முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » தமிழீழம் கம்பலையும் கனவும்
இலக்கியக் கட்டுரைகள் - தமிழீழம் கம்பலையும் கனவும்
- அன்பு செல்வம்
"இலங்கையின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் இந்தியா எப்போதுமே மதிக்கின்றது. மற்ற நாடுகளில் எழும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் இந்தியா எப்போதுமே தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் அண்டைநாடான இலங்கையில் அங்குள்ள மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் வரலாற்று அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும் வரலாற்றுக் காலம் தொட்டு நெருங்கிய உறவு உண்டு. குறிப்பாக, இரு நாடுகளிலும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உறவு மிகவும் வலுவானது, இறுக்கமானது. எனவே இலங்கையில் நடக்கும் துயரமான நிகழ்வுகள் யதார்த்தமாக இந்தியாவைப் பாதிக்கச் செய்யும். அவ்வாறு பாதிக்கும் போது இலங்கையில் நடக்கும் இனக்கலவரங்களைக் கண்டு, இந்தியா ஒரு போதும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது."
- இந்திராகாந்தி (1983)
இலங்கையில் நிகழ்ந்துவரும் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. சுவீடன், டென்மார்க் உதவியுடன் களமிறங்கிய நார்வே அரசு உட்பட, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கத்தோலிக்க - சீர்திருத்த திருச்சபைகள் மற்றும் அமைதிக்கான பல குழுக்கள் இப்பணியில் அங்கம் வகித்துள்ளன. குறிப்பாக, இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தெற்காசிய நாடுகளின் அமைதிக்கான குடிமக்கள் குழுவும் (citizen for Peace in South Asia), இந்திய - இலங்கை நட்புறவுக் கழகமும் (Indo - Sri Lanka Friendship Society) பங்கேற்று பெரும்பங்காற்றின. இறுதியான அமைதி உடன்பாட்டையும் (After a Permanent Cease Fire Agreement), புரிந்துணர்வை ஒப்பந்தத்தையும் (Memorandum of Understanding) பகுப்பாய்வுக் கண்ணோக்குடன் ஏற்று அமைதிக்கான செயல் நடவடிக்கையில் பங்கேற்று குடிமைச் சமூகக் கோரிக்கைகளை உடன்பாட்டில் முன்வைத்தன. இக் குழு முன் வைத்த தமிழர்களின் நிலைப்பாட்டையும், இந்தியாவின் நிலையையும் இன்று நாம் தெரிந்துகொண்டு ஒரு புரிதலுடன் செயல்பட வேண்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உருவான பின் (2000 பெப்ருவரி 22) உலக நாடுகளின் பார்வையில் இன்பத் தமிழீழம் உயர்ந்து நிற்கின்றது. தென் ஆப்பிரிக்கா, கியூபா, தைமூர் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இனப்பாகுபாட்டாலும், அரச பயங்கரவாதத்தாலும் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, விடுதலையை நோக்கி விளிம்பு நிலையில் போராடிக் கொண்டிருந்த தமிழீழமும் மக்கள் சனநாயகத்தின் அமைதிப் பூங்காவில் அணி வகுத்துவிட்டது. அடக்கம் செய்யப்பட்டு விட்ட நம்பிக்கைகள், புதைந்து போன போராட்ட உண்மைகள், சர்வதேச அரசியலின் நரித்தனம், பேரினவாதத்தின் பூடகம் எல்லாம் தமிழீழ வரைபடத்துக்கு வெளியே தகர்ந்து போயின. விடுதலையை நோக்கிப் போராடிய அரை நூற்றாண்டு வரலாறு தன்னை மறுவாசிப்புச் செய்கின்றது.
