பொதுவான கட்டுரைகள் - இயற்கை வளம் மீட்டிட...
6 படிப்பினை
1.சமதள வயல் வெளியில் நஞ்சைப் பயிராகிய நெல், கரும்பு விளைவிப்பதில் மிகச்சரியான விவசாயமுறைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். பொதுவாக எந்தப் பயிருக்கும் அதன் தண்டு முழுகும்படி நீர் பாய்ச்சுதல் என்பதே கூடாத ஒன்று. வேர் உறிஞ்சி நீரை எடுத்துக்கொள்ளும் படியான முறை வேண்டும்; வேர் நீரைக்குடிக்கக்கூடாது. நெற் பயிரின் வேர் நீரைத் தாங்கிக் கொள்ளும் திறன் படைத்துள்ளதால் நாம் கட்டும் நீரையும் சமாளித்து வளர்ந்து விளைகிறதே ஒழிய, நெற்பயிருக்கு மேல் தண்ணீர் நிறுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குடிக்க நீர் கேட்கும் குழந்தையின் தலையை நீருக்குள் முக்கி மூழ்கடித்தல் அறிவார்ந்த செயலா? செடியின் நுனிமுதல் அடிவேர் வரை சுவாசிக்க காற்று வேண்டும். காற்றைத் தடுத்து நீரை நிரந்தரமாக நிரப்பிவிட்டால் சுவாசமே இல்லாமல் எப்படி உயிர் வாழ்வது சாத்தியப்படும்?
இந்த ஆண்டு (2002 - 2003) காவிரி சுத்தமாகப் பொய்த்துப் போன நிலையில், பற்றாக்குறை நீரைப்பயன்படுத்தி, காய்ச்சலிலும், பாய்ச்சலிலும் விளைவித்து எடுத்த நெல் மகசூல், நீர்கட்டி விளைவித்த காலத்தைக் காட்டிலும் இருமடங்கு கண்டுள்ள (நல்லராசி) விவசாயிகள், அன்பில், அரியூர், விரகாலூர், திருமானூர் பகுதியில் அனுபவரீதியாகக் கண்டு விட்டார்கள்.
வாழைக்கு எப்படி காண்வெட்டி, நீர்தேக்கி, வேர் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் நிலையில் சாகுபடி செய்கிறோமோ, அப்படித்தான் எல்லாவித , பயிர்களையும், விளைவிக்க வேண்டும் என்பது பொதுவிதி.
வேர்களுக்கு முதலாவதாக சுவாசிக்க காற்று வேண்டும். பிறகுதான் இரண்டாவதாக நீர் வேண்டும். வரப்பு ஓரத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும் காரணம் வேருக்கு காற்றோட்டம் நன்றாகக் கிடைத்துள்ளது என்பதுதான்.
ஆக, நம்முடைய சமதள வயல்வெளியையே, நீரின் சிக்கனம் கருதி, அறிவியல் சாகுபடியின் அதிக விளைச்சல் கருதி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
இன்னொன்றும் கவனத்தில் இருக்க வேண்டியது உண்டு. நீர் தேங்கியுள்ள பகுதியில் முளைக்கும் களைகள் ஒரு விதம். நீர்ப் பிடிப்பு இல்லாத பகுதியில் முளைக்கும் களைகள் மறுவிதம். காய்ச்சலும், பாய்ச்சலும் மாறி மாறி அமையும்போது, இரண்டு விதக் களைகளும் ஒரளவு கட்டுப்பட்டு விடுகிறது. மேல் மண்ணில் முளைக்கும் சிறு சிறு புற்களும், தரையில் படரும் செடிகளும், பயிருக்கான நீரை,சத்தை உறிஞ்சி விட முடியாது. பொதுவாகக் களைகள் என்றாலே வறட்சியைத் தாங்கக் கூடியது. ''நீர்பசை'' இருந்தாலே போதும் அதன் உயிர் வாழ்கைக்கு. அப்பா தாத்தா சாப்பிடும் சாப்பாட்டை குழந்தை, பேரக்குழந்தை சாப்பிட்டு விட முடியுமா? பேரன் சாப்பிட்டு, தாத்தாவுக்கு பற்றாக்குறை ஏற்படுத்தி பசியில் தத்தளிக்க விட்டுவிட முடியாது அல்லவா! அப்படியே களைகள் சற்றுக் கூடுதலாகக் காணப்பட்டால், 2 முறைகளை எடுக்கும் செலவோடு மூன்று முறைகளை எடுத்தால்தான் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டு விடப்போகிறது இந்தப் புதிய முறை இயற்கை விளைச்சலால் அதிக மகசூல் கிடைக்கும் போது, ரசாயன உரச்செலவு, பூச்சி மருந்து செலவு, களைக் கொல்லி செலவு, பாசன நீருக்கான அதிகச்செலவு என்று எதுவும் இல்லாத நிலையில் மூன்றாம் முறைகளை எடுக்கும் செலவினைப் பெரிதாகக் கருதக் கூடாது என்பது சொல்ல வேண்டுமா என்ன!
2) அன்று கொல்லும் களைக் கொல்லிகளைக் பயன்படுத்தி, நின்று நிலைக்கும் பயிர்களையும் கொலை செய்திருக்கிறோம்.
