முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » இரேனியசின் படைப்புலகம் / கருத்துலகம்
இலக்கியக் கட்டுரைகள் - இரேனியசின் படைப்புலகம் / கருத்துலகம்
- செ. ஜெயசெல்வின்
சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் இரேனியஸ் (1814 : 1835) தமிழ்ச் சமூக வரலாற்றில் தரங்கை சீர்திருத்த மிஷனெரிகளின் வரிசையில் மிகவும் ஆழமாகத் தடம்பதித்த ஒருவராவார். ஜெர்மன் சீர்திருத்தச் சபையின் பின்னணியினைக் கொண்ட இவர் 19-வது நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்த வழக்கமான மிஷனெரிச் செயல்பாட்டினைப் புரட்சிகரமாக மறுவடிவமைத்தார். இன்றைய திருநெல்வேலிப் பகுதிகளில் கல்வித்துறையிலுமூ, சமயப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள சீர்திருத்தக் கிறித்தவத்தின் ஆரம்ப கர்த்தாவான சீகன்பால்கு (1707-1719) காலத்திலிருந்தே கல்வி மற்றும் சமூக மீள்கட்டுமான முனைவுகள் மிஷனெரி நடவடிக்கையாக வழக்கில் இருந்தாலும், இந்நடைமுறைகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் சமய, சமூக மாற்றத்துக்கான மாதிரியாக தீவிரப்படுத்தியவர் இரேனியஸ் அவர்களேயாவர்.
திருநெல்வேலியின் சமூக வளர்ச்சி, திருநெல்வேலியைச் சார்ந்தவர்களின் நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு, திருநெல்வேலியைச் சுற்றிப் புதிதாக உருவான வியாபார மையங்கள் ஆகியன இவரது காலத்தின் பின்பே உருவாகின. இத்தகைய புலப்பெயர்வுகளும், புதிய மக்கள் புழங்கும் மையங்களும் உருவாக இரேனியசின் மிஷனெரி நடவடிக்கை ஓர் மறைமுகக் காரணமாக இருக்கக்கூடும். நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியின்போது ஒவ்வொரு பாளையப்பகுதிகளும் தன்னிச்சையாக தங்களது பகுதிகளை நிர்வகிக்கும் உரிமையைக் கொண்டிருந்தபோது, திருநெல்வேலிப் பகுதியிலும் தென்மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பமான சூழலில் இரேனியஸ் திருநெல்வேலி வந்தார். தென் தமிழகத்தில் பிரித்தானிய அரசு முழுமையாக நிலைகொள்ளும் முன்பிருந்த காலச் சூழலிது. ஒரு பக்கம் தங்கள் வியாபார நலனிலேயே குறியாய் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, மறுபுறம் பாளையக்காரர் முறையின் உச்சக்கட்ட அடக்குமுறை; இதற்கிடையிலான சூழலில் இரேனியஸ் பணி செய்ய வேண்டியதிருந்தது. இக்காலம் திருநெல்வேலி வரலாற்றில் முக்கியமானது. சவால் நிறைந்தது. வரலாற்றாசிரியர்கள் இக்கால ஆட்சிமுறையை "பிராமின் ராஜ்" என்று கூறுகிறார்கள். மிக அதிக அளவிலான சமூக ஏற்றத் தாழ்வும், சீர்முறையற்ற நிதி வசூலிப்பு முறையும், ஆங்கிலேயே - அந்தண - வேளாள அரசியல் புரிதலும் நிலவியிருந்த காலச் சூழலில் தான் இரேனியஸ் திருநெல்வேலி வந்தார்.
இரேனியஸ் திருநெல்வேலி வந்த காலப்பகுதியைப் புரிந்து கொள்வது இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, எப்படி இரேனியஸ் திருநெல்வேலியில் நிலவிய சமூக முரண்பாட்டை அடையாளம் கண்டு தனது மிஷனெரிச் செயல்பாட்டில் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்? அத்தகைய செயல்பாடு பிற மிஷனெரிச் செயல்பாடுகளிலிருந்து எத்தகைய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது? என்பவைதான் இக்கட்டுரையின் அடிப்படைக் கேள்விகள். அதோடு கிறித்தவ மதமாற்றம் என்பது எப்படிப்பட்ட சாத்தியப்பாடுகளுக்குள் நிகழ்ந்தது. அதுவெறும் மிஷனெரிகள் வழங்கிய பொருளாதார நன்மைகளுக்காக நிகழ்ந்ததாயின் மிஷனெரிச் செயல்பாடு என்பது வெறும் அதிகார உறவுடைய செயல்பாடா? அல்லது மிஷனெரிச் செயல்பாட்டில் ஒரு உருவாக்கப் படிமுறையும், (Creative process) முரண்பாடுகளை இனங்காணும் புரட்சிகர நடவடிக்கைகளும் அடங்கி உள்ளதா? என்பவைதான் அதன் தொடர்ச்சியாக இங்கு எழும் கேள்விகள். இக்கேள்விகளுக்கான விடையினை அறிவதில் 18 மற்றும் 19 வது நூற்றாண்டுகளில் திருநெல்வேலியின் வரலாற்றுச் சூழல் மிகவும் முக்கியமானது.
மேற்கூறிய கேள்விகள் ஒருவிதத்தில் திருநெல்வேலி கிறித்தவம், தமிழ்க் கிறித்தவம் இன்னொரு விதத்தில், இந்திய சமூகங்களில் கிறித்தவ மிஷனெரிகள், கிறித்தவ சமூகங்கள் குறித்து நிலவிவரும் அறிவியல் தன்மையற்ற படவுருக்களுக்கு (Stereo types) விடைகாணும் முயற்சிகளுக்கு அடிப்படையானவை. இந்த ஆய்வுக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த கிறித்தவ மிஷனெரி இயக்கங்களின் மீது புதிய புரிதல்கள் உருவாக்க இயலுமா? இதன் அடிப்படையாக இக்கட்டுரையில் பயன்படுத்தப்படும் ஆய்வு மாதிரியானது, இரேனியசின் மிஷனெரி நடவடிக்கையில் காணப்படும் வகை மாதிரிகளை இனங்கண்டு அவற்றை ஓர் அறிவாக்கச் செயலோடும், முரண்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றை சமன் செய்யும் ஓர் புரட்சிகர நடைமுறையோடும் இணைத்து நோக்கும் பார்வையுமாகும். அறிவார்ந்த செயல்பாடு சமூகத்தில் நிகழும் அனைத்துப் படைப்புச் செயல்பாடுகளுக்கும் பொதுவானது. இதனை விளக்கும் முன்பு, இந்த ஆய்வு மாதிரி இக்கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான கொள்கை நிலையைக் (rational) கூறியாகவேண்டும்.
19-வது நூற்றாண்டின் முதற் கட்டங்களில் இரேனியஸ் மேற்கொண்ட மதமாற்றத்திற்கான முயற்சி, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராயும், பாளையக்காரர் முறைக்கு (poligar system) எதிராயும் நிகழ்ந்த வெறும் அரசியல் நடவடிக்கை மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்பும் சமூக மீள்கட்டமைப்பு முயற்சியாகவும் இருப்பதாக தோன்றுவதாகும். இந்த பண்பாட்டு வெற்றிடம் ஏதோ ஒரு நிலையில் இரேனியசால் உணரப்படுவதால் அது பிற மிஷனெரிச் செயல்பாடுகளிலிருந்து முழுமையாக வேறுபடுகிறது. அவரது மொழி குறித்த கருத்தாக்கமாயினும், இலக்கிய அமைப்புகள், கிறித்தவ குடியிருப்புகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளானாலும் ஒரு வேறுபட்ட, தனித்துவம் கொண்ட கருத்தமைவுகளாகவும், நடவடிக்கைகளாகவும் இவை உருப்பெறுகின்றன. முதன்முறையாக, இங்கு மிஷனெரி என்ற தனிநபர் ஒரு இயந்திர கதியான மாற்றங்களின் காரணகர்த்தாவாக இல்லாமல், குறிப்பிட்ட சமூக பண்பாட்டு வரைவுக்குள்ளான மக்கள், இரேனியஸ் என்ற மிஷனெரியின் மதம்மாற்றும் மாதிரிகளோடு தங்களை அடையாளம் காணும் தன்மையை அவதானிக்க இயலுகிறது.
இதனடிப்படையில் இரேனியஸ் அன்றைய சமூக, பண்பாட்டுத் தளங்களில் நிலவியிருந்த சமூக முரண்பாட்டை அதன் உள்ளார்ந்த கூறினை சரியாகவே புரிந்துகொண்டார் எனக்கூறத் தோன்றுகிறது. எனவே, இக்கட்டுரையின் கவன ஈர்ப்பு மறக்கடிக்கப்பட்ட ஒரு தமிழ் மிஷனெரியின் செயல்பாடுகளை அவரது செயல்பாடு இயங்கிய தளத்தினடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியிலிருந்தே எழுகிறது. இதற்கான தரவுகள் மிகவும் குறைவாக இருந்தாலும் அவை வழக்கில் இருக்கும் நிலைகளை அங்காங்கே இந்த ஆய்வுக் கேள்வியுடன் கோடிட்டுக் காட்டும் முயற்சியே இக்கட்டுரை. கிடைக்கப்பெற்ற தரவுகளை, முன்பு குறிப்பிட்டபடி இரேனியஸ் என்ற மிஷனெரி இயங்கிய படைப்புலகத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் அடிப்படையில் கருத்துலகம் (Significatory Universe) அல்லது படைப்புலகம் (Creative world) என்ற 11-வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரஞ்ச்நாட்டு மொழியியல் அறிஞரது கருத்தாக்கத்தினடிப்படையில் வரிசைப்படுத்தும் முயற்சியே இக்கட்டுரையாகும்.