கடந்த 20 ஆண்டுகளில் கசப்பான வரலாற்றின் கனவுகள், கம்பலை தோய்ந்த முகங்களுடன் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளன. கனவுகளுக்குப் பஞ்சம் இல்லை. கண்ணீரின் வெள்ளப் பெருக்கில் காணாமற் போனவர் பலர். இங்கே வீரமரணங்களில் எழும் புதிய நம்பிக்கையில் விடுதலைப் போராட்டத்தின் ஆன்மிகம் வளர்த்தெடுக்கப்பட்டது. 19 ஆண்டுகால திசைவழிச்சமரில் 60,000 மாவீரர்கள் மண்ணுக்குள் கிடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக 6,50,000 பேர் சொந்த மண்ணிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் அகதிகள் என்கிற பெயரில் 70,000 பேர் கொட்டகைக் கைதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். வசதி படைத்த 3 இலட்சத்தும் மேற்பட்ட தமிழர்கள் வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளனர். ஈராக்கிற்கு அடுத்தபடியாக பலர் காணாமல் போயினர். சிங்கள அரசின் புள்ளி விவரப்படி 17,540 பேர் என்கிற அறிக்கையை மனித உரிமை அமைப்புகள் மறுத்துள்ளன. இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு கூடுதலாகவே இருக்கும் என இவ்வமைப்புகள் கருத்துத் தெரிவிக்கின்றன. இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நீதி தேடலை ஆசிய மனித உரிமைக் கழகம் (AHRC) போன்றவை கண்டடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது தவிர முக்கிய குற்றவாளிகள் என பிணைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் செம்மணி புதைகுழி போன்று இரத்தம் தோய்ந்த புராணக் கதைக்குள் மடிந்து போயினர். சிங்கள இராணுவத்தினரின் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் தரைவழித் தளவாடங்களால் சாய்க்கப்பட்டுள்ளன. எரிந்து போய் எஞ்சியிருக்கும் மொட்டை மரங்கள் போர்நிறுத்தம் ஓய்ந்த புறநானூற்றுச் சூழலை கருப்பு ருவாண்டாக்களாகப் பரிசளித்து நிற்கின்றன. இவ்வாறு சங்கிலியாய்த் தொடரும் பாடுகளை எந்த வார்த்தைகள் கொண்டு விளக்கினாலும், சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் இருந்தும், திரைப்படக் காட்சிகளில் இருந்து மட்டுமே இச்சூழலை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
தீர்வு கிடைக்காத நிலையில் சிக்கலான பிள்ளைப் பேற்றுக்காக கையில் எடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கான ஆயுதம், நிறை குழந்தையைக் காணும் ஆரவாரிப்பில் அமைதியாகிப் போனதே மக்கள் சனநாயகம் துளிர்விடுவதற்கான காலக்குறி, ஈழத்தாயின் பிள்ளைப்பேற்றை நம்மால் பார்க்க மட்டுமே முடிந்தது என்கிற போது வேதனைதான் கொப்பளித்து வருகின்றது. ஆனாலும் அக்குழந்தையின் சிரிப்பில் தாலாட்டிப் பார்க்கத் தகுதியற்றவர்களாக மாறிப்போனோம் என்பதிலிருந்து, எப்படியோ! நாமும் சுயநலவாதிகள் என்பது அவர்களுக்கும் தெரிந்துவிட்டது.
2003 செப்டம்பர் 16 தொடங்கி 18 முடிய தாய்லாந்தில் தொடங்கப்பட்ட அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் புதிய விடியலை உலக அரங்கில் திறந்து வைத்தது. பன்முகச் சமூகங்களைக் கொண்ட இலங்கையில், அங்கு வாழும் தமிழ் மக்கள் ஒரு தனித்த தேசிய இனம் என்பதை ஏற்கவும், தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கவும், தமிழர்களின் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தைத் தவிர்க்கவும், இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கவும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் வேண்டும் என மக்கள் சனநாயக உரிமைக்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 31 முதல் நவம்பர் 3, டிசம்பர் 2 முதல் 5, 2003 சனவரி 6 முதல் 9 முடிய அடுக்கடுக்காக நிகழ்த்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் இக்கோரிக்கைகள் கூர்மைப் படுத்தப்பட்டன. இதன் பயனாக ஒரு புரிந்துணர்வு உருவானது.
எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் சமூகப் பகுப்பாய்வுக் கண்ணோக்கோடு எழுத முற்பட்டவர்கள் தமிழீழத்தை நேரில் பார்க்கத் தங்கள் சுற்றுப் பயணங்களைத் தொடங்கினர். வளர்ந்த நாடுகளின் செயற்கைக்கோள் பறவையின் படமெடுக்கும் கருவிகள் ஈழத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், நீள் வெட்டுப் படலத்தையும் படமெடுத்துத் தள்ளின. பன்னாட்டு நிதியங்களின் (IMF) முதலீட்டுத் திட்டங்களும், அய்க்கிய நாட்டவையின் தொண்டு நிறுவன ஏஜன்சிகளும் முதல் நிலைக் களத்தில் வந்திறங்கின. மூடப்பட்ட சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும், மரத்தடைகளும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிடுங்கி எறியப்பட்டன. கொரில்லாப் போரை நிகழ்த்தி முடித்த இரும்புக் கைகளையும், புகைமூட்டத்தையும் பன்னாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப, மேற்கத்திய மானுடவியலாளர்கள், பொத்தான் அளவு தொழில் நுட்பங்களுடன் திறக்கப்பட்ட ஏ - 9 பாதைகளில் மண்டிக்கிடக்கின்றனர். சிறுநீர் சுரக்கும் பௌமன் பைக்கள் அடைத்துக் கொண்டிருந்த ஈழவிடுதலை உணர்வுகளை இப்போதுதான் மனித உரிமை ஆய்வளர்கள் பீய்ச்சியடிக்கின்றனர். புலிவால் குஞ்சத்தில் அசிங்கம் இருப்பதாக உள்ளூர் நாளேடுகளில் எழுதியவர்கள், தற்போது புலியின் மீசைக்கு அருகில் மச்சம் போன்று ஏதோ இருப்பதாக விமர்ச்சித்து வருகின்றார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் விடுதலைப் புலிகளை நோக்கியும், சிங்கள அரசை நோக்கியும் மற்றும் இடையீட்டாளராகச் செயல்படும் நார்வே தூதுக்குழு போன்றோரையும் நோக்கி, பொது நிலையினரின் நீண்ட கால கனவுகள், எதிர்பார்ப்புகள் இன்று கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாமே தமிழீழத்தில் மக்கள் சனநாயகத்தின் கதவு திறக்கப்பட்டு வருவதற்கான விடுதலையின் அடையாளங்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. மக்கள் சனநாயகம் பேசுவதற்கும், எழுதுவதற்கும், விமர்சிப்பதற்கும் தேவை ஏற்படுமெனில் விடுதலை நோக்கி மீண்டும் போராடுவதற்கும் ஒரு நன்மை பயக்கும் சூழல் உருவாகி இருப்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் சில மாற்றங்கள் உருவாயின. இரு தரப்பிலும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆயுதங்கள் பயன் படுத்துதல், ஆயுதக்கிடங்குகளைச் சோதனையிடுதல், பதுங்கியிருந்து தாக்குதல் (கொரில்லா), படுகொலை செய்தல், கடத்துதல், உடைமைகள் மற்றும் சொத்துக்களை அழித்தல், நாசவேலையில் ஈடுபடுதல், வான்வழி - கடல்வழியாகத் தாக்குதல் ஆகியவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. இதனால் இருதரப்பிலும் அச்சுறுத்தல், கடத்தல், சித்ரவதை, வன்கொடுமை போன்றவை குறைந்துள்ளன. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவங்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கூடங்கள் நடத்துவதற்கான முயற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொருள்கள் மீதான தடை விலக்கப்பட்டது. தமிழீழப் பகுதிகளில் மீன்பிடி தொழில் மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரத் தேடல் தொடங்கியுள்ளன. கைது செய்யப்பட்டவர் விடுவிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இரவு