பொதுவான கட்டுரைகள் - கருங்காற் குறிஞ்சி
- சு. தியடோர் பாஸ்கரன்
இலங்கு வெள்ளருவியோடு சிலம்பகத்திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து (மதுரை காஞ்சி 299 - 300)
திடீரென, திரையொன்றைத் தூக்கினாற்போல் மூடுபனி விலகியது. எங்கு நோக்கினாலும் நீல நிறப்பூக்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மலையடுக்குகள் நீலநிறப் போர்வை ஒன்றால் போர்த்தியதுபோல் தோன்றியது குறிஞ்சிப்பூக்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 1600மீ உயரத்தில், மழைக் காடுகளும், புல்வெளிகளும் இணைந்திருக்கும் பிரதேசங்களில் செழித்து வளரும் ஒரு புதர்ச்செடி இது. நீலகிரியிலிருந்து சயாந்திரி மலைகள் வரை, மலைச்சரிவுகளில் புதர்களாகவும் குற்று மரங்களாகவும் வளரும். இச்செடியில் பல வகைகள் உண்டு. எல்லா வகைகளும் கூட்டமாகத்தான் வளரும். குறிஞ்சி மலர்கள் நீல வண்ணமானது என்றாலும், மஞ்சள் நிறப் பூப்பூக்கும் ஒரு அரிய குறிஞ்சி வகை ஒன்றும் உண்டு. எல்லா வகை குறிஞ்சிச் செடிகளும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே மலரும். அதுவும் ஒவ்வொரு செடியும் ஒரே ஒரு முறைதான் மலரும் பூக்கும் காலம் முடிந்ததும் அச்செடி பட்டுப்போகும். பின் உரிய காலத்தில், அதே இடத்தில் புதிய செடிகள் முளைத்துச் செழிக்கும்.
ராபெர்ட் வைட் மற்றும் பெடாம் என்ற இரு பிரித்தானியர்கள் தான் முதன் முதலாக இத் தாவரத்தைக் கவனித்து, இதில் பல வகை இருக்கின்றன. என்றெழுதி வைத்தனர். தென்னிந்திய தாவரவியலின் பைபிள் என்றறியப் படும் Flora of Madras Presidency என்ற நூலை எழுதிய தாவரவியலாளர் கேம்பிள், நாற்பத்தியாறு வகைக் குறிஞ்சிக் செடிகள் உண்டு என்றறிந்தார். கொடைக்கானல் மலைகளில் வளரும் குறிஞ்சிக்கு தாவரவியலாளர்கள் இட்ட பெயர் Phlebophylum kunthianum என்பது.
சங்கப்பாடல்களில் குறிஞ்சி மலரைப்பற்றிய குறிப்புகள் இருந்தாலும், இம்மலர் பூத்துக் குலுங்கிய வருடங்கள் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருப்பது 1858 முதல்தான். கோத்தகிரியில் வசித்த கோபண் (cockburn) என்ற ஆங்கிலேயரிடம் இக் குறிப்புகள் இருந்தன. இவரது தந்தை நீலகிரியில் குடியேறிய முன்னோடி ஆங்கிலேயர்களில் ஒருவர். இவரது தாய் (கோபணின் பாட்டி) குறிஞ்சி பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வதை மலைவாசிகளிடமிருந்து கேள்விப்பட்டு நீலகிரி மலையெங்கும் அவை பூத்திருந்த அதிசயம் பற்றி விவரமான குறிப்புகள் எழுதி வைத்தார். அவரது பேரனும் அப்பதிவுகளைத் தொடர்ந்தார். மூன்று தலைமுறைக் குறிப்பு நமக்குக் கிடைத்திருக்கின்றது.
அகநானூறு, புறநானூறு போன்ற சங்க காலத்தொகுப்புகளில் குறிஞ்சி மலர் பற்றிப் பல குறிப்புகள் உண்டு. சங்க இலக்கியம், சுற்றுச் சூழலை ஐந்து திணைகளாக பிரித்து, மலைப் பிரதேசத்திற்கு இங்கு வளரும் செடி குறிஞ்சியின் பெயர் சூட்டப்பட்டது. முருகன் வேட்டுவர் குலப்பெண் வள்ளியை மணந்தபோது அணிவித்தது குறிஞ்சிப்பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையே.
நீலகிரியில் பூக்கும் குறிஞ்சிக்கு Strobilanthus Kunthianus என்று பெயர். தமிழ் மக்கள் நீலக்குறிஞ்சி என்று குறிப்பிடும். இம் மலர்ச்செடி முக்குறுத்தி சரணாலயப் பகுதியிலும், மாஞ்சூர் மலைகளிலும், மணவூர் அருகிலும் மிகுதியாக வளர்கின்றது. பாண்டிச்சேரி சலிம் அலி சுற்றுச் சூழல் நிறுவனம் இப்பகுதியில் குறிஞ்சி மலர் பற்றி பல ஆண்டுகள் கள ஆய்வு நடத்தியது. ஏறக்குறைய ஒரு மீட்டர் உயரம் இருக்கும். தண்டு சிகப்பாகவும், காம்புகளின் கணுக்கள் கருப்பாகவும் இருக்கும். மதுரைக் காஞ்சி ''கருங்கால் குறிஞ்சி'' என்று குறிப்பிடுவது இத்தாவரத்தைத்தான். இது பூக்கும் காலத்தில் மலைச் சரிவே நீலமாகக் காணப்படும். இந்த மலரால்தான் நீலகிரி மலைக்கு அப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகின்றார்கள். இந்த வகைக் குறிஞ்சிப்பூ பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை தான் மலரும்.
