முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » உலக வணிகமும் அறநெறித் தோல்வியும்
பொதுவான கட்டுரைகள் - உலக வணிகமும் அறநெறித் தோல்வியும்
- தமிழில்: க. பஞ்சாங்கம்
பசியினால் ஓடிவந்து உள் விழுந்த ஒரு சூடான் சிறுமியின் அருகில் ஒரு கழுகு குந்தி இருக்கும் இந்தப் படம் பட்டினிக் கோலத்திற்கே படிமமாக அமைந்துவிட்டது. இங்கே இடம் பெற்றிருக்கும் புகைப்படம் ''தெ நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக கேவின் கார்ட்டர் எடுத்தது. ''தெ நியூயார்க் டைம்ஸ்'' நடத்திய கேமிரா படப்பிடிப்புப் போட்டியில் இந்தப் படத்திற்குப் புகழ்பெற்ற ''புலிட்ஸர்'' பரிசு கிடைத்தது. 1994 ஏப்ரல் 13-ஆம் தேதியிட்ட ''டைம்ஸ்'' பத்திரிகையில், இந்த படத்திற்கு மூன்று புலிட்ஸர் பரிசு கிடைத்திருப்பதை அங்கீகரித்து, ஒரு முழுப்பக்க விளப்பரத்தையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டது.
இந்தப் படம் பத்திரிகையில் முதன் முதலில் வெளிவந்தபோது தெற்குச் சூடானில் நிகழ்ந்த அரசியல் வன்முறைகளினாலும் உள்நாட்டுக் கலவரங்களினாலும் ஏற்பட்ட பஞ்சம் குறித்த கதையும் படத்தோடு வெளிவந்தது. ''படத்திலிருக்கும் குழந்தை, பிறந்த குழந்தையை விடக் கொஞ்சம் பெரிது. அந்தக் குழந்தை நிர்வாணமாக உள்ளது. நோயினாலும் பலவீனத்தினாலும் தலைகுப்புறக் கிடப்பது போல் தெரிகிறது. நகர்வதற்கு முடியாமல் பாதுகாப்பற்ற நிலையில் விழுந்து கிடப்பதாகப்படுகிறது. அம்மா இல்லை; குடும்பம் இல்லை; கழுகின் தாக்குதலில் இருந்து தடுத்துக் காப்பாற்ற அந்த இடத்தில் வேறு யாருமேயில்லை. மேலும் பட்டினியால் அக்குழந்தை இறந்த பிறகு கழுகினால் தின்னப்படுவதிலிருந்து தடுப்பதற்கும் யாருமில்லாத நிலை. இது ஒரு கைவிடப்பட்ட குழந்தை என்பதைப் படம் காட்டிவிடுகிறது.'' '' தெ டைம்ஸ்'' பத்திரிக்கையின் இந்த சுய பாராட்டு மொழியில், படம் தரும் அதிர்ச்சி பதிவாகவில்லை.
இது வெளிவந்த புதிதில், பல பத்திரிகைகள் பல தடவை மீண்டும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டன. அரசு சாராத பல உதவி நிறுவனங்கள், இந்தப் படத்தை விளம்பரமாக வெளியிட்டு அகதிகளுக்கு உணவு வழங்குவதற்கான நிதியைக் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டன. மனிதர்களுக்குள் இருக்கும் அற உணர்வை, சமூக நல நடவடிக்கைகளுக்கு ஆதரவான சக்தியாகத் திரட்ட முடியும் என்பதற்கு இப் படம் ஒரு சரியான எடுத்துக்காட்டாக அமைந்தது. கழுகை விரட்டிவிட்டு இந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற விருப்பம் ஏற்படாமல் யாரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட முடியாது.
ஆனால், இந்தப் படம் வேறு சில வினாக்களையும் எழுப்பி, அதற்கான விடைகளையும் கோருகிறது. படம் எடுத்த கேவின் கார்ட்டர், அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் குழந்தைக்கு இவ்வளவு அருகில் அந்தக் கழுகு வந்து குந்துவதை எவ்வாறு அனுமதித்தார்? அதைத் தொடர்ந்து படம் எடுத்த பிறகு அவரது செயல்பாடு என்னவாக இருந்தது? ஒரு வகைப்பட்ட புதிரான மனநிலைக்குள் திணறினாரா? அந்தக் குழந்தை சாவுக் கருகாமையில் நெருங்கி கொண்டிருக்கிற நெருக்கடியான ஒரு புள்ளியில் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கு முயலாமல், தனது காமிராவை ஒழுங்குபடுத்துவதற்கு நேரத்தை எடுத்துக்கொண்டு தொழில் ரீதியாகச் செயலாற்றியது அவருக்குள் சிக்கலை ஏற்படுத்தியதா?