படைப்புலகம், கருத்துலகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேலெழுப்பில் கேள்விகளுக்கான விவரணை (Discription) முன்னெடுக்கப்படுகிறது. இக்கருத்தாக்கம் ஐரோப்பியச் சூழலில் எழுந்த இலக்கிய உருவாக்கம் மற்றும் புதிய இலக்கியக் கொள்கை போன்ற கோட்பாடு விவாதங்களினூடாக உருவாகிய ஒன்று. ஒரு படைப்பு எவ்விதம் செயல்படுகிறது என்பதை விளக்கும் நிலையோடு தொடர்புடையது. ஒரு படைப்பாளி தனது படைப்பிற்கான வகை மாதிரிகளை எந்தெந்த மூலாதாரங்களிலிருந்து பெறுகிறான்(ள்), அவ்விதம் தன்னளவில் தனித்துவமும், வேறுபாடும் கொண்ட பல மாதிரிகளை (models) எவ்விதம் ஒழுங்குபடுத்துகிறான்(ள்) என்பவைக் குறித்துப் பேசுவது கருத்தாக்கமாகும். அதாவது, படைப்பு முனைவுகள் முழுமை பெறும் முன்பு (அமைப்பாக்கமாகும் முன்பு) படைப்பாளியிடம் அவை புறவயமாக பல சிதறுண்ட பகுதிகளாகவே காணப்படும். இந்நிலையில் படைப்பாளியின் பௌதீக ரீதியான அனுபவத்தினால் புறவயமாக உள்ள மாதிரிகள் பல சேர்ந்து பொதுமைப்படுத்தப்பட்ட மாதிரிகளாகவே அல்லது பிம்பங்களாகவே இலக்கிய வகைமாதிரிகள் உருப்பெறும். ஒரு படைப்பு நிகழ்வின் ஆரம்பம் இதுவே. இப்படியாக, பௌதீக அனுபவத்தினடிப்படையில் பெறப்படும் மாதிரிகளானது பல பின்னணிகளினால் படைப்பு ஒழுங்கமைப்பாக உருவம் பெறும். படைப்பாளன் இப்படியாகச் சிதறுண்ட பல மாதிரிகளை ஒழுங்கமைப்பாக்கும் செயலின் முக்கிய காரணகர்த்தா. ஆனால் இத்தகைய ஒழுங்கமைப்பிலாகும் மாதிரிகள் பல பின்னணிகளிலிருந்து படைப்பாளனுக்கு வந்து சேர்கின்றன. ஒருவரது, நேரடியான சமூக உற்று நோக்கல் அல்லது அவதானிப்பு (observation), பல சமூக நிகழ்வுகளில் பங்கேற்றல் (participation), பல சமூக இயக்கங்கள், எழுத்து மரபுகள், மனித ஆளுமைகள் குறித்த வாசிப்பு (reading) போன்றவை ஒரு படைப்பிற்கான மூலாதாரங்களை அமைப்பாக்கி, உருக்கெடுக்கும் முக்கிய காரணிகளாகலாம். இந்நிலையில், ஒரு இலக்கிய வெளிப்பாடோ அல்லது சமூகச் செயல்பாடோ மொழி வடிவிலோ அல்லது பொருள் சார்ந்த (material) வடிவங்களாகும் நிலைக்கு முன்பு அவற்றில் செயல்படும், செயல்பட்ட மாதிரிகள், பிம்பங்கள், அமைப்புப் படிமுறையிலாகும் நிலையினையே கருத்துலகம் என்கிறோம்.
எனவே படைப்புலகம் கருத்துலகம் என்பது ஒரு இலக்கிய வடிவம், ஒரு படைப்பாளனால் என்னவிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுவதாகும். இலக்கியத்தின் உள்கட்டமைப்பு குறித்த புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு பேசப்படும் இக்கருத்தாக்கம் எவ்விதம் ஒரு மிஷனெரி நடவடிக்கையைப் புரிந்து கொள்ள உதவும் என்ற கேள்விக்கான பதில், புதிய இலக்கியக் கொள்கை ஒரு இலக்கிய வடிவத்தை எவ்விதமாக அணுகுகிறது என்பதிலிருந்தே எழுகிறது. புதிய இலக்கியக் கொள்கை எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் ஒரு சமூகச் செயலாகவே கருதுகிறது. இலக்கிய உருவாக்கம் ஒரு அமானுஷ்யமான காரியமல்ல. அடிப்படையில் இது சமூகத்தில் நிகழும் பிற நிகழ்வுகளின் உற்பத்தி போன்றது எனும்போது, ஒரு படைப்பையும் சமூக நிகழ்வையும் ஒன்றையொன்று அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளும் ஆய்விற்குரிய பொருள்களாகிவிடுகின்றது. எனவே இலக்கிய உருவாக்கமும் சமூக நிகழ்வுகளும் ஒரே அடிப்படையிலானவை என்ற புரிதல் உருவாகும் நிலையில், அரசியல் செயல்பாடுகள், மக்கள் திரள் இயக்கங்கள் போன்ற சமூக நிகழ்வுகளை இலக்கியத்தின் உள்கட்டமைப்பு செயல்படும் தன்மையிலும் இலக்கியத்தின் உள்கட்டமைப்பு குறித்துப் பேசும் கருத்தாக்கங்கள் துணையுடனும் நாம் புரிந்து கொள்ளும் சாத்தியம் நமக்கு இருக்கிறது.
படைப்புலகம், இலக்கிய உருவாக்கம் போன்றவற்றின் தொடர்பாக எழும் இன்னொரு கருத்தாக்கம் பிரக்ஞை நிலை (consciousness) என்பதாகும். இக்கருத்தாக்கம் இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படைகளைக் கொண்டு சமூகச் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலும் என்ற கருத்தாக்கத்திற்கு வலுசேர்க்கிறது. அடிப்படையில் பிரக்ஞை நிலை என்பது சமூக வரலாற்று நிலைகளிலிருந்து சமூக மனிதனிடம் உருவாக்கம் பெறும் ஓர் உளச்சார்பு நிலையாகும். பண்பாட்டுத் தொகுதிகளும், மொழி ஒழுங்கமைப்பும் இச்சார்பு நிலையை உருவாக்கும் முக்கிய ஊடகங்களாகும் (Vehicle). மனிதனிடம் அசுவயமாக கட்டமையும் இந்த உளச்சார்பு நிலை (faculty), புறவயமாகவுள்ள, பண்பாட்டுத் தொகுதிகள், சமயம், வரலாறு, மொழி ஒழுங்கமைப்பு போன்றவற்றினூடாகத் தொடர்ச்சியான மனித ஊடாட்டங்களினால் (interactions) உருவாகிறது. இந்த உளச்சார்பு நிலையே மனிதனைப் பிற விலங்குப் பெருவகுப்பிலிருந்து தனித்து அடையாளம் காணும் குணாம்சத்தினை சமூக மனிதனுக்கு அளிக்கிறது. மேலும், இச்சார்பு நிலை அரசியல், சமூக இயங்கு நிலைகளையும் அவற்றின் உள்ளார்ந்த முரண்பாடுகளையும் அடையாளம் காணும் தனித்தன்மையை சமூக மனிதனுக்கு அளிக்கின்றது.
படைப்புகளும், படைப்புச் செயல்பாடும் இப்பிரக்ஞை நிலையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையன. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. அதாவது, எப்போதும் ஒரு சமூக மனிதன் தன் இருத்தலுக்கான எதிர்வினையை உணருகிறானோ (ளோ) அப்போது தான் எதிர்கொள்ளும் புதிய சூழலை தனது காலக்கட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல கருத்தியல் நிலைகளை, தனக்கேயான பண்பாட்டு வெளியில் உறவாடிக் கொண்டிருக்கும் மாதிரிகளைக் (models or signifiers) கொண்டு படைப்பாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான். இன்னொருவிதத்தில், எப்போது மனித பிரக்ஞையானது சமூக முரண்பாடுகளை அடையாளம் காண இயலுகிறதோ அந்தக் கணத்திலேயே புதிய படைப்பாக்கத்தின் தேவையும், தவிர்க்க இயலாததாகிறது. இத்தகைய படைப்புச் செயல்கள் இலக்கியத்திலும், பிற சமூக உருவாக்கங்களிலும் பல நிலைகளில் பொதுமைப்படுத்தப்பட்டு (conceptualise) வகைப்படுத்தப்பட்டு (catagorise) நிகழும் ஒன்றாகும். இது சதுரங்க விளையாட்டில், ஒருவர் தனக்கு முன்னேயுள்ள காய்களின் (pawns) நகர்விற்கான சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்வது போன்றது. இதில், நகர்விற்கான சூழலையும், காய்களின் இருப்பிடம், உறவு நிலை போன்றவற்றை சரியாகப் புரிந்து கொண்டு, சரியான நகர்வுகள் மூலம் ஆட்டத்தை ஒருவன் தனதாக்குகிறான். இத்தகைய நகர்வுகள் ஏற்கனவே நிகழ்ந்த ஒன்றல்ல. புதிய நிலைகளை அடிப்படையாகக் கொண்ட புரிதலும், அதன்படியான நகர்வுகளுமே காரணமாகும். ஒவ்வொரு முறையும் நிலைகளும் புதியனவே. எனவே எந்த ஒரு வெற்றிகரமான படைப்புச் செயலுக்கும், ஒரு படைப்பாளியின் முன்னேயுள்ள பௌதீக யதார்த்த நிலைகளையும், அவை நிகழும் களனையும் புரிந்து கொண்டு படைப்பு மாதிரிகளை புதிய உறவுகளினடிப்படையில் உருவாக்கும் தன்மை அவசியமாகிறது.
