பொதுவான கட்டுரைகள் - இயற்கையின் குழந்தைகள்
- அறம்
உலகெங்கும் பல நூற்றுக்கணக்கான இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளின் முதல் மக்கள் ஆவர். தரையே தெரியாத அளவுக்கு எப்போதுமே உறைபனி மூடிய ஆர்க்ட்டிக் கண்டம் முதல் வளமான ஆற்றுப்படுகைகள், இயற்கை வளம் கொஞ்சும் அடர்ந்த இருண்ட காடுகள். பரந்த பெருங்கடலில் ஆங்காங்கே பரவிக் கிடக்கும் கண்ணீர்த் துளி போன்ற சிறு தீவுகள், மற்றும் சுட்டெரிக்கும் மணல் பரவிய பாலைவனங்கள் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தனர். நாகரிக மக்கள் தமது குமுகாயங்களை நிறுவுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழங்குடி மக்கள் தமது குமுகாயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் சில ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசுகின்றனர். அற்புதமான இசைக் கருவிகளையும், ஓவியங்களையும், கலை வேலைப்பாடு மிக்க சிற்பங்களையும் படைத்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சில பழங்குடி இன அரசுகள் பெரும் நகர்களை அமைத்துள்ளன (பழங்குடி மக்களின் வெவ்வேறு குழுக்கள் / பிரிவுகளை இக்கட்டுரையில் இனங்கள் என்று குறித்துள்ளோம்.
மனிதர் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களிடத்தும் நிலத்துடனும் நேசமாக வாழ்தல், இயற்கையைப் போற்றி மதித்து நடத்தல் முதலியன உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களைக் குறித்த சில பொதுவான உண்மைகள் ஆகும். தம்மைச் சுற்றி உள்ள அனைத்து உயிரினங்கள் மட்டுமின்றி, நீர்நிலைகள், வானம், கற்கள் போன்ற அனைத்துமே தமது முன்னோர்களின் மறு உருவங்கள் என்ற நம்பிக்கையும் பொதுவாக பழங்குடி மக்களுக்கு உண்டு. அதனால் அவர்கள் நம்மைப் போல இயற்கையை வென்று அடக்கியாள வேண்டும் என்றோ இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் நமது வசதிவாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவே, படைக்கப்பட்டுள்ளன என்றோ கருதுவதில்லை. இப்போது பரவலாக உள்ள மதங்களைப் போலன்றி, பழங்குடி மக்களின் மதங்கள் மனிதரை இயற்கையின் பிற படைப்புகளில் இருந்து வேறு படுத்தவோ மனிதர் உயர்ந்தவர் என்றோ போதிக்கவிலலை. எனவே, அவர்கள் வாழும் முறையே பெரும்பாலும் தமது சூழலை நாசப்படுத்தாவண்ணம் அமைந்திருந்தது. மேலும், அவர்களில் பெரும்பாலான குழுக்களுக்கு சொத்துப்பாகுபாடு தேவையற்ற ஒன்றாக இருந்துவந்தது. அவர்களும் விலங்குகளை வேட்டையாடுதல், விவசாயம் செய்தல், சடங்குகளில் பங்கேற்றல், போரிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். (ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக் கண்டங்களில் சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வரை வாழ்ந்து பிறகு முற்றிலும் அழிந்துவிட்ட சிலவகை பெரிய பாலூட்டிகள் அழிந்தமைக்குக் காரணம் பழங்குடி மக்களின் மக்கட்தொகைப் பெருக்கமும் அதனால் பெரிய விலங்குகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதுமேயாகும் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.) மேலும், செழிப்பான பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தில் முன்னேறி தேவைக்கு அதிகமான விளைச்சல் அடையத் தொடங்கிய காலந்தொட்டு அவர்களிடையேயும் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் தோன்றின. ஆயினும், தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகில் நிகழ்ந்ததைப் போன்ற பேரழிவுகள் பண்டைக்காலத்தில் நடைபெறவில்லை. சூழல் அழிவுகளும் பெரும் ஏற்றத்தாழ்வுகளும் பழங்குடி மக்களிடையே இல்லை.
