பொதுவான கட்டுரைகள் - வெற்றி பெறும் மாணவன்!
- அகிலன் இராமநாதன்
நவீன சமுதாயம் ஒன்று உருவாக வேண்டுமெனில் கல்வியில் அந்நாடு சிறந்ததாக விளங்க வேண்டும்.
நம் நாட்டில் மொத்தம் 19 கோடி மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். நம்முடைய மக்கள் தொகையைக் கணக்கிடும் போது 19 கோடி மாணவர்கள் என்பது மிகவும் குறைவானதே. சுமாராக 25 கோடி மாணவர்களுக்கு அதிகமாகக் கல்வி பயிற்றுவிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் எழுத்தறிவு 65 சதவிகிதம் (ஆண்கள் - 76 சதவிகிதம், பெண்கள் - 54 சதவிகிதம்). இந்த எழுத்தறிவு சதவிகிதத்திற்கும் மாணவர்களின் கல்வித் தரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஆயினும் உலகின் மற்ற நாடுகளின் மாணவர்களை விட இந்திய மாணவர்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குகின்றனர். நம்முடைய மாணவர்கள் வெளிநாடு சென்று தங்களுடைய தொழில் நுட்பத் திறமையில் சிறந்து விளங்குவதால் தான் நமது நாட்டின் மனித வளத்திற்கு அயல் நாடுகளில் மிகுந்த தேவை ஏற்படுகிறது. இதற்கு, கல்வியாளர்களும் அரசாங்கமும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பயிற்சி அளித்து தொழில் நுட்ப ஏற்றுமதியாளர்களாக மாற்ற வேண்டும். இதன் மூலம் சொந்த நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் அன்னியச் செலவாணியையும் அதிகம் ஈட்டலாம். ஆனால் நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் படிப்பு வசதிகள் குறைவே. இதனால் தொழில் நுட்பப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும் மருத்துவப் படிப்பிலும் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை விடக் குறைவாக இருக்கிறது.
நம்முடைய கல்வி, குறிப்பாகப் பிளஸ் 2 அளவில் போட்டித் தேர்வை நோக்கித்தான் செல்கிறதேயொழிய ஆழமானதாக இல்லை. ஒரு பள்ளி 100% தேர்ச்சிகாட்டும் பள்ளி என்றால், அதில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறந்த மாணவர்கள் என்று பொருள் கொள்ளலாகாது. ஒவ்வொரு பள்ளியிலும் கற்றுத் தரும் உளவியல் முறை மாறுபாடானது. சில மாணவர்களுக்கு சில முறைகள் பொருந்தும்; சிலருக்குப் பொருந்தாது. இதை அனைத்துப் பெற்றோர்களும் நன்கு உணர வேண்டும்.
இதேபோல, பொறியியல் கல்லூரிகளில் சேரும் போது எந்தப் பிரிவு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்றே எண்ணுகின்றனர். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு கணிணி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் படிப்பிற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது மின்னணு-தொலைத் தொடர்புப் பொறியியல் துறை & மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை போன்றவை முன்னிடத்திற்கு வந்து விட்டன. சகமாணவர்களிடம் கேட்டறிந்தோ அல்லது பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்தோ தங்களது எதிர்காலத்தை மாணவர்கள் நிர்ணயிக்கின்றனர். இந்தியாவில் பற்பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் வழிகாட்டு மையம் என்ற துறையே இல்லாமல் இருக்கிறது. அவ்வாறு இருப்பினும் அது திறம்பட செயல்படுகிறதா என்பது சந்தேகமே! தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் தலா ஒரு வழிகாட்டுதல் மையம் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் சதவிகிதத்திற்கும் வழிகாட்டுதல் மையங்களின் சதவிகிதத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம்.
பாரத நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்பது இப்போது கிடையாது. கல்லூரிகளில் படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள் அளவிற்கு ஏற்ப நம் நாட்டின் மனிதவளத் தேவைகள் அதிகம் இல்லை. மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் போது என்ன வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மிதந்து கொண்டே சேருகின்றனர். வெளிநாடு சென்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டே படிக்க ஆரம்பிக்கின்றனர். எந்தக் கல்வியாளராவது அல்லது எந்த வழிகாட்டுதல் மையமாவது சுயதொழில் தொடங்க அறிவுறுத்துகிறதா? மேலை நாடுகளில் அரசாங்க வேலையை எதிர்பார்ப்பதே இல்லை. சொந்தமாகத் தொழில் தொடங்கவோ அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யவோ அதிகம் விரும்புகின்றனர்.