எந்த ஒரு படைப்பு / சமூக நிகழ்வினையும் இதனடிப்படையில் புரிந்து கொள்ள இயலும் எனும்போது அச்செயல்பாடுகள் நிகழும் களனும் (field) அது தீர்மானிக்கும் காரணகாரிகங்களும் மிகவும் முக்கியமாகின்றன. தீர்மானக் காரணிகளை அடையாளம் காண்பது ஒவ்வொரு நகர்வுக்கும் முக்கியமானது எனக்கூறும்போது சதுரங்க விளையாட்டின் காய்களின் நகர்விலும், இலக்கிய உருவாக்கத்திலும் அனுபவம் என்பது அடிப்படைக் காரணிகளையும், காய்களின் நகர்விற்கான சாத்தியப்பாடுகளையும், களனையும் கணிப்பதில் முக்கிய அம்சமாக விளங்கக்கூடும். சமூக நிகழ்வுகளிலும் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் இதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவானவை. ஏனெனில், சமூக நிகழ்வுகளிலும் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் இதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவானவை. ஏனெனில், சமூக நிகழ்வுகள் கணினித்தனமான வகை மாதிரிகளினடிப்படையில் செயல்படுவைகளல்ல.
சமூக நிகழ்வுகளிலும் புரட்சிகர செயல்பாடுகளிலும் பலச் சமூகக் குழுக்களை அல்லது பல தனிமனித அகவயங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தான் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்குகின்றன. இத்தகைய ஒன்றிணைப்பு என்பது மனிதர்களைக் குறிப்பிட்ட சித்தாந்தத்தினடிப்படையில் ஒன்று திரட்டுவது என இங்கு பொருள் கொள்ளப்படவில்லை. ஓர் புலப்படுத்தப்பெற்ற ஒழுங்கமைப்பில் பல சமூகக் குழுக்களைக் கொண்டு வருதல் என்பதாகும். பெனடிக்ட் ஆண்டர்சன் (1983) தேசம் (nation) அதன் உறுப்பினர்களை ஓர் கற்பிதமான (immagined) நெருங்கிய உறவுடைய குழும (community) உறவினுள் கொண்டு வருகிறது என்கிறார். ஒரு தேசத்தின் அரசியல் எல்லைக்குள் செயல்படும் நவீன ஊடகங்கள் இப்பணியினைச் செய்கின்றன. ஆண்டர்சனின் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜே.பி. பிளக்காய்ஜர், மொழியும், பிற உரைத்தல் மரபுகளும் கொண்டுள்ள புலப்படுத்த நிகழ்வு, தேசம் என்ற கற்பிதம் கொண்ட குழுமத்திற்கிடையே நிகழும் புலப்படுத்தமாதிரியை ஒத்துள்ளது என்கிறார். மேலும், இவை பல சமூகக் குழுக்களிடையே இடையீட்டு உறவினைக் கொண்டுள்ளது என்கிறார். இப்புரிதல்கள், தனி மனித அகவயங்களை இணைக்கும் புலப்படுத்த ஒழுங்கமைப்பினை பண்பாட்டுப் படைப்புகள் மற்றும் வகை மாதிரிகளை உருவாக்கித் தருகின்றன. ஆண்டர்கனும், பிளக்காய்ஜரும் கூறும் புலப்படுத்த ஒழுங்கமைப்புகள் முன்பின் தெரியாத பல சமூகக் குழுக்களையும், நபர்களையும் ஒன்றிணைக்கின்றன. இங்கு தேசம் என்பதில் அரசு சார்ந்த ஊடகங்களும் (media), பொதுவான இலக்கிய மரபினை, மொழிக்குடும்பத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் எழுத்து மொழியும், பிற வழக்காற்று மரபுகளும் முன்பின் தெரியாத பல சமூகக் குழுக்களின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் சாத்தியங்களை அளிக்கின்றன. இங்கு மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது, ஒரு பரந்த புலப்படுத்த ஒழுங்கமைப்பைக் கொண்டு செயல்படும் குழும (community) உருவாக்கங்களில் பங்கேற்கும் தகுதி, எழுத்து மரபினை அறிவதிலிருந்து அல்லது பிற ஊடகங்கள், வழக்காற்று மரபுகளின் மீதான பழக்கம் (repertoire) ஆகியவற்றால் உருவாகின்றது. இப்படியாகச் செயல்படும் புலப்படுத்த ஒழுங்கமைப்பின் கண்ணியை இனங்காண்பது தான் ஓர் அறிவார்ந்த செயல்பாட்டிற்கு அடிப்படையானது. இது இலக்கியச் செயல்பாட்டிற்கும் மற்றும் புரட்சிகரச் செயல்பாட்டிற்கும் பொருந்தக்கூடியதே.
ஒரு பரந்த புலப்படுத்த ஒழுங்கமைப்பினுள் செயல்படும் மனிதக்குழுக்களும், மற்றும் மனித அகவயமும் இயந்திரகதியில் இயங்குபவையல்ல. அவை வரலாற்றுத் தொடர்நினைவுகளோடு, பண்பாட்டுக்களனில் இயங்குவனவாகும். எந்த சமூகக் குழுவும், தனிமனித அகவயமும் பண்பாட்டு உள்ளடக்கம் இன்றி இயங்குவது இயலாதது. ஏனெனில், இவை பண்பாட்டுத் தொகுதிகள், மொழிமரபுகள் கொண்டே உரைத்தல் மரபுகள், இசைமரபு, நிகழ்கலை, சடப்பொருள் பண்பாடு போன்றவை இந்த பண்பாட்டுத் தொகுதியின் வெளிப்பாட்டு வடிவங்கள். இவ்வடிவங்கள் மனித அகவயத்தினையும், மனித முறைகளையும் உருக்கொடுப்பதுடன் (constitute), மனித நடைமுறைகளையும், மனக்கிளர்ச்சியையும் (emotions) தூண்டும் கட்டுப்படுத்தும் செயலினைச் செய்கின்றன. எனவே, பண்பாட்டு வெளிப்பாடுகளும், மனிதனது சமூக நடைமுறையும் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், இம்முனைப்புக் கூறுகளை சமூக இயக்கங்கள் எவ்விதத்தில் பயன்படுத்துகின்றன என்பதைக் கொண்டு, எல்லாவிதமான சமூக இயக்கங்களையும், அவற்றின் ஆளுமைகளையும் புரிந்துகொள்ளும் மாதிரியை நாம் உருவாக்க இயலும்.
இத்தகைய மாதிரியைப் பயன்படுத்தும் போது, பண்பாட்டுத் தொகுதிகள் மற்றும் சமூக முனைப்புக் கூறுகள், நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டவை (given) அல்ல என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வரலற்றுச் சங்கிலித் தொடரில் தொடர்ந்து செயல்படும் மனிதன் தன் நிகழ்காலத் தேவைக்கேற்ப அவனது பண்பாட்டுக் கோலங்களை மாற்றுகின்றான்(ள்). புதிய இசை, சமய மரபுகளையும், மொழி ஒழுங்கமைப்பில் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறான்(ள்). இத்தகைய முனைப்புக் கூறுகளை, பண்பாட்டு ஒழுங்கமைப்பினைப் புரிந்து கொள்வதுதான் எந்த இலக்கியவாதிக்கும், சமூகச் செயலாளிக்கும் முக்கியமானது. இவற்றை, புரிந்து கொள்ளுதல், இலக்கியவாதியிடமோ, சமூகச் செயலாளியிடமோ பிரக்ஞை பூர்வமாக நிகழும் நிகழ்வல்ல அவ்வாறு செயல்படும் நபர்தான் பணி செய்யும், எழுத முனையும் மக்களது பண்பாட்டு உள்ளடக்கத்திற்கு வெளியே நின்று நிகழ்த்த இயலாத விஷயம். ஏனெனில் மனிதனது பண்பாட்டு ஒழுங்கமைப்பும், கூறுகளும், நினைவுகளாக, சடங்குகளாக, இசையாக, மொழியாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும். இவற்றை அறிவதும், ஒழுங்குபடுத்துவதும், புது உள்ளடக்கம் அளிப்பதும், வரலாற்றுப் பொருள் நிலைகளோடு தொடர்புபடுத்துவதும் மிகப்பெரிய சவால். இந்த நிர்ப்பந்தகளுக்கிடையேதான் மிகப்பெரிய புரட்சிகர மாற்றங்களும் பண்பாட்டுப் படைப்புகளும் நிகழுகின்றன.
சீர்திருத்தக் கிறித்தவம் (Protestant Christianity) இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையேதான் தமிழ்ச் சமூகத்தை எதிர்கொண்டது, சீர்திருத்த கிறித்தவ மதமாற்ற முனைவுகள் தற்செயலான அதிகார உறவுகளுக்குள் மட்டுமே நிகழ்ந்த ஒன்றல்ல. மாறாக, இந்திய பக்தி அடிப்படைகளையும், வட்டார இசையையும், மொழியையும் பயன்படுத்திய ஒரு இயக்கத்தின் விளைவாகவே அதனைக் கொள்ளவேண்டும். ஏராளமான இலக்கிய, பண்பாட்டு உருவாக்கங்கள், மொழிபெயர்ப்பு முயற்சிகள், மொழி குறித்த விவாதங்களினூடாக உருவாகிய இவ்வியக்கத்தில் ஒரு வித உருவாக்கப்படிமுறை இருப்பதாகவே தோன்றுகிறது. சீர்திருத்தக் கிறித்தவம் உருவாக்கித் தந்திருக்கும் தமிழ் இசை மரபும், நவீன பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட புதிய எழுத்தறிவு (literacy) மரபும் இந்த உருவாக்கப் படிமுறையின் சாராம்சத்தைக் குறிப்பிட்டுக் கூறும் தனித்த பண்பாட்டுத் தளமாகக் கொள்ளலாம். தமிழ் மிஷனெரி இயக்கங்களை இந்தப் பண்பாட்டுத் தளத்தினைக் கொண்டு நோக்கமால் அரசியல் மேலாதிக்க உறவுகளுக்குள் மட்டுமே அணுகுவது, தமிழ் கிறித்தவம் வெளிக்கொணர்ந்த சக்தி வாய்ந்த வகைமாதிரிகளையும் பிற மொழி அடைவுகளையும் இழக்கும் சூழலை உருவாக்கக்கூடும். இதன் ஒரு நிலையாகவே இக்கட்டுரை இலக்கிய உருவாக்கப் படிமுறை அடிப்படையில் உருவான படைப்புலகம், கருத்துலகம் என்ற கருத்தாக்கத்தினைக் கொண்டு தமிழ் கிறித்தவ மிஷனெரிகளில் ஒருவரான இரேனியசின் படைப்புலகத்தினை விவாதிக்கிறது.