ஆஃப்ரிக்கா, ஆசியா, மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் சில ஆயிரம் ஆண்டுகளாகவும், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களில் கடந்த ஐநூறு ஆண்டுகளுக்குள்ளாகவும் நாகரிக மக்கள் சிறுகச் சிறுகப் பரவிப் பழங்குடி மக்களைப் பெரும் நெருக்கடிகளுக்குள்ளாக்கினர். பல லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் எப்படி நுழைந்த வந்தேறிகளுடன் நேர்ந்த போர்களில் கொல்லப்பட்டனர். பழங்குடி மக்களிடையே இருந்திராத நோய்கள் வந்தேறிகளுடன் குடிபுகுந்தன. இயற்கையாகவே அந்நோய்களுக்கான எதிர்ப்பாற்றலைப் பெற்றிராததால் பல லட்சக்கணக்கான பழங்குடியினர் நோய்வாய்ப்பட்டு மாண்டனர். இப்போதும் கூட உலகின் பல பகுதிகளிலும் பழங்குடி மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கிடையேதான் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் தமது வாழ்விடங்களான அடர்ந்த காடுகளில் இருந்து விரட்டப்படுகின்றனர் அல்லது வேறுவழிகளில் நெருக்கப்படுகின்றனர். சுரங்கத் தொழில், அணைகள் கட்டுதல், விவசாயம், சுற்றுலா மரங்களை வெட்டி விற்றல், விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பழங்குடி மக்கள் தமது இடங்களில் இருந்து உள்நாட்டு அகதிகளாக இடம்பெயரும் அவல நிலை உலகம் முழுவதும் பரவலாக நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, விடுதலை நாடான இந்தியாவில் 8 சதவீதத்தினரே பழங்குடிகள். ஆனால் அணைக்கட்டுகள், சுரங்கங்கள் முதலிய மேம்பாட்டுத் திட்டங்களினால் அப்புறப்படுத்தப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் பழங்குடிகளே, இந்தியாவிலுள்ள பழங்குடி மக்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் தமது இயற்கையான இடத்திலிருந்து கட்டாயத்தின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டவர்களே. சில பொதுத்துறைத் திட்டங்களில் அப்புறப்படுத்தப்பட்டவர்களில் 80 முதல் 100 சதவீதத்தினர் பழங்குடி மக்களாவர். (அப்புறப்படுத்தப்பட்டவர்கள் என்ற சொல் அச்செயலின் முழுக்கொடுமையை வெளிப்படுத்துவதில்லை என்பதை நாம் மனதிலிருத்தவேண்டும்.
ஆஃப்ரிக்கா, ஆசியா, மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் பழங்குடி மக்களுக்குப் பேரழிவு தந்த நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால் அவற்றைப் பற்றிய விவரங்கள் நமக்கு மிகக்குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களில் கடந்த ஐநூறு ஆண்டுகளிலும், ஆஃப்ரிக்காவில் கடந்த சுமார் இருநூறாண்டுகளிலும் நடந்தவற்றைப் பற்றியும், தற்போது இந்தியா உட்பட சில நாடுகளில் பழங்குடி மக்கள் நிலை குறித்தும் சுருக்கமாக இனிக் காண்போம்.
ஆஃப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒன்றில்தான் முதலில் மனித இனம் தோன்றியிருக்க வேண்டும் என்று பெரும்பாலான தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதிலும், குறிப்பாக ஆஃப்ரிக்காவில் தான் இதுவரை அதிக அளவில் தடயங்கள் கிடைத்துள்ளன. எங்கெங்கு மனித இனம் தோன்றி வேறு எந்தெந்தப் பகுதிகளுக்குப் பரவிற்று என்பது அறுதியிட்டுக்கூற முடியாத ஒன்றாகும். கற்காலக் கல்வெட்டுகள், ஆயுதங்கள், பண்டங்கள், கல்லறைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்கள், இன்னபிற புதைபொருட்கள் கிடைப்பதை வைத்து ஆராய்ச்சியாளர்கள் இவை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றனர். தமது புலனாய்வில் கரியம்வழிக் காலக்கணிப்பீடு முதலிய அறிவியல் முறைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சுமார் 40 முதல் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடி மக்கள் ஆசியா, சைபீரியா முதலிய பகுதிகளிலிருந்து அமெரிக்கக் கண்டத்தில் குடியேறியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் நியான்டர்தால் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்குப் பிறகு அக்கண்டத்தில் சென்று குடியேறிய பழங்குடிமக்களே இன்று அங்கு