முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » மிருகத்தின் வாயினுள்... விந்தைக் கலைஞன்
இலக்கியக் கட்டுரைகள் - மிருகத்தின் வாயினுள்... விந்தைக் கலைஞன்
- கே. ராமானுஜம்
விந்தைப் புனைவுலக மேதை கட்டுக் கடங்கா உத்வேகத்தோடு படைக்கப்பட்ட இவருடைய தைல நீர்வண்ண, மெல்லிய கோட்டிலான படைப்புகள் தனித்துவமானவை; பிரத்யேகமானவை. அவை, உள்ளார்ந்த உலகின் வெளிப்பாடுகள், மிகமோசமாக அலைக்கழிக்கப்பட்ட உலைச்சலுக்குள்ளான ஒரு கலை மனம், தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக் கொண்டு அதில் குதூலித்திருக்க விழைந்த தகிப்பிலிருந்து பிறந்தவை. எனினும் மன உலைச்சலின் அழுத்தததில், மிகுந்த வேதனையில் தன் 32 - ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் ராமானுஜம்.
சென்னை திருவல்லிக்கேணியில் 1941-ஆம் ஆண்டு அய்யங்கார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராமானுஜம் பள்ளிப் படிப்பை முடிக்காதவர். 7 அல்லது 8 ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அதேசமயம் ஓவியத்தில் சுயமான ஒரு வெளிப்பாட்டுத் திறன் அவரிடம் இருந்திருக்கிறது. அவரிடம் மிகுந்த அனுசரணை காட்டிய அவருடைய அப்பா 1960 -ஆம் ஆண்டு, 18-ஆவது வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் அவரைச் சேர்த்திருக்கிறார். வெளியுலகோடு சகஜமான உறவுகொள்வதற்குப் போதுமான மன முதிர்ச்சி இல்லாதவராகவே ராமானுஜம் இரு)ந்திருக்கிறார். '' அரைக் கிறுக்கு'' என்ற படிமம் அவரைக் கடைசிவரை சூழ்ந்து கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது. தன் இருப்பில் பெருமிதம் கொள்வதற்கான ஒரே வழியாகக் கலை வெளிதான் அவருக்கு இருந்திருக்கிறது. சக ஓவிய நண்பர்கள் அவ்வப்போது கேலி செய்து குதூகலித்த போதிலும், அவருடைய படைப்பு வெறியும் திறனும் அவர்மீது பிரமிப்பும் நட்பும் கொள்ள வைத்திருக்கிறது.
சென்னை ஓவியக்கல்லூரியில் ராமானுஜம் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருடைய தந்தை இறந்து விட்டார். அவர் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு இது. அவருடைய சகோதரர்களும் அம்மாவும் அவருக்கு அனுசரணையாக இருக்கவில்லை என்று தெரிகிறது அவருடைய புகைப்பழக்கமும் அசைவ உணவுப் பழக்கமும் ஆசார அய்யங்கார் குடும்பத்தினரால் சகித்துக்கொள்ள முடியாமல் போய் அவர்மீது வெறுப்புக் கொள்ள வைத்திருக்கிறது. அவருடைய சகோதரர்கள் அவரை அடித்து வதைத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ராமானுஜம் ஓவியக்கல்லூரி வளாகத்திலும், சோழ மண்டல வளாகத்திலும், நடைபாதைகளிலும், கல்லுரிக்கு அருகிலுள்ள சர்ச்சின் முன்பகுதியிலுள்ள பூங்காவிலும் தன் பொழுதைக் கழித்திருக்கிறார். இவ்விடங்களிலும் அவரைச்சுற்றிக் கேலியும் கிண்டலும் சூழ்ந்திருந்த போதிலும் படைப்புலகில் தஞ்சம் புகுந்து எக்களிப்பு கொள்ள இவை இணக்கமான இடமாக இருந்திருக்கின்றன. கேலி, கிண்டலைக் கடந்த அனுசரணையும் ஓவிய நண்பர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. சித்திரங்கள் வரைவதற்கென்று பொருட்கள் வாங்க இயலாத பொருளாதார நெருக்கடியிலேயே அவர் பெரும்பாலும் இருந்திருக்கிறார்.கல்லூரியில் சக மாணவர்களிடம் 5 ரூபாய்க்கு தன் சித்திரங்களை விற்று நாட்களை நகர்த்தியிருக்கிறார். கிடைக்கும் தாள்களின் வெற்றிடங்களிலெல்லாம் சித்திரம் வரைந்திருக்கிறார். 1964-ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தார்.