படைப்புலகம், கருத்துலகம் என்ற கருத்தாக்கம் ஐரோப்பியச் சூழலில் நிகழ்ந்த பல இலக்கிய இயக்கங்கள் மொழி பெயர்ப்பு முயற்சிகளினூடாக உருவாகிய ஒன்றாகும். இந்த இயக்கத்தின் முக்கியமானவர் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மொழியியலாளரான பியர்ஸ் அபிலார்ட் என்று கருதப்படுகிறார். கிறித்தவ மடாலயங்களில் துறவியாக வாழ்ந்த இவர், கிறித்தவ புனித நூல்களை வாசித்து பொருள் கூறும் பணியினைச் செய்து வந்தார். இவ்வாசிப்பு நிகழ்வில், மடாலயங்களின் அதிகாரபூர்வமான பொருளுக்கும் தனது வாசிப்பினூடாகத் தான் அனுபவித்த பொருளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதை உணர்ந்தார். இது தொடர்பான உருவான மொழியியல் பிரச்சனைகளைத் தத்துவார்த்த பிரச்சனைகளாக்க முயன்றபோது மொழி, மொழிச் செயல்பாடு, மனிதப் பிரக்ஞை போன்ற விவாதப் பொருள்களுக்குக் கிறித்தவப் புனித நூல்களின் மீதான அவரது வாசிப்பு இட்டுச் சென்றது. படைப்புலகம், கருத்துலகம் என்பது இவ்வாசிப்புகளின் பகுதியாக உருவான கருத்தாக்கமாகும்.
அபிலார்ட் படைப்பு நிலையை மூன்று விதமாகப் புரிந்து கொள்கிறார். அவை: 1. இலக்கியம் அல்லது ஒரு படைப்புச் செயல்பாட்டில் காணக் கிடைக்கும் பல வகைமாதிரிகளை (models or ensembles) வரிசைப்படுத்தல். 2. அவ்வாறு பெறப்பட்ட வகைமாதிரிகள் சமூக மனிதனின் இருத்தலியல் அலைவுகளுடன் எவ்வகையில் உறவு கொள்கிறது என்பதை அறிதல். 3. ஒட்டுமொத்த வகைமாதிரிகளின் ஒழுங்கமைப்பு ஓர் சமூக வரலாற்றுத் தொடர்ச்சியோடு இடையீட்டு உறவு (mediation) கொள்ளும்படி எவ்விதம் மெருகுபடுத்தப்பட்டுள்ளது (incisions) என்பதை அறிதல்.
இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் படைப்புலகம், கருத்துலகம் என்ற கருத்தாக்கத்தின் கோட்பாட்டு விவரணைகளும், ஒரு சமூகப் புலப்படுத்த ஒழுங்கமைப்பில் சமயமாற்றத்தின் சாத்தியப்பாடுகள் குறித்தும் விவாதித்தோம். இப்பகுதி, அபிலார்டின் (1079 - 1142) மொழியியல் உரையாடல்களிலிருந்து உருவான ஆய்வு மாதிரியைக் கொண்டு இரேனியசின் மிஷனெரி நடவடிக்கைகள் எவ்விதம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்துப் பேசுகிறது. முன்பு விவாதித்தவாறு, படைப்பு நிலையைப் புரிந்து கொள்ளும் மூன்று அடிப்படைகளை அபிலார்டின் மொழியியல் பார்வை உருவாக்கித் தருகிறது. இதனைக்கொண்டு, முதல் நிலையில் இரேனியசின் மிஷனெரி நடவடிக்கைகளில் காணக் கிடைக்கும் வகைமாதிரிகளை ஒழுங்குபடுத்துகிறோம். இரண்டாவது நிலையில் அவ்வகை மாதிரிகள் ஓர் ஒழுங்கமைப்பாகி, தனித்துவம் கொண்ட மிஷனெரி நடவடிக்கையாகி சமூக, பண்பாட்டு எல்லைகளில் எத்தகைய உறவினைக் கொள்கின்றன என்பதைக் காண முயலுகிறோம். இரேனியசின் மிஷனெரி நடவடிக்கைகள் அவர் பணி செய்த பகுதியில் வாழ்ந்த மக்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் அனுபவங்களோடு கொள்ளும் உறவையும், அவரது மிஷனெரி நடவடிக்கை அம்மக்களின் சமூக முரண்பாட்டு உறவு நிலைகளையும் எத்தகையதாகச் சமன் செய்கிறது என்ற மூன்றாவது நிலை இப்பகுதியில் விளக்கப்படுகிறது.
இலக்கியப் படிமுறையின் அடிப்படையில் எழுந்த படைப்புலகம் என்ற கோட்பாடு நிலையில் ஒரு மிஷனெரிச் செயல்பாட்டினை புரிந்து கொள்வது என்ற இந்த ஆய்வு நிலைபாடு, தொடர்பில்லாத இரு தொகுதிகளையும் (domains) ஒப்புமைப்படுத்துவதாகத் தோன்றக்கூடும். தமிழ்ச் சூழலில் நிகழ்ந்த கிறித்தவ மதமாற்ற நிகழ்வுகளும், மிஷனெரிச் செயல்பாடுகளும் இலக்கியப் படைப்பு நிகழ்வதைப்போல, மொழியில் பனுவல்களையும், துணைப்பனுவல்களையும் உருவாக்கியுள்ளன. மிஷனெரி இயக்கம் சமயமாற்றத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் நினைவுகளாக, தனிநபர்களின் சமயம் மாறிய அனுபவமாக, கிறித்தவக் குடியிருப்புகளின் வரலாறாக, கிறித்தவர்கள் என்ற வெளிப்படையாகப் புலப்படும் ஒரு சமூகக் குழுவின் கலாச்சாரமாக, மொழியினையும் பிறவெளிப்பாட்டு வடிவங்களையும் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த அடிப்படையில், மொழிவழி நிகழும் இலக்கியச் செயல்பாட்டினைப் புரிந்து கொள்ள உதவும் ஆய்வு மாதிரியைக் கொண்டு தமிழ் மிஷனெரியின் இயக்கங்களை இணைத்துக் காண இயலும். அதே நேரத்தில், இக்கோட்பாட்டு நிலைபாடு தவிர்த்த சிக்கல் இரேனியஸ் என்ற கிறித்தவ மிஷனெரி ஆளுமையைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது. இது இந்த ஆய்விற்கான முதல்நிலைத் தரவுகள் குறித்ததாகும். இரேனியஸ் மிஷனெரியாகப் பணியாற்றிய இறுதிக்காலத்தில் சீர்திருத்தக் கிறித்தவ நிறுவனங்களும், மிஷன் களனும் ஆங்கிலேய மிஷனெரிகளின் தலைமையின் கீழ் வந்தன. இதனால், இரேனியசால் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வு, எழுத்து மற்றும் மிஷனெரி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க இடைவெளி, அவரது செயல்பாடுகள் ஆகியன பற்றிய நேரடித் தரவுகள் முழுமையாக திருச்சபை வரலாற்று நூல்கள் மூலம் வந்துசேரவில்லை.
எனவே, இரேனியஸ் குறித்த தரவுகளைப் பல நிலைகளில் சேகரித்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இந்த எல்லைகளுக்குள் தான் இவ்விவரணை நிகழுகிறது.
1. இரேனியசின் மிஷனெரி நடவடிக்கைகளில் காணக்கிடைக்கும் வகை மாதிரிகள் (models)
இரேனியசின் ஒட்டுமொத்த மிஷனெரி நடவடிக்கைகளும் சில அடிப்படை வகை மாதிரிகளைக் கொண்ட முழுமைகளாகும். அவை ஒரு குறிப்பிட்ட சமூக, பண்பாட்டுச் சூழலில் அவரது மிஷனெரி நடவடிக்கைகளினூடாக தனித்துவம் கொண்ட வகை மாதிரிகளாக உருபெறுகின்றன. இந்த வகைமாதிரிகள் ஒன்றோடு ஒன்று இறுகி இரேனியசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு பிரிக்க இயலா ஒழுங்கமைப்பாகக் காணக்கிடைக்கின்றன.
அவற்றைக் கீழ்வருமாறு ஒழுங்குபடுத்தலாம்.
i. மொழிகுறித்த வகைமாதிரிகள்: இவ்வகைமாதிரிகள் இரேனியசின் விவிலிய மொழிபெயர்ப்பு, துண்டுப் பிரசுரங்களை அச்சிடல் போன்றவற்றில் எத்தகைய மொழி நடையை, வழக்குகளை பயன்படுத்தவேண்டும் என்ற விவாதத்தினூடாக எழுகிறது.
ii. தமிழ்ச் சமூகம் குறித்தவை: இவ்வகைமாதிரி நிலபிரபுத்துவ மற்றும் பாளையக்கார அரசியல் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சமூகக் குழுக்களுக்கு மாற்று அமைப்புகளாகக் கிறித்தவ கிராமங்கள், பள்ளிகள், தர்மசங்கம் (charitable societies) அமைத்தல் போன்ற அவரது மிஷனெரி நடவடிக்கைகளிலிருந்து எழுகிறது.
iii. சாதீயம் குறித்த வகைமாதிரி: இவ்வகைமாதிரி வழக்கில் நிலைபெற்றிருந்த சாதி அடிப்படையிலான தனியிடங்களுக்கு (compartments) எதிராக இரேனியஸ் நிறுவிய அமைப்புகளில் அனைவருக்கும் பொதுவான வெளிகளை ஆக்கிய மிஷனெரி நடவடிக்கைகளிலிருந்து உருவம் பெறுகிறது.
