முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » புறக்கணிக்கப்படும் பொது வசதிகள்
பொதுவான கட்டுரைகள் - புறக்கணிக்கப்படும் பொது வசதிகள்
- பாவண்ணன்
ஒரு பயணத்துக்காகப் பேருந்து நிலையம் வரை சென்ற பிறகு மறந்துபோன ஒரு தகவலை மனைவிக்குத் தெரியப்படுத்த தொலைபேசியைத் தேடிய என் கண்களின் எதிரே தொங்கும் தொலைபேசி தென்பட்டது. வேகமாக நெருங்கிக் குழலைக் காதருகே கொண்டு சென்ற பிறகுதான் அது இயங்கவில்லை என்னும் உண்மை தெரிந்தது. என் கண்கள் மீண்டும் அலைபாய்ந்தன. நீண்ட தளமுடைய அந்த நிலையத்தில் மேலும் ஐந்து தொங்கும் தொலைபேசிகள் காணப்பட்டன. ஓடோடி ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்த பிறகுதான் எதுவுமே இயங்காததைப் புரிந்துகொண்டேன். ஏமாற்றமும் ஆச்சரியமும் பெருகத் திரும்பிய போது அருகில் மேற்பார்வையாளர்களைக் கொண்ட நான்கு தனியார் தொலைபேசிக் கூண்டுகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
மூன்று நாள்களுக்குப் பிறகு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அன்று ஓர் ஆர்வத்தின் காரணமாக தொங்கும் தொலைபேசிகளின் இயக்கநிலையைக் காண முயன்றேன். அவை இன்னும் உறக்கநிலையிலேயே தொங்கிக் கொண்டிருந்தன. வாடிக்கையாளர் மையத்துக்குச் சென்று புகாரை எழுதிக்கொடுத்தேன். இரு வாரங்களுக்குப் பிறகு மற்றொரு பயணத்துக்காக பேருந்து நிலையம் சென்றபோதும் உறக்கத்தை உதறா நிலையிலேயே தொங்கிக்கொண்டிருந்தன தொலைபேசிகள்.
இரண்டு ரூபாய் கொடுத்து பேசத்தக்க தொலைபேசிக் கூண்டுகள் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்க, பொதுமக்களுடைய வசதிக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு ரூபாய் தொங்கும் தொலைபேசிகள் மட்டும் இயங்காமல் இருக்கும் ரகசியத்தை என்னால் கடைசிவரை கண்டறியவே முடியவில்லை. அப்போதுதான் அது ஒன்று மட்டுமல்ல, பொதுமக்களின் வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பல அம்சங்கள் நடைமுறையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டது மனம்.
இலவசமாக சிறுநீர் கழிக்க வசதியாக ஏற்படுத்தப்பட்ட பகுதிகள் எல்லாப் பொது இடங்களிலும் நெருங்கவே முடியாதபடி கழிவுகளால் நிரம்பி வழிகின்றன அல்லது முட்களாலும் குப்பைகளாலும் அடைபட்டுக் கிடக்கின்றன. ஒரு ரூபாய் என்று எழுதப்பட்ட பலகை தொங்கும்போதே இரண்டு ரூபாய் வசூலிக்கிற மையங்களில் குறைந்தபட்ச வசதிகள் வழங்கப்படுகின்றன. அமைதியாக உட்கார்ந்து எண்ணங்களை ஒருமுகப்படுத்தி யோசிக்க வசதியான கோயில் மண்டபங்கள் பெரும்பாலான இடங்களில் விற்பனைக் கூடங்களாக மாறிவிட்டன. பல தெருக்களில் நடைபாதைகளே இல்லாத அளவுக்கு ஏற்கனவே உள்ள கடைகளின் முன்பரப்பு பெருத்துவிடுகிறது அல்லது புதிய கடைகள் முளைத்துவிடுகின்றன.