ராமானுஜத்தின் தோற்றப் பொலிவு சித்திரக்காரர்களுக்கு உருவப் படம் வரைவதற்கான உத்வேகமூட்டக் கூடியது. ஆதிமூலம் பலமுறை கல்லூரி வளாகத்திலும் சோழ மண்டலத்திலும் அவரை மாடலாக இருக்கச் செய்து உருவப் படங்கள் வரைந்திருக்கிறார். ஆதிமூலம் ஓவியக் கல்லூரியில் ராமானுஜத்துக்கு 2 வருடம் ஜுனியர் என்றபோதும் வயதில் சில வருடங்கள் மூத்தவர். அவ்வப்போது வரைவதற்கான பொருள்களும் வசதியும் ராமானுஜத்துக்குச் செய்து கொடுத்திருக்கிறார்.
சென்னை ஓவியக்கல்லூரியில் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டாண்டுகள் (1962-64) தேசியக் கல்வியாளர் (National Scholar) எனும் அந்தஸ்தும் அதற்கான உதவித் தொகையும் கிடைத்தது. 1965-இல் லண்டனில் நடைபெற்ற குடியரசு நாடுகள் கலைக் கண்காட்சி, 1972-இல் புது டில்லியிலும், 73-இல் பூனாவிலும் நடைபெற்ற சோழ மண்டலப் படைப்பாளிகள் கண்காட்சி, 1972-இல் சென்னையிலும் பம்பாயிலும் நடைபெற்ற தற்கால மினியேச்சர் கண்காட்சிகளில் இவருடைய படைப்புகள் இவர் வாழ்ந்த காலத்தில் இடம் பெற்றன. இவர் மறைவுக்குப் பின். நியூயார்க்கில் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய விழாவின்போது அமைந்த கண்காட்சியில் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றன. சென்னை ஐந்து நட்சத்திர கன்னிமாரா ஹோட்டலில் இவர் மிகப் பெரிய மியூரலை வடிவமைத்திருக்கிறார். 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு லலித் கலா அகாதமி விருது பெற்றார்.
அப்போது கல்லூரி முதல்வராக இருந்த கே.சி.எஸ். பணிக்கரின் அரவணைப்பும் ஆதரவும் இவருக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன. ராமானுஜத்தின் கலைத்திறன் மீது பணிக்கர் அபார நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார். விந்தைக் கதைத் தன்மையிலான இவருடைய ஓவியங்கள் பலவற்றுக்கும், ராமானுஜம் தமிழில் சொல்ல பணிக்கர்தான் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறார். கவித்துவ வாக்கியங்களாக தலைப்புகள் அமைந்திருக்கும் உதாரணத்திற்கு சில:
''அவளுடைய புகழுக்காக நான் பிரும்மாண்டமான மாளிகைகள் கட்டினேன்; அவற்றின் மாடங்களிலிருந்து பூமியின் திராட்சைப் கொடிகள் வளர்ந்து வானத்தை எட்டுகின்றன''.
''மிருகத்தின் வாயினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்''
''காலம் உறைந்துவிட்டது; எங்கள் காதலால் அது நிரம்பியிருக்கிறது :
தாமரைப் போன்ற ஒரு மிருதுவான கை ஆதாரமாக இருந்து என்னை நட்சத்திரங்களுக்கு நடுவில் உயர்த்துகிறது''
''நான் அவளுடைய உள்ளங்க€யில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்: கொடிகள் படர்ந்து புகலிடமளிக்கின்றன''.
பெண்துனை மீதான இயல்பான ஏக்கம் காரணமாகத் திருமணம் செய்ய விழைந்து ஒருமுறை தினத்தந்தியில் மணமகள் தேவையென விளம்பரம் செய்திருக்கிறார். ஆசை ஈடேறவில்லை. தீராத் தவிப்புகளிலிருந்தும் உலைச்சல்களிலிருந்தும் விடைபெற்றுக்கொள்ளும் வகையில் 1973-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம்தேதி, சோழ மண்டலத்தில் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராமானுஜத்தின் படைப்புகள் மீது என் கவனம் பதிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான். 1995- இறுதியில் அல்லது 96-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் சென்னை அலெயென்ஸ் ஃபிரான்சையிஸில் நடைபெற்ற டக்ளஸின் கண்காட்சி என்னைப் பெரிதும் ஈர்த்தது. தமிழகச் சூழலில் இன்றைய மிக முக்கியமான ஓவியக் கலைஞன் டக்ளஸ் தான் என்ற மனப்பதிவு அப்போது ஏற்பட்டது. பிடிபடாப் புதிர்ப் பிரதேசப் புனைவுலகம் டக்ளஸினுடையது. இதனைத் தொடர்ந்து டக்ளஸ் பற்றி அரியும் ஆர்வம் மேலிட்டது. ராமானுஜத்தின் பாதிப்பால் உருவாகிப் பின் தனித்துவமான ஆளுமை பெற்றவர் டக்ளஸ் என்பது தெரிய வந்தது. இதற்கிடையே ராமானுஜத்தின் ஓரிரு ஓவியங்கள் பார்க்கக் கிடைத்தன. ராமானுஜத்ததின் விந்தைப் புனைவுலகும் டக்ளஸின் புதிர்ப் புனைவுலகும் ஓருலகின் இருவேறு சாளரங்கள் என உணர முடிந்தது.
