முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » படைப்பிலக்கியச் சாதனையாளர்...
இலக்கியக் கட்டுரைகள் - படைப்பிலக்கியச் சாதனையாளர்...
அரைக்கால் டிராயரும் அழுக்குச் சட்டையுமாக மதுரை சென்ரல் சினிமா தியேட்டர் வாசலில் அந்தச் சிறுவன் பாட்டுப் புத்தகம் விற்றது ஒரு காலம்... அதே சிறுவன் பின்னொரு சமயத்தில் தஞ்சை லாட்ஜ் ஒன்றில் ரூம் பாயாக ஓடிக் கொண்டிருந்தான்.
படைப்பிலக்கியத்தில் இந்தப் பையன் சாதனை புரிவான் என்று தீர்மானித்து கலைவாணி அவன் மீது கடைக்கண் பார்வை அருளினாள் போலும்...
இதுதான் இலக்கியம் என்று இன்றைக்கு எண்ணற்ற படைப்புகளை அவர் வழங்கிவிட்டார்.
அவர் தான் ஜெயகாந்தன்
கடலூரிலிருந்து தனது அன்னையையும் தம்பியையும் அழைத்து வந்து சென்னையில் குடும்பமாக வாழத் தொடங்கினார் ஜெயகாந்தன். அதன்பின் அவரது எழுதுகோல் விளையாடத் தொடங்கி விட்டது. போலி எழுத்துகளைப் பொசுக்கத் தொடங்கி விட்டது.
யார் இந்த ஜெயகாந்தன்? என்று இலக்கிய உலகமே கேட்கத் தொடங்கிவிட்டது. என்றாலும், வருமானம் பெரிதாக இல்லை. குடும்பம் என்று அமைந்த பின்னர், வயிற்றுப்பாட்டுக்கும் வழி காணப் போதிய வருமானம் வேண்டாமா? அம்மாவுக்கு இட்லிக் கடை வைத்துக் கொடுக்கலாமா? அக்கம் பக்க வீடுகளில் இட்லி விற்றுக் குடும்பத்தைச் சுமக்கலாமா? என்று சிந்தனை ஓடியது.
இப்படி அவர் வாழ்க்கைக்கு வழி தேடி அலைமோதிய போதிலும் அதற்கு முன்னரே அவர் அரசியல் துறையிலும் எழுத்துத் துறையிலும் பக்குவம் பெற்றுவிட்டார். சரஸ்வதி என்ற இலக்கிய ஏட்டில் வெளியான அவரது சிறுகதைகள் பத்திரிக்கை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஒரு நாள் மாலை ஜெயகாந்தன் கடற்கரைக்குச் சென்றார். தமிழ் உலகம் அறிந்த சாமி சிதம்பரனார் அங்கே வீற்றிருந்தார். அவருக்கு அருகில் இவரும் அமர்ந்தார். ஒருவன் பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டு வந்தான். சிதம்பரனார் வாங்கினார்... ஜெயகாந்தனுக்கும் கொடுத்தார்.
தம்பி இங்கே கொத்துக்கடலையால் செய்த சுண்டல் கிடைக்கவில்லையே என்று கேட்டார். நாமே அந்த வியாபாரத்தைச் செய்தால் என்ன? என்று ஜெயகாந்தனுக்கு தோன்றியது. அய்யா, நாளை நானே கொத்துக்கடலை சுண்டல் கொண்டு வந்து விற்கிறேன். நீங்கள் தான் எனது முதல் கஸ்டமர் என்று ஜெயகாந்தன் துள்ளிக் குதித்து எழுந்தார். வீட்டுக்கு விரைந்தார். ஆனால் வீட்டில் நடந்ததோ வேறு!...
வீட்டுக்கு வந்த ஜெயகாந்தனிடம் அவரது தாய் சொன்னார்: ஆனந்த விகடனிலிருந்து வந்திருந்தார்கள். ஏதோ கதை தருவதாகச் சொன்னாயாமே? போய்ப் பார்...