வாழும் பழங்குடிகளின் மூதாதையர் ஆவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கடல் வழியே சென்று குடியேறியவர்கள் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். படகு ஒன்றின் 20,000 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை இவர்கள் ஆதாரமாக முன் வைக்கின்றனர். அடுத்த கட்டமாக, இன்றைக்கு ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு ஆசியாவிலிருந்து மங்கோலியப் பழங்குடிகள் அமெரிக்காக் கண்டத்தில் வடக்கிலிருந்து சென்று குடியேறி இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இன்றைக்குச் சுமார் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குகைகளிலும் பிற பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி மைய அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள் முதன்முதலில் ஓரளவு விவசாயத்தில் ஈடுபட்டனர். இப்போது பெரு நாடு உள்ள பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலாகப் பருத்தி பயிரிடப்பட்டு நெசவுத் தொழில் துவங்கிற்று. அங்கு விளைவிக்கப்பட்ட பருத்தி, அப்பகுதியில் தானாக விளைந்த பருத்திக்கும் தெற்காசியாவில் விளைந்த பருத்திக்கும் இடையே ஏற்பட்ட ஒட்டு ஆகும். அதனால் அப்போதே அந்தப்பகுதி மக்களுக்கும் தெற்காசியாவில் வாழ்ந்தவர்களுக்குமிடையே தொடர்பு இருந்திருக்கவேண்டும் எனவும் யூகிக்கலாம். வறட்சிப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதிகப்படியான நீரைத் தமது பயிர்களுக்குப் பாய்ச்சி விவசாயம் செய்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இன்றைய எக்வெடார் நாட்டுப்பகுதியில் கி.மு.3300 வாக்கில் வாழ்ந்தவர்கள் கடற்பயணத்தில் திறமை பெற்றிருந்தனர். வால்டிவியா என்ற பகுதியில் வாழ்ந்த அவர்களுக்கும் அப்போது ஜப்பானின் தெற்குத் தீவுகளில் வசித்த ஜோமோன் எனும் மக்களுக்கும் பசிஃபிக் பெருங்கடல் கடந்த தொடர்புகள் இருந்திருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத நம்பிக்கைகளும் சடங்குகளும் தோன்றியிருக்கின்றன. கி.மு.2000 வாக்கிலேயே குமுகாயத்தில் வர்க்க வேறுபாடுகள் நிலவின. பூசாரிகள், போர்வீரர்கள் ஆகியோர் மேட்டுக்குடியினராக இருந்தனர். ஆனால், அடிமைத்தனம் இல்லை, கி.மு. 1400 வாக்கில் நேர்த்தியான ஓவியங்கள் வரையப்பெற்ற வழைமண் (செராமிக்) பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. கி.மு. 1500க்கு முன் வாழ்ந்த பழங்குடிகளின் மொழிகளின் சில சொற்கள், அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் முதலியன இன்றும் புழங்குகின்றன. கி.பி.300 வாக்கில் இப்போது மெக்சிக்கோவின் தலைநகர் உள்ள இடத்துக்கு அருகில் ஞாயிறுக்கான பிரமிட் கட்டப்பட்டது. பிறகு நிலவுக்கான 75 மீட்டர் உயரமுள்ள பிரமிடும் கட்டப்பட்டது. ஆயிரங்கால் முற்றமும் பெரும் மண்டபங்களும் கட்டப்பட்டன.
கி.பி. 300ல் தொடங்கி மாயா, ஆஸ்ட்டெக், இன்க்கா எனும் பேரரசுகள் மைய மற்றும் தென் அமெரிக்காவில் தோன்றிப் பரவி வளர்ந்தன. மாயா பேரரசின் காலத்தில் கலை வளர்ச்சியுற்றது. தரை, கடல், ஆறுகள் வழியாகத் தொலைதூரப் போக்குவரத்தின் அடிப்படையில் வாணிபத் தொடர்புகள் இருந்தன. வானியல் அறிவும் வளர்ந்திருந்தது. ஒரு ஆண்டு என்பது சரியாக 365 நாட்களைக் கொண்டதல்ல என்று அவர்கள் அறிந்திருந்தனர். கி.பி. 900வாக்கில் இந்தப் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. தொடர்ந்து வேளாண்மை செய்ததால் நிலவளம் குன்றியதுவும் நீதி, நேர்மை குறையத்தொடங்கியதுவும் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வெள்ளையர் கி.