2. இரண்டாவது நிலை: இவ்வகை மாதிரிகள் மிஷனெரி நடவடிக்கையாகும் நிலையில் எவ்விதம் சமூகக் குழுக்களின் பண்பாட்டு இருத்தலியல் அலைவுகளுடன் (tensions) உறவு கொள்கின்றன? (உதா) மொழி குறித்த இரேனியஸின் நிலைப்பாடு எப்படி காலங்காலமாகத் தமிழில் எழுத்து மரபு மறுக்கப்பட்டிருந்த சமூகக் குழுக்களிடம் விளைவுகளை உருவாக்குகின்றது?
3. மூன்றாவது நிலை: ஒட்டு மொத்த வகைமாதிரிகளும் ஒரு ஒழுங்கமைப்பாக, மிஷனெரிச் செயல்பாடாகத் தன்னளவோடும், பண்பாட்டுத் தொடர்ச்சிகளோடும் கொள்ளும் இடையீட்டு (mediatory) உறவினைப் புரிதல் ஆகும் அத்தகைய இடையீட்டு உறவு எந்நிலையில் சமூக உள்முரண்பாடுகளை மறுவடிவமாக்கி (transform) பண்பாட்டு மாற்றத்திற்கு வழிகோல்கிறது?
இந்நிலைகள் இக்கட்டுரையில் தனித்தனிப்பகுதிகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அனைத்தும் இணைந்த ஓர் உரையாடல் - உரைத்தல் (dialogue-narration) என்ற முறையிலேயே பேசப்படுகின்றன. இரேனியசின் மிஷனெரிச் செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்ட மேற்கூறிய வகை மாதிரிகள் மூன்று வித தனித்துவம் கொண்ட, அவரது நடவடிக்கைகளாக வெளிப்படுகின்றன. அவையாவன:
1. துண்டுப் பிரசுர சங்கங்கள் அமைத்தல். 2. பள்ளிகள், தர்ம சங்கங்கள் அமைத்தல். 3. சுயாதீனங்கொண்ட கிறித்தவ குடியிருப்புகள் அமைத்தல் போன்றவையாகும்.
இச்செயல்பாடுகள் இரேனியசின் மிஷனெரிச் செயல்பாட்டில் மையமானவை. இவை ஒவ்வொன்றிலும் மேல் வரிசைப்படுத்திய வகைமாதிரிகள் செயல்படுகின்றன. உதாரணமாக, துண்டுப் பிரசுர சங்கங்கள் அமைத்தல் என்ற இரேனியசின் மிஷனெரி நடவடிக்கையில் கீழ்க்கண்ட வகை மாதிரிகள் செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மொழி மரபினைத் தேர்ந்தெடுத்தல், தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த எழுத்து மரபினைப் புரிதல், பிற சமய மரபுகளோடு உரையாடல் போன்ற மாதிரிகள் காணக்கிடைக்கின்றன. இன்னொரு விதத்தில், இரேனியசின் இச்செயல்பாடு, மேற்கூறிய மாதிரிகளின் கூட்டுச் செயலேயாகும். இப்படியாக, இரேனியசின் ஒவ்வொரு மிஷனெரி நடவடிக்கையிலும் ஏராளமான மாதிரிகளின் ஒழுங்கைமைப்பும் அவற்றைச் செயல்படவைக்கும் நீண்ட உரையாடலும் (dialogue) காணக் கிடைக்கின்றன. இவைதான் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் மாதிரிகளாக (activiating models) செயல்பட்டிருக்கக்கூடும். மேலும் இது சீர்திருத்த மிஷனெரிகளின் வழக்கமான செயல்பாட்டில் காணக் கிடைக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் அவற்றுடன் புது உள்ளடக்கத்தினை சேர்ப்பது தான் இரேனியசின் தனிச் சிறப்பாகத் தெரிகிறது. பள்ளிகள் அமைத்தல், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடல் போன்றவை 18-வது நூற்றாண்டில் தரங்கம்பாடி மிஷன் காலத்திலேயே நிலவி வந்த வழக்கம்தான். ஆனால், பள்ளிகளை விரிவுபடுத்துவதும், அவற்றைத் தேவாலாயங்கள், கிறித்தவ கிராமங்கள் போன்ற அமைப்புகளோடு செயல்படுத்துவதும்; துண்டுப் பிரசுரங்கள் விஷயத்தில், சங்கங்களை நீண்டதூரக் கிளைகள் மூலம் ஒன்றிணைப்பதும், புதுவித மொழி குறித்த புரிதல்களுடன் அவற்றைச் செயல்படுத்துவதும் இரேனியசின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை.
துண்டுப் பிரசுர சங்கங்கள், புதிய கிறித்தவ குடியிருப்புகள், தர்ம சங்கம் போன்ற நடவடிக்கைகளினூடாகப் பாய்ந்திருக்கும் இரேனியசின் தமிழ்ச் சமூகம், தமிழ் மொழி குறித்த பார்வகைள் அவரது படைப்புலகம் கருத்துலகம் குறித்த புரிதல்களுக்கு மிகவும் அவசியமானவை. துண்டுப் பிரசுரங்கள் அவரது மொழி குறித்த மனோபாவத்தைச் (attitude) சுமந்து சென்றன. இது தமிழ்ச் சமூகத்திற்குப் புதிதானது. தமிழ் வரலாற்றில், எழுத்து மரபு! பேச்சு மரபு என்னும் இரட்டை எதிர்மறைப் பார்வை (binary opposition) நீண்டகாலமாகத் தமிழ்க் கல்வி புலத்திலும், இலக்கிய மரபிலும் நிலைத்து இருப்பதைக் அவதானிக்க வேண்டும். 18-வது நூற்றாண்டின் முதற்பகுதியில் தரங்கை மிஷனெரிகளுக்கும், பெஸ்கியின் 'மதுரா' மிஷனுக்கும் இடையில் நிகழ்ந்த விவாதங்களை நோக்கும்போது வழக்கமான தமிழ் மரபின் இரட்டை எதிர்மறை அவ்விவாதங்களினூடாக இழையோடியிருப்பது தெரியவரும். சீகன் பால்குவின் வசன நடை, மரபான தமிழ் நடையிலிருந்து வேறுபட்டிருந்த காரணத்தினால், தரங்கை மிஷனெரிகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்ப் பண்டித நடையிலாகாத தமிழ் விவிலிய நடை, இம்மண்ணில் எந்தவித வரவேற்பும் பெறாது என்ற அவதானிப்புகளும் நிலவி வந்தன. பல்வகை உரைத்தல் மரபினைக் கொண்டிருந்த கிறித்தவ விவிலியத்தை மொழிபெயர்ப்பது என்ற சவாலை எதிர்கொள்ள பேச்சு வழக்கில் நிலைபெற்றிருந்த சில கலைச் சொற்களைப் பயன்படுத்தியது 'தமிழ் மரபிற்கு எதிரானது' என்ற விமர்சனம் எழுந்ததனை: நீண்டகாலமாகத் தமிழ் மரபில் நிலைபெற்றிருந்த பேச்சு பண்டிதம் என்ற இரட்டை எதிர்மறையின் வெளிப்பாடாகவே கொள்ள வேண்டும்.
இந்த எதிர்மறையை இரேனியஸ் முற்றிலும் புதியதாய் அணுகுகிறார். இத்தகைய அணுகுமுறை அவரது ஆரம்ப தமிழ் மொழிச் செயல்பாடான தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு அனுபவத்திலிருந்து உருவம் பெறுகிறது. சென்னை வேதாகமச் சங்கம் (1804) பப்ரீஷியசின் தமிழ் விவிலிய வடிவத்தினைத் திருத்தம் செய்ய முடிவு செய்தபோது இரேனியஸ் இப்பணிக்கு 1815 ஆம் ஆண்டில் நியமிக்கப்படுகிறார். 1818 ஆண்டு நிறைவுற்ற இவ்விவிலிய மொழிதிருத்தப் பணியினை அன்றைய சீர்திருத்தக் கிறித்தவ தலைமை அங்கீகரிக்க மறுத்தது. சொல்வழி (literal) மொழிபெயர்ப்பு என்ற நிலையில் இரேனியஸ் மாற்றம் செய்திருந்தார். இப்புதிய வடிவம் தமிழ் இலக்கிய வழக்குகளுடனும், பரவலாக தமிழ் இலக்கியவாதிகளால் அங்கீகரிக்கப்பட்ட சொற்றொடர் தொகுதிகளுடனும் மறுவடிவமாக்கப்பட்டிருந்தது. மேலும் இரேனியஸ் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு நிகழ்வின் போதுதான் எதிர் கொண்ட பல பிரச்சனைகளை மையமாகக் கொண்டு மொழிபெயர்ப்பின் கொள்கைகள் என்ற சிறு ஆங்கில நூல் ஒன்றினை வெளியிட்டார். அவற்றில் அவர் எழுப்பிய மொழிபெயர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் மொழியியல் ரீதியாக அறிவியல் அடிப்படைகள் கொண்டவை ஆகும். இலக்கு மொழியான தமிழில் உருவாகும் கிறித்தவத் தமிழ் விவிலியம் எந்நிலையிலும் மூலமொழி வடிவத்திற்கும் அதில் பொதிந்துள்ள அர்த்த தொகுப்புகளுக்கும் இணையாகாது என்று கருதிய இரேனியஸ், தனது மொழிபெயர்ப்பில் கிரேக்க மற்றும் யூத மரபுப் பதங்களுக்கும், வரலாற்று நிகழ்வுகளுக்கும் அடிக்குறிப்புகள் அளித்திருந்தார். மேலும் விவிலிய மொழிபெயர்ப்பில் இலக்கு மொழியின் இலக்கணக் கட்டமைப்பிற்கும், (எழுத்து, பண்டிதம் அடிப்படையிலானது) வரலாற்றுப் பாரம்பரியத்திற்கும் (பேச்சு) முக்கியத்துவமளித்த இரேனியஸ், சொல்வழி மொழிபெயர்ப்பு தவறான புரிதலையும், அர்த்தம் கொள்வதில் இடைவெளியையும் உருவாக்கிவிடக் கூடும் எனக் கருதினார். இரேனியசின் விவிலிய வடிவத்தினை ஆங்கிலேயத்தலைமை ஏற்க மறுத்தாலும், தமிழ் மொழி குறித்தும், தமிழ் விவிலிய நடை குறித்தும் அவ்வடிவம் புதிய புரிதல்களை உருவாக்கியது.