தாகம் தணிக்க எந்தத் தெருவோரக் குழாய்களிலும் இப்போது தண்ணீர் வருவதில்லை. வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகிக்கும் நேரம் எப்போதும் நள்ளிரவாகவே இருக்கும் ரகசியம் புரியவில்லை. பல நூலகங்களில் உட்கார்ந்து படிக்க நாற்காலிகள் இல்லை. வெளிச்சம் வழங்கும் மின்விளக்குகள் இல்லை. தாங்கிகள் இல்லாத நூலகங்களில் புத்தகங்களைத் தரையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவமனைகளில் தாதிகளும் மருந்து கலக்குநர்களும் நோயாளிகளை, தம்மைத் தொந்தரவு செய்யும் கொசுக்களாகவும் ஈக்களாகவும் பார்க்கிறார்கள். எதற்கு வந்தார்கள், ஏன் வந்தார்கள் என்று தெரியாமலேயே பொதுமக்களை ரேஷன் கடைக்காரர்கள் போபோ என்று விரட்டுகிறார்கள். தாசில்தார் அலுவலகங்களில் பணமில்லாமல் நுழைகிறவர்களை நிர்வாண மனிதர்களைப் பார்ப்பதைப்போலப் பார்க்கிறார்கள். கையிலிருக்கிற உறையை நீட்டி எடைபார்த்து ஒட்டப்படவேண்டிய அஞ்சல் தலைகள் பற்றிக் கேட்பவர்கள், கழுத்தறுக்கிறவர்களாக நினைக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலான இடங்களில் ஆடு, மாடுகளுக்கு இருக்கிற மரியாதை கூடப் பொதுமக்களுக்கு இருப்பதில்லை. எல்லா விதமான வரிகளையும் ஒழுங்காகக் கட்டிவிட்டு அவமானங்களையும் அருவருப்பான பார்வைகளையும் சுமந்துகொண்டு வருவதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
பொதுமக்களுக்கென்று இருக்கிற வசதிகளைத் தமக்கிருக்கும் செல்வாக்கால் தமக்குரியதாக மாற்றிச் சுரண்டுவதைக் கைவிட வேண்டும் என்பதும் மனிதர்களை மனிதர்கள் மதிக்கவேண்டும் என்பதும் வேறுவேறல்ல. மதித்தல் என்பது ஒரு தொடக்கம். அடுத்தவர்களை அங்கீகரித்தல்; அவர்களுக்குரிய உரிமைகளை அறிதல்; அவர்களுக்குச் சேரவேண்டியதை அபகரிக்காமல் இருத்தல்; அவர்களுக்கு அவை கிடைக்கத் தன்னாலான வரை குரல் கொடுத்தல்; அடுத்தவர்களை வாழ அனுமதித்துத் தாமும் வாழ்தல் எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. தொடக்கமே இல்லையென்றால் பயணமே இல்லை. இது ஒரு சாதாரண வாழ்க்கை அறிவு. இந்த அறிவு கூட இல்லாதவர்கள், நாகரிகமடைந்தவர்கள் என்றோ, மனிதர்கள் என்றோ சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
தாழ்த்தப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் பின்தள்ளப்பட்டும் பசியோடும் பட்டினியோடும் எத்தகைய வசதிகளும் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நம் தேசத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சனைகளைக் களையவும் மேலான நிலையை அடையவும் தேவையான திட்டங்களும் செயல்பாடுகளும் மிகமிக அவசியமானவை. எல்லாவற்றுக்கும் முன்னால் அவர்களை மதிப்பதும் சமமாக நடத்துவதும் அவர்களுக்குரிய எந்தப் பங்கிலும் கைவைக்காமல் மனசாட்சியுடன் நடந்துகொள்வதும் முக்கியமானது.
படித்து மேலான நிலையை அடைந்தவர்களும் அதிகாரத்தின் ஆதரவால் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு பறந்துபோய் உச்சியில் அமர்ந்தவர்களும் நூற்றுக்குப் பத்து விழுக்காடு அளவானவர்களே. எஞ்சியவர்கள் அனைவரும் புறக்கணிப்புக்காளானவர்கள். வாய்ப்புகள் இல்லாதவர்கள். காரணங்கள் அறியாதவர்கள். அறிந்தாலும் அம்பலமேறிச் செயல்படுத்த முடியாதவர்கள். இந்த 90 சதம் மக்களைத் தாண்டித்தான் அந்தப் பத்து சதம் மக்கள் உயர்ந்த நிலைக்குப் போனார்கள். போகட்டும். அது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வாய்பேசத் தெரியாத 90 சதமுள்ள அப்பாவிக் கூட்டத்துக்காக உருவான சிறுசிறு வசதிகளையும் குலைத்து, அவற்றின் பலன்களையும் தாமே அடைய நினைக்கிற பத்து சதம் புத்திசாலிகளின் தந்திரங்களையும் புறக்கணிப்புகளையும் நினைத்தால்தான் வெட்கமாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.
வெளியே நின்று பேசுவது எளிதென்றும் மையத்துக்குச் சென்றால் எல்லாரும் ஒன்றுபோலவே நடப்பார்கள் என்றும் பலர் சொல்வதுண்டு. முன்னேறத் துடிக்கும் உயிரின் அளவுக்கதிகமான ஆர்வமாக அதை அடையாளம் கண்டு அத்தகு தன்னலத்தை மனித இயல்பாக மாற்றிச் சொல்பவர்களும் உண்டு. தன்னை மையமாக்கி உலகைக் காண்பவர்களின் பார்வை அது. தன்னலம் என்பது ஒருபோதும் மனிதனுடைய அடிப்படை இயல்பல்ல. அது ஒரு கோணல்நிலை. கோணல்நிலைகளால் ஆதாயம் கிட்டுகிறது என்பதால் அவற்றையே இயல்பாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. கோணலைச் சரியாக்கிக்கொள்ளும்போது தன்னலமும் தானாக உதிர்ந்துவிடுகிறது. அப்போது வெளிச்சம் பரவிய மனக்கண்ணுக்கு, பார்வையில்படுகிற எல்லா உயிர்களும் சமமாகப்படும். ஒருவருக்குரியதை ஒருவர் தொடாத எண்ணம் வாய்க்கப் பெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறக்கணிக்கப்படும் பொது வசதிகள் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இல்லை, ரூபாய், தொங்கும், சதம், பத்து, தொலைபேசிகள், பிறகு