அடுத்த நாள் ஜெயகாந்தன் விகடன் அலுவலகம் போனார், கதைக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்? என்று கேட்டார்.
எழுபத்தைந்து ரூபாய்.
பிரமித்துப் போனார். அப்போது அவருடைய மாதச் செலவுக்கு அதிகபட்சம் ஐம்பது ரூபாய் தேவை. அதற்கே பிரமித்தால்? பிறகு அவருடைய ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதையாக விகடனில் வந்தது, சிறப்பு சன்மானத்துடன்.
பனிப்படலத்துக்குப் பின்னே இருந்த அவரது ஆற்றலை, திறமையை வெளிச்ச உலகத்துக்கு பல பத்திரிக்கைகள் கொண்டு வந்தன.
பத்திரிக்கைகளில் தொடர்ந்து அவரது சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் வெளிவந்தன. சமுதாயத்தின் சகல பிரிவுகளிலும் அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகியது.
வெளிநாட்டு நல்ல இலக்கியங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாரதி ஆசைப்பட்டான். ஆனால் ஜெயகாந்தனின் படைப்புகளை வெளிநாடுகள் விரும்பித் தங்கள் மொழிக்கு அழைத்தன.
ஜெயகாந்தனின் படைப்புகளில் புதிய நடை உருவானது. நிதர்சனத்துக்குத் தொடர்பில்லாத ராஜா - ராணிக் கதைகளை எழுத அவரது பேனா மறுத்துவிட்டது. அவர் வாழ்க்கையின் சகல மேடு - பள்ளங்களிலும் சஞ்சரித்தவர். அங்கே அவர் சந்தித்த சமானிய மக்கள் தான் கதாநாயகர் - நாயகிகள்.
1972 - ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அவரைத் தேடி வந்தது - "சில நேரங்களில் சில மனிதர்கள்", படைப்புக்காக.
1978 - ம் ஆண்டு தமிழக அரசின் பரிசு, ஜெயகாந்தன் வீட்டுக் கதவை தட்டியது - "சில நேரங்களில் சில மனிதர்களுக்காக". அதே ஆண்டு சோவியத் நாடு நேரு விருது அவரை நாடி வந்தது. "இமயத்துக்கு அப்பால்", என்ற படைப்புக்காக.
1979 - ம் ஆண்டு "கருணை உள்ளம்" - சிறந்த திரைப்படத்துக்காகவும் சிறந்த கதைக்காவும் தமிழக அரசின் இரண்டு விருதுகள் பெற்றது.
1986 - ம் ஆண்டு அவருக்கு ராஜராஜன் விருது அளித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பெருமை தேடிக் கொண்டது. அவரது "சுந்தர காண்டம்" நாவலுக்காக. அதே ஆண்டு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, ஜெயகாந்தனின் "ஜய ஜய சங்கர" படைப்புக்காக கிடைத்தது. இப்படி தமிழக அரசு அவருக்கு மீண்டும் மீண்டும் பரிசு வழங்கியது.
திடீரென ஜெயகாந்தனிடமிருந்து எழுத்துக்கள் இல்லை. அவர் எங்கோ தன்னை மறைத்துக் கொண்டார். வருடங்கள் பலவும் உருண்டோடிவிட்ட நிலையில், ஒரு பத்திரிக்கைக்காக அவர் கொடுத்த உரையாடல்...
தங்கள் இளமைக் கல்வி பற்றி...
பொருளாதார ரீதியாக எனது குடும்பம் சிதைந்து போயிருந்தது. எனவே, பள்ளிக் கல்வி என்பது சொல்லும்படியாக இல்லை. சிதம்பரத்திலும் கடலூரிலும் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். அவ்வளவுதான்.
இளம் பருவத்திலேயே சென்னைக்கு வந்தேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் எனது கல்லூரி. அன்றைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தான் எனது ஆசான்கள்.
அரசியல் ஈடுபாடு என்பது தன்னிச்சையாக நான் ஏற்படுத்திக் கொண்டது அல்ல. பன்னிரண்டாவது வயதில் கம்பூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியனானேன்.