இரேனியசின் பேச்சு, பண்டிதம் என்ற இரட்டை எதிர்மறையைச் சமன் செய்யும் மொழி நிலைபாடு, அவரது விவிலிய நடை குறித்து விவாதங்களினூடாகவே எழுகிறது. 'பேச்சு' வட்டார சமூகங்களின் உரைத்தல் மரபுகளை அடிப்படையாகக் கொண்டது. இம்மரபுகளை ஒன்றிணைக்கும் ஒரு எழுத்து மரபினை, தமிழ் மரபிலிருந்து இரேனியஸ் அடையாளங்காண்கிறார். இது நீண்டகாலமாக வர்த்தகர்களாலும், வரலாற்று ஆவண எழுத்தாளர்களாலும் பயன்படுத்தப்பட்ட நடையாகும். மாறாக, பண்டிதம் என்பது நீண்டகாலமாக சைவ, வைணவ மடங்களில் நிலவிய கல்விமுறை, பக்தி மீட்சி என்பதன் அடிப்படையிலேயே செயல்பட்டதால் மக்கள் மரபிற்கும் நிலவி வந்த இலக்கிய மரபிற்கும் இருந்த இடைவெளியினை தமிழ் இலக்கிய வரலாற்றில் அவதானிக்க இயலுகிறது. எனவே, இரு மரபுகளும் குறுகிய வாசகர்களையும், பண்பாட்டு எல்லைகளையும் கொண்ட மரபுகளாகையால், அதிகமாகச் சென்றடையும் வர்த்தகர்களும், ஆவண எழுத்தாளர்களும் பயன்படுத்திய நடையினை இரேனியஸ் கையாண்டார். இந்நடை வழக்கமான தமிழ்பண்டித நடையிலிருந்த கலைச் சொற்களையும், வாய்மொழி மரபிலிருந்த சொற்றொடர் தொகுதிகளையும் உள்வாங்கிக் கொண்ட நடையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, பேச்சு, பண்டிதம் என்ற இரட்டை எதிர்மறைச் சமமாக்க, எந்தவிதச் சார்புத் தன்மை கொண்டநடையையும் தொடராமல் புதுவித கல்விப்புலத்தீட்டு (Academic Taboo) அற்ற ஒருநடையையே இரேனியஸ் கையாள முனைகிறார்.
இரேனியஸின் மொழி குறித்த கருத்தாக்கங்கள் இன்னும் விரிவானவை. அவை அவரது படைப்புலகினை அறுதியிட்டுக் கூறும் மிக முக்கியமான வெளிப்பாடாக இருக்கின்றன என்பதனை உணரும்போது, மொழிகுறித்த புரிதல் ஒரு சமூகம் குறித்த புரிதலுக்கும் அதன் மறு சீரமைப்புக்கும் எத்தகைய முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்பதனையும் அறிய இயலும். அவரது தமிழ் மொழி குறித்த பார்வை தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் ஒரு முக்கியமான சிதைவு (rupture) ஆகும். இது அவரது பிற செயல்பாடுகளுக்கும் அடிப்படையானது. இரேனியஸின் மொழி குறித்த பார்வை, ஒருமொழியின் உள்ளார்ந்த தர்க்கத்தினையும், அது சார்ந்த வரலாற்று முரண்களையும் தேடுகிறது. எந்த மொழியும் பேச்சின் அடிப்படையிலானது; அதுவே ஒரு மொழியின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. அதுபோல், எழுத்து மரபு காலங்காலாமாக, பல சிந்தனை மரபுகளை சில விதிகளின்படி பதிவு செய்கிறது. இரண்டு மரபுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் இரேனியசின் மொழி குறித்த கருத்தாக்கம் எழுகிறது. அதாவது, வாழும் மொழியையும், எழுத்து மரபு காலங்காலமாக உருவாக்கிய சொற்றொடர்களையும், அறிவுத் தொடர்களையும் இணைக்க முயல்வது தான் இரேனியசின் உத்தி. இதன் மூலம் பேச்சு / பண்டிதம் என்ற தமிழ் இலக்கிய முறையில் நிலவிவந்த எதிர்மறைப் பண்பை இல்லாமல் செய்ய முயலுகிறார் இரேனியஸ்.
நவீன இலக்கிய மரபுகளைக் கொண்ட ஐரோப்பியச் சூழலில் நிகழ்ந்த இலக்கிய முயற்சிகள் பலவும், (eg. Romanticism) இத்தகையதே. ஒரு வரலாற்றுச் சூழலில் கலைஞனும், இலக்கியவாதியும் நிகழ்த்தும் இயல்பான படைப்புச் செயல்கள் அனைத்தும் இத்தன்மையைக் கொண்டதாகவே இருக்க முடியும். வாழும் மொழியின் குறியீடுகளையும், எழுத்து மரபுலுள்ள வளத்தையும் தனிமைப்படுத்தாமல் ஒன்றிணைப்பது வரலற்று நிர்ப்பந்தமாகும். இத்தகைய இடைவெளிகளை ஒன்றிணைக்கும் புரட்சிகர நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு செல்படுவதுதான் இரேனியஸின் படைப்புலகம் / கருத்துலகம் எனக் கருத இடமுண்டு. இத்தகையச் செல்பாட்டினடிப்படையில் மொழிப் பயன்பாடு ஒரு புரட்சிகர மாற்றத்தின் வடிவகாலாக மாறுகிறது. மொழியினைப் பயன்படுத்தும் ஒரு சிந்தனைவாதி அல்லது படைப்பாளி ஒரு மாற்றத்தினை நிகழ்த்துகிறவனாக மாறுகிறான். பேசும் மரபிற்கும் எழுத்து மரபிற்குமான இடைவெளியைக் குறைப்பது என்பது ஒரு சாதாரண மனிதனை ஒரு படைப்புச் செயல்பாடு அல்லது மொழிச் செயல்பாட்டிற்கு அருகே வரவழைக்கும் முயற்சியாகும். இதன்மூலம் ஒரு சாதாரண மனிதனுக்கும் ஒரு மொழியில் உரைத்தல் மரபைத் தன்னகத்தே கொள்ளும் ஆற்றல் கொண்டவனாக மாறுகிறான். இந்த முயற்சி வெற்றிடமான பண்பாட்டு நிலையைக் (எழுத்து மரபினை) கொண்ட ஒரு தனியான (individual) ஒரு சித்தாந்தத் தொகுதியின் (doctrine) உடைமையாளனாக அவனை மாற்றும் முயற்சியாகும்.
இரேனியசின் பிற மிஷனெரிச் செயல்பாடுகளான சுயாதீனங் கொண்ட கிறித்தவ குடியிருப்புகள், பள்ளிகள், தர்மச் சங்கம் அமைத்தல் போன்றவையும் அவரது மொழிகுறித்த மாதிரிகளைப் போலவே நீண்ட வரலாற்று உரையாடல்களினடிப்படையில் உருவானவை என்றே தோன்றுகின்றன. அவர் மிஷனெரியாக நெல்லை வந்த காலம், திருநெல்வேலி வரலாற்றில் முக்கியமானது அந்தண - வேளாள அரசியல் ஆளுகைக்கு வெளியே, பெரும் நிலப்பகுதியாக இருந்த வறண்ட நிலப்பகுதிகளில் (தேரி) அவர் பணி செய்தார். நாயக்கர் காலத்தில் வழக்கிலிருந்த பாளையக்காரர்களின் முறையற்ற வரிவசூலிப்பு, நாயக்கர் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்பும் அந்தந்தப் பாளையக்காரர்களின் வம்சாவழியினராலும், கூலிப்படையாலும் தொடர்ந்திருந்தது. இதனால் அதிகப் பாதிப்புக்குள்ளான பகுதிகள் திருநெல்வேலியில் உள்ள வறண்ட நிலப்பகுதிகளாகும். கிறித்தவக் குடியிருப்புகள் என்ற அமைப்பு அத்தகைய அரசியல் ஒழுங்கமைப்புக்கு சவாலாகவே உருவாக்கப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது. இத்தகைய கிறித்தவக் குடியிருப்புகள் 1830 ல் உருவாக்கப்பட்ட தர்மசங்கம் (Philanthropic Society) என்ற அமைப்புடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. இது கிறித்தவக் குடியிருப்புகளுக்கும், கிறித்தவர்களுக்கும் நிலச் சுவான்தார்களால் நிகழ்ந்த தொல்லைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நிதிமையமாகும் (charity). கிறித்தவக் குடியிருப்புகளில் துண்டுப் பிரசுர சங்கங்களை அமைப்பதிலும், பள்ளிகள் அமைப்பதிலும் இந்த நிதியம் ஈடுபட்டிருந்தது. இவைகள் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டதான குறிப்புகளை இராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பெர்க் தருகிறார்.
இரேனியசால் உருவாக்கப்பட்ட கிறித்தவக் குடியிருப்புகள், பாடசாலைகள், தர்மசங்கங்கள் போன்றவை ஒன்றை ஒன்று சார்ந்து உதவி செய்யும் ஒழுங்கமைவுடன் அமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பிறவற்றோடு இணைக்கப்பட்டு, கிறித்தவத் திருச்சபைகள், பஞ்சாயத்து அமைப்பு போன்றவற்றின் நேரடித் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாக ஃப்ரிக்கென்பெர்க் (1976) கூறுகிறார். கிறித்தவக் கிராமத்தின் தலைவர், சபையின் குரு பாடசாலை துண்டுப் பிரசுரக் குழுவினர், பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் இத்தலைமைத்துவத்தில் முக்கியமானவர்கள்.
