பொதுவான கட்டுரைகள் - இளைஞர்களின் சக்தி
- பாவண்ணன்
ஒரு செய்தித்தாளின் வெவ்வேறு பக்கங்களில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த இரண்டு செய்திகள் ஆழ்ந்த யோசனைக்கு உட்படுத்துவதாக இருந்தன. இரவு நேரத்தில் பேருந்துக்கிடையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நாயை, அவ்வழியே வந்த நான்கு இளைஞர்கள் - எல்லா நடைமுறைச் சிக்கல்களையும் பொறுமையாக எதிர்கொண்டு உரிய மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியிருப்பது ஒரு செய்தி. வேலை நிறுத்தம் நடைபெறும் ஒரு கல்லூரியின் வாசலில் நின்றபடி தன் வகுப்பு ஜன்னல் கண்ணாடியைக் குறி பார்த்துக் கல்லை வீசி உடைத்த ஒரு மாணவன், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள் தன்னைப் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் இந்த ஜன்னல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்டபடி ஆவேசமுடன் மீண்டும் மீண்டும் கற்களை வீசி ஜன்னல்களை உடைத்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது இன்னொரு செய்தி.
இரண்டுமே இளைஞர்கள் தொடர்பானவை. முதல் செய்தியைச் சுட்டிக்காட்டி எதிர்கால இந்தியாவை உருவாக்கப்போகிற இளைஞர்களின் பொதுத்தொண்டு மன உணர்வுகளையும் அர்ப்பணிப்புக் குணத்தையும் பாராட்டி மணிக்கணக்கில் பேசிவிடுவது யாருக்கும் எளிதானதாகவே இருக்கும். அடுத்த செய்தியைச் சுட்டிக்காட்டி சீரழிந்து வரும் இளைஞர்களின் போக்குகளுக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கிக்காட்டிப் பேசுவதும் சுலபமானதாகவே இருக்கும். ஆனால் இவ்விரண்டு பார்வைகளுமே எல்லாப் பிரச்சினைகளையும் கறுப்பு வெளுப்பாகத் திட்டவட்டமாகப் பிரித்து வகைப்படுத்திவிடுகிற மேலோட்டமான பார்வைகளாக இருக்க முடியுமே தவிர உண்மையை உணர்ந்த ஒன்றாக இருக்க முடியாது.
இளைஞர்களுடைய மனஉலகம் சக்தியால் நிறைந்தது. தமக்குள் நிறைந்திருக்கிற சக்தியின் வலிமை எத்தகையது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு மிகப் பெரியதாகும். அச்சக்தியின் கூட்டு வெளிப்பாடு பன்மடங்கு வலிமையைப் புலப்படுத்தக் கூடியது. ஆகவேதான் உலகெங்கும் சாதிச்சங்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையும் திரைப்பட நடிகர்கள் முதல் மத அமைப்புகள் வரையும் இளைஞர் அணி என்கிற பெயரில் தமக்கெனத் தொண்டாற்றும் பட்டாளத்தைத் தோற்றுவிப்பதிலும் பயிற்சியளிப்பதிலும் முனைப்போடு நிற்கின்றன. மனம் முதிர்ந்து, கண் திறந்து உலகைப் புரிந்துகொண்டு, அனுபவங்களின் அடிப்படையில் சொந்தக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளும் முன்னர் இளைஞர்களை வசப்படுத்தி அரவணைத்து அன்பு வார்த்தைகளைச் சொல்லி, போலி நம்பிக்கைகளை ஊட்டி அவர்களுடைய சக்தியை உறிஞ்சி எடுத்துக்கொள்வதில் அனைவரும் குறியாக இருக்கிறார்கள்.
உறிஞ்சி எடுக்கிறவர்கள் புரிந்து கொள்கிற அளவுக்கு, உறிந்துகொள்ளத் தம்மையே ஒப்புக்கொடுக்கிறவர்கள் தம் சக்தியின் வலிமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் நகைமுரணான விஷயம். சக்திக்கென்று தனித்த குணபேதம் கிடையாது. நன்மைகளை விளைவிக்கும்போது நல்ல சக்தியென்றும் தீமைகளை விளைவிக்கும்போது தீய சக்தியென்றும் அது மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறது. சதா காலமும் பொங்கிப் பெருக்கெடுத்தோடி வரும் பெருநதியாக, சக்தியை உருவகிக்கலாம். நதியின் குணமாக எதையாவது குறிப்பிட வேண்டுமென்றால் அதன் பாய்ச்சலை மட்டுமே குறிப்பிடலாம். அதன் பாசனத்தால் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்கிற விவசாயிகளுக்கு அது தெய்வம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து சிதையும் கூரைக்குடிசைவாசிகளுக்கு அது வெறிகொண்ட பிடாரி. ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மடக்கிப் பாதுகாத்தால் அது அணைக்கட்டு. சாக்கடைகளுக்குள் கலந்தால் அது கழிவு. கடலுடன் சங்கமிக்கும்போது அது சமுத்திரத்தில் ஒரு துளி. இளைஞர்கள் சக்தியும் இத்தகைய ஒன்றே.
