்களில் ஒருவர் என்பதா அல்லது புறக்கணிக்கப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர் என்பதா? இதழியல் - பதிப்புத்துறை வரலாறு மற்றும் மிஷனெரி வரலாறு ஆகியவற்றில் அவர் ஒரு சிறந்த அறிஞராயிருந்தார். 20 - 6 - 2004 ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலி ஹோட்டல் ஆர்யாஸில் நடைபெற்ற டேவிட் பாக்கியமுத்துவின் புகழ் அஞ்சலிக் கூட்டத்துக்கு ''யாதுமாகி'' லெனா குமாரிடமிருந்து வந்திருந்த அழைப்பிதழ் ஒரு கணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் இறந்துவிட்ட செய்தி அதுவரை என்னை எட்டியிருக்கவில்லை. அவர் முடிக்கவேண்டிய சில முக்கியமான பணிகள் எஞ்சியிருந்தன. இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்து அப்பணிகளை முடித்துவிடுவார் என நாம் நம்பியிருந்தேன். அவரது மரணச் செய்தி என் நம்பிக்கையில் விழுந்த இடியாகிவிட்டது.
1980 - களின் பிற்பகுதியில் பாக்கியமுத்து தம்பதியர் ஆரம்பித்து நடத்திய ''நண்பர் வட்டம்'' என்ற மாத இதழ் இலக்கியத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தவில்லைதான் ஆனால் அவ்விதழின் சாதனை மகத்தானது. நானறிந்தவரை, தமிழில் (தொடர்ந்து ஏழு ஆண்டுகள்) மாத இதழாய் வெளிவந்த முதல் இலக்கியச் சிற்றிதழ் நண்பர் வட்டம்'' தான். மேலும், பல படைப்பாளிகள் உருவாக அவ்விதழ் காரணமாயிருந்திருக்கிறது.
வானவில் இலக்கிய வட்டம் சார்பில் 2000 -த்தில் ''நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்'' என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் நடத்தப்பட்ட இருநாள் கருத்தரங்குக்கு பாக்கியமுத்துவும் அழைக்கப்பட்டிருந்தார். பாக்கியமுத்துவும், சரோஜினி பாக்கியமுத்துவும் தம்பதியராக வந்திருந்தனர். ''இந்தக் கிழடுகளை யெல்லாம் எதற்காக அழைத்தார்கள்?'' என்று துடிப்புமிக்க இளம் பங்கேற்பாளர் ஒருவர் தனது நண்பனிடம் வினவியது என் காதில் விழுந்தது. பாக்கியமுத்து தம்பதியரைப் பார்த்த போதெல்லாம் சிலர் எள்ளல் செய்வதையும் கவனித்தேன். ஆனால் கட்டுரை தயார் செய்துவந்து வாசித்த மிகச்சில கட்டுரையாளர்களில் பாக்கியமுத்துவும் ஒருவர். கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பை நூலாக வெளியிடும் எண்ணத்தை சொல்லிக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தி ஒரு மாதத்திற்குள் அனுப்புவதாக உறுதி அளித்தார். இருபதாவது நாள் தபாலில் வந்து சேர்ந்தது கட்டுரை. அப்போது அவருக்கு வயது 77. ஆனாலும் இளைஞனாயிருந்தார்.
1949 முதல் 1968 வரை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்பிக்கும் பணியினை ஆற்றிய டேவிட் பாக்கியமுத்து 1968 முதல் 1981 வரை சென்னை கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளராகவும் பதிப்பகச் செயலாளராகவும் 1981 முதல் 1984 வரை கௌஹாத்தியிலுள்ள கிறிஸ்தவ இலக்கிய சங்க மையத்தின் இயக்குநராகவும் சிறப்புற பணியாற்றியிருக்கிறார். கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் இன்றைய சீரழிந்த நிலையைப் பார்க்கும்போது தான் டேவிட் பாக்கியமுத்து பணி எவ்வளவு மகத்தானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (சி.எல்.எஸ்) கிறிஸ்தவ நூல்களை வெளியிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல; மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ நிறுவனம் என்ற தகவலை அவர் வாயிலிருந்து கேட்டபோது வியப்பாய் இருந்தது. சிலர் அதனை ஒரு குடும்ப நிறுவனமாகச் சுருக்கி சீரழித்திருப்பதை எண்ணி அவர் மனசு விம்மினார். விரைவில் சி.எல்.எஸ் வரலாற்றினை எழுதவுள்ளதாக அவர் கூறியது மனதுக்கு ஆறுதல் தந்தது. தேவையான அனைத்து தகவல்களும் குறிப்புகளும் கைவசம் இருப்பதாகச் சொன்னார். அந்தப் பணியினை ஆரம்பிக்கும் முன்னரே அவரது உலக வாழ்வுமுடிந்து போயிற்று.
டேவிட் பாக்கியமுத்து, சி.எல்.எஸ்.ஸில் பணியாற்றிய காலத்தை அதன் பொற்காலம் எனலாம். சி.எல்.எஸ் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் நடத்தினார். தமிழின் அன்றைய குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலரையும் அழைத்து கட்டுரை வாசிக்கச் செய்து அவற்றைத் தொகுத்து வெளியிட்டார். அன்றைய சூழலில் இத் தொகுப்புகள் குறிப்பிடத் தக்கவை. இலக்கியம், சமூகம் மற்றும் அறிவியல் சார்ந்த பல நூல்கள் இவர் காலத்தில் சி..எல்.எஸ் வெளியீடுகளாக வந்தன. சுருங்கிப் போயிருந்த சி.எல்.எஸ் - ஸின் எல்லைகளை விசாலமாக்கிய இவரால், பிற்காலத்தில் மீண்டும் அது சுருங்கி, முடங்கிப் போனதைச் சகித்துக்கொள்ள முடியாதது - புரிந்துகொள்ளக் கூடியது தான்.