இத்தகைய சுயாதீனங் கொண்ட அமைப்புகள், அன்றைய அரசியல் சூழலில் கிறித்தவர்களையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் காப்பதற்குப் பயன்பட்டிருக்கக்கூடும். மேலும், இச்சுயாதீன அமைப்புகளை பாளையக்காரர் அரசியல் முறையில் நிலவிய சமூக, அரசியல் மேலாண்மைக்கு மாற்றாக இரேனியசால் முன்வைக்கப்பட்டட ஓர் சமூகத் தீர்வாகவே கொள்ளத் தோன்றுகிறது. எனவே, இச்சயல்களனைத்தையும் ஓர் குறிப்பிட்ட மக்கள் எதிர்கொண்ட அரசியல், பண்பாட்டுச் சார்புகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் ஒரு புரட்சிகரச் செயல்பாடாகவும், அறிவாக்கச் செயல்பாடாகவும் நாம் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது.
இந்த விவாதங்களின் அடிப்படையில் இரேனியசின் படைப்புலகம், கருத்துலகம் செயல்படும் அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தினைப் பின்வருமாறு கூறலாம். இரேனியசின் பார்வை சமூகத் தொகுதியில் அதன் உள்ளார்ந்த இயங்கு தளத்தைக் காண முயன்று, அவற்றோடு செயல்படும் முரணினைத் தீர்க்க முயல்கிறது. இரேனியசின் ஒவ்வொரு மிஷனெரி நடவடிக்கைகளிலுமே இந்த பொதுத்தன்மையைக் காண இயலுகிறது. (மொழி குறித்த அல்லது துணூடுப் பிரசுர சங்கங்கள்) பேச்சு, பண்டிதம் என்ற எதிர்மறையையும், கிறித்தவக் குடியிருப்புகள் என்ற நடவடிக்கையில், சமூகக் குழுக்களை பாளையக்காரர், அந்தண வேளாள பொருளாதாரச் சார்பு அமைப்பிலிருந்து தனிமைப்படுத்தி சுயாதீனங் கொண்ட சமூகமாக மாற்றுவதும், தர்மசங்கம் என்ற செயல்பாட்டில் அனைத்து மிஷனெரி நிறுவனங்களுக்கும் உள்ளார்ந்த பொருளாதார உதவி செய்தல் போன்ற தன்மைகளும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய, சமூக முரண்களுக்கு இரேனியசால் அளிக்கப்பட்ட மாற்று (alternative) எப்படி ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அர்த்தம் கொண்ட முழுமைகளாக மாறியது என்பதை அறியும் போதுதான் இந்த புரிதல் நிலை முழுமையாகும். கிறித்தவக் குடியிருப்புகளின் வாய்மொழி வரலாறு, கிறித்தவக் குடும்பங்களின் மதம்மாறிய அனுபவங்கள், இரேனியசுடன் பணிசெய்த உபதேசியார்களின் (Catechists) நாட்குறிப்புகள். 19 ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியில் திருநெல்வேலியை மையங்கொண்டு கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் உருவான புதிய வர்த்தக மையங்களின் வாய்மொழி வரலாறு போன்றவற்றை இதற்குச் சான்றாதாரமாகக் கொண்டு இந்த ஆய்வை நம்மால் முழுமையாக்கக்கூடும்.
அடிக்குறிப்புகள்
1. தரங்கை என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி என்ற கடற்கரைக் கிராமம் ஆகும். 17-வது நூற்றாண்டின் இறுதி காலப் பகுதியில் டேனிசாரின் காலனியாக இருந்த இப்பகுதியில், டென்மார்க் மன்னன் நான்காம் பிரடெரிக்-இன் விருப்பத்தின்படி சீர்திருத்தக்கிறித்தவ மிஷன் ஆரம்பிக்கப்பட்டது (1707). டேனியர்கள் எவரும் இப்பணிக்கு முன் வராததால் ஜெர்மனியின் ஹாலே நகரின் பல்கலைக்கழகத்தில் இறையியல் பயின்று கொண்டிருந்த மாணவர்களான கீகன்பால், ஹென்றி புளூசோ போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 19-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியின் லெய்ப்சிஸ் மிஷன் (1847) தரங்கை மிஷனை நடத்தியது. மேலும் பார்க். Arnd B. Lehmann; It began at Tranguebar, Madras, Christian Leterature Society. 1956: Daniel Jeyaraj, Barly Tamil Bible Translation in Tranguebar, Dharma Deepika Vol. 1(1), pp. (67-77), 1997.
2. இக்கருதுகோளுக்கான விளக்கத்திற்கு பார்க்க: அடிக்குறிப்பு எண்.27
3. 19-ம் நூற்றாண்டில் முதற்பகுதியில் திருநெல்வேலிப் பகுதியில் பாளையக்காரர், நிலபிரபுத்துவத் தலைவர்கள் மற்றும் ஆங்கில கம்பெனியர்களுக்குமான கருத்தியல் புரிதலுக்கு, காண்க; R.E. Frykenberg, . (1976) " The impact of Conversion and Social Reform Upon Society in South India During the Late Company Period : Questions Concerning Hindu / Christian Encounters, "Indian Society and the Beginnings of Modernization, c. 1830-50 (London: School of Oriental and African Studies, 1976), 187-243 Edited by C.H. Philips and M.D. Wainwright, pp. 187-243, 1976. மேலும் R.E. Frykenberg, "Elite formation in Nineteenth Century South India; An Interpretive Analysis, "Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, Kualalumpur - Malaysia. Vol. Ipp. 558-581, 1966.
4. மேலது R.E. Frykenberg, 1976. p.211
5. மேலும் R.E. Frykenberg, 1966, pp. 571 - 576.
6. பண்பாட்டு வெற்றிடம் என்பது நீண்ட காலமாகத் தமிழ் எழுத்து மரபில் பிரதிநிதித்துவம் பெறாத தமிழ்நாட்டின் வறண்ட நிலப்பகுதியின் (பாலை) இசை, சமய மரபுகளையும், அவற்றின் மௌனிக்கப்பட்ட வரலாற்றையும் குறிக்கிறது. இதற்கான வரலாற்று அடிப்படைகளுக்கு, காண்க. R.E. Frykenberg, 1966, nky J/pp.558-559
7. இதே தன்மை கொண்ட மிஷனெரிச் செயல்பாட்டினை, திருநெல்வேலியில் பணியாற்றிய அருட்தந்தை கௌசானல் அவர்களிடமும் காண இயலும்
8. படைப்புலகம் தொடர்பான கோட்பாட்டு நிலைபாடு அபிலார்டின் மொழி குறித்த உரையாடல்களிலிருந்து உருவாகிறது. இதன் விரிவான பின்னணிக்கு, காண்க. H.S. Gill, (1996), The Semiotics of Conceptual Structures, New Delhi: Bahri PUblishing House. தமிழ் சூழலை இந்தக் கோட்பாட்டு நிலையின் விவாதங்களுக்கு காண்க. Louis Joseph Dharmaraj, "Theory and Praxis of Textual Interpretation: Typology of Two Paradigms", South Indian Folklorist, Vol. 2(1), pp. 77-119, 1998.
9. H.S. Gill, Abelardian Semiotics and other Essays, New Delhi : Bahri Publications. pp. 48-49, 1989.
10. பார்க்க Key Concepts in Communication and Cultural Studies Tim O' Sulliram (etal, eds.) Routledge, p. 283, 1994.
11. உளச்சார்பு என்பது 'site of consciousness' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
12. மனிதப்புலப்படுத்தம் (communication) அகவயங்களுக்கிடையிலானது என்ற குறியியல் (semiotics) விஞ்ஞான அடிப்படையிலிருந்து, அகவயம் என்பது மனிதன் தான் எதிர்கொள்ளும் ஒரு செய்தியினை எப்படி எதிர்கொள்கிறான், அதற்கான அடிப்படை மூலாதாரம் (source) எங்கிருந்து வருகிறது, எங்கே சேமிக்கப்படுகிறது என்பவை தொடர்பானதே 'அகவயம்' என்ற கருத்தாக்கம்.
13. Benedict Anderson, Imagined Communities:Reflextions on the Origin and Sp read of Nationalism (1983), p. 1991
14. நாட்டார் வழக்காறுகள் (Folklore) பல மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் புலப்படுத்த ஒழுங்கமைப்பாகச் செயல்படுகின்றன. எனவே இது சார்ந்த ஒரு வெளிப்பாட்டு வடிவம், குறிப்பிட்ட மக்களை அல்லது பண்பாட்டுக் குழுக்களை ஒரு தேசம் கற்பிதம் கொள்வதைப் போலவே ஒரு குழுமமாகப் புலப்படுத்த ஒழுங்கமைப்பிலாக்குகிறது. உதாரணமாக, வில்லுப்பாட்டு நிகழ்விற்காக எழுதப்பட்ட ஒரு கதைப்பாடல் திருநெல்வேலி, சிதம்பரனார், கன்னியாகுமரி மக்களைக் கற்பிதம் கொள்வதோடு அப்பகுதியில் உள்ள பல சமூகக் குழுக்களையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பார்க்க. J.B. Flueckiger, "Genre and community in the Folklore Sytem of Chhatisgarh", in Arjuns Appadurai, etal (ed.), Gender, Genre and Power in South Asian Expressive Traditions, Philadelphia: University of Pensylramia Press, p. 186, 1991
15. அறிதல் சார்விஞ்ஞானம் (congitive science) பண்பாட்டையும், அதன் பங்கேற்பாளர்களையும் எவ்வாறு நோக்குகிறது என்பதிலிருந்து இக்கருத்தாக்கங்கள் பெறப்பட்டவைகளாகும். மேலும் பார்க்க, R.D' Andrade, "Cultural Meaning System", in Richard A. Shreder and Robert A. Le Vine (etal, ed.,) Culture Theory : Essays on MInd, Selfand Emotion, Cambridge : Cambridge University Press, pp. 88-119, 1984.
16. இங்குப் பல நிலைகள் என்பது, வாய்மொழி வழக்காறுகள், வரலாற்று ஆவணங்கள், தமிழ் மிஷனெரிகளின் எழுத்துக்கள், தமிழ் விவிலிய மொழி பெயர்ப்பு ஆவணங்கள் என்ற நிலைகளில் இரேனியஸ் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கொள்ளப்படுகிறது.