பி.1500களில் வந்து இரண்டு அமெரிக்கக் கண்டங்களிலும் குடியேறத் தொடங்கினர். அப்போது சீரழியத் தொடங்கிய பழங்குடி மக்களின் வாழ்க்கை இன்றும் பாதாளத்தை நோக்கியே சென்று கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் மட்டுமன்றி அக்கண்டங்களில் உள்ள வேறு பல நாடுகளிலும் பழங்குடி மக்களும் ஆஃப்ரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்களும் வெள்ளையர்களின் வன்முறையினால் (போர்களிலும் அமைதிக்காலங்களிலும்) பெருமளவில் அல்லலுற்றனர். மேலும், வெள்ளையர்களுடன் ஐரோப்பாவிலிருந்து வந்த புதிய நோய்களினால் தாக்கப்பட்டும் (பழங்குடிகளுக்குப் பழக்கமில்லாத புதிய மதுபானங்களின் வரவால்) குடிபோதைகளில் சிக்குண்டும் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர் அல்லது வேறுவிதங்களில் சீரழிந்தனர். அமெரிக்க அரசு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பழங்குடி இன மக்களுடன் பல்வேறு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதும் அவற்றைத் தனது வசதிக்கும் பேராசைக்கும் ஏற்பத் தானே மீறுவதுமாக இருந்துவந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கி.பி. 1500க்கு முற்பட்ட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஐம்பது லட்சம் பேர் முதல் ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வரை வாழ்ந்துவந்தனர். கடந்த ஐநூறு ஆண்டுகளில் ஐரோப்பியர் வந்தபின் ஏற்பட்ட அழிவின் பிறகு இப்போது இருநூறு இனங்களைச் சேர்ந்த மூன்றரை லட்சம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். சில இனங்களில் நூறுக்கும் குறைவானவர்களே உள்ளனர். உலக அளவில் இன்னும் வெளி உலகத்தொடர்பு இல்லாத பழங்குடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிரேசில் நாட்டில் வசிக்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் இரண்டே நாடுகள் தான் இன்னும் பழங்குடி மக்களுக்கு நில உரிமை வழங்கவில்லை. அவ்விரண்டில் பிரேசிலும் ஒன்றாகும். பிரேசிலில் வாழும் மூன்றரை லட்சம் பழங்குடியினர் பல குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். அவற்றில் 110 மொழிகள் சில நூறு பேர்களாலேயே பேசப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் 500 முதல் 600 வகைப்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் மூதாதையர் 50,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்போது அந்த நாட்டில் சுமார் 4,00,000 பழங்குடிகள் வசிக்கின்றனர். இது ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவு ஆகும். வெள்ளையர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய 200 ஆண்டுகளுக்குள் பழங்குடி மக்கள் தமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பெருமளவு இழந்துவிட்டார்கள்.
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் நிலத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல் முதலியவற்றைப் பெருமளவில் செய்யவில்லை. அதேபோல, தாங்கள் தங்குவதற்கெனப் பெரிய அளவில் வீடுகள் முதலிய எவற்றையும் அவர்கள் கட்டவில்லை. இக்காரணங்களால் அவர்கள் சுற்றுச் சூழலை அதிகம் பாதிக்காமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தனர். வேட்டையாடுதல் மற்றும் காய்கனி, கிழங்குகளைச் சேகரித்தல் ஆகியவையே அவர்களது வாழ்வாதாரங்களாக இருந்தன. அதனால் அவர்கள் நிலத்தைத் தனி உடைமை கொண்டாடவில்லை. இதன் காரணமாக ஐரோப்பியர்கள் பெருமளவு நிலத்தைத் தமக்குள்ளாகவே பங்குபோட்டுக்கொண்டனர். அதன் விளைவாகப் பழங்குடி மக்களது உரிமைகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை மிகப்பெருமளவில் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்டனர். பல்லாயிரமாண்டுகளாக அமைதியாக நடந்துகொண்டிருந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கே உள்ள அயோட்டியரோவா தீவில் வாழும் மாவோரி இனப்பழங்குடிகள் விவசாயத்தில் ஈடுபட்டனர். வீடுகள் கட்டி நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்தனர் (அயோட்டியரோவா என்பது நியூசிலாந்து என்று இப்போது பரவலாக அழைக்கப்படும் நாட்டின் பழங்குடிப் பெயராகும்) எனவே ஐரோப்பியர்கள் மாவோரிகளுடன் நில ஒப்பந்தங்கள் செய்துகொண்டனர். அதனால் மாவோரிகள் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் பட்டதைவிடச் சற்றுக்குறைவாகவே இன்னலுற்றனர்.