நேரப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மனித உரிமை மீறல்கள் தெரிவிக்கப்படுவதற்கு வட்டார அளவில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பொது மக்களின் நீண்டகால பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்காக குடிமக்கள் குழுக்கள் (Citizens Committee) உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மறுவாழ்வு, மறுகுடியமர்வு (Rehabilitation and Re-settlement) தொடர்பான பணிகள் மிகவும் நலிவடைந்த நிலையில் கிடப்பில் கிடக்கின்றன. போர்க்காலச் சூழலில் கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் கன்னிவெடி அச்சத்தால் மீண்டும் தங்கள் கிராமங்களில் குடியேற முடியாமல் தவிக்கின்றனர். நில கன்னி வெடிகளை அகற்றுவதில் இன்னும் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தற்காப்புக்காக வைக்கப்பட்ட கன்னிவெடிகள் தவிர உள்ளூர் அளவில் உள்ள குழுக்கள் போட்டி போட்டுக் கொண்டு விதைத்த கன்னிவெடி வரைபடம் யாருக்கும் தெரியவில்லை. சில கன்னி வெடிகள் நிலத்தை ஒட்டியும், குடியிருப்புகளின் அருகிலும் இருக்கின்றன. இது தொடர்பாக 300 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை அகற்றுவதில் யூனிசெஃப் அமைப்புகள் களம் இறங்கியிருந்தாலும் முழுமையாக அகற்றி முடிக்க இலட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் தேவைப்படுகின்றன. ஆனாலும் சில இடங்களில் விடுதலை நம்பிக்கையுடன் துணிச்சலாகப் பலர் குடியேறியும் வருகின்றனர். இது தவிர முகாம்களில் உள்ள அகதிகள், தமிழீழ இசுலாமியர், மலையகத் தமிழர் ஆகியோரின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதில் பல உயர் மட்ட அளவிலான குடிமைச் சமூகக் குழுக்கள் (Civil Society) உருவாக்கப் பட்டுள்ளன. போர் தொடங்கும்போது இருந்த சூழல் இப்போது இல்லை. உலகமயமாதல், அரசுபயங்கரவாதம், பண்பாட்டு வன்முறை, பாசிச மதவாதம், சாதி - தீண்டாமையைத் தக்கவைக்கும் நவீன மனுதர்மம், இந்துப் பார்ப்பனியம் ஆகிய பிரச்சனைகளோடு இன்று தமிழீழ விடுதலைப் பார்வை சிலந்தி வலை ஆய்வுகளாகச் சிக்கிக் கிடக்கின்றன. ஆனாலும் இப்போதைய உடனடித் தேவையில் ஈழம் தனது கவனத்தைக் கூர்நோக்கியுள்ளது.
வேற்றிடங்களில் தங்கியிருந்தவர்கள் திரும்புவதற்கும், தங்குவதற்கும் மறு வாழ்வுத் திட்டங்கள் தேவைப்படுகின்றன.
தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழும் பகுதிகளில் ஒப்புரவை உருவாக்கவும், ஆற்றுப்படுத்தும் பணி செய்யவும் (Counselling), திறன் வளர்க்கவும் கூடுதல் கவனம் தேவைப் படுகின்றன.
பள்ளிகள் பாழடைந்துள்ளன. பொதுக்கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இவைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பள்ளிக்கூடங்கள் உயிரூட்டப்பட வேண்டும். மாவீரர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களுக்குப் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்யும் சிறுதொழில் திட்டங்கள் தேவைப்படுகின்றன.
கன்னிவெடிகள், மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் இழந்தவர்களுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கான மையங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளன.