பத்திரிக்கை, பிரசுரங்களுக்கு எழுதுவது, அச்சடிப்பது மக்களிடம் விநியோகிப்பது அதற்கான பணத்தை வசூலிப்பது ஒழுங்காகக் கணக்கு வைப்பது, உரியவர்களிடத்தில் சேர்ப்பது என்பதே கட்சி சம்பந்தப்பட்ட எனது பணியாகும். அந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தேன்.
அப்போது கம்யூனிஸ வாழ்க்கையில் இருந்த தலைவர்கள் யார், யார்?
ஜீவா, பி.ராமமூர்த்தி, பாலதண்டாயுதம், எஸ். ராமகிருஷ்ணன், ஆர்.கே. கண்ணன், வி.பி. சிந்தன் இன்னும் பெயர் அறிந்த பல தலைவர்கள் இவர்களில் நான் தான் கடைக்குட்டி. வாண்டுப்பையன், தலைவர்களுக்கு செல்லப்பிள்ளை. எனக்கு ஐம்பது ரூபாய் மாதச்சம்பளம். ஜீவாவுக்கும் ஐம்பது ரூபாய் தான். எல்லோருக்கும் அது தான்.
அப்போது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள்?
ஜீவா எனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுத்தார். குஸ்தி பழகிக் கொடுத்தார். இலக்கியம் கற்றுத் தந்தார். அவரிடம் கற்றது இன்னும் பலப்பல.
ஒரு முறை ஜீவாவிடம் எனது கதையைக் காட்டினேன். எழுத்துப் பிழைகள் பரவியிருந்தன. நீ முதலில் தமிழில் நிறைய படி. பிழையின்றி எழுதக் கற்றுக் கொள். அதன்பின்னர், உன் கைவண்ணத்தைக் காட்டு என்றார் ஜீவா. எனக்கு வருத்தம் தான். ஆனால் அதையே அறிவுரையாகவும் சவாலாகவும் ஏற்றுக் கொண்டு வித்வான் பா. சொக்கலிங்கம் அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றேன். ஜீவா என்று அறிவுறுத்தியதை இன்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன். இல்லையெனில், இன்றும் நான் பிழையுள்ள தமிழில் தான் எழுதிக் கொண்டிருப்பேன்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே உங்களுக்குக் கருத்து மாறுபாடு ஏற்பட்டதே?
ஆம்! அடிப்படையில் நான் தேசியவாதி. பள்ளிப்பருவத்தில், சாக்பீஸ் கிடைத்தால் சும்மாயிருக்க மாட்டேன். கண்ணில் படும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் எழுதிவிடுவேன்.
காந்திஜி எங்கள் ஊருக்கு வந்தார். அருகில் நின்று ஆசை தீரப் பார்த்தேன். அவரது பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்று உள்ளம் துடித்தது. தொட்டு விட்டேன். உடம்பெல்லாம் ஒரே சிலிர்ப்பு உள்ளத்தில் ஆனந்தப் பூரிப்பு. காந்தி ரயிலில் பயணமானார். நான் அழுதே விட்டேன். அப்போது நான் காந்தி கட்சி.
கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகள் அப்போது எனக்கு உடன்பாடானதல்ல. அதே சமயத்தில் , நான் வளர வளர காங்கிரஸ் அரசின் அடக்கு முறைப் போக்கு எனக்கு ஏற்புடையதாக இல்லை.
1951 - ம் ஆண்டு முதல் 53-ம் ஆண்டு வரை ஜனசக்தி ஆசிரியர் குழுவில் இருந்தேன். ஆசிரியர் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கிளர்ச்சிப் பிரசாரக் குழுவிலும் இடம்பெற்றிருந்தேன். கொள்கை வேறுபாட்டால் கட்சித் தலைமையோடு மாறுபட்டேன். முழுநேர ஊழியர் பணியிலிருந்து விலகினேன். கட்சியில் சாதாரண உறுப்பினராகத் தொடர்ந்தேன். பின்னர், அதையும் விட்டுவிட்டேன்.