ஒரு சந்திப்பின் போது டக்ளஸ், ராமானுஜத்தின் சில ஓவியங்கள் இடம்பெற்ற ஒரு புத்ககத்தைக் கொடுத்ததோடு ராமானுஜத்தின் புகைடபடமும் தந்தார். அப்போது டக்ளஸ், ''ராமானுஜத்தைத் தெரியப்படுத்துங்கள். அறியப்பட வேண்டிய மேதை அவர்தான்'' என்றார் . இதனையடுத்தே ராமானுஜம் மீதான ஆர்வம் என்னுள் கிளர்ந்தது.
ராமானுஜம் பற்றி நவின கலை விமர்சகர்களில் முக்கியமானவரான ஜோசப் ஜேம்ஸ் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். டக்ளஸின் ஓவியங்கள் அடங்கிய சிறு புத்தகத்துக்கு ஜோசப் ஜேம்ஸ், எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து ஒரு சிறு பகுதியைத் தருவது ராமானுஜத்துக்கும் டக்ளஸ•க்கும் இடையேயான கலை உறவையும் ராமானுஜத்தின் ஓவியப் பாங்கையும் புரிந்து கொள்ள உதவும்.
ராமானுஜத்தின் புனைவை அவரின் தனிப்பட்ட புராணங்கள் (private Mythology) என்று கருதலாம்.
இப்புனைவுலகில், வெங்காய மாடங்களும், கருடச் சிறகுகளுடனான உருவங்களும் கொண்ட ஒரு சிறிய நகரில் குள்ள உருவத்தோடும் தலையில் தொப்பியோடும் தோல் பவனி வருபவராகத் தள்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் ராமானுஜம்.
தன்னுடைய எல்லாச் சித்திரங்களிலும் ராமானுஜம் தன்னை ஒரு பாத்திரமாக்கி இருந்கிறார். எல்லா ஓவியங்களிலும் தொப்பி அணிந்து அவர் படைக்கும் விந்தை உலகில் ஒரு பாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தி, தமிழ்த் திரைப்படக் கனவுக் காட்சிகளும் மாயாஜாலத் திரைப் படங்களும் இவரை வெகுவாகப் ஆகர்ஷித்திருக்கின்றன. எனினும், பித்த நிலையில் இவர் உருவாக்கிய மாயாஜாலக் கற்பனைகள் அபூர்வமான ஓவியத் தன்மையோடு புனைவுக் கோலங்கள் கொண்டிருக்கின்றன.
ஓவியங்களுக்கு அறிமுகமற்ற கண்களைக் கூட தம் வசம் ஈர்க்கக் கூடிய கவித்துவமான விநோத பிராந்தியம் இவருடையது. கற்பனையின் அற்புதமும் விந்தைப் புனைவின் அழகும், அபாரமான கலைநுட்பத்திறனும் ஓவிய வெளியில் முயங்கியிருப்பதால் படைப்புகள் பெற்றிருக்கும் வசீகரமிது.
அவருடைய முடிவடையாத கடைசி ஓவியத்தில் அவர் தன் படைப்பின் திசையை மாற்ற விழைந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அவ்வோவியத்தில் ஒரு தாயின் உடலில் தன் தலையைப் பொருத்தியிருக்கிறார்.