வெட்டி அழிக்கப்பட்ட காடுகள், குளங்கள், கிணறுகள் மீண்டும் உருவாக்கப்பட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் உள்ளூர் சமூக விஞ்ஞானிகளின் ஈடுபாடு தேவைப்படுகின்றது.
இவ்வாறு நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் ஈழத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாக அமையப் போகும் மக்கள் சனநாயக அரசியலின் தன்மை எப்படியிருக்கும்? என்கிற கனவு மக்கள் முன் பூத்துக் கிடக்கின்றது. ஏற்கனவே இருக்கின்ற ஆதிக்க அரசியலின் அடையாளத்தைப் பெறுமா? அல்லது தலைவரை வழிபடுவதைத் தவிர்த்து மக்கள் குழு பங்கேற்பு அரசியல் இயங்குமா என்கிற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன. என்றைக்காயிருந்தாலும் இப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப் படப்போவதுதான். இருப்பினும் இரண்டே கேள்விகள் நம் முன் வைக்கப்படுகின்றன.
1) தமிழீழ விடுதலையைத் தருவதாகக் கடந்த ஆண்டுகளில் பல அரசு தங்கள் கொள்கைகளை மாற்றி அரசு பயங்கரவாதத்தையும், பேரினவாதத்தையும் நிலைப்படுத்திக் கொண்டன. எந்தப் பயனும் ஈழத்தில் ஏற்படவில்லை. அப்போது சிங்கள அரசை நோக்கி உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் வேடிக்கை பார்த்தன. இப்போதும் இன்றுள்ள அரசின் நோக்கும் போக்கும் நீதிக்குப் புறம்பாக இருக்குமானால் அதே போன்றுதான் உலக நாடுகள் வேடிக்கை பார்க்குமா? இதில் குடிமைச் சமூகங்களின் (Civil Society) பொறுப்பு என்ன?
2) வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும், இன உணர்வின் அடிப்படையிலும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இன்றைய தமிழகத் தமிழர்களின் நிலை என்ன? என்பதே.
இலங்கையில் அமைதி உடன்பாட்டுக்கான வேலைகள் தொடங்கியதும் விடுதலைப் புலிகளின் நிலைபாட்டை சிங்கள அரசு முழுமையாக நம்பிவிடவில்லை. சிங்கள அரசுமட்டுமல்ல, விடுதலைப்புலிகளை விமர்சித்துவந்த குழுக்களும் அவ்வாறு தான் பார்த்தன. தங்களின் இராணுவ, பொருளாதாரத்தின பலத்தை விரிவாக்கம் செய்து நிலைப்படுத்திக் கொள்வதற்கானவே இந்த நடவடிக்கை என்றும் விமர்சித்தனர். தனி நாடு கட்டமைப்பதற்கான சட்டப் பூர்வமான (Legitimize) படிப்படியான செயல் நடவடிக்கை என்றே பலரும் கருதினர். இதில் இந்தியாவின் நிலைப்பாடு மதில்மேல் குந்தியிருக்கும் குரங்குக் குணம் பொருந்தியதாகவே காட்டிக் கொண்டது. "இந்த அமைதி உடன்பாடு வரவேற்கத்தக்கது" என்று ஒரே வார்த்தையில் தனது விமர்சனத்தைச் சுருக்கிக் கொண்டது. பேச்சுவார்த்தை தொடங்கியதும் சிவசேன தலைவர் பால் தாக்கரே தனது காவி வணக்கத்தைத் தெரிவித்து மகிழ்ந்தார். இந்துத்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நகர்த்துகின்ற ஏஜன்சியின் முதல் வேலை இதுவே. இதன் பிறகு இன்று கட்டப்படும் பல ஆஞ்சநேயக் கோவில்கள் இக்காவி வணக்கத்தின் குடமுழுக்கு என்பதைத் தமிழர்கள் இன்னும் உணரவில்லை.