3) பயிர்களை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு, களைகள் செழித்து வளர அடியுரமிட்டிருக்கிறோம். (அடியுரம் தான் களைகளை வளர்க்கிறது)
4) பூச்சி தாக்குதலிருந்து பயிர்களைக் காப்பதாக எண்ணிக் கொண்டு, மருந்து அடித்து, ஆயிரக்கணக்கான பறவை இனங்களை கோடிக்கணக்கான நம்மை செய்யும் உயிர்க் கிருமிகளை கொன்றழித்திருக்கிறோம்.
5) வீரிய விளைச்சல் என்ற பெயரில், விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்த தொழில் நுட்பம் முழுவதும், விவசாயிகளுக்குத் துரோகம் செய்வதாக ஆகி விட்டதை இனியும்கூட காலம் கடத்தாமல் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம்.
மனிதனுக்கு நெல்லும் வேண்டும், கால்நடைகளுக்கு வைக்கோலும் வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையில், நீண்ட தாள் கொண்ட நெல் ரகம் வைத்திருந்ததை மாற்றி, கால்நடை உணவையே மறந்து, வைக்கோல் தாளை குறைத்து, அந்தக் குறைவால் சற்றுக் கூடுதலாக விளைந்த நெல்மணிகளை அறுவடை செய்தோம். அவ்வளவுதான்.
சற்று வேறு விதமாகச் சொன்னால், மனிதனுக்கான நெல் மணி 5 பகுதி, கால் நடைகளுக்கான வைக்கோல் 5 பகுதி, என இருந்ததை வீரிய விளைச்சலில் நெல் மணி 7 பகுதி , வைக்கோல் 3 பகுதியாக மாற்றி விளைவித்துக் கொண்டோம். வைக்கோலின் அளவு குறைந்ததால், தீவனம் இன்மையால், பால் கொடுக்கும் பசுக்களை மட்டும் வைத்துக் கொண்டு, காளைக் கன்றுகள் விற்று, கால்நடைகளைக் குறைத்துக் கொண்ட விவசாயி காலப்போக்கில், பால் வற்றிய பசுக்களையும் விற்கத் தொடங்கி, கால்நடை வளர்ப்பே, பால் உற்பத்திக்‘க மட்டும்தான் என்ற அளவில் நிறுத்திக் கொண்டான். எருதுகளின் உழைப்பு, கால்நடைகள் கொடுத்து வந்த இயற்கை உரமாகிய சாணம், தொழுவக் கழிவு, சிறுநீர் அறவே மறக்கடிக்கப்பட்டு நிலம் வறண்ட நிலமாக - மலடாகப் போய்விட்டது. வீரிய விளைச்சல் என்பது இருக்கட்டும். இனி விளைச்சலே கொடுக்குமோ என்று ஐய வினா எழுப்பும் நிலைமைக்கு வந்து விட்டது நிலவளம்.
6) பயிர்களுக்குத் தேவையானது வெறும் ஈரம் தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய உணவுப் பொருளை விளைவிக்க, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தண்ணீர் வளத்தை வீணாகச் செலவிட்டு, மண்ணுக்கும் மக்கள் சமுதாயத்திற்கும் துரோகம் செய்திருக்கிறோம். அதிகமான நீர் தேக்கத்தினால் மேல் பரப்பு நிலத்தில் உள்ள தாது உப்புகள் கரைந்து பூமிக்கு உள்ளே சென்ற விடுவதால், நிலம் ''உவர்'' நிலமாக மாறி விடுகிறது: குறிப்பாக, காவிரி டெல்டா பகுதியில் காவிரி வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடித்துச் செல்லாப்பட்ட ''தாது உப்புகள்'' (Major Minerals) கடலோடு கரைந்து போனபின், எச்சமுள்ள சிறு தாது உப்புகளில் (Minor Minerals) ''மங்கனீசு'' மட்டுமே இங்கு விளையும் பயிர் வகைகளில் நிறைந்து காணக் கிடைப்பதால், இப்பகுதியில் குழந்தை பிறப்பு மட்டும் குறையவே இல்லை. தின்று விட்டு கொழுப்பு அடைத்துக் கருக்கூடல் தடைபட்டால் ஒழிய மலடு என்பது வரவே வராது. (நோய் விதி விலக்கு).
ஆக அறியாமையினால், ஆராய்ச்சியாளர்கள் சொல்லித் தராததினால் அரசாங்கம் அறிவியலை நம்பாததினால், அறிவியல் அறிவு அரசாங்க எந்திரத்திற்கு அறவே இல்லாததினால், தேவைக்கு மேலான நீர் பாய்ச்சலால் நிலத்தின் வளத்தை இழந்து, மகசூல் இழந்து நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு விட்டோம்.
7) தீவிர உணவுப் பெருக்கம் செய்வதாக எண்ணிக்கொண்ட, ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கற்று கொடுத்து, மண்ணை நஞ்சு ஊட்டி சாகடித்து விட்டோம், இயற்கை உழவு செய்யும் மண் புழுக்களை கொன்றழித்து விட்டோம். பொல பொலப்பா - புழுதியாக - இருக்க வேண்டிய உயிருள்ள மண்ணை, கெட்டிப் பட்ட பாறையாக்கி உயிரிகள் இல்லாத ''செத்தமண்'' ணாக்கி விட்டோம்.