குறிஞ்சி மலரும் காலத்தில், அப்பூக்களில் நிறையக் கிடைக்கும் தேனை நாடி, மலைத்தேனீக்கள் பெருமளவில் தோன்றி, பாறை இடுக்குகளில் பெரிய கூடுகளைக் கட்டித் தேன் சேகரிக்கும். மற்றெல்லா தேனிலும் சிறந்ததாகப் போற்றப்படும் இத்தகைய தனிப்பூ தேனைக் குறிஞ்சி நாடனின் நட்புக்கு ஒப்புவமையாகக் குறுந்தொகை குறிப்பிடுகின்றது.
கழுங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே.
மூணார் மலைகளில் வாழும், தமிழும் மலையாளமும் கலந்த ஒரு மொழி பேசும், முதுவர் எனும் பழங்குடியினர் குறிஞ்சி மலர்வதைக் கொண்டே தங்கள் வயதினைக் கணிக்கின்றார்கள். செங்குத்தான பாறை இடுக்குகளிலும், நெடிதுயர்ந்த மரங்களிலிருக்கும் தேனடைகளைச் சேகரிப்பதே இவர்களின் பாரம்பரியத் தொழில். பச்சை மூங்கிலில் நூலேணி போல் செய்து, தேனடையை எப்பாடு பட்டாவது எடுத்துவிடுவார்கள். இதிலிருந்து தோன்றிய பழமொழியே முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலென்பது. ஒரு பொருளை அடைந்தே தீருவது என்ற மன உறுதியைத்தான் இது குறிக்கின்றது. மூணாரைச் சுற்றியிருக்கும் மாட்டுப்பட்டி, குண்டுமலை மற்றும் குன்டலா போன்ற பகுதிகளில் மலைச்சரிவுகளில் குறிஞ்சிப் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
இயற்கை வரலாற்றாசிரியர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை இரு பகுதிகளாக - பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே உள்ள மலைகளை பழனி மலைத்தொடர் என்றும், வடக்கே உள்ள மலைகளை நீலகிரி மலைத் தொடர் என்றும் குறிப்பிடுவர். பழனிமலைத் தொடரில் மூணார் அருகே உள்ள ஆனைமுடி என்ற சிகரத்தைச் சூழ்ந்த பகுதிகளில் குறிஞ்சி ஏராளமாக வளர்கின்றது. மூணாரைச் சுற்றியுள்ள மாட்டுப்பட்டி, குண்டுமலை மற்றும் குண்டல போன்றவை குறிஞ்சிப்புதர்கள் மிகுந்த இடங்கள். தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம் இந்த ஆனைமுடியே. தொட்டபெட்டாவைவிட பல மீட்டர்கள் உயரமானது. ஆனால் முதலில் பிரபலமடைந்தது உதகமண்டலத்திற்கருகே உள்ள தொட்டபெட்டா. இங்கே தான் வரையாடுகளுக்கென ராஜமலை சரணாலயம் இருக்கின்றது. இதையொட்டி தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆனைமலை சரணாலயமும் உள்ளது.