17. பண்பாட்டு மாதிரி, மாதிரிகள் மற்றும் வகை மாதிரிகள் என்ற வார்த்தைப் பயன்பாடுகளில் வேறுபாடு இருக்கிறது. மொழி என்பது ஓர் பண்பாட்டு மாதிரி ஆனால் இரேனியசின் மிஷனெரி நடவடிக்கைகளையும், படைப்புலகத்தினையும் குறித்துப் பேசும்போது வகைமாதிரி எனக் கொள்ளப்படுகிறது.
18. James Hough, A reply to the Letters of the Abbe Dubois on the State of Christianity in India, London. p. 322, 1824
19. Memoir of the Rev. C.T.E. Rhenius, Comprising Extracts from his Journal and Corresspondence, By his son J. Rhenius of Edinburg. London. p. 300, 1841.
20. An Essay on the Principles of Translating the Holy Scriptures with critical remarks on Various Passages, Particularly in Reference to Tamil Language, by C.T.E. Rhenius. Printed at the Mission Press, Nagercoil, 1827. மேலும் இரேனியசின் வேதமொழிபெயர்ப்பு கோட்பாட்டின் சுருக்கம் காண்க. Memair.... pp (299-301)
21. மேலது,
22. இரேனியசின் மொழி குறித்த பார்வைகளுக்குக் காண்க. சரோஜினி பாக்கியமுத்து, "விவிலியமும் தமிழும்", குருகுல இறையியல் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், சென்னை, பக்கங்கள் 94/136. 1990.
23. பேச்சு மரபினையும் பண்டித நடையையும் இணைக்கும் இலக்கிய முயற்சிகள் பக்தி இயக்க காலத்திலேயே நிலவ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அப்பார்வைகள் கல்விப்புலத்தில் தாக்கங்களை உருவாக்கியதா? எனத் தெரியவில்லை.
24. புனைவியல் இயக்கம் (Romanticism) செவ்வியல் வெளிப்பாட்டு முறைக்கு எதிரானது. தனியனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாட்டார் வழக்காற்று மரபின் அடிப்படையைக் கொண்டது. செவ்வியல் கற்பிதங்களுக்கு எதிராகவும், இதுவரையிலும் பிரதிநிதித்துவம் பெறாத நாட்டார் வழக்காற்று மரபுகளை மையப்படுத்தி எழுந்த இயக்கம். ஐரோப்பாவில் உருவான இவ்வியக்கம் உருவாக்கிய விவாதங்களுக்குப் பார்க்க, Howard Jones, Revolution and Romanticism Harward, Harward University Press, 1974.
25. R.E. Frykenbery, மேலது, 1979, பக். 201.
26. இரேனியஸ் தன்னோடு பணி செய்த உபதேசியார்களிடம் நாட்குறிப்பினை (டைரி) தொடர்ந்து எழுதும் நடைமுறையை அறிமுகப்படுத்துகிறார். இத்தகையச் செயல் பின்னாளில், "சவரிராயப்பிள்ளை டைரி" (1898) என்ற மிகமுக்கிய ஆவணமாக நம்மிடம் வந்திருக்கிறது. பிற உபதேசிமார்களின் நாட்குறிப்புகள் குறித்த தகவல் இல்லை. மேலும், இப்பகுதியில் ஆய்வு தேவைப்படுகிறது. சவரிராயப்பிள்ளை டைரி குறித்து அறிய, David Packia Muthu and Sarojini Packia Muthu, Savariraya Pillai's Diary : A Document of Transcultural interchage, Dharma Deepika, December 1997. pp. 75-82. மற்றும் John J. Paul and R.E. Frykenbery "A research note on the Discovery of Writings by Savariraya Pillai, A Tamil Diarist of Mid-Nineteenth Century Tinnelvely, Journal of Asian Studies, Vol. XLIV (3), pp. 521-528-1985.
27. 19-ம் நூற்றாண்டில் விருதுநகர், திருமங்கலம், சாத்தூர், பாளையப்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, போன்ற வியாபார மையங்களின் தோற்றம் தன்மையளவில் இரேனியசின் தர்ம சங்கத்தின் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. இப்பேட்டைகள் வறண்ட நிலப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த நாடார்களால் உருவாக்கப்பட்டது. பொருட்களை எடுத்துச் செல்லவும், பேட்டைகளைப் பாளையக்காரர்களிடமிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களே செய்திருந்தனர் என ஹார்டுகிரேவ் கூறுகிறார். இந்நகரங்கள் "மகமை" என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட நிதியினடிப்படையில் வளர்க்கப்பட்டன. Robert L. Hardgrave, The Nadars of Tamil Nadu, Berkeley : University of California Press. 1969.pp.97-100).
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரேனியசின் படைப்புலகம் / கருத்துலகம் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - சமூக, இரேனியசின், தமிழ், மிஷனெரி, இரேனியஸ், மொழி, இலக்கிய, குறித்த, கொண்ட, கிறித்தவ, கொண்டு, பண்பாட்டு, அவரது, புரிந்து, அரசியல், என்பது, எழுத்து, அல்லது, இத்தகைய, படைப்புலகம், மிஷனெரிச், மேலும், சமூகக், ", கருத்துலகம், மாதிரிகள், சூழலில், செயல்படும், பேச்சு, விவிலிய, கிறித்தவக், ஆய்வு, பண்பாட்டுத், தமிழ்ச், நிகழ்ந்த, மிகவும், படைப்பு, தான், நிலை, துண்டுப், புலப்படுத்த, மனித, அடையாளம், கொள்ளும், நிகழும், வரலாற்று, அமைத்தல், குடியிருப்புகள், அடிப்படையில், அடிப்படையாகக், திருநெல்வேலி, நிலையில், மொழிபெயர்ப்பு, பண்டிதம், குறிப்பிட்ட, உருவான, படைப்புச், எழுகிறது, புரட்சிகர, என்பதை, நூற்றாண்டில், எவ்விதம், உறவு, முன்பு, ஒவ்வொரு, வந்த, காண்க, வரலாற்றில், உரைத்தல், இயலும், செயல்பாடு, மாதிரிகளை, செயல்பாட்டில், கொள்ள, எந்த, உள்ளார்ந்த, புரிதல், இரட்டை, சங்கங்கள், tamil, பார்க்க, press, frykenberg, பிரசுர, மரபு, சமூகச், models, சார்ந்த, ஒன்றிணைக்கும், பள்ளிகள், பார்வை, மொழியியல், வகைமாதிரிகள், இங்கு, முக்கியமானது, இரேனியசால், தனது, மக்கள், பாளையக்காரர், நிலவி, சீர்திருத்தக், கிறித்தவம், நூற்றாண்டின், செய்யும், தரங்கை, வழக்கில், வேண்டும், போன்றவை, இயக்கங்கள், முக்கிய, தேசம், மிகப்பெரிய, எத்தகைய, முயற்சிகள், ஆகும், பொருள், இரேனியஸின், மூலம், நடவடிக்கைகளில், நிலவிய, மிஷன், அவர், நிலைபாடு, காய்களின், புரட்சிகரச், உளச்சார்பு, எப்படி, உள்ள, ஏனெனில், இருக்கிறது, பிரக்ஞை, கருத்தாக்கம், செய்ய, பகுதியில், வழக்கமான, சமூகத்தில், மிஷனெரிகளின், வாழ்ந்த, society, south, இடையீட்டு, கூறும், studies, மரபினை, இதன், இதற்கான, வழக்காற்று, வறண்ட, university, குறித்துப், தனித்துவம், கொள்கை, தோன்றுகிறது, வாய்மொழி, உருவாக்கம், காணக், இருந்த, ஒன்று, மரபுகளையும், பக்தி, மொழிச், இரண்டாவது, கோட்பாட்டு, இப்பகுதியில், அறிதல், கிடைக்கும், வந்தார், குறித்தும், மூன்று, அபிலார்டின், முனைவுகள், romanticism, சுயாதீனங், உருவாக்கப்பட்ட, மரபிற்கும், மரபுகளை, மொழியின், எனக், சீர்திருத்த, india, நாட்டார், rhenius, etal, semiotics, london, மேலது, திருநெல்வேலிப், சங்கம், நாயக்கர், நடவடிக்கை, மொழிகுறித்த, காணக்கிடைக்கின்றன, தொடர்ந்து, கீழ், சமூகம், தர்மசங்கம், நீண்ட, பிரசுரங்கள், செயல்படுகின்றன, தர்ம, நிலைபெற்றிருந்த, வியாபார, இயக்கம், குழுக்களை, முரண்பாடுகளை, உருவாக்கப், அதாவது, வரலாற்றுச், உருவாகிய, எழுந்த, இலக்கியக், பெறும், பௌதீக, செயல்பாடுகளிலிருந்து, அத்தகைய, வடிவம், இக்கட்டுரையின், உருவம், மிஷனெரிகள், கேள்விகள், ஐரோப்பியச், இக்கருத்தாக்கம், இயலுகிறது, அன்றைய, சமன், அவதானிக்க, காணும், மாதிரி, மிஷனெரியின், நடவடிக்கையில், இக்கட்டுரையில், இன்னொரு, மேற்கூறிய, குறித்து, அறிவியல், தரவுகள், நிலைகளை, இலக்கியத்தின், உள்கட்டமைப்பு, சாத்தியப்பாடுகள், ஒழுங்கமைப்பில், community, செயல்பாடுகளிலும், நிகழ்வுகளிலும், நகர்விற்கான, தன்மை, என்கிறார், நவீன, உருவாக்கித், வெளிப்பாட்டு, கற்பிதம், முழுமையாக, மொழியும், மரபுகளும், நிலைகளில், கொண்டிருக்கும், மாறாக, ஆய்வுக், வேளாள, நாம், இலக்கியப், கண்டு, திருநெல்வேலியில், உருவாக்கும், தொகுதிகள், மனிதன், சூழலை, அவற்றின், நிலைகளையும், வரலாறு, அந்தண, என்பதைக்