ரசாயன உரங்களும், மற்றபடி விவசாயத்திற்குப் பயன்படுத்தும் அனைத்து வித மருந்துகளும் பூச்சிகளை அழிக்க அல்ல, மனித குலத்தை அழிக்க என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மாந்தோப்பு, தொன்னந்தோப்பு போன்ற தோட்டங்களில், களை எடுத்தல், அல்லது தோப்பினை தூய்மையாக பராமரித்தல் என்ற பெயரில் களைச் செடிகளை வேருடன் பிடுங்கி அழித்து, மரத்திற்குக் கிடைக்ககூடிய இயற்கையான (இலை மக்கு) உரத்தையும் நீக்கி அழித்திருக்கிறோம்.
8) தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறை போன்ற தொழிற் சாலைகளிலிருந்து வெளிவரும் ''நச்சுக் கழிவு நீர்'' கலந்து ஓடிப்பாயும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களையும் நஞ்சு ஏற்றி நாசம் செய்திருப்பதோடு, இந்த வித நீரால் நிலத்தடி நீரையே பயன்படுத்த முடியாத ''உதவாக்கரை நீராக'' உருமாற்றி வைத்து விட்டோம். இது விவசாய நாடு என்று சொல்லிக்கொள்வது உண்மையாக இருந்தால், விவசாயத்திற்கு ஊறு விளைவிக்காத தொழிலாக தொடங்க அரசு விழிப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாம். மண்ணாங்கட்டி. முதுகெலும்பு எப்போதுமே முன்னால் வரப் போவதில்லை. முன்னேறவே முடியாத காரணத்திற்காகத் தான் முதுகெலும்பு என்ற உவமை கூறியிருப்பார்களோ!
7. நச்சு வலை
உலகில் இரண்டுகோடி உயிரினங்கள் இருக்கின்றன. அது அது அதனதன் உணவைத் தேடிக் கொள்கிறது; தங்குமிடம் தயாரித்துக் கொள்கிறது. உலகில் அவைகள் ஒரு ஓரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் அவைகளை பகையாகக் கருதிவிட்டான். நுண்ணுயிர்களைக் கூட, சின்னஞ்சிறு புழு, பூச்சி விட்டில், அத்தனையும் பகையாகக் கருதி விட்டான். அவைகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்து, பெட்ரோமாக்சு ஒளிப் பொறியில் அழிப்பு; வண்ணத்துப்புச்சி, தத்துக்கிளி அழிப்பு; வைரஸ் அழிப்பு; கிருமிகள் அழிப்பு. மற்ற சிற்றுயிரினங்ளை அழித்து அழித்து மனிதன் மட்டும் என்ன நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து விட்டான்? இந்த உலகம் மனிதனுக்கு மட்டும்தான் சொந்தமா? மற்ற உயிரினங்கள் வாழவே கூடாதா?
அத்தனை உயிரினங்களையும் அழித்துவிட்டு உயிர் வாழ எண்ணிய மனிதன், அவைகளோடு சேர்ந்து வாழ வழிவகை கண்டிருப்பானேயானால், இவன் உடலில் ''கிருமிகள் எதிர்ப்புத் திறனா'' கிலும் வம்சாவழியாக கூடியிருக்கும். அவைகளை அழித்து மனிதன் ''சுய நோய் எதிர்ப்புத்தன்மை" யிணை இழந்து விட்டான். இது ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று எண்ணவே இல்லை.
உலகில், பயன்படாதது எதுவும் இல்லை. பூமிக் கோளத்தில் முக்கால் பங்கு (71சதவீதம்) இடம் பிடித்திருக்கும் கடல் கூட வீண் என்று கருத முடியாது. அந்தக் கடலும் மனிதனுக்குத் தேவையான மீன் உற்பத்தி செய்து கொடுக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மனித முயற்சி எதுவுமே இல்லாமல், கடலில் உற்பத்தியாகும் மீன் எத்தனை கோடி டன் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மற்ற உயிர்களை அழித்து விட்டு மனிதன் மட்டும் வாழ வேண்டும் அல்லது, மனிதன் நோயற்ற வாழ்வு வாழ சிற்றுயிர்கள் அழிக்கப்பட்டால் தான் முடியும் என்பதே ஒரு தவறான புரிதல்.
எல்லா உயிரும் இருந்தால் தான் மனிதனும் வாழ முடியும். உலகில் சராசரியாக 4 தாவர வகைகள் தினமும் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும் ஒவ்வொரு தாவரத்துடன், அந்தத் தாவரத்தை அண்டி வாழ்ந்த பூச்சி இனங்களும் சேர்ந்தே அழிந்து படுகின்றன என்று பொருள். ஆக ஒவ்வொரு தாவரமும் தான் மட்டும் அழியாமல் தன்னை நாடி இருந்த 24 வகை பூச்சிகளுடன் சேர்ந்தே அழிகின்றன. இந்த வேகத்தில் அழிப்பு வேலை தொடர்ந்தால் உலகம் இன்னும் எத்தனை காலத்திற்கு இயங்கப் போகிறது?
உண்மையாகச் சொல்லப் போனால், கிருமிகளை என்னதான் அழிக்க முயன்றாலும் அழித்து விட முடியாது என்பதுதான் உணண்மை. நாம் மூச்சு விடும் காற்றில் எத்தனை விதமான தூசுகள் பூச்சிகள் இருக்கின்றன! அறைக்குள்ளாக சிறு துவாரம் வழியே வரும் சூரிய ஒளிக்கற்றையில் வெறும் கண்ணாலேயே காண முடியுமே! கண்ணாடி மூலம் எத்தனை கோடி உயிரினங்களைக் காண முடியும்! அப்படியிருக்க, கிருமிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டும் மனிதனை என்னவென்று சொல்வது?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல இப்போது சிட்டுக் குருவிகள் இருக்கின்றனவா? கூட்டம் கூட்டமாக விளையாடித் திரிந்த கருஞ்சிட்டுப் படையைப் பார்க்க முடிகிறதா? மின்மினிப் பூச்சிகளை அந்த அளவு காண முடிகிறதா? இந்த விதத்தில் எண்ணிப் பார்த்தால், அழிவின் வேகம் மலைப்பாகத் தோன்றவில்லையா?