ஜப்பானில் வாழும் பழங்குடிகளில் அய்னு எனப்படுவோர் மிகுதியாக உள்ளனர். அவர்கள் ஜப்பானின் வடபகுதியில் உள்ள தீவுகளில் வசிக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கை உள்ள அவர்கள் தமது மொழி, பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றைப் பேணிக் காத்து வருகின்றனர். ஆனால் ஜப்பானிய அரசு சட்டப்படி தன் நாட்டில் இப்படிப்பட்ட சிறுபான்மையினர் இல்லை என்று கூறி வருகிறது. பெரும்பாலான ஜப்பானிய மக்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டுள்ளனர்! தாம் விடுதலையாக வாழ்ந்து வந்த பகுதிகளை கி.பி.1860களில் ஜப்பானிய அரசு ஆக்கிரமித்துக் கொண்டதாக அய்னுக்கள் கருதுகின்றனர். அதன் பிறகு அவர்களது வாழ்நிலை மிகக் கடினமானதாகி விட்டது என்கின்றனர்.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா / தெற்காசியா பகுதிகளிலிருந்து வந்து தாய்வானில் குடியேறியதாகக் கருதப்படும் பழங்குடி மக்களில் இப்போது 19 இனத்தினரே எஞ்சியுள்ளனர். இவர்களில் ஒன்பது இனத்தினரே தமது மொழியையும் கலாச்சாரத்தையும் அழியாமல் காப்பாற்றி வந்துள்ளனர். இவர்களும் மற்ற நாடுகளில் உள்ள பழங்குடியினரைப் போலவே பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமது பகுதிகளை மீட்பதற்காக அவ்வப்போது போராடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
1963 முதல் இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாப்புவா பகுதியில் 312 இனங்களைச் சேர்ந்த 22 லட்சம் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் சில குழுவினர் இன்னமும்கூட வெளியுலகத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாப்புவா பகுதி வியக்கத்தக்க வண்ணம் பெருமளவு கலை மற்றும் மொழி பன்முகத் தன்மை கொண்டு விளங்குகிறது. உலக மக்கள் தொகையில் 0.01 சதமே உள்ள இவர்கள் உலகில் வழக்கிலுள்ள மொழிகளில் 15 சதம் மொழிகளைப் பேசுகின்றனர்! இவர்களுடைய மொழிகளில் பல ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனினும், முற்றிலும் தனித்து நிற்கும் மொழிகளும் இங்கு வழங்குகின்றன. இம்மக்களும் இந்தோனேஷியர்களும் முற்றிலும் வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு உள்ள காடுகள் மற்றும் நிலத்தடியில் உள்ள கனிமங்களை எடுக்கப் பல பன்னாட்டு / உள்நாட்டு நிறுவனங்கள் வருவதுண்டு. அவற்றை எதிர்க்கும் பழங்குடி மக்களை ஒடுக்க இந்தோனேஷிய ராணுவம் இம்மக்கள் மீது பாலியல் பலாத்காரம் உட்படக் பலவித வன்முறைகளை ஏவத் தயங்குவதில்லை. இந்தோனேஷிய ராணுவம் இவர்களை விலங்குகளைப் போலவே நடத்துகிறது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மலேசியாவின் சராவாக் பகுதியில் வாழும் டயாக் இனப் பழங்குடிகள் அண்மைக்காலம் வரை அதிகம் வெளியுலகத் தொடர்பு இல்லாதிருந்தனர். இப்போது அவர்களும் காடுகளை அழிக்கும் மர அறுவை நிறுவனங்களை எதிர்த்துப் போராடவேண்டிய நிலையில் உள்ளனர்.
ரஷ்யாவில் முப்பது இனங்களைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்சம் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். ஓரோக் என்ற இனத்தினர் சுமார் இருநூறு பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரைகூட எழுபது சதவீதத்தினர் நாடோடிகளாக வாழ்ந்துவந்தனர். இப்போது பத்து சதத்தினரே அவ்விதம் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் மொழிகளுக்கும் ரஷ்ய மொழிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மற்ற நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் சுரங்கங்கள் தோண்டுதல், காடுகளை அழித்தல், பெட்ரோலியம் எடுத்தல், இவை தொடர்பான ஆலைகள் அமைத்தல் ஆகிய காரணங்களினால் இவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இவர்களது மொழி மற்றும் பண்பாட்டை அழிக்க சோவியத் அரசுகளும் பின்னர் ஆட்சிக்கு வந்த ரஷ்ய அரசுகளும் மிகவும் முயற்சி செய்திருக்கின்றன.
ஆஃப்ரிக்கக் கண்டம் முழுவதும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மைய நாடுகளில் வசிக்கும் பிக்மி எனப்படுவோர் (இரண்டரை லட்சம் பேர்), கென்யா மற்றும் டான்சானியா நாடுகளில் வசிக்கும் மாசாய் (மூன்று லட்சம்) ஆகியோர் இவர்களில் அடங்குவர். ஐரோப்பிய வல்லரசுகள் ஆஃப்ரிக்காவை அடிமைப்படுத்தப் துவங்கிய பிறகு பழங்குடிகளுடைய வாழ்வாதாரங்களாக விளங்கிய காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டதாலும் தனியார்மயமாக்கம் மற்றும் தேசியப் பூங்காக்களாக மாற்றப்படுதல் ஆகியவற்றாலும் பழங்குடி மக்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. வளமான நிலங்களுக்குப் பதிலாக மிகவும் வளங்குன்றிய நிலங்களும் வறட்சிப் பகுதிகளுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. பழங்குடி மக்கள் அளவுக்கதிகமாக கால்நடைகள் வைத்திருப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் பழங்குடி மக்கள் தமது மேய்ச்சல் நிலங்கள் எவ்வளவு கால்நடைகளைத் தாங்குமோ அவ்வளவே வைத்திருப்பர். பழங்குடிகளின் நலனுக்கென்று கூறப்பட்ட அரசாங்கத் திட்டங்கள் வெளியாட்களுக்கும் வாணிப நோக்குள்ள சில பழங்குடியினருக்குமே பயன்பட்டன. அவர்கள் தமது செல்வத்தை மேன்மேலும் பெருக்க, பெரும்பாலான பழங்குடியினர் மேன்மேலும் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். இதுகாறும் உலகில் பல நாடுகளில் பழங்குடி மக்களின் நிலை குறித்துச் சுருக்கமாகப் பார்த்தோம். இந்தியாவிலும் அவர்கள் நிலையில் நாம் பெருமைப்படத்தக்க மாற்றங்கள் இல்லை என்பதைக் கீழ்க்கண்ட சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் காணலாம்.