இத்தகைய அறம் சார்ந்த வினாக்கள் - கார்ட்டருக்கும் சாகிற குழந்தைக்குமான உறவு (அ) உறவின்மை குறித்த வினாக்கள் - தனது 33 வயதில், புலிட்ஸர் பரிசு அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே, 1994, சூலை 29 தேதிட்ட ''தெ நியூயார்க் டைம்ஸ்'' பத்திரிகையில் இறந்தோர் அறிவிப்புப் பகுதியில், தற்கொலை செய்து கொண்டார் என்ற அறிவிப்போடு கார்ட்டரின் படம் இடம் பெற்ற போதுதான் மிகவும் ஆழமான முக்கியத்துவம் பெற்றன. அதிர்ச்சி அளித்த இந்தத் தற்கொலை குறித்து ''டைம்ஸ்'' செய்தித் தொடர்பாளர்கள் கட்டுரை எழுதினர் அந்தக் கட்டுரையில் கார்ட்டர் எவ்வாறு படம் எடுத்தார் என்ற விவரம் வெளிப்படுகிறது.
''அவர் புதர்கள் மண்டிக் கிடக்கும் திறந்தவெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார், ஒரு மெல்லிய அடர்ந்த தேம்பல் ஓசை காதில் விழுந்தது. ஒரு சின்னஞ்சிறிய குழந்தை, உணவளிக்கும் மையம் நோக்கி நகர்வதற்கு முயன்று கொண்டிருப்பதை பார்த்தார். உடனே, அதைக் கேமிராவில் பிடிக்கக் குனிந்து பதுங்கும்போது, ஒரு கழுகு பறந்து வந்து குழந்தைக்கு அருகில் உட்காருவதைப் பார்த்தார். அந்தப் பறவையைத் தொந்தரவு படுத்திவிடக் கூடாது என்ற கவனத்தோடு, எந்த அளவிற்குச் சாத்தியப் படுமோ அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக அந்தக் காட்சியைப் படம் பிடிக்கத் தனது நிலையினைச் சரிசெய்து கொண்டார். ஆனாலும், அந்த கழுகு சிறகை விரிக்கிற கணத்தில் சிறப்பாக இருக்குமே என்பதற்காக அதே நிலையில் நின்று கொண்டு 20 நிமிடம் காத்திருந்தார். ஏமாற்றம்தான்; கழுகு சிறகை விரிக்கவில்லை; அதுவும் அந்த 20 நிமிடமும் அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தது, வேறுவழியின்றிப் படங்களை எடுத்து முடித்தார். முடித்தவுடன் கழுகைத் துரத்திவிட்டு, உணவு மையத்தை நோக்கி நகர்வதற்கான அந்தச் சின்னஞ்சிறுசின் போராட்டத்தைக் கூர்ந்து கவனித்தார். அதன்பிறகு ஒரு மரத்தடியின் கீழே போய் குந்தினார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்; கடவுளிடம் பேசினார்; கதறி அழுதார்; அதிலிருந்து மன அழுத்தத்திற்கு உள்ளானார்... தன் மகளை இறுக்கத் கட்டித்தழுவ வேண்டும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்!''
''தெ டைம்ஸ்'' இதழில் இது குறித்து ''வேலைப்பாட்டின் கொடூரமான பேரச்சம்'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், கேவின் கார்ட்டரின் அப்பா கருத்தையும் பதிவு செய்திருந்தார். ''என்னுடைய மகன் எப்பொழுதும் தான் செய்கிற தொழில் குறித்து நடுக்கமும் வெறுப்பும் கொண்டிருந்தான்'' என அவர் கூறியுள்ளார். இத்தகைய ''தன் வேலை குறித்த பெருவெறுப்பு'' என்னும் நோய்தான் கார்ட்டரைத் தற்கொலை நோக்கி விரட்டியிருக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர். மற்றொரு கட்டுரையாளர், ''கேவின் கார்ட்டர் மிகவும் தொந்தரவு தரும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருந்தார். தீர்க்க முடியாத பணச்சிக்கல், போதைப் பழக்கம், குழப்பமான மனப்பிளவு, போலீஸ•டன் பூசல், பைத்தியம் சார்ந்த மன அழுத்தம் முதலிய பல்வேறு வகைப்பட்ட சிக்கலோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்'' என்கிறார். அவரைக் குறித்து மேலும் சில உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தன்னுடைய படம் பிடிக்கும் தொழிலின் பெரும்பகுதியைத் தென் ஆப்பிரிக்காவில் நடந்த காட்டு மிராண்டித்தனமான அரசியல் ஒடுக்கு முறைகளையும் வன்முறைகளையும் படம் பிடிப்பதில் கழித்தார் கார்ட்டர். மேலும் தன்னுடன் பணியாற்றிய நெருங்கிய நண்பன், ''ஓஸ்டர் புரூக்'' துப்பாக்கிச் சூட்டொன்றில் இறந்த போது பெரிதும் பாதிப்புக்குள்ளானார். அதன் விளைவாகத் தன் நண்பன் பொருட்டு, ''நானும் துப்பாக்கி ரவைகளைக் கையிலெடுக்கத் தயங்க மாட்டேன்'' என மற்ற தன் நண்பர்களிடம் சொல்லி வந்தார். அவருடைய தற்கொலைக் குறிப்பு, வேலை குறித்த பெருவெறுப்பின் சுமையை வெளிப்படுத்துகிறது.