வரலாற்றை மீண்டும் மறுவாசிப்புச் செய்து பார்த்தால் உண்மையிலேயே இந்த அமைதி ஒப்பந்தத்தைத் தமிழகத் தமிழர்கள் தொடங்கியிருக்க வேண்டும். அதற்கான களமும் தமிழகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஈழத் தமிழர்கள் தமிழர்களுடன் உள்ள உறவை இன்று இரண்டு நிலைகளில் பார்க்கின்றனர்.
1. இந்திய அமைதிப்படைக்கு முன்.
2. இந்திய அமைதிப்படைக்குப் பின்.
இந்தப் படையும் அதனால் ஏற்பட்ட விளைவும் தான் தமிழீழ - தமிழ் நாட்டுத் தமிழர்களின் உறவை அளவிடுகின்றது. கனடாவிலும், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளார்கள். ஆனால் அங்கிருந்து கூட ஒரு வணிக உறவு நீடிக்கின்றது. "குறைந்த பட்சம் எங்கள் தலைவர் மீதும், எங்கள் விடுதலை இயக்கத்தின் மீதும் போடப்பட்ட உச்சநீதிமன்றத் தடையை எதிர்த்துக் கூடவா உங்களால் போராட முடியாமல் போய்விட்டது" என்பதே அவர்களின் கேள்வி. இக்கேள்வி ஒரு நிகழ்வை நமக்கு சிந்திக்க வைக்கின்றது. தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வில், விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு என்றும், பேசினால் குற்றம் என்றும் பயங்கரவாத பொடா சட்டத்தைக் கொண்டு ஒடுக்குகின்றது. இவ்வாறு ஒரு சட்டத்தைப் போட்டு விட்டால் உயர் நீதி மன்றத்தை எதிர்த்தோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சித்தோ போராடுகின்ற போக்கு இப்போது முழுமையாக இல்லை என்பதை அறிவுறுத்துகின்றது. அரசு ஊழியர்களின் மேதாவித்தனப் போராட்டத்தையும் அவர்கள் அப்படித்தான் பார்த்தனர். உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என நினைத்து நீர்த்துப் போனார்கள். தவறு என்பதும், நீதி மறுக்கப்படல் என்பதும் எந்தத் தளத்தில் இருந்தும் வருமானாலும் அதனை எதிர்த்துப் போராடவேண்டும் என்கிற போர்க்குணம் மங்கிவருவதையே இது வெளிப்படுத்துகின்றது. 'இந்து' நாளிதழின் மீது நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்ப் பத்திரிகை உலகமே பொங்கியது. ஏன் தமிழர்களும் கூட தங்களின் அரைக் கோவண அரசியலை கடை விரித்துப் பரப்பினார்கள். ஆனால் இன்று வரை இந்து நாளிதழ் தமிழ் ஈழவிடுதலையை ஆதரித்து ஒரு கட்டுரையைக்கூட வெளியிட்டது கிடையாது. வெளியிடுகின்ற அனைத்து இலங்கைச் செய்திகளும் சந்திரிகாவின் சாமரத்தைத் தூக்கிப் பிடிப்பதாக இருந்து வருவதை எந்தத் தமிழன் அவிழ்த்துப் போட்டுக் கொளுத்தினான் என்பது கேள்வியே.
தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றோம் என்று வைகோ போன்றோர் சொல்வதை இப்போது ஈழத்தில் யாரும் நம்ப தயாராக இல்லை. இங்கே உண்மையான தமிழ்ப் பற்றாளர்கள் யார் என்பதை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்த மானுடத்தின் தமிழ்க் கூடல் - 2002 (19.10.2002) மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் தெளிவுபடுத்தி ஆற்றிய உரை தமிழீழத் தமிழர்களின் பொய் வேட்கையைத் தணித்தது. வடவே இந்துத்துவத்தின் எச்சரிக்கையையும், சாதி, தீண்டாமையின் வர்ணாசிரம தர்மத்தையும் தமிழீழம் கவனத்துடன் அணுகவேண்டியுள்ளதைப் பொறுப்புடன் உணர்த்தினார். ஆனாலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள சின்னமடு, வடமராச்சியில் உள்ள கன்பொல்லை, கரவெட்டி, நெல்லியடி ஆகிய பகுதிகளில் சாதிக் கொடுமையின் உச்சநிலையை வேளாளர்கள் சரியாகக் கடைபிடித்து வருகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. தலித்துகள் இன்னமும் தோட்டி வேலைக்காகவும், துப்புரவுப் பணிக்காகவும் கீழ்நிலையில் நடத்தப்படுகிறார்கள். வசதி படைத்த தமிழர்களின் குடியேற்றப் பகுதிகளில் சாதி - தீண்டாமை கணக்கிட்டு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும், உண்மையையும் தமிழகத் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனை முற்றுப் பெறக் கூடாது என்பதே. தமிழீழம் உருவானால் தமிழகத்தில் தமிழ்த் தேசிய ஒருங்கிணைவு கூர்மையடையும், தமிழ்த்தேசியம் கூர்மையடைந்தால் இந்துத்துவ வல்லாதிக்கத்தினருக்கு பேரிடியாக அமையும். எனவே இதில் கடுமையான அணுகு முறைகளைக் கையாள்வதே சரி என பொடா கொண்டு மிரட்டுகின்றனர். அதிகபட்சமாக இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கேவுடன் உறவு இருப்பதாகச் சொல்லி சங்கர மடத்தையும், சாய்பாபா ஆசிரமத்தையும் சுற்றுக் காண்பிக்கின்றனர். இதுதான் இப்போதுள்ள நிலை. ஆனால் தமிழக அரசு இந்து அறநிலையைத் துறையின் மூலம் இலங்கை - இந்து பண்பாட்டுத் துறையுடன் செயல் திட்டங்களை 2003 திசம்பரில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பண்பாட்டைக் கட்டி எழுப்புவதாகக் கூறினாலும், அடிப்படையில் தமிழீழத்தையும் இந்துத்துவ வலைப்பின்னலுக்குள் கட்டி இழுக்கப் பெருமுயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மிகப் பெரிய அளவில் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே நம் முன் வைக்கப்பட்டுள்ள கடப்பாடு. முதலில் இந்தச் செய்தியை மக்கள் முன் பேசுவதற்குத் தயாராக வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமையின் அடிப்படையில் நம்முடைய பேச்சும், எழுத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும். 1980 க்குப் பிறகு இந்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டை எடுக்க மீண்டும் வலியுறுத்தவேண்டும். இதன் தொடக்கமாக இன்றுள்ள இலக்கியக் குழுக்களும், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகளும், இயக்கத் தோழர்களும், பெண்கள் அமைப்புகளும், இலங்கை நோக்கியும் தமிழீழம் நோக்கியும் புற்றீசல்போல தங்கள் பயணத்தைத் தொடங்கவேண்டும். இப்போது பயணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இப்பயணம் தமிழர்களைப் போராட்ட வாழ்வியல் சார்ந்த ஒரு தோழமையைக் கட்டி எழுப்ப உதவும். தமிழீழத்தில் இன்று தேவைப்படும் தேவைகளை நிறைவுசெய்வதற்கு இங்கிருந்து கூட்டு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி சர்வதேச அங்கீகாரம் கொண்ட யூனிசெஃப், அம்னெஸ்டி இன்டர் நேஷனல், ஆசிய மனித உரிமைக் கழகம் மற்றும் சீர்திருத்த, கத்தோலிக்க திருச்சபைகள் மூலம் உதவ முடியும். இப்போதுள்ள சிங்கள அரசு சில நல்ல முயற்சிகளை உருவாக்க முயன்று வருகின்றது. ஆனாலும் அங்குள்ள பெரும்பான்மையான பேரினவாத அடிப்படை வாதிகளின் (JVP) மிரட்டலையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு நாட்டின் அரச பயங்கரவாதம்தான் (State Terrorism) தன் ஆட்சியமைப்பை நிலைப்படுத்திக் கொள்ள ஒரு இனத்தைக் கையில் எடுக்கின்றது என்பதை பவுத்த, சிங்களர்கள் இதுவரை சிந்திக்கவில்லை. தமிழகத்தில் கூட இந்த அரசு பயங்கரவாதத்தை நிலைப்படுத்த அல்லது துணைபுரிகின்ற சாதியினர் கூட பேரினவாதிகளாகவே கோலோச்ச முடியும் என்பதை நமக்கு இது அறிவுறுத்துகின்றது.