அந்தமான் தீவுகளில் 250 முதல் 300 பேர்களே உள்ள ஜாரவா எனும் பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தோற்றத்திலும் இனப் பாகுபாட்டிலும் இந்தியரைப் போலவே இல்லை. ஆஃப்ரிக்க இனங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்று உயிரியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளனர். இவர்கள் பெருமளவுக்கு வெளி உலகத் தொடர்பை விரும்பாமல், தற்சார்புடன் வாழ்ந்துவருகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, முதலில் வெள்ளையரும் பிறகு இந்தியரும் திட்டமிட்டு இத்தீவுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். 1970ல் இந்திய அரசு அமைத்த சாலை இந்த பழங்குடிகளை நரகத்துக்குத் துரத்தும் பாதையாக அமைந்துவிட்டது. (இது விதிவிலக்கல்ல. இயற்கையெழில் மிக்க எந்தப் பகுதிக்கும் சாலைகள் அமைக்கப்பட்டால் அங்கு இயற்கை வேகமாக அழிந்துவிடுகிறது) 1991 முதல் அதிகாரிகளின் திட்டப்படியும் ஒரு வழக்கறிஞர் வழக்குமன்றத்தில் தொடுத்து வென்ற வழக்கு மூலமும் இந்தப் பகுதியில் வெளியாட்கள் வந்து குடியேறத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கக் கண்டத்தில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரும் ஆஸ்திரேலியாவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரும் செய்யப்பட்டு, இப்போது மனித நேயம் கொண்டோரால் கண்டிக்கப்படும் அநீதியான செயல்களை இந்திய அரசு இப்போது செய்துவருவதுபோல் தெரிகிறது.
பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிட நல்ல பொருளாதார நிலையில் உள்ள மராட்டிய மாநிலத்தில் 17 இனங்களைச் சேர்ந்த 74 லட்சம் பழங்குடி மக்கள் (மாநில மக்கள் தொகையில் 10 சதம்) வாழ்கின்றனர். மகப்பேற்றின்போதே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை (மாநிலச் சராசரி) ஆயிரத்திற்கு 48. ஆனால் பழங்குடி மக்களிடையே இது ஆயிரத்திற்கு 110. மாநில அளவில் 28 சதம் குழந்தைகள் குறைவான எடை உள்ளவர்கள். ஆனால் 40 சதம் பழங்குடிக் குழந்தைகள் எடை குறைவானவர்கள். சில பழங்குடி மாவட்டங்களில் 92 சதம் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புனேவிலுள்ள பழங்குடி மக்களுக்கு உதவும் அரசு சாரா நிறுவனம் ஒன்று கூறுகிறது. (இதை அரசு மறுக்கிறது) மாநிலத்தில் நிலவும் கடும் ஏற்றத்தாழ்வுகள், பழங்குடிகள் வாழும் காடுகள் குறுகிய கால வருமானத்திற்காக (பழங்குடிகள் அல்லாதோரால்) அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்களே பழங்குடி மக்களை இந்த அவல நிலைக்குத் தள்ளியுள்ளன.