இதற்கு நடுவே பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளும் செயல் திட்டங்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அதன் தொடர்ச்சியாகக் கர்மவீரர் காமராஜரோடு நட்பு - காங்கிரஸ் மேடைப் பிரவேசம். நேருவின் மறைவுக்குப் பின்னர், காங்கிரஸ் மேடைகளில் தொடர்ந்து ஏறினேன்.
ஒரு எழுத்தாளருக்கு அரசியல் பிடிப்பு இருக்கலாம். ஆனால், மேடையேறும் எண்ணம் ஏன் வந்தது?
தி.மு. கழகம் மீது எனக்கு எப்போதும் தீராத வெறுப்பு தி.மு.கழகம் என்பது ஓர் அரசியல் இயக்ககமே அல்ல. இந்திய நாகரிகத்திற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அது பேரழிவைத் தேடி தரும் என்று கருதினேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர்கள் இருந்தோம். காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வில் தி.மு.க. ஒரு பாசிச இயக்கமாக வளருவதை எங்கள் கட்சித் தலைமை கண்டு கொள்ளவில்லை. அதனாலேயே கருத்து வேறுபட்டேன். தி.மு. கழகம் உடைந்து ஈ.வே.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் வெளியே வந்தனர். நெல்லை சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாலதண்டாயுதம் வெளியே வந்தார்.
தி.மு.கழகம் பற்றி இத்தனை ஆண்டுகளாக நான் என்ன கணிப்புக் கொண்டிருந்தேனோ, அந்தக் கணிப்பு மெத்தச் சரி என்பதனை இவர்கள் பறை சாற்றினார்கள்.
அடுத்து சம்பத், கவிஞர் கண்ணதாசன், பாலதண்டாயுதம் நான் ஆகியோர் ஓர் அணியாகத் தமிழகம் முழுமையும் வலம் வரத் துவங்கினோம்.
நீங்கள் மேடையேறிய பின்னர்தான், கதைகள் எழுதுவதை விட்டு விட்டீர்களா?
இல்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இதுபோதும் என்று நினைத்தேன். அத்துடன் நிறுத்திக் கொண்டேன். எழுதுவதும் எழுதாததும் என் விருப்பம். எனது உரிமை. எனது சுதந்திரம் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவது எனக்கு அலுப்பையும் சலிப்பையும் தந்தது. எனவே கட்டுரைகள், கவிதைகள் எழுதினேன். எனது கதைகளுக்கு எது மூலப்பொருளோ, அதுவே எனது கட்டுரைகளுக்கும் கருப்பொருளாக அமைந்தது. இது புதிய வடிவம் புதிய உத்தி அவ்வளவுதான்.!
காமராஜரை முதன்முதலாக நீங்கள் எங்கே சந்தித்தீர்கள்?
1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ம் நாள். அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முதல் நாள். சென்னை, டேவிட்சன் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்கு காமராஜர் வந்தார்.
சுதந்திரத்துக்காக அனைவரும் பாடுபட்டோம். சிறை சென்றோம். பெற்ற சுதந்திரத்தை இப்போது நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும். என்றார். இரண்டு கட்சிகளும் இணைந்தே கொண்டாடின.
பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட்டிருக்கின்றன. இணைந்து செயல்பட்ட போதெல்லாம் நானும் இணைந்தே இருந்தேன். பிரிந்த போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே இருந்தேன்.
இப்போது நீங்கள்?
இப்போது எல்லோருடனும் இருக்கிறேன். அரசியல் எல்லைக் கோடுகளை அழித்துவிட்டேன். ஆனாலும் நான் என்றும் தேசியவாதிதான்.
அகில இந்திய அளவில் அவார்டு வாங்கிய உங்களின் "உன்னைப் போல் ஒருவன்", திரைப்படத்தை அண்ணா பார்த்ததாகச் சேதி உண்டே?