''கொலைகள், பிணங்கள், கோபங்கள், வேதனைகள், பட்டினிகள், வெட்டுப்பட்ட குழந்தைகள், பைத்தியங்கள், போலீஸ்காரர்கள், கொலையாளிகளைத் தூக்கிலிடுபவர்கள் முதலியோர் குறித்த கூர்மையான நினைவோட்டங்கள் பேய் மாதிரி என்னைப் பிடித்து ஆட்டின; அவைகள் எப்போதும் என்னை வேட்டையாடின. நான் காட்சி காட்சியாகச் சிந்திக்க வேண்டும். இறந்த உடம்புகளைச் சிவப்பு வெளிச்சத்தில் இறுக்கமாய், அணுக்கமாய்ப் பிடிக்க வேண்டும்; அந்தப் பிணங்களின் முகம் லேசாகச் சாம்பல் நிறமாகியிருக்கும்; இத்தகைய இடத்தில்தான் நான் காட்சிகளைக் தேடி வடிவமைக்க வேண்டும் என்பது என் தொழில்; ஆனால் உள்ள ஏதோ ஒன்று அலறிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். அட கடவுளே! இது தான் வேலை செய்வதற்கான என் நேரம், சூழல்'' என்கிறார் கேவின் கார்ட்டர். வலது பிரிவைச் சார்ந்த ராணுவப் படை வீரர் ஒருவர் தூக்கிலிடப்படும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. தூக்கிலிடுவதற்கு முன்பு தன்னைப் படம் எடுக்க வேண்டிக் கொண்ட ஒரு வெள்ளைக்காரக் கூலிப்படை வீரனை மேலான முறையில் எடுக்க முடியாமல் தவற விட்டுள்ளார். தன்னுடைய பத்திரிகைக்கான போட்டோ தொழில் குறித்து வேதனையோடு தான் இருந்து வந்துள்ளார்.
''டைம்ஸ்'' இதழில் கட்டுரையாளர், கார்ட்டருடைய அறவுணர்வு குறித்து பத்திரிகையாளருக்கேயான சில வினாக்களை எழுப்பினார் ''கார்ட்டர். ஏன் அந்தக் குழந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை?'' என நண்பர்கள் வியந்ததாகக் கூறுகிறார். ''இந்த மனிதர் அந்தக் குழந்தையின் துயரத்தை வலது பக்கத்தில் இருந்து எடுப்பதற்குத் தனது கேமராவை ஒழுங்கு படுத்தும் போது, அந்தக் கழுகைப் போலவே இவரும் ஒரு கொன்று தின்னும் மற்றொரு கழுகாவே அந்தக் காட்சியில் வெளிப்படுகிறார் என எழுதினார் அவர்.