இயற்கை வளங்கள் நிறைந்த ஒரிசா மாநிலத்தில் இருந்து அவ்வப்போது ஆதிவாசிகளைப் பற்றிய வருத்தந்தரும் செய்திகள் வந்துகொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. நௌரங்ப்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் 86 சிற்றூர்கள் அரசாங்கத்தால் அண்மைக்காலம் வரை (அவை இருப்பதாக) ஒப்புக்கொள்ளப்படவேயில்லை! முறையான கவனிப்பு இல்லாததால் அண்மையில் ஒரே மாதத்தில் பதினொரு குழந்தைகள் இறந்தபிறகுதான் அரசு இயந்திரம் விழித்தது. ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக காடுகளில் வசித்துவந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவர்களுக்கு அரசிடமிருந்து அடிப்படை உதவிகூடக் கிடைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளதாம்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் அம்மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை என்கின்றனர். அது மட்டுமன்றி, தாங்கள் பல தலைமுறைகளாக வசித்துவந்த காடுகளில் இருந்து கட்டாயத்தின்பேரில் அப்புறப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வப்போது அரசு இயந்திரங்கள் தம் மீது வன்முறையை ஏவி விடவும் தயங்கியதில்லை என்கின்றனர். பழங்குடி மக்கள் விளைவித்த பயிர்களை அவர்களுக்கு விடாமல் தாங்களே அறுவடை செய்துகொள்ளுதல், பயிர்களுக்கிடையே களைச் செடி விதைகளை விதைத்துப் பயிர்களை நாசம் செய்தல் மற்றும் நிலத்தின் வளத்தைக் குறைத்தல் ஆகிய ஈனச் செயல்களையும் அரசு அதிகாரிகளில் சிலர் செய்வதாகப் பழங்குடி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எங்களுடைய வாழ்வாதாரங்களான காடுகள், மலைச் சூழல்கள், சிற்றாறுகள், ஓடைகள், குளங்கள் முதலியவற்றை தரிசு நில மேம்பாடு, சமூகக் காடு வளர்ப்பு, வனச் சரணாலயங்கள் அமைத்தல், சுரங்கத்தொழில், ஓரினப் பயிரிடுதல், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், வெளியாட்கள் வீடு / விடுதிகள் கட்டுதல் போன்ற பல காரணங்களுக்கு அரசு காவு கொடுத்துவருகிறது. அதனால் நாங்கள் வாழும் சிற்றூர்கள் எங்களைப் பொறுத்தவரை திறந்தவெளிச் சிறைச்சாலைகளே, என்கின்றனர் பழங்குடி மக்கள், சேலம், நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் உள்ள சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, கொல்லிமலை, ஏலகிரி ஆகிய மலைப் பகுதிகளே இவர்களது பாரம்பரிய உறைவிடங்களாகும். மலைத்தோட்ட முதலாளிகள் தமது தோப்புக்களின் வழியே ஓடும் சிற்றாறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைப் பிடித்து வைத்துக்கொள்வதால் அந்த ஆறுகளை நம்பியுள்ள பல ஆதிவாசிச் சிற்றூர்கள் தமது வாழ்கைக்கு அடிப்படைத் தேவையான நீராதாரம் இன்றி அல்லற்படுகின்றன என்று ஏற்காடு அருகே ஒரு பழங்குடி மக்களுடைய சிற்றூரின் தலைவர் (பஞ்சாயத்துத் தலைவர்) கூறுகிறார்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் மட்டுமன்றி இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடி மக்களுடைய நிலை மோசமாகவே உள்ளது. இந்த வரலாற்றுச் சுருக்கத்தில் இருந்து நாம் உணரக்கூடியது என்ன? பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் வெளியாட்கள் வந்து குடியேறுவதால் பழங்குடி மக்கள் கீழ்க்கண்ட பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
1. அவர்களுக்குப் புதியவையான (அதனால் அவர்களது உடலில் எதிர்ப்பாற்றல் இராது) நோய்கள் தாக்கிப் பலர் மடிகின்றனர்.
2. தமது கலை, பண்பாடு, மொழி முதலியவை அழியக் காணும் அவர்கள் தமது தனித்தன்மையை இழந்து ஒழிகின்றனர்.
3. தமது தற்சார்பை இழந்துவிடுகின்றனர்.
4. தமது வாழ்க்கைமுறை சிதைவதால் மன உறுதியையும் தன்னம்பிக்கையும் இழந்து குடிபோதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
அமெரிக்க, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, ஜப்பான் உட்படப் பல நாடுகளிலும் நேர்மை உணர்வு கொண்ட நாகரிக இன மக்கள் தமது குமுகாயங்களும் அரசுகளும் பழங்குடி மக்களுக்கு செய்துவரும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அண்மைக்காலத்தில் சில நாடுகளில் பழங்குடி மக்களுக்கு அந்நாட்டு வழக்குமன்றங்கள் மூலம் சிறிதளவு நியாயம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் உள்ள பழங்குடியினருக்குப் பெருமளவில் விடிவு எப்போது வருமோ? பல நாடுகள் உலகத் தொழிலாளர் குழுவின் பழங்குடி மக்கள் உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓரளவு பழங்குடி மக்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புவோம்!