பல நூற்றாண்டுகளாக வளமாக, சிதைவின்றி இருந்த குறிஞ்சிமலர்ப்பிரதேசம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பரவலாகச் சீரழிக்கப்பட்டது. மழைக்காடுகள் வெட்டுமரத் தொழிலுக்காக திருத்தப்பட்டன. தேயிலைத் தோட்டத்திற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. தோல் பதனிடம் தொழிலுக்காக, குறிஞ்சி மலர்ச்செடி வளரும் இடங்களில் சீகை மரங்கள் (wattle) நடப்பட்டன. செயற்கை நூலிழைக்காக, தைல மரங்கள் (Eucalyptus) நடப்பட்டன. இம் மரங்கள் இந்தப் புவியியல் பகுதிக்கு முற்றிலும் அந்நியமான தாவரங்கள் ஆகவே, இம் மலைப்பகுதிகளின் சமன்நிலை குலைக்கப்பட்டது. மலைச்சாலைகளும், அணைகளும் குறிஞ்சிப்பிரதேசத்தை மேலும் ஆக்ரமித்துவிட்டன. குறிஞ்சிப்புதர் செழித்து வளரக்கூடிய இடங்கள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது, தேயிலை பயிரிடமுடியாத மலைச் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலுமே குறிஞ்சி எஞ்சியிருக்கின்றது.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் சுற்றுச்சூழலில் தீவிர அக்கறை கொண்ட சில தன்னார்வ குழுக்களின் முயற்சியால் எஞ்சியுள்ள குறிஞ்சிப்பூ வளரும் பகுதிகளைக் காக்க, ஒரு இயக்கம் உருவாகியிருக்கின்றது. இதன் உந்து சக்தி, திருவனந்தபுரம் ஸ்டேட் பேங்கில் பணிபுரியும் ராஜ்குமார் என்ற இளைஞர் இவர் தலையில் Save KurinJi Campaign Council (SAKCIL) என்ற அமைப்பு செயல் படுகின்றது. மூணாரில் தேயிலைத் தோட்ட மேலாண்மையாளராக இருந்த செங்கப்பா தலைமையில் இயங்கியது High Range Wildlife Association மற்றும் முன்னாள் இந்திய அரசுப் பணி அதிகாரி விஜயராகவன், கொடைக்கானலில் நடத்தும் Palani Hills Conservantion Council ஆகிய அமைப்புகள் குறிஞ்சி இயக்கத்திற்குப் பக்கபலமாகச் செயல்படுகின்றன. அடுத்த ஆண்டில் பழனிமலைத்தொடரில் குறிஞ்சி பூக்கவிருக்கின்றதையொட்டி, இந்தப் பகுதியின் தாவரங்கள் மேல் மக்களின் கவனத்தை ஈர்க்க தாவரவியலாளர் பி.கே. மாத்யூ அவர்கள் தலைமையில் PHCC ஒரு குழு அமைத்தது. மாத்யூ ஏப்ரல் மாதம் காலமானது சுற்றுச் சூழல் இயக்கத்திற்குப் பெரும் இழப்பு.
கொடைக்கானலுக்கும் மூணாருக்கும் இடையே, 1600 மீட்டர் உயரத்திலுள்ள, 95 சதுர கி.மீ பரப்புள்ள பகுதியைக் குறிஞ்சி மலர் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென்பது இவர்கள் கோரிக்கை. இந்த இடத்தின் பெருவாரியான பரப்பு தமிழ்நாட்டிலும், கேரளாவிலுள்ள இடிக்கி மாவட்டத்திலும் உள்ளது. வைகை நதியும் அமராவதி நதியும் உற்பத்தியாவது இந்தப் பகுதியில்தான் (மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகளில் தான் தென்னிந்தியாவின் பல நதிகள் உற்பத்தியாகின்றன. வட இந்தியாவின் பிரம்மாண்டமான ஆறுகளான பிரம்மபுத்திரா போன்றவை இமயமலையின் உச்சியில் பனி உருகுவதால் உண்டாகின்றன.) வேறெங்கும் இத்தாவரம் அழிந்து விட்டாலும், இந்த குறிஞ்சிமலை சரணாலயத்தில் அது பாதுகாக்கப் படலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள் வருடா வருடம் கொடைக்கானலிலிருந்து மூணாருக்கு, குறிஞ்சி மலர்ப் பிரதேசத்தின் வழியாக நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
குறிஞ்சி செடியைப் பாதுகாப்பது, இம்மலைப் பிரதேசத்தின் பல பரிமாணங்களையும் பாதுகாப்பதாகும். அங்கு ஊற்றெடுத்துப் பிறக்கும் ஜீவநதிகளைப் பேணுவதாகும். அங்கு வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதாகும். உலகில் வேறு எங்கும் காண முடியாத பல அரிய உயிரினங்களுக்கும் இந்த பிரதேசம்தான் உறைவிடம். மலை முகடுகளில் பாறைகளிடையே வாழும் வரையாடு (Nilgiri tahr) மற்றும் இருண்ட மழைக்காட்டில் உள்ள சிங்கவால் குரங்கு (Lion-tailed macaque) விலங்குகளுக்கு இக்குறிஞ்சி நிலமே வாழிடம்.
குறிஞ்சிப்பூ அரிய உயிரினங்களுக்கும், நதிகளின் ஊற்றுக்கண்களுக்கும், எழில் பொங்கும் மலைப் பிரதேசங்களுக்கும் ஒரு குறியீடு. நாடு என்பது மக்களால் மட்டுமே ஆனது அல்ல. அதில் ஓடும் ஆறுகள், மலைகள், காடுகள், அங்கு வளரும் செடிகொடி, மரங்கள், காட்டுயிர் இவை யாவுமே ஒரு நாட்டின் முழுப் பரிமாணத்தை உண்டாக்குகின்றன. ஓடி ஓடிப் பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதை நாம் மறந்து விடுகின்றோம்.
நன்றி: உயிர்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருங்காற் குறிஞ்சி - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - குறிஞ்சி, வளரும், உள்ள, மரங்கள், தான், குறிப்புகள், மலரும், உண்டு, வாழும், குறிஞ்சிப்பூ, அரிய, அங்கு, என்றும், இந்தப், சுற்றுச், மலைகளில், பூக்கும், பெயர், நீலகிரி, மலர், காலத்தில்