முன்பெல்லாம் நாட்டின் வெப்ப நிலை சராசரி 26-30 வரை இருக்கும். அதிகக் கோடையில் 32-35 அளவில் இருக்கும். இப்போது 40க்கும் மேலாக அதாவது மனிதனின் தேக நிலைச் சூட்டுக்கும் மேலாக புற உலக வெப்ப நிலை அதிகரித்து விட்டதைக் கவலையோடு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
நம் உடலிலிருந்து சூடு வெளியேறி காற்றில் கரைந்து போனால் தான் உயிர் வாழ முடியும். ஆனால நம் தேக நிலை சூட்டை விட (32) புற வெளிக்சூடு அதிகமாகி விட்டால், காற்றிலிருந்து உடலுக்குள் சூடு பரவினால் அது மிகப் பெரும் ஆபத்தை விளைவிப்பதை கண்கூடாகக் காணவில்லையா? அந்த ஆபத்து நிலையை உணர முடியவில்லையா? மனிதனை சூட்டில் வைத்து வறுத்து எடுப்பது போல உணர முடியவில்லையா?
வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு தொடர்து கூடிக்கொண்டே செல்கிறதே காரணம் என்ன? ''கரி சேர்ந்த காற்று வளி மண்டலத்தில் நிரம்பிவிட்டதால் இந்தச் சூடேற்றம்.
சூரிய ஒளி பூமிக்கு வந்து, அது பிரதிபலிக்கப்பட்டு, மீண்டும் திரும்ப வேண்டும், இந்த ஒளிப்பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தி விடுகிறது காற்றில் உள்ள ''கரி'' வாயுக்கள் கண்ணாடிக்கூண்டுக்குள் அதிக வெப்பத்தை உணர முடிகிறதல்லவா, அது போலத்தான்.
ஆகவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வெப்ப நிலையில் வாழ முடியாது பல உயிர்கள் அழிக்கப்படுகின்றன. மனிதன் அழிவுப் பாதையை வகுத்துவிட்டு, அதில் நடந்த படி கவலைப்படாமல் பாடிதிரிகிறான். கடைசியில் இவனுக்கும் அதே ''பிஞ்ச்ரபோல்'' தான்.
மனிதன் தனக்குத் தானே ஒரு நச்சு வலையைப் பின்னிக்கொண்டு, அதன் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். இப்போதே மீட்சிக்கான வழிவகைகளைத் தொடங்கினாலும் காப்பாற்ற முடியுமா என்பதே ஐயப்பாடு!
களம் இறங்கி விட்டோம். போராடாமல் வெளியேறி விட்டால், ''செய்தக்க செய்யாமையானும் கெடும்'' என்ற அளவில் நாமும் குற்றவாளியாகி விடுவோம்!
8. வழி முறை
1. பெரும்பாலான பசுந்தீவனங்கள் (செடி கொடி மரம்) தாவர பட்சினியாகி ஆடு மாடுகளுக்கானவை கிராமப்புறங்களில் அழிக்கப்படுகின்றன. இனி இதற்காகக் கூட செடி கொடி மரங்கள் அழிக்கப்படக் கூடாது. ஏசு பிறந்த காலத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடி மட்டுமே! ஆனால் இன்று 600 கோடியல்லவா! மக்கட் தொகை குறைவாக இருந்த காலத்தில் காடுகள் அதிகம் இருந்தன. இப்போது இத்தனை பெரிய மக்கள் கூட்டத்திற்கு ''உயிர்க்காற்று'' உற்பத்தி போதாது நிலையில் கால்நடைகளுக்காக இருக்கும் செடி கொடிகளையும் அழிய விட்டு விடக்கூடாதே! ஆகவே கால் நடைகளுக்கு இனி முழு அளவு தாவரங்கள் மேய்வதால் மட்டுமே நிறைவு பெறாமல், ஓரளவு தாவரங்களிலும், ஓரளவு மற்ற கலப்பு தீவன வகைகளிலும் வாழ்ந்து வர நாம் தான் ஏற்பாடு செய்துதீர வேண்டும். இனி இயற்கையான மேய்ச்சலுக்கும் இடம் தராமல், அடைத்துக் போட்டு தீவனமிட்டு வளர்க்கும் முறைக்கு மக்களை மாறிடச் செய்ய வேண்டும். காடுகள் வேண்டுமானால், கால்நடைகளைக் கட்டிப் போட்டுத்தான் (அடைத்துத் தான்) வளர்க்க வேண்டும்.