டேவிட் பாக்கியமுத்து ஒரு தீவிரமான கிறிஸ்தவர் தான். திருநெல்வேலி சி.எஸ்.ஐ. பேராய உறுப்பினர். (கௌஹாத்தியில் பணியாற்றிய நாள்களில் சி.எஸ்.ஐ. உறுப்பினராக இருந்திருக்கிறார்) ஆனால் கடுமையான ஒரு விமர்சகரும் கூட போதகர்களைப் பற்றிய அவரது ஒருவரி விமர்சனம் இது: ''அங்கி, சகல பாவங்களையும் மறைக்கும்.'' நெல்லைத் திருமண்டலம் சார்ந்த பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்திருக்கிறார். ''திருநெல்வேலிக்கு கிறிஸ்துவம் வந்தது, சென்னைக்கு கிறிஸ்தவம் வந்தது'' என்று நூல்கள் எழுதியிருக்கிறார். இருந்தும் கூட திருநெல்வேலி பேராயம் அவருக்கு உரிய கவுரவம் அளித்ததாகத் தெரியவில்லை. அவர் மறைவு குறித்து சலனம் அடைந்ததாகவும் தெரியவில்லை.
டேவிட் பாக்கியமுத்து ஒரு சிறந்த நாடக எழுத்தாளர் என்று அவரது துணைவியார் சரோஜினி பாக்கிய முத்து தெரிவித்தார். 25 தமிழ் நாடகங்களையும் 3 ஆங்கில நாடகங்களையும் அவர் எழுதியிருக்கிறாராம். அவரது நாடகங்கள் பல மேடையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பல வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. அவர் எழுதிய நாடகங்களில் ''வழிகாட்டி'' மிகவும் சிறப்பானது என்பது திருமதியாரின் கருத்து. பாக்கியமுத்து அவர்களின் இந்த பரிமாணம் வெளிச்சத்துக்கு வராத ஒன்று.
டேவிட் பாக்கியமுத்து தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சிறந்த புலமைமிக்கவர். அவர் தனியாகவும், துணைவியாருடன் சேர்ந்தும் செய்திருக்கிற மொழி பெயர்ப்புப் பணிகள் மகத்தானவை. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ''புதியதோர் சமுதாயம்'' தொகுப்பும்; ஏபில் அவர்களின் ''இந்திய அரசும் அரசியலும் நூலும் இவர்தம் மொழிபெயர்ப்புத் திறனுக்கு சான்றாக விளங்குபவை. இறுதியாக துணைவியாரோடு சேர்ந்து ஓர் ஆங்கிலப் பதிப்பகத்துக்காக 2000 பக்க சவரிராய பிள்ளையின் டைரியினை (1836 - 1874) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முடித்துள்ளார். மனைவி, தன் பெயரின் பின்னால் கணவனின் பெயரை வாலாக இணைத்துக் கொள்வதை பிற்போக்கான செயலாக வருணிப்பவர்களுடன் எனக்கு முழு உடன்பாடுதான். ஆனால் கணவன் பெயரை தம் பெயருடன் இணைத்துக் கொண்டதை அர்த்தபூர்வமாக்கிய சில விதிவிலக்குகளும் உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு ஜோடி ஹெப்சியா - ஜேசுதாசன், இன்னொரு ஜோடி சரோஜினி - பாக்கியமுத்து. சமூக வாழ்வில் மட்டுமல்லாது இலக்கிய வாழ்விலும் இணைந்து செயலாற்றிய இவர்கள் பணி மகத்துவம் நிறைந்தவை.
மிகக் குறைவாக விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு அதிகமாக எழுதுகிற சிலரைப் பார்த்திருக்கிறேன். மிக அதிகம் தெரிந்து வைத்துக்கொண்டு குறைவாக எழுதிய, எழுதுகிற சிலரையும் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவர் டேவிட் பாக்கியமுத்து. எழுதுகிற விஷயத்தில் ஆழ்ந்த புலமையும் தெளிவும் அவருக்கு இருந்தது. கொஞ்சம் அதிகமாக அவர் எழுதியிருக்கலாமே என்று மனசு குறுகுறுக்கிறது. சிறகுகள் பத்திரிகை நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் தான் ''திருநெல்வேலிக்கு கிறிஸ்தவம் வந்தது '' என்ற அபூர்வமான நூல் நமக்குக் கிடைத்திருக்கிறது. பாக்கியமுத்து தெரிந்து வைத்திருந்த வேறு பல அரிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்பு இப்போது சாத்தியமற்றதாகி விட்டது. அவர் சேகரித்து வைத்திருந்த பல நுண் வரலாறுகள் அவரோடு கூட புதையுண்டு போயுள்ளன.
நன்றி: தீராநதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிஞர் டேவிட் பாக்கியமுத்து - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அவர், பாக்கியமுத்து, டேவிட், இலக்கிய, கிறிஸ்தவ, அவரது, தான், ஒருவர், பாக்கியமுத்துவும், சார்ந்த, அவருக்கு, கட்டுரை, தெரிந்து, எழுதுகிற, சரோஜினி, வந்தது, வட்டம், தெரியவில்லை, எழுதிய, சிறந்த, திருநெல்வேலி, தமிழ், இலக்கியம்