முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » விண்ணில் இருந்து மண்ணுக்கு
பொதுவான கட்டுரைகள் - விண்ணில் இருந்து மண்ணுக்கு
- நெல்லை சு.முத்து
விண்வெளி என்றதும் கிரகங்கள், நட்சத்திரங்கள், சில செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் என்றுதான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால் இந்த விண்வெளி, மண்வெளிக்கு உதவுகிறது என்றால் எப்படி என்று தானே சந்தேகம்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய அளவில் ரோகிணி மற்றும் மேனகா ரக வானிலை ஆய்வூர்திகளில் தொடங்கினோம். இன்று கல்பனா வகை மெட்சாட் என்கிற வானிலை ஆய்வுச் செயற்கைக்கோள்கள் வரை உயர்ந்து விட்டோம். இவை நம் நாட்டு ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள்தாம். நடிகைகளின் பெயர்கள் அல்ல. அதுவும் புகை இல்லா உலகம் என்று சொல்லி உடை இல்லா உலகில் சஞ்சரிக்கும் தேக கன்னிகைகள் அல்லவே அல்ல.
எது எப்படியோ, நம் நாட்டில் கங்கை, காவிரி, யமுனா, சரஸ்வதி என நதிகளுக்குப் பெண்கள் பெயரை வைத்தது தப்பாகப் போயிற்று. வருடம் முச்சூடும் தாவாதான். மாமியார் - மருமகள் சண்டை மாதிரி.
ஏதானாலும் நீரின்றி அமையாது இவ்வுலகு. இந்தத் தமிழ்மறைக்கு ஏற்ப நீர்வள ஆதாரங்கள் தேடவும் விண்வெளித் துறையின் பங்கு கணிசமானது. 1999 -ம் ஆண்டு மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் குடிநீர் விநியோகத் துறை ஒன்று நிறுவப் பெற்றது. 2004 - ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்க வகை செய்வதே இந்தத் திட்டம். அதாவது ஒரு நாளைக்கு ஓர் ஆளுக்கு 40 லிட்டர்கள் தண்ணீர். அதாவது இரண்டு குடம் தண்ணீர்.
உலகச் சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலக மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்குப் போதிய துப்புரவான கழிப்பிட வசதிகள் இல்லை. 2 சதவீதம் பேர் நல்ல தண்ணீர் இன்றி தொண்டை காய்ந்து போனவர்கள். நிலத்தடி நீரையே நம்பிவாழ்பவர்கள். இந்தியாவிலும், வங்க தேசத்திலும் இன்று புதுவகை நீர் நோய்கள்.
மேற்கு வங்காளத்தில் 60 லட்சம் பேருக்கு ஆர்செனிக் நஞ்சுத் தண்ணீர் ஒரு கொடுமை. உலகின் இரண்டாவது இடம். 1879 -ம் ஆண்டு புற்றுநோய்க்கு முதல் காரணியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனம் ஆர்செனிக். ஒருவகை எலிப் பாஷாணம். பிற்காலத்தில் தோல்புற்று நோய்க்கு இது காரணம் என்றும் உணரப்பட்டது. சிறுநீர்ப் பாதையில் புற்றுக்கட்டி வரலாம் என்கிறார்கள்.
தேசியத் தொலையுணர்வுக் கழகம் இன்று 1,723 நிலத்தடி நீர் இருப்புத் திணைப் படம் தயாரித்து வைத்து இருக்கிறது. படத்தில் இருந்தால் குடத்தில் வருமா என்கிற முணுமுணுப்பும் நியாயம்தான். தேசிய ராஜீவ் காந்தி குடிநீர்த் திட்டத்தின் ஒரு பாகமாக இந்தப் பரிசோதனை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. ஆங்காங்கு நிலத்தடி நீர்க் குணங்கள், புவி இயல் ரீதியிலான தகவல் அமைப்பு, நிலத்தடி நீர் மட்டம், அதன் அளவை உயர்த்தத் தேவையான நிபந்தனைகள், ஈரப்பதம் மிக்க மண்வளங்கள், வளங்குன்றா கிணறுகள், அவற்றின் ஆழங்கள், வருடாந்தரத் தண்ணீர் ஊற்று, நீரின் தரம் போன்ற பல தகவல்கள் இடம்பெறுகின்றன.
திசைமாறும் இளைஞர்களைப் படம் பிடிக்க முடியாது. திசை விலகும் ஆறுகளின் வழித்தடங்களை வரைந்து எடுக்கச் செயற்கைக்கோள்கள் உதவும்.
இதற்கிடையில் இன்னொரு சுவாரஸ்யத் தகவல். தின்னிப் பண்டாரங்கள் அல்லது சாப்பாடு ராமர்கள் என்றால் தெரியும். அந்தப் பெரும் தீனிவாதிகளுக்குச் சிகிச்சை வழங்குவதில் ஆகும் செலவு மிக அதிகமாகும். உணவு உற்பத்தியால் கிடைக்கும் வருவாய் லாபங்களைக் காட்டிலும் கூடுதல் ஆகக் கூடும் என்கிறது ஒரு கணிப்பு. இருந்தாலும் வேளாண் உற்பத்தியில் நாம் அக்கறை செலுத்த வேண்டுவது நம் தேசியக் கடமை.