எப்படிப்பட்ட பாதையை இளைஞர்கள் முன் நாம் வைத்திருக்கிறோம் என்கிற கேள்வி மிகவும் முக்கியமானது. நம் பொறுப்பை நித்தமும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும் இக்கேள்வியைப் புறக்கணித்துவிட்டு இளைஞர்கள் சக்தியை எடைபோட முடியாது. கால்நூற்றாண்டுக் காலமாக லேவாதேவி செய்து வந்த பெரியவர் ஒருவர் பெருந்தொகையைக் கடனாகக் கொடுத்துவிட்டு வட்டியையும் வாங்க முடியாமல் அசலையும் வாங்க முடியாமல் அலைந்து அலைந்து இறந்து போன சூழலில் உருட்டுக்கட்டைக்காரனுடன் உடன்படிக்கை செய்து கொண்டு மூன்று மணி நேரத்தில் வசூல் செய்து முடித்த அவர் மகனுடைய செயலைக் கண்டபோது நிம்மதியாகவும் இருந்தது; துக்கமாகவும் இருந்தது.
வாராக்கடனை வசூல் செய்ததில் அவர்கள் குடும்பச் சுமைகள் குறையக்கூடும் என்பதால் நிம்மதி ஏற்பட்டது. அவன் கடைப்பிடித்த வழிமுறை துக்கத்தை அளித்தது. உண்மைக்கும் நேர்மைக்கும் உயிர்ப்பலிக்கும் பணியாதவர்கள் உருட்டுக்கட்டைக்கும் உடல்பலத்துக்கும் மட்டுமே பணிகிறவர்களாக மாறிவிடும் நிலையில் நம் சூழலை உருவாக்கி வைத்திருப்பவர்கள் நாமல்லவா என்ற குற்ற உணர்ச்சியும் படர்ந்தது. நல்ல வார்த்தைகளைப் புறந்தள்ள, கூசுகிற சரமாரியான கெட்ட வார்த்தைகளின் உச்சரிப்புக்கு மட்டுமே தலைகுனிந்து பணிகிற பாதையைச் செப்பனிட்டு வைத்திருப்பதும் நாம்தாமே என்கிற எண்ணம் அவமானத்தால் குறுக வைத்தது.
இத்தகு பாதைகள் உருவானதில் தமக்கு எந்தவிதமான பங்கும் இல்லையென்றும், இப்பாதைக்காக அடுக்கப்பட்ட கற்களில் ஒன்றைக் கூடத் தம் கை தீண்டியிருக்காது என்றும் சுயசுத்தம் பாராட்டித் தம்மைத்தாமே பலரும் மேதைமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தம்மைச்சுற்றி இந்தக் கரிய தார்ச்சாலை போடப்பட்ட போது மௌன சாட்சிகளாக நின்றது கூட ஒருவகை பங்களிப்பே என்பதை மறந்துவிடக் கூடாது. சாக்கடையை நோக்கிய ஒன்றாகவே எல்லாப் பாதைகளையும் வகுத்த பிறகு மழைநீரும் சாக்கடை நீரும் பாழாகாமல் என்ன செய்யும்?
சூழலை உருவாக்குவதில் நமக்கிருக்கும் பங்கைச் சிறிய அளவிலாவது நிறைவேற்றுவதில் நமக்கு எந்தவிதமான தயக்கமும் இருக்கக் கூடாது. செயல் என்றதும் மன்றம், சங்கம், அமைப்பு என்ற பெரிய கற்பனைகளை உருவாக்கித் தயக்கங்களை உருவாக்கிச் சோம்பி முடங்கவே பலரும் தலைப்படுகின்றனர்.
ஒவ்வொரு ரூபாயாகச் சேர்த்தால்தான் நூறு ரூபாயைச் சேமிக்க முடியும். நேரிடையாக எந்த ரூபாய்நோட்டும் பறந்து வராது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்றதும் தானும் தன் குடும்பத்தாரும் பிளாஸ்டிக் பொருள்களை அறவே ஒதுக்கிய நண்பர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். மரங்களை நேசிக்காமல் இயற்கையை நேசிக்க முடியாது என்றதும் எந்தத் தடையுமின்றி தம் வீட்டைச் சுற்றி எஞ்சியிருந்த கையகல இடத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாத்தவர்களையும் கண்டிருக்கிறேன்.
ஒரு சூழலை உருவாக்குவது என்பது இப்படிச் சின்னச்சின்ன செயல்கள் வழியாகவே தொடக்கம் பெறும். எந்த நம்பிக்கையையும் உறுதியையும் தெளிவையும் ஞானத்தையும் அன்பையும் கொண்டதாக இச்சூழல் விளங்க வேண்டுமென்று நினைக்கிறோமோ, அவற்றை முதலில் நம் சகோதர சகோதரிகளிடமும் பிள்ளைகளிடமும் பெண்களிடமுமிருந்து தொடங்குவது நல்லது.
மனம் ஒரு கழனியைப் போன்றது. எதை அறுவடை செய்ய எண்ணுகிறோமோ அதையே அக்கழனியில் விதைத்தல் வேண்டும். எதை விதைத்தாலும் முளைப்பது சுரையாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. சூழல் எப்படி இருந்தாலும் இளைஞர்கள் சக்தி ஆக்கங்களின் அடிப்படை ஊற்றாகத்தான் இருக்க வேண்டும் என்னும் எண்ணமும் அபத்தம் நிறைந்ததாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளைஞர்களின் சக்தி - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இளைஞர்கள், இருக்க, செய்து, முடியாமல், என்றதும், வேண்டும், சூழலை, சக்தியை, இருக்கும், முடியாது, என்கிற, மட்டுமே