இவருடைய சித்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும் ஜோசப் ஜேம்ஸ், ''மிக நெருக்கமாக இழையூட்டப்பட்ட ராமானுஜத்தின் படைப்புகள், ஒரு விசேஷ வெட்டவெளி அமைப்பைக் கொண்டிருக்கின்றன. எவ்விதக் கட்டமைப்போ, சட்டகமோ இல்லாதது அது. அதன் கூறுகள், மகாபலிபுரத்தின் புரசித்திபெற்ற ''அர்ச்சுனன்தபஸ்'' கதைச் சிற்பத்தில் அற்புதமாக உருவாகியிருப்பதைப் போன்று எல்லைகளற்ற வெளியில் அமைகின்றன'' என்கிறார்.
வாழ்க்கை ஒரு கொடூர மிருகத்தைப் போல அவரைக் குதறிக் கொண்டிருக்க தன் படைப்பில் அவர் மிருகத்தின் வாயினுள் தலைக்கு ஒரு திண்டும் காலுக்கு ஒரு திண்டுமாக மெத்தையில் படுத்தபடி நடனமாடும் காதலியின் ஒரு கையைத் தன் ஒரு கையில் கோர்த்தபடி உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார்.
மேலைக் கலைஞர்களின் மேதமை, தண்டி தண்டியான புத்தகங்கள் மூலமாகவும் தொடர்ச்சியான சொல்லாடல்கள் மூலமாகவும் உலகெங்கும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. வான்கா, டாலி, பிக்காசோ என்று நாமும் அவர்களின் படைப்புகளோடு பரிச்சயம் இல்லாதநிலையிலும் கூட பெருமிதத்தோடு கூட குறிப்பிடுகிறோம். அவர்களுடைய படைப்புகளைப் பார்க்க நேரிடும் போதும் முன்முடிவாக நம்மிடம் பதிந்து விட்டிருக்கும் உயரிய மதிப்புடனேயே அணுகுகிறோம். ஆனால் நம்முடைய மிக முக்கியமான படைப்பாளிகளிடம் கூட நாம் உதாசீனமான மனநிலையே கொண்டிருக்கிறோம். அறிவும் ஆர்வமற்றிருக்கிறோம்.
நம் காலத்தின் பெருமைக்குரிய கலைஞன் ராமானுஜம், நம் கலை உலகம் அவரைப் புறக்கணித்திருக்கும் விதம் அவமானப் படத்தக்கது. நம் பெருமைகளை நாம் போற்றிக் கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
விந்தை ஸ்திதியோடு வரையக்கூடிய அபூர்வ சக்தி
''ராமானுஜம் மிக விநோதமானவர் மட்டுமல்ல கருத்துப் பரிமாற்றதுக்கு வசப்படாத மனிதரும்கூட அவர்மீது மிகுந்த மதிப்பும் ஆர்வமும் கொண்டு அவரை மிகவும் நெருங்கியிருக்கும் ஒருவரால்கூட அவர் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றி எதுவுமே அறிய முடியாது. ஆனால் டக்ளஸைப் பொறுத்தவரை, சற்றே பிசகிய மனநிலையோடும், விந்தையான ஸ்திதியோடும் வரையக்கூடிய ஒரு அபூர்வ சக்தியாக அவர் எதிர்பார்த்திருந்த ஒருவராக ராமானுஜம் தெரிந்தார். டக்ளஸ் மாணவனாக இருந்தபோது வரைந்த ஓவியங்களைப் பார்க்கும்போது ராமானுஜத்தின் நுட்பமான வேலைப்பாடுகளை அவர் எவ்வளவு நெருக்கமாக அவதானித்திருக்கிறார் என்பது தெரியவரும். கோட்டை இயக்கும் விதம் மூலமாகவும், வெகு நுட்பமாக நெருக்கும் விதம் மூலமாகவும் ராமானுஜம் வடிவமைக்கும் தன்மை மிகத் தீவிரமான கிராஃபிக் பாணியிலானது. ராமானுஜத்தின் மேதைமையை வெளிப்படுத்தும் அம்சமிது. இதைத்தான் டக்ளஸ் வசப்படுத்த முயற்சித்தார்.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிருகத்தின் வாயினுள்... விந்தைக் கலைஞன் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ராமானுஜம், ராமானுஜத்தின், அவர், டக்ளஸ், அவருடைய, சென்னை, நடைபெற்ற, ஓவியங்கள், கொள்ள, ஆண்டு, இவருடைய, படைப்புகள், தொடர்ந்து, இவர், செய்து, மூலமாகவும், அப்போது, டக்ளஸின், என்பது, விதம், ஜேம்ஸ், ஜோசப், பற்றி, அவரை, ஓவியக், வயதில், மிகுந்த, கல்லூரியில், ஓவிய, விந்தைப், வளாகத்திலும், அவர்மீது, கண்காட்சி