ஆனால் இங்கு மாணவர்கள் எதிர்கால நோக்கு இல்லாமல், எவ்வாறு படித்த கல்வியைப் பிரயோகிப்பது என்று நாளெல்லாம் யோசித்து விரக்தியடையும் சூழ்நிலையை எட்டுகின்றனர். வழிகாட்டுதல் மையம் நன்றாகச் செயல்பட்டால் தான் கல்லூரியின் முதல் ஆண்டிலேயே என்ன வேலைக்குச் செல்வது? சுயதொழில் தொடங்கலாமா? அதற்கான வழிமுறைகள் என்னென்னவென்று மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். அப்போது தான் அவர்களுக்குப் படிப்பில் ஒரு தெளிவு ஏற்படும். இரண்டு பிரிவும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும் கருவுருக்களில் முக்கியமானவை என்று மாணவர்களின் உளவியலை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். நம் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்கிறார். முக்கிய அம்சங்களில் திறமையை வெளிக்கொணர்வதும், ஓர் இலக்கை நோக்கிச் செல்ல வழிகாட்டுவதும் அடங்கும்.
மாணவர்களுக்குத் திறமை என்பது ரத்தத்துடன் ஊறிய ஒன்றாக இருக்க வேண்டும். திறமையை, அடிப்படைத் திறமை என்றும் செயல்பாட்டுத் திறமை என்றும் பிரிக்கலாம். அடிப்படைத் திறமைகளில் - எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது, முடிவு எடுப்பது, பிரச்சினைகளைத் தீர்ப்பது, தற்சார்பு மேலாண்மை மற்றும் நேர்மை போன்றவை அடங்கும். ஒரு மாணவன் குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்க ஆரம்பிக்கிறான். பள்ளி செல்லத் தொடங்கிய பின், எவ்வாறு பாடம் படிப்பது, மற்றவர்களுக்குப் புரியும் படி எவ்வாறு எழுதுவது, மற்றவர்களுடன் எவ்வாறு பேசுவது, மற்றவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதைக் கவனிப்பது போன்றவை அவனுடைய அடிப்படைத் திறமைகள் என்று கூறலாம். மேலும் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பவனாகவும், சுதந்திரமானவனாகவும் மாணவன் மாற வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்தவனாகவும், பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று வழி என்ன என்பதைத் தீர்மானிப்பவனாகவும் இருக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நல்ல முடிவு எடுக்கக் கூடியவனாகவும், அந்த முடிவு அவனுக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும், நாட்டுக்கும் பயன்படக்கூடியதாக அமைய வேண்டும் என்ற உறுதியுடனும் முடிவு எடுக்க வேண்டும். உயர்ந்த இலக்கை நோக்கி வேலை செய்யும் பொறுப்புணர்ச்சி கொண்டவனாகவும், நேர்மையானவனாகவும் இருக்க முற்பட வேண்டும்.
செயல்பாட்டுத் திறமைகள் என்று எடுத்துக் கொண்டால் காலம் தவறாமை; தொழில் நுட்பங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன - அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்தவனாக இருக்க வேண்டும். எதிர்கால இலக்கை வைத்து செய்திகளைச் சேகரிக்கவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், அவற்றில் உள்ளவற்றை விரிவாக ஆராயவும், மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளவும், வேறுபட்ட கலாசார மற்றும் சூழ்நிலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியடையும் மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
ஒரே வாக்கியத்தில் சொன்னால், அடையக்கூடிய இலக்கை நோக்கிய கடின உழைப்பு, தீர்க்கமாக முடிவு எடுத்தல் தன்னம்பிக்கை போன்ற குணங்களைக் கொண்ட மாணவன் வாழ்வில் வெற்றி பெறுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றி பெறும் மாணவன்! - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், மாணவர்கள், எவ்வாறு, தொழில், கிடைக்கும், வேலை, மாணவர்களின், முடிவு, வழிகாட்டுதல், அதிகம், பொறியியல், போது, இலக்கை, என்பது, இருக்க, இல்லை, மையம், என்ன, அடிப்படைத், அல்லது, திறமை, மாணவன், படிப்பிலும், சதவிகிதத்திற்கும், சதவிகிதம், நம்முடைய, கோடி, தான், நாட்டின், நல்ல, கல்லூரிகளில், பள்ளி, போன்றவை