2) காவிரி பொய்த்துப் போன பிறகு, கர்நாடகம் தண்ணீர் விட மறுப்பதை மட்டும் காரணமாகக் கூறுவது மேற்பூச்சானது. காடு அழித்தல் தான் காவிரி பொய்த்தலுக்கு காரணம் என்பதை உணரவே இல்லை. வற்றாத ஜீவநதி வற்றி விட்டது. தற்போதைக்கு ஆழ்குழாய் கிணறுகள் குடிநீர் கொடுக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில், பூமியின் நீரோட்டமும் பாதாளம் சென்ற பிறகு? எத்தனை பெரிய நச்சுச் சூழலில் சிக்கிக் கொண்டோம் என்பதை ஒவ்வொரும் வரும் உணரச் செய்திட வேண்டும். முழுமுதற் இயக்கமாக, கடமையாக நம் கண் முன் நிற்பது காடு வளர்ப்பு மட்டுமே! இந்த அரசாங்கம் நாட்டைப் பாதுகாப்பதாக வீண் வார்த்தை பேசி இனியும் நாள் கடத்த வேண்டாம். காட்டை அழிக்காமல் இருந்தாலே போதும். ஆயிரம் கோடி வந்தனங்கள் சமர்ப்பிக்க்லாம். காடில்லா நாடு நாடல்ல.
3. மழைக் காலத்தில் நீர்வளம் உள்ள பகுதியில், நீருக்குள்ளாகவே வளர்ந்து பலன்கொடுக்கும் ''மடுமுழுங்கி நெல்'' ரகம் உண்டு. வறட்சி காலத்தில் (அல்லது மழையளவு மிகக் குறைவாக உள்ள பகுதியில், காலத்தில்) விளையக்கூடிய ''மாப்பிள்ளை சம்பா'' உண்டு. இவ்வாறு தமிழகத்தில், இடத்திற்கேற்றபடி, காலதிற்கேற்றபடி பயிர் வகைகள் இருந்தன. இயற்கை சார்ந்த வேளாண்மை நோக்கி மக்களை மீளத்திருப்பும் பொறுப்பினை எடுத்துக்கொள்ளும் நேரம் இது.
4. மரங்களுக்கு ஏதாகிலும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நேரடியாகச் சென்று மருத்துவ ஆலோசனை கூறி மரங்களைக் காப்பாற்றும் மர மருத்துவக் கூடங்கள் (Tree clinic) நாடெங்கும் நிறுவ வேண்டும்.
5. ''இயற்கை வளக் காப்பு காட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும். ''மரம் ஒரு சுத்திகரிப்பு சாலை'' என்பதாக சிறு குழுந்தை கூடக் கற்றுத் தெளிந்திருக்க வேண்டும். மனித நுரையீரல் குருதியை சுத்திகரிப்பது போல வளி மண்டலத்தின் நுரையீரலாக மரங்கள் காற்றைச் சுத்திகரிப்பு செய்து, உயிரினங்களைக் காப்பாற்றுகிறது என்று ஒவ்வொரு மனிதனும் தொடக்கக் கல்வியிலேயே உணர்ந்திருக்கச் செய்திட வேண்டும். இயற்கை வளக்காப்பில் பங்கெடுக்காதவன் ''மக்கள் துரோகி'' என்று குற்றம் சாட்டப்பட வேண்டும்.
6. கல்வி கற்றல் என்பதை அரசாங்க வேலைக்குப் பயன்படும் ஒரு வித ஆயுதமாக - வழிமுறையாகத்தான் மக்கள் கருதுகிறார்கள். அதாவது, கல்வி கற்றலே ''உழைப்பு மறுப்பு'' என்பதாகப் புரிந்து கொள்ள விடப்பட்டிருக்கிறார்கள். உழைப்பது என்பதை கேவலமானதாக இளைஞர்கள் எண்ணிக் கொள்வது விட்டாயிற்று. அப்படிப்பட்ட இளைஞர் பட்டாளம் வளர இடம் கொடுத்தாயிற்று. இது தானே தூக்கமாட்டிச்சாகும் தற்கொலை போன்றது. சுதந்திரத்திற்கு பிறகு ''கல்வியோடு விருப்ப உழைப்பு'' கலந்திருக்கச் செய்யத் தவறியாயிற்று. உடல் உழைப்புக்கு கொடுக்க முன் வருதலே முதல் தகுதி என்றும் மாற்றம் செய்திட்டால் மக்கள் முன் வரத் தயக்க மாட்டார்கள். உழைக்க மறுத்தகூட்டம் உச்சாணியில் ஏற்றி உயர்த்தப்பட்டதால், உழைப்புக்கு மதிப்பில்லாமல் போயிற்று. உழைப்பவர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற தலைகீழ் மாற்றம் செய்திட வேண்டும். உற்பத்தியில் பங்கெடுக்காதவர்கள் உணவுப் பங்கீடு பெற உழைக்காமல் இருக்கவே கூடாது.
7. எதை உண்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்பது பொதுவான கருத்து. அதாவது கோயம்புத்தூர் பகுதியில் ''குதிரை மசாலாபுல்'' சோளத்தட்டை போன்ற கால்சியம் சத்து மிகுந்த உணவாகக் கொடுப்பதால், எலும்புகள் உறுதிப்பட்ட காங்கேயம் இனக் கால்நடைகள் கிடைக்கின்றன. மலைச் சரிவுகளில் ஏறி இறங்கி மூலிகைகளை மேய்ந்து வருவதால் மெல்லிய கால்களும் மெல்லிய உடல்வாகும் கொண்டு, காட்டு விலங்கிடமிருந்து தப்பிக்க விரைவாக ஓடும் ஆற்றல் அமையப் பெற்று சந்ததிகளைப் பெருக்கிய அளகார் இனம் மைசூர் மாநிலத்தில் இருக்கின்றன. தாது உப்புகளை காவிரி வெள்ளத்தில் கடலுக்குக் கொடுத்துவிடடு வெறும் கழிவை (வைக்கோல்) மட்டும் சாப்பிட்டதால் குட்டைகால்களும் குட்டை உடல்வாகும் உடைய உம்பளாச்சேரி (கிடைமாடுகள்) தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்றன.