கார்ட்டரின் தொழில் ரீதியான வெற்றி எவ்வாறு மனித ரீதியான தோல்வியின் விளைவாக முடிந்திருக்கிறது என்பதை ஒருவர் எளிதாக விளக்கிட முடியும். இச்செயல் ஓர் அறம் சார்ந்த தோல்விதான்; ஏனென்றால் இந்தப் படம் உலகம் முழுவதிலும் உள்ள மக்களை வன்முறைக்கு எதிராகச் செயல்படும்படித் தூண்டியிருக்கிறது. வன்முறை அரசியலின் அசிங்கமான முகத்தை உலகிற்குப் படம் போட்டுக் காட்டியுள்ளது. மனிதாபிமான மக்களின் மௌனத்தை உடைத்திருக்கிறது. அந்த வகையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளது. கார்ட்டரின் தற்கொலை குறித்த செய்தி தெரிய வந்த பிறகு, சமூகத் துயரத்திற்கான பெயர் அறியப்படாத பொதுப் படிமமாக ஆகி, எங்கோ தூரத்தில் நடந்தாலும், ஒவ்வொரு மனிதருடைய நெருங்கிய அனுபவத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது, இந்தப் பரிசு பெற்ற படம். கார்ட்டரின் பெயர், கேமராக்காரர் என்பதிலிருந்து மாறி ஒரு கதை சொல்லி, அதுவும் இருண்ட இதயமெனச் சொல்லப்படும் ஆப்பிரிக்காவின் கதையைச் சொல்லுகிற கதை சொல்லி என்றதளத்திற்கு மாறியுள்ளது. ஆப்பிரிக்காவின் பண்பாட்டு வரலாற்றில் கார்ட்டரும் பேசப்படும் ஒரு பொருளாகி விட்டார். எல்லோரையும் பாதிப்பவர் என்பதிலும் மேலாக, எல்லோருக்குள்ளும் தொற்றிக் கொள்ளுபவர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அந்த சூடான் நாட்டுக் குழந்தையின் நடுக்கம் மிக்க கொடூரமான அனுபவம் என்னவாக இருந்தது? அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் அல்லது வட்டார முகம் யார் கொடுப்பது? நிலையற்ற தன்மையின் நெருக்கடி இன்றைக்கு வரைக்கும் விலகிவிடவில்லை. கார்ட்டரின் தற்கொலை நிகழ்விற்குப் பிறகு படம் எடுத்தவர் துக்கமும் அவரால் எடுக்கப் பட்ட குழந்தையின் துக்கமும் இரண்டற இணைந்து ஒன்றாகிவிட்டன. ஆனாலும் ஒருவர் திறமைமிக்க வெளிநாட்டுத் தொழில் நிபுணர் மற்றொருவர் வட்டார வன்முறை அரசியலில் பலியாகிவிட்ட அப்பாவிக் குழந்தை ஒன்றையொன்று ஒட்டாத இந்த வேறு பட்ட இரண்டு நிலைதான் நம்மைப் பாதித்து அதில் சிக்க வைக்கிறது. கல்வி நெறியாளர்களின் கோட்பாடுகள், எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு காட்சியை, எப்படி இந்த அளவிற்கு அழுத்தமாக உலகப் பரப்பில் கொண்டு சொல்ல முடிந்தது என்பதை விளக்குவதற்கு நமக்குத் துணை செய்யலாம். ஆனால் அதிலுள்ள அறச்சிக்கலையும் தாண்டி அது நம்மேல் எப்படி செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை எதைக் கொண்டும் விளக்க முடியாது என்றே படுகிறது. உணர்ச்சிவசப்படாமல் அர்த்தமிழந்த நிலையில், மௌனமாக, ஆறுதலற்ற நிலையில் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவுதான். ஆனாலும் இத்தகைய படங்களை இந்த உலகம் மேலும் மேலும் வேண்டிக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. எத்தகைய படம் இது? உலக வணிகமும் அறநெறித் தோல்வியும் ஒன்று கலந்த விட்ட ஒரு படம்.
இந்தப் படத்தின் வெற்றி குறித்துப் பேசிக்கொண்டிருப்பதை விடஆப்பிரிக்க மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத பரிதாபகரமான நிலை குறித்து இந்தப் படத்தை முன்வைத்து அதிகம் பேச முடியும்; செயல்பட முடியும். அத்தகைய சூழலில் இந்தப் படம் அறம் சார்ந்தது தான் என்று பேச வாய்ப்பு வந்து அமையும்.
நன்றி : தீராநதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலக வணிகமும் அறநெறித் தோல்வியும் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - படம், அந்தக், இந்தப், டைம்ஸ், குறித்து, கார்ட்டர், அந்த, தொழில், வேண்டும், குறித்த, குழந்தை, கார்ட்டரின், கேவின், கழுகு, தற்கொலை, மேலும், தான், முடியும், ஆனாலும், சார்ந்த, குழந்தைக்கு, தனது, பிறகு, இத்தகைய, நிலையில், பரிசு, அவர், கொண்டிருந்தார், கட்டுரையாளர், குழந்தையின், என்பதை, பெயர், ஒருவர், சொல்லி, வேலை, என்கிறார், நோக்கி, காப்பாற்றுவதற்கு, அந்தப், இருந்து, பத்திரிகையில், புலிட்ஸர், நியூயார்க், வேறு, இறந்த, வந்து, எவ்வாறு, அருகில், குழந்தையைக், நிலை, அறம்