வேளாண் பருவநிலைத் திட்டமிடல் மற்றும் தகவல் சேமிப்புக் கிடங்கு என்கிற திட்டத்தைக் கருத்தளவில் இந்திய விண்வெளி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. விவசாயிகளின் நிலத் தன்மைக்கும் நீர்வளத்திற்கும் ஏற்ற பயிர்கள், கலப்பினப் பயிரிடல், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் இருந்து நிதி ஆதாரம் தேடுதல், உரங்கள், வித்துகள், பயிர்ப் பாதுகாப்பு, வேளாண் செலவினங்கள், விற்பனைச் சந்தை நிலவரங்கள், விளைச்சல், பயிர் இழப்புக் காப்பீடு போன்ற பல்வேறு தகவல்கள் அத்திட்டத்தின் மூலம் குடியானவர்களுக்கு வழங்கப்படும்.
இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறையும் இந்திய விண்வெளித் துறையும் இணைந்து நடத்திய சில ஆய்வுகள் முக்கியமானவை. நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள், தென்மேற்குத் தொடர்ச்சிமலை, மேற்கு இமாலயப் பகுதிகள் என 84,000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக் காடுகள் செயற்கைக் கோள்கள் பார்வைக்குள் பதிவாகி இருக்கின்றன. இது இந்திய மொத்த வனப் பரப்பில் 40 சதவீதம்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்காடுகள் அழிக்கப்பட்டு விட்டன என்பது ஒரு கசப்பான கண்டுபிடிப்பு. 410 கோடி ஹெக்டேர் வனப்பரப்பில் ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டரை கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றனவாம். இதுவும் செயற்கைக்கோள் தரும் அதிர்ச்சித் தகவல்.
சந்தனமோ, ஜவ்வாதோ, காடுகளை அழிப்பது என்பது மரங்களுக்காக என்பது ஒருபுறம். மகாராஷ்டிர மாநிலத்தில் வடக்கு தூலே காடுகளில் ஒரு சுவாரஸ்யமான விவகாரம். அங்கு சட்ட விரோதமாக வனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அங்கு அத்துமீறி குடியேறியவர்கள் வனத்துறைக்கு எதிராக மும்பை உயர்நீதி மன்றத்தில் வினோதமான வழக்கு ஒன்று பதிவு செய்தார்கள். வனத் துறையினரை அங்கிருந்து இடம்மாற்ற வேண்டுமாம்.
ஆனால் தீர்ப்பு வனத்துறைக்குச் சாதகமாக இருந்தது. காரணம், செயற்கைக்கோளின் போலி வண்ணப்படங்கள். அதாவது பச்சைநிறக் காடுகள் செயற்கைக்கோள் படத்தில் சிவப்பாகத் தெரியும். இந்த விண்வெளி விவகாரத்தில் மட்டும் தான் போலிவண்ணம், வழக்கில் ஆதாரச் சான்று ஆவணம் ஆகிறது. பிறகென்ன, ஷிர்ப்பூர், சங்கவி காடுகளின் நிலையை 1972 முதல் 1986 வரை எடுத்துப் போட்டு ஆராய்ந்தனர் நீதிபதிகள். அவற்றைச் சாட்சியங்கள் ஆக்கித் தீர்ப்பு வழங்கிற்று உயர்நீதிமன்றம்.
அதற்காக மரக்கடத்தல் மகாத்மாக்களைச் செயற்கைக்கோளால் துப்பறிய முடியுமா என்று கேட்காதீர்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே தீவிரவாதி நிழல் தேடக் கிடைக்கவில்லை. நம் நாட்டுச் செயற்கைக்கோளால் பாலைவனத்தின் ஒட்டகங்களைப் படம்பிடித்து இருக்கிறோம். தாடி, மீசை வைத்த ஒல்லியான மனிதர்களை அடையாளம் காண்பது அரிதினும் அரிது.
அது சரி, உதவாக்கரைகளைக் கண்டுபிடிக்க வேண்டாம். உதவா நிலங்களைக் கூடவா கண்டு அறிய முடியாது? முடியும். வட கிழக்கு மாநிலங்களில் ஜூமிங் என்கிற நடைமுறை இருக்கிறது. விளைநிலங்களில் பயிர்வறட்சி ஏற்படும்போது அந்த நிலங்களைத் தீயிட்டு கொளுத்திவிட்டு, இடத்தைக் காலி பண்ணிவிடுவது; பின்னர் அவர்கள் புதிய இடங்களுக்குக் குடிபெயர்வது உண்டாம். ஜூமிங் ஆன தீய்ந்த இடங்களைத் துல்லியமாகக் கண்காணிக்கச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. வேளாண்மையில் வளங்குன்றா மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பணி இலக்கு திட்டம் இது.
சரஸ்வதி ஆற்றொழுக்கின் போக்கினைத் தொலையுணர்வு நுட்பத்தினால் அறிய முடிகிறது. ஹரப்பா நாகரிகக் கால கட்டத்தில் இந்தோ - பாகிஸ்தானியப் பிராந்தியத்தில் சிந்து நதியும் சரஸ்வதி நதியும் ஒன்றுக்கொன்று இணையாகப் பாய்ந்த விவரம் தெரிகிறது.
எல்லாம் சரிதான், ஆறுகளின் போக்கை ஆராயச் செயற்கைக்கோள்கள்! அரசியல்வாதிகள் போக்கை ஆராய?
தேடல் தொடர்பான தகவல்கள்:
விண்ணில் இருந்து மண்ணுக்கு - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தண்ணீர், செயற்கைக்கோள்கள், விண்வெளி, தகவல், நிலத்தடி, இந்திய, என்கிற, என்பது, காடுகள், வேளாண், இருக்கிறது, சதவீதம், இன்று, சரஸ்வதி, ஆண்டு, அதாவது, நீர்