இப்படியாகப் பல்வேறு உணவுவகை, பல்வேறு வித உடல்வாகுவை - இன்னும் சொன்னால் உள்ளத்தின் தன்மையைக் கூட நிர்ணயம் செய்து வருவதை அனுபம் தெளிவாக உணர வைக்கிறது. பட்டறிவு புகட்டும் பாடத்தை ஏற்று பக்குவப்பட வேண்டியது பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை என்பதை இதற்கு மேலும் வலியுறுத்த வேண்டுமா என்ன!
மனம் பார்க்காததை அறிவு பா‘க்காது. அதாவது நம் மக்களுக்கு எதனைச் சொல்லித் தரவேண்டுமோ அதனை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். ''விதைப்பன யாவும் நினைப்போம்'' பிறகு செயல்படுவோம்.
8. நிலம் எப்போதும் பச்சையாகவே இருக்க வேண்டும். ஒரு காலத்தில் கோடைக்காலத்து வறட்சியைத் தாங்கும் அவுரி, கம்பெனி பயிர் (பில்லிபெசரா) சாம்பாவுக்குப்பின் தெளித்து, பசுமையைக் காத்தார்கள். நைட்ரஜன், புரதம் நிறைந்த பயறு வகைச் செடிகளை விதைத்து நிலவளத்தையும் காப்பாற்றினார்கள்; உலர் உணவாகவும் கொடுத்து கால் நடைகளையும் வளமாக வைத்திருந்தார்கள்.
நாட்டைப் பசுமையாக வைத்திருக்கக்கூட ஏழை விவசாயிகள் வறுமை நிலையிலும் விதைவாங்கி, தெளித்து, விளைவித்து நாட்டுக்குத் தொண்டு செய்யவேண்டுமோ? மக்களுக்காக..... என்று சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் இந்த விதை கூட இனமாக விவசாயிகளுக்கு வழங்கிடக் கூடாதோ? ஏழை விவசாயி, மனிதகுல நன்மைக்காக நிலத்தைத்தான் கொடுக்க முடியும்! உழைப்பையும் வேண்டுமானால் கொடுக்கலாம். அதற்காக பணம் செலவழித்து விதை வாங்கித் தீர வேண்டுமா என்ன? சொல்லப் போனால் பசுமை நிலமாகப் பாரமரிப்பதற்கு அரசாங்கம் ஊக்கத் தொகையல்லவோ கொடுத்து வளப்படுத்தியிருக்க வேண்டும்?
9. ''வேளான் அறிவியல்'' முதிர்ந்த நிலையில் ஒரு காலத்தில் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. நம் காலத்தில்தான் அழியவிட்டு விட்டோம். எ.கா காற்றாழையில் உயிர்வேலி அமைத்திருந்தது ஒரு காலம். இதனால் நிலத்தின் நீர் பிடிப்புத் தன்மை பாதுகாக்கப்பட்டது. இப்போது உயிர் வேலியே இல்லை. பிறகு எப்படி மண்ணின் ஈரம் காப்பாற்றப்படும்?
10. பண்டைய தமிழர்களின் வேளாண்முறையில் உள்ள தொழில் நுட்ப அறிவியல் கூறுகளை, மீண்டும் கிராமம் தோறும் ஆய்வு நடத்தி, கணக்குப் பிடித்து, புது மெருகேற்றிப் ''பொதுமைப் படுத்துவது'' இன்றைய நிலையில் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதிகாலை நீர் பாய்ச்சலையும், அந்திமாலை நீர் பாய்ச்சல்களையும் தமிழர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுத்தேறியிருக்கிறார்கள் என்பது மிகையான செய்தியல்ல. அதேபோல உச்சிக்கிளையை கவாத்து செய்து, பூமியில் சூரிய ஒளி பரவலாக விழச்செய்து, அதிகமான புதிய இளங்குருத்துகள் பூவோடு பிஞ்சோடு செழித்து வளர்த்தெடுப்பதை நம் முன்னோர்கள் நடைமுறைப்படுத்திப் போற்றியிருக்கிறார்கள்.
11. ''நிரந்தர வேளாண்மை'' உருவாக்கத்தான் இறுதி லட்சியமாக இருக்க வேண்டும். தரம் உயர்ந்த விளைபொருள் வேண்டும். உழவே இருத்தல் கூடாது. தானே விதைத்துக்கொண்டு, தானே வளர்ந்து, தானே உற்பத்தி செய்து கொண்டு, தானே உரம் தயாரித்துக் கொண்டு, கிடைத்த நீரைத் தானே சேமித்து வைத்துக் கொண்டு, தானாகவே இயற்கையாகவே வளர்ந்து செழிக்க வேண்டும் (Do nothing).
மிகக் குறுகிய இடத்தில் அதிக மகசூல் எடுக்கும் நுட்பத்தை பரவலாக்கிட வேண்டும். எடுத்துக்காட்டாக, இனி சதுரப் பாத்திகளை வட்டவடிவப் பாத்திகளாக மாற்றி, அதன் பலா பலன்களை மக்கட்குச் சொல்லிக் கொடுத்து, மாதிரி பாத்திகளை ஆங்காங்கு நிறுவி தொழில் நுட்ப ஐயப்பாடு சிறிதும் இல்லாதவாறு பரப்புரையின் சாரம் அமைத்தல் வேண்டும்.