ஆமாம். சென்னை, கிருஷ்ணவேணி தியேட்டரில் அந்தப் படம் திரையிடப்பட்டிருந்தது. குள்ளமான மனிதர். சந்றே கருத்த உருவம், வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, அவசரமாக அந்த மனிதர் படம் பார்க்க வந்தார். எனது பட விநியோகஸ்தர் மா.லட்சுமணன் அவரை அழைத்து வந்தார்.
அண்ணாவுக்கும் எனக்கும் எந்த பரிச்சயமும் இல்லை. நான் தி.மு.கழகத்தைக் கனல் கக்க விமர்சிப்பவன். அவர் அந்த இயக்கத்தின் தலைவர் எப்படி என்னால் எதிரில் நின்று வரவேற்க முடியும்? சுய அறிமுகம் செய்து கொள்ள விரும்பவில்லை.
எம்.ஜி.ஆர்?
இதே படம் பற்றி எம்.ஜி.ஆர். கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் தரித்திரத்தையும் கேவலங்களையும் வெளிநாடுகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "உன்னைப் போல் ஒருவன்" திரைப்படம் என்று அவர் சொன்னார்.
கண்ணதாசன் இலக்கிய இதழில் "சினிமாவைக்குப் போன சித்தாளு" என்று ஒரு தொடர்கதை எழுதினேன். அந்தக் கதை எம்.ஜி.ஆரை மையமாக வைத்து எழுதப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எம்.ஜி.ஆர். கோபம் கொள்வார். விபரீத விளைவுகள் வரும் என்றெல்லாம் பூச்சசாண்டி காட்டினார்கள். தமிழகத் தாய்க்குலத்தின் சினிமா ரசனை கீழ்த்தரமாக இருக்கிறது என்று சித்தரிப்பதே அந்த கதையாகும்.
ஆனால் "சினிமாவுக்குப் போன சித்தாளு"வைத் தொடர்ந்து படித்தார் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தைச் சித்தரித்திருக்கிறார். தவறில்லை என்று பின்னர் அவரே பாராட்டியதாக அறிந்தேன்.
ஆனந்த விகடனில் அடியெடுத்து வைத்த அனுபவம்?
அப்போது ஆனந்த விகடனில் பாலு (பாலசுப்ரமணியன்) பொறுப்புக்கு வந்திருந்தார். "ஒரு பிடிச்சோறு" கதையை அவர் படித்திருக்கிறார். சரஸ்வதியில் வெளிவந்த கதைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. ஆனந்த விகடனில் என்னை எழுதவைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
எனது படைப்புகள் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்தன. வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. என்னுடைய கதைகள் முத்திரைக் கதைகளாக இடம் பெற்றன.
விகடனில் எழுதத் தொடங்கிய பின்னர், அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிவிட்டேன். தினசரி அலுவலகம் செல்வேன். பாலுவுடன் மணியன், சாவி, ஸ்ரீதர், கோபுலு, சிவம் என்று படைப்பாளிகளின் பட்டாளமே சேரும். அரட்டையடிப்பதற்கென்றே நேரம் ஒதுக்கிக் கொள்வோம். பாலுவுடனான கலந்துரையாடல்களின் போது கதைகளுக்கான பல விதைகள் முளைத்திருக்கின்றன. கருக்கள் உருவாகியிருக்கின்றன.
நான் அதிகம் எழுதியது விகடனில்தான். அதில் வந்த கதைகள் அனைத்தும் ஒவ்வொரு கோணத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டன. விவாதங்கள் எழுந்தன. விமர்சனங்கள் எனக்கு உற்சாகம் தரும்.
நீங்கள் எஸ்.எஸ். வாசன் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். மறக்க முடியாத அந்த சந்திப்புகள் இன்னும் எனது இதயத்தில் பசுமையாக இருக்கின்றன.
ஒவ்வொரு சந்திப்பும் உன்னதமானது. ஒவ்வொரு முறையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேசினோம். ஒவ்வொரு முறையும் நானே ஒன்றேமுக்கால் மணி நேரம் பேசியிருப்பேன். வாசன் அவர்கள் சொன்ன ஒரு கருத்து என் இதயத்தில் சாசனமாகப் பதிந்திருக்கிறது.