ஈழத்தில் உருவாகியுள்ள அமைதி உடன்பாடு இருதரப்பின் அடித்தளத்திலிருந்து உருவானது. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இதற்கான அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. கொள்கைகளைச் சமரசப்படுத்திய அமைதி அல்ல, ஆதிக்கத்திற்கு எதிரான, அடிமைச் சமூக உறவை உடைத்தெறிகின்ற அமைதி. அனைவரும் சமத்துவத்தை விரும்பும் அமைதி. இந்த அமைதியை சனநாயக அரசாலும், சனநாயகக் குடிமைச் சமூகத்தாலும், தமிழகத் தமிழர்களாலும் பாதுகாக்க முடியும் என்பதால் அமைதிப் பயணத்திற்குத் துணை நிற்போம். அமைதிக்குக் குலுக்கிய கைகள் பிரிந்திடாமல் இருக்க ஆர்த்தெழுந்து அணிதிரள்வோம். மானுட சமத்துவத்தை எதிர் நோக்கும் மறுவாசிப்பில் ஒரு புதிய வரலாறு கட்டமைக்கப்பட்டு வருகின்றது. அவ்வரலாற்றில் நம்மால் இடம் பெற முடியவில்லை என்றாலும், வரலாற்று நாகரிகம் மற்ற தமிழ் அநாகரிகர்கள் முன் இப்புதிய வரலாற்றையும், போர்க்குண அரசியலையும் அடையாளம் காட்டுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழீழம் கம்பலையும் கனவும் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தமிழர்களின், மக்கள், அமைதி, அரசு, முன், சிங்கள, வேண்டும், தமிழர்கள், இன்று, என்கிற, இலங்கையில், இல்லை, உள்ள, மீண்டும், இந்திய, விடுதலைப், தமிழீழ, பகுதிகளில், என்பதை, கொண்டு, அடிப்படையிலும், வாழும், மனித, ஆனாலும், கொள்ள, இப்போது, இதில், ", தமிழ், நோக்கி, என்பதே, குழுக்கள், தமிழகத், அமைதிக்கான, இந்து, உறவு, இதன், பண்பாட்டு, நோக்கியும், தமிழீழம், ஆகிய, தங்கள், குடிமைச், இலங்கை, பள்ளிக்கூடங்கள், தமிழீழத்தில், அளவில், விடுதலை, அல்லது, என்ன, உறவை, என்றும், எந்தத், மூலம், முடியும், கட்டி, நடவடிக்கை, உள்ளூர், தேவைப்படுகின்றன, முழுமையாக, சாதி, தனது, ஈழத்தில், நிலைப்படுத்திக், அடிப்படையில், நீதி, வேண்டியுள்ளது, செயல், அடுத்தபடியாக, நிலையில், எல்லாம், அரசியலின், society, நாடுகளின், வரலாற்று, இந்தியா, போது, அமைதிப், சுற்றுப், பலர், பேர், என்பது, வருகின்றது, சனநாயக, தொடர்ந்து, புரிந்துணர்வு, நம்மால், இருந்து, மேற்பட்ட, தமிழகத்தில், உரிமை, தவிர, இவ்வாறு, பிறகு