12. இயற்கை வளக் காப்பும், மரம் வளர்ப்போம் கூப்பாடும், நீர்நிலைக்காத்தலும் வெறும் முழுக்கமாக இருப்பதை மாபெரும் ''மக்கள் இயக்க'' மாகக் கொண்டு செல்வதில் நீக்கு போக்கு காட்ட முடியாது.
இயற்கை விவசாயம் என்பது நஞ்சு இல்லாத, செலவு இல்லாத விவசாயம். இந்த லட்சியம் நோக்கி நடைபோடுவது ஒரு ''கூட்டுறவு முயற்சி''.
காவிரியில் ஒடிவந்து விளை நிலமடைவாய்க்கு நீர் வந்து சேர அரசாங்கம் இத்தனை கோடி செலவு செய்கிறது என்று, சராசரி ஒரு ஏக்கர் நெல் பயிருக்குத் தேவையான நீர் பராமரிப்புக்கு அரசு செலவு செய்யும் பணத்தைக் கணக்கிட்டு, விவசாயிகளுக்குத்தான் அரசாங்கம் அதிகப்படியான ''சலுகை'' செய்வதாகக் கூறிக் கொண்டிருக்கும் ''அறிவு ஜீவிகள்'', தாங்கள் பயன்படுத்தும் ஆக்சிஜனை, மரம் வளர்த்து உற்பத்தி செய்து கொடுத்த விவசாயிகளின் ''சேவையை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. இவர்களுக்கு ''உயிர்க்காற்று'' எங்கிருந்து கிடைத்தது? யார் உழைப்பில் கிடைத்தது? இவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஆக்சிஜனுக்கு எப்படி கேள்வி முறையில்லையோ, அப்படி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் தண்ணீருக்கும் (காவிரி நீர்) கேள்விமுறை இருக்கக் கூடாது. சூரியனும், நிலவும், காற்றும் எப்படி எல்லோருக்கும் பொதுவோ, அப்படி நீரும் பொதுவாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் உற்பத்தி இடத்தில் (தலைமடையில்) இருப்பவர்களை விட, அதிக உரிமையுள்ளவர்கள் கடைமடைப் பகுதிக்காரர்கள்தான் ஆற்றுக்கு அணைபோட இயலாதது போல ஆற்றுக்கு அணைபோட எவனுக்கும் உரிமை இருக்கக்கூடாது
13. கால் நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட இன்றைய நிலையில் சாணம் மட்டுமே தொழு உரமாக ஆக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ''கலவை உரம்'' தயாரித்துக் கொள்ளும் முறையை பரப்புரை மூலமும் நேரடி பயிற்சி மூலமும் பரவச் செய்திட வேணடும். கலவை உரத்தயாரிப்புக்கு அதிக அளவு சாணம் தேவை என்பது இல்லை பெருஞ்சுள்ளிகள் அதன்மீது சிறுசிறு சுள்ளிகள், பச்சை இலைகள் காய்ந்த சறுகுகள், சாணிப்பால் தெளித்தாலே போதும். இலைகள் மக்கிவிடும் சாணிப்பால் என்பது கலவை உர உற்பத்திக்கான உரைமோர் அவ்வளவுதான். அந்த அளவு சாணம் போதும். இதனைச் சொல்லித்தந்து விட முடியாதா என்ன?.
14. உணவுப் பொருள் உற்பத்தி என்பது ஒரு திடமான கூட்டுறவு முயற்சி. பல கரணைகள் சேர்ந்த சங்கிலிபோல, ஒரு கரணை பழுது பட்டு சங்கிலி அறுப்பட்டாலும், சங்கிலி தன் வேலையைச் செய்ய முடியாது. ஆகவே அனைவரும் பழுது படாமல் கூட்டாக உழைத்து மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதே'' தமிழின வாழ்வியல் கழகத்தின் நோக்கமாகும்.
''இயற்கை வளக்காப்பு'' என்பது இத்தனை ஆராய்ச்சியோடு, அறிவியல் நுட்பத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை. 55 ஆண்டுகால சுதந்திர நாடு இந்த விதத்தில் அக்கறை காட்டவே இல்லை. நோயாளிக்கு அறுவை சிகிச்கை செய்ய முனைந்த மருத்துவர், வரியாக ஆராயாமல், அவசரக் கோலத்தில் கால் இருக்க வேண்டிய இடத்தில் கையையும், கை இருக்க வேண்டிய இடத்தில் காலையும் மாற்றி வைத்துத் தைத்துக் கொடுத்து விடுவது போன்ற நிலை ஏற்பட்டால் எத்தனை இழிவானசெயலோ அத்தனை இழிவாக - தரக்குறைவாக - நடந்து விட்டது கடந்த காலம். சரி செய்வோம்.
15. பொய்த்துப் போன நம்பிக்கை
மக்களின் ''சகிப்புத் தன்மை தீர்ந்து போகும்'' இறுதிச் சொட்டு நிலைக்கு வந்துவிட்டோம். அன்றாடச் சாப்பாட்டிற்குச் செலவாவதைவிட, குடிதண்ணீருக்கே அதிகம் செலவிடக்கூடிய காலம் மிக அண்மையில் நெருங்கி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் தண்ணீர் உரிமையிலிருந்து அந்நியப்படப் போகிறார்கள். தண்ணீரை தனியாருக்கு அரசாங்கம் விற்று விடப் போகிறது. அப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளவோ மழை நீரை சேமித்துக் கொள்ளவோ கூட உரிமையற்ற நிலை வரப்போகிறது. எது எதற்கோ கொலை விழும் நிலை போக, தண்ணீருக்காகக் கொலைகள் விழும் காலம் நோக்கி நகர்ந்து கெண்டிருக்கிறோம். இந்த ஆபத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்?