"இந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளாவிடில் நான் வியப்படைய மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அதுதான் ஆச்சர்யம். அதற்காக நான் வருத்தப்படுவேன்", என்று அவர் சொன்னார். அந்த மணி வாசகங்கள் இன்னும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
1952 - ம் ஆண்டுவாக்கில் நான் தமிழ் சினிமாவுக்கு எதிரி. பிடிக்காது. "நீலக்குயில்" என்ற மலையாளத் திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. அதைத் தயாரித்தவர், உருவாக்கியவர் பாஸ்கரனும் ராமுகரியத்தும். அவர்கள் இருவருமே கம்யூனிஸ்ட்டுகள்.
ஏன் அவர்களைப் போல நாமும் திரைப்படம் எடுக்கக்கூடாது? என்று எனது நண்பர் கவிஞர் தமிழ் ஒளி என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். நான் ஏற்கவில்லை. 1953 - ம் ஆண்டு, சினிமா கதை - வசனகர்த்தா ஏ.எல் . நாராயணனை எனக்குக் கவிஞர் தமிழ் ஒளி அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பக்கம் வயிற்றுப்பாடு. இன்னொரு பக்கம் - லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு புதிய களம். அந்தக் கண்ணோட்டத்தில் ஏ.எல். நாராயணனுக்கு உதவியாளனாகப் பணி செய்ய சம்மதித்தேன். ஆனாலும் சில கசப்பான அனுபவங்கள்.
சினிமாத் துறையில் ஜால்ராக்களின் சத்தம்தான் கோரமாகக் கேட்டது. சினிமா உலகம் உனக்கு ஒத்து வராது. என்று முன்பு விந்தன் சொன்னது நினைவுக்கு வந்தது. இனி எந்தத் துறையிலும் உதவியாளனாகப் பணி செய்யக் கூடாது. என்று தீர்மானித்தேன். ஏ.எல். நாராயணனைவிட்டு விலகினேன். ஆனால், அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன்.
பிறகு, எனது எளிய ஒண்டுக்குடித்தன வீட்டுவாசலில் பல சினிமா கம்பெனிகளின் கார்கள் காத்து நின்றன. விகடனில் 1959 - ம் ஆண்டு வெளியான "எனக்காக அழு" என்ற எனது குறுநாவலை டைரக்டர் ப. நீலகண்டன் திரைப்படமாக்க விரும்பினார், அழைத்தார். பின்னர், அந்தக் கதையை நடிகர் சந்திரபாபு கேட்டார்.
"யாருக்காக அழுதான்?" என்ற இன்னொரு குறுநாவல் விகடனில் வெளியானது. அந்தக் கதை தமக்காகவே எழுதப்பட்டது என்று சந்திரபாபு சொன்னார். அந்தக் கதையை படமெடுக்கும் உரிமையைத் தனக்கே தரவேண்டும் என்று எழுபத்தையாயிரம் ரூபாய் பணமூட்டையுடன் வந்தார். அதே கதையை ஜி.என். வேலுமணி திரைப்படமாக்க விரும்பி அழைத்தார்.
ஆனால் எல்லாருமே என் கதையின் கருவைச் சிதைத்து, சிசுக்கொலை செய்பவர்களாகவே இருந்தனர். எனவே தான் "உன்னைப் போல் ஒருவன்" என்ற குறுநாவலை நான் திரைப்படமாக்குவது என்று முடிவு செய்தேன். ஒரு லட்ச ரூபாயில் படமெடுக்கத் திட்டம். ஆனால் எண்பதாயிரம் ரூபாய் செலவில் முடிந்து விட்டது.
வீணை சிட்டிபாபு இசையில் அந்தப் படம் அகில இந்திய அளவில் மத்திய அரசின் மூன்றாவது பரிசைப் பெற்றது. இந்தியாவின் எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. சோவியத் யூனியனில் அந்தப் படம் திரையிடப்பட்டது. அடுத்து "யாருக்காக அழுதாண்டி" திரைப்படமாக வெளி வந்தது. அதையும் இயக்கியது நான்தான்.