பன்னெடுங்காலமாக இந்தியாவில் பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டும் மனிதரைவிடக் கீழான நிலையில் நடத்தப்பட்டும் வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான ஆஃப்ரிக்க மற்றும் ஆசியப் பகுதிகளை ஒரு சில ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள் பங்குபோட்டுத் துண்டாடிய போது அப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள், தீண்டாமையால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்படப் பிறரும் அடிமைகளாகினர் என்பது வரலாறு.
கி.பி. 1900 வரை நடந்த அனைத்துப் போர்களிலும் 4 கோடிப்பேர் இறந்திருப்பர், இன ஒழிப்புக் கலவரங்களில் 13 கோடியே முப்பது லட்சம்பேர் இறந்திருப்பர் என்று அமெரிக்காவிலுள்ள ஹவாயி பல்கலைக் பேராசிரியர் ஒருவர் கணித்துள்ளார். அதற்குப்பிறகு (அதாவது, கடந்த நூற்றாண்டில்) நடந்த போர்களில் மட்டுமே மூன்று கோடியே எழுபது லட்சம்பேரும் இனப்படுகொலைகளில் பதினேழு கோடிப்பேரும் இறந்திருப்பர் என்றும் அவர் கணிக்கிறார். நாகரிகம் முன்னேறிய அதே காலத்தில் கொடுமைகள் மிக அதிக அளவில் நடந்துவருகின்றன என்பதையும் இதன்மூலம் நாம் அறியலாம்.
பழங்குடி மக்களுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றியும் இன்று அவர்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதற்கான காரணிகளைப் பற்றியும் நாம் அனைவரும் அறிவது நமது எதிர்காலத்திற்கும் நமது சந்ததியினரின் எதிர்காலம் வளம் குன்றாமல் இருப்பதற்கும் உதவும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று (குறள் 208)
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையை
பேரா இயற்கை தரும் (குறள் 370)
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (குறள் 380)
ஆகிய மூன்று குறட்பாக்களின் கருத்துகளும் இதையொட்டியனவே ஆகும்.
நன்றி: ஒப்புரவு
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கையின் குழந்தைகள் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பழங்குடி, மக்கள், தமது, உள்ள, ஆண்டுகளுக்கு, அரசு, இப்போது, வாழும், இவர்கள், லட்சம், சுமார், அதனால், இருந்து, இனங்களைச், கருதுகின்றனர், பெரும், பழங்குடிகள், ஆராய்ச்சியாளர்கள், வசிக்கின்றனர், பிறகு, கடந்த, கண்டங்களில், வாழ்ந்த, பெரும்பாலான, இல்லை, நாம், மக்களுக்கு, நாடுகளில், அளவில், ஆகிய, அமெரிக்கக், சதம், என்பது, மட்டுமன்றி, பேர், காடுகள், இயற்கை, வேறு, பகுதியில், நிலை, மக்களின், முன், பழங்குடியினர், பெருமளவு, ஐநூறு, சென்று, நாட்டில், இருநூறு, வந்து, அமெரிக்க, முப்பது, ஆஸ்திரேலியாவில், உள்ளனர், மனித, கண்டத்தில், ஆசியா, முதலிய, போலவே, ஆகும், அவர்களுக்கு, விவசாயம், முன்னரே, ஆயிரம், வாழ்கின்றனர், வாழ்ந்து, குழந்தைகள், நிலையில், மூலம், மொழி, என்கின்றனர், ஜப்பானிய, சிற்றூர்கள், கோடியே, பகுதிகளை, மக்களுடைய, பிரேசில், அவர்களது, வந்த, குறள், இறந்திருப்பர், இவர்களில், மாநிலத்தில், மிகவும், மூன்று, அரசுகளும், நாடுகள், அந்த, அவ்வப்போது, பெருமளவில், எஞ்சியுள்ளனர், மட்டுமே, வெளியாட்கள், இந்திய, பண்பாடு, உரிமை, மக்களில், பெரிய, முற்றிலும், ஆஸ்திரேலியா, ஈடுபட்டனர், அதிக, என்றும், உலகில், விவசாயத்தில், பகுதிகளில், செய்தல், வேட்டையாடுதல், மொழிகளைப், ஆயிரக்கணக்கான, நாகரிக, வசிக்கும், பேசுகின்றனர், என்றோ, மேலும், பரவலாக, நமது, மக்களிடையே, ஆஃப்ரிக்கா, தீவுகளில், வாக்கில், தொடர்பு, முன்னர், எனும், ஆகியோர், வாழ்க்கை, காலத்தில், இருந்தன, பழங்குடிகளின், அங்கு, காடுகளில், தென், அமெரிக்கா, சதவீதத்தினர், உலகெங்கும், பற்றியும், ஆஃப்ரிக்காவில், முதலில், மக்களும்