இனியும் ஏழை ஏழையாகவே இருக்கக்கூடாது.
மடமை நீக்கப்பட்டேயாக வேண்டும்.
உழைப்பவர்கள் உயர்த்தப்பட்டாக வேண்டும்.
தானாக எல்லாம் மாறிவிடும் என்பது பழைய பொய்.
நல்ல காலத்தை நம்பி இனியும் காத்திருப்பது மடமையிலும் மடமை.
ஏற்றாமல் தீபங்கள் எறிவதில்லை.
உதிராமல் புதிய மலர் பூப்பதில்லை.
உடைக்காமல் கருமுட்டை உயிர்ப்பதில்லை.
வெடிக்காமல் பாறைவாய் திறப்பதில்லை.
நாம் மக்கள் பிரச்சினையில் பங்கெடுக்கிறோம்.
தன்னம்பிக்கையும் தளராத உறுதியும், வாழ்வு மேம்பாடு அடையும் என்ற இனிய இடையறாத நம்பிக்கையும் தான் வளமான வாழ்வுக்கு வழிகாட்டி.
நன்றி: கவிதாசரன் (மார்ச் - ஏப்ரல் '04)
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கை வளம் மீட்டிட... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், நீர், என்பது, தான், இயற்கை, மக்கள், என்பதை, வேண்டிய, செய்து, உற்பத்தி, தமிழன், விட்டோம், காலத்தில், இல்லை, கொள்ள, என்ன, செய்யும், மனித, மட்டும், உயிர், காவிரி, இருக்க, அரசாங்கம், நாம், நீரை, இருக்கும், கொண்டு, நிலையில், மரம், மட்டுமே, எப்படி, எத்தனை, வைத்து, இயற்கையான, உணவுப், மரங்கள், தானே, அறிவியல், உள்ள, பகுதியில், நிலை, கொள்ளும், செய்ய, நிலத்தடி, இல்லாத, மனிதன், அதிக, காற்று, நெல், கால், அதாவது, முடியாது, என்பதே, பிறகு, இன்னும், காலம், சாணம், பொருள், அழித்து, கொடுத்து, அளவு, விட்டு, விவசாயிகள், வெறும், முறை, வந்து, விட்டது, தண்ணீர், இன்றைய, உயிர்க்காற்று, முடியும், கூடாது, மண்ணை, செலவு, தொகை, பூமியின், உண்டு, ஒன்று, முயற்சி, இடம், புரிந்து, உணவு, இடத்தில், கோடி, நோக்கி, ஆகவே, மேல், மாற்றி, மனிதனுக்கு, அழிப்பு, போதும், அந்த, நம்மை, சிறு, உயிர்க், செய்திட, ஆயிரக்கணக்கான, களைகள், பயன்படுத்திக், எடுத்துக், மூலம், வேர், காரணம், பொருளை, இல்லாமல், வரவேண்டும், விளைச்சல், பூச்சி, நாடு, பொய்த்துப், எடுத்து, உறிஞ்சி, மகசூல், பெரிய, விவசாயம், வளர்ந்து, வேண்டுமா, நீர்ப், காற்றில், அழிக்க, இருந்தால், இப்போது, இன்று, போகிறது, உலகில், தொழிற்சாலை, மற்ற, அல்லது, போனால், இருக்கின்றன, உயிரினங்கள், வெப்ப, முன், வேலை, அறிவு, எடுக்கும், மீண்டும், வைக்கோல், முடியாத, தாது, உழவு, தொழில், முளைக்கும், கலவை, அழிக்கப்படுகின்றன, நிலைமைக்கு, கருதி, சூரிய, செடி, ஒவ்வொரு, இத்தனை, பயிர்களையும், இனியும், தயாரித்துக், நிலம், கரைந்து, பயிர், நோய், உழைப்பு, கிருமிகளை, பகுதி, பால், அளவில், இழந்து, கூட்டுறவு, வாழ்ந்து, அவைகளை, விடுகிறது, விட்டான், வீரிய, முறைகளை, மருந்து, நஞ்சு, ரசாயன, மாறி, கொடுக்கும், தேவையான, பங்கு, விட்டால், விடும், கொலை, உயிர்கள், மழைநீர், நட்டு, வேளாண், அதனால்தான், வளர்த்து, பயன்படுத்தும், இருக்கிறது, பாதுகாத்து, நின்று, தமிழ், எதுவும், அவ்வளவுதான், இருந்த, வாழ்வியல், முழு, நாள், தேவை, முடிகிறதா, ஆக்சிஜன், நீர்நிலை, அமைத்தான், சடங்கு, சென்ற, தடுத்து, கொள்வது, நீர்வளம், மனிதனை, காடு, அத்தனை, விற்று, பெயரில், வளத்தை, கற்றுக், வைக்க, நிலைக்கு, பொதுவாக, கடலில், அரசு, எந்திரம், நிலத்தின், உலகம், அந்தக், வரும், விவசாயிகளின், உரிமை, முடியாதா, முன்னால், மனிதனின், நஞ்சில்லா, வாழ்வு, முடியுமா