விகடனில் வெளிவந்த "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற கதையை டைரக்டர் பீம்சிங் தயாரித்தார். யார் யாரோ அதற்குத் திரைக்கதை அமைத்துப் பார்த்தனர். புகழ்பெற்ற அந்த டைரக்டருக்கு அதில் திருப்தி இல்லை. பின்னர் என்னையே அந்த பொறுப்பை ஏற்கச் சொன்னார். அவரு€டைய உதவியாளர் திருமலை மகாலிங்கம் ஆகியோர் உதவியுடன் முடித்துக் கொடுத்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகை லட்சுமிக்கு அகில இந்திய விருது கிடைத்தது.
அடுத்த விகடனில் பிரசுரமான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற கதை பீம்சிங் தயாரிப்பில் வெளிவந்தது. பின்னர் பீம்சிங் யூனிட்டில் எனது "கருணை உள்ளம்" கதையும் திரைப்படமாக வந்தது. பீம்சிங் தொடர்ந்து எனக்கு அளித்த பொறுப்புகளை மன நிறைவோடு செய்தேன். அதன் பின்னர், ஒரு கட்டத்தில் சினிமாத் துறையிலிருந்து போதும் என்று ஒதுங்கிக் கொண்டேன். பீம்சிங்கின் மறைவும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
நீங்கள் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீதுதான் தாக்குதல் தொடுத்து வந்திருக்கிறீர்கள். இயல்பாய் அந்த இயக்கங்கள் இப்போது சரிவைச் சந்திக்கின்றதே?
திராவிட இயக்கம் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது. திராவிட சமுதாயம், திராவிடக் கலாச்சாரம், திராவிட அரசியல் என்பதாகும். நான் திராவிட அரசிலைத்தான் விமர்சித்தேன். அவர்களுடைய அரசியல் பிரவேசம் ஒரு சந்தர்ப்பவாதம். பதவிக்காக தங்கள் லட்சியங்களை பேரம் செய்து கொண்டனர். சித்தாந்தத்துக்குத் துரோகம் செய்தனர். அதன் விளைவாக புறவளர்ச்சியும் அகவீழ்ச்சியும் ஏற்பட்டன. புற வளர்ச்சியில் ஜெயலலிதா அடையாளம் காணப்படுகிறார். ஆக, திராவிட இயக்க அரசியல் என்பது வாழவும் வாழாது, சாகவும் சாகாது. கோமா நிலையிலேயே இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
படைப்பிலக்கியச் சாதனையாளர்... - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", நான், எனது, அவர், ஆண்டு, தான், விகடனில், எனக்கு, பின்னர், அந்த, தொடர்ந்து, அவரது, கம்யூனிஸ்ட், அரசியல், வந்தது, அந்தக், நீங்கள், தமிழ், இல்லை, ஜெயகாந்தன், அப்போது, சினிமா, திராவிட, ரூபாய், காங்கிரஸ், வந்தார், கொண்டு, கதையை, படம், சொன்னார், இந்திய, ஜீவா, ஆனந்த, அரசின், ஒவ்வொரு, என்பது, கவிஞர், இப்போது, கழகம், அந்தப், இரண்டு, இன்னும், பீம்சிங், கட்சியின், இருந்தேன், தமிழக, வேண்டும், விருது, நாள், அவருக்கு, யார், அகில, துறையிலும், கதைகள், கண்ணதாசன், என்னை, உலகம், சிறுகதைகள், போல், நேரம், இதயத்தில், விட்டது, இலக்கிய, திரைப்படம், ஒருவன்", தேடி, உன்னைப், கொள்ள, நேரங்களில், தங்கள், கட்சித், படைப்புக்காக, பற்றி, சிறந்த, பரிசு, கொண்டது, தலைவர்கள், ஜெயகாந்தனின், கருத்து, கொடுத்தார், அவரை, கேட்டார், ஐம்பது, செய்தேன், இருந்த, பாலதண்டாயுதம், சுண்டல்