முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » உழைக்கும் மக்களின் நாவல்
பொதுவான கட்டுரைகள் - உழைக்கும் மக்களின் நாவல்
- பொன்னீலன்
நவீன இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது கார்க்கியின் ''தாய்'' நாவல். மாபெரும் ரஷிய புரட்சியின் வெப்பத்தில் உருகிக்கொதித்த தொழிலாளி வர்க்க உணர்வைத்திரட்டி கலை நேர்த்தியுடன் வார்த்தெடுக்கப்பட்ட மாபெரும் படைப்பு. உலகின் முதல் வார்க்கப் போராட்ட நாவல். முதன் முதலில் ஒரு பெண் போராளியை இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்திய நாவல், அதன் தாக்கமும் எதிரொலியும் உலக இலக்கியம் அனைத்திலும் உண்டு.
இங்கிலாந்தில் அதன் தாக்கம் மிகுதி. ஜார்ஜ் பெர்னாட்சா தாய் நாவலின் தாக்கமும், கார்க்கியின் தாக்கமும் மிக அதிகம் உள்ள எழுத்தாளர். ஜோசப் கான்ட்ராடு இவர் ஒரு மிக முக்கியமான படைப்பாளி. தொழிலாள வர்க்கப்பிரச்சினையை எழுதவில்லை ஆனால் தாய் நாவலின் தாக்கத்தின் காரணமாக நடுத்தரவர்க்கத்தின் பிரச்சினைகளை அவர்களின் போர்க்குணத்தை மிக அழகாக எழுதி இருக்கிறார்.
ரஷ்ய புரட்சி காலத்தில் கார்க்கி சில ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தார். அப்படி வாழ்ந்த காலத்தில் தான் தாய் நாவலை முதன் முதலாக எழுதினார். அந்த நாவலில் ரஷ்ய தொழிலாளி வர்க்க நடவடிக்கைகளுடன் அமெரிக்க தொழிலாளி வர்க்க நடவடிக்கைகளும் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
''தாய்'' நாவலைப் படித்த லெனின் சில தொழில் நுட்ப குறைகள் நாவலில் உள்ளன என்றாலும் ரஷ்ய இளைய சமூகத்தை புரட்சியை நோக்கி ஈர்த்ததில் அந்த நாவலின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிடுகிறார். ரஷ்யாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இளைஞர்கள் புரட்சிகர நடவடிக்கையில் இறங்குவதற்கு இந்த நாவல் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது. ''தாய்' நாவல் அமெரிக்காவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பாட்டகஸ் என்று சொல்லக்கூடிய புகழ்பெற்ற படைப்பு ''தாய்'' நாவலின் தாக்கத்தால் உருவானதே.
இந்தியாவில் இந்தி இலக்கியத்தில் 1930 - களிலேயே ''தாய்'' நாவல் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்சி பிரேம்சந்த், முல்க்ராஜ்ஆனந்த் போன்ற இலக்கிய மேதைகள் இந் நாவலால் பெரிதும் தூண்டப்பட்டார்கள். இதன் வலுவான தொடர்ச்சி இன்றும் இந்தி இலக்கியத்தில் உண்டு.
மலையாளத்தில் ''தாய்'' நாவலின் தாக்கத்தை மிக விரிவாகக் காணலாம். சிறந்த உதாரணம் தகழி சிவசங்கரன் பிள்ளை. ''தாய்'' நாவலால் முற்றிலும் கவரப்பட்ட அவர் அதன் காரணமாக சில அரிய படைப்புகளை தந்திருக்கிறார். ''இரண்டு இடங்களில் அரி'' என்ற நாவல். குட்டநாடு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டது அந்த நாவல் உலகம் ஒப்புக்கொண்ட மிக நேர்த்தியான கலைப் படைப்பு அது. மலையாள நாடக உலகில் கே.பி.சி. என்ற நாடக மன்றத் தினரின் '' நீங்கள் என்னை கம்யூனிஸ்டாக்கி'' என்ற நாடகம் நேரடியாக ''தாய்'' நாவலின் தாக்கத் தால் உருவாக்கப்பட்டது. இந்த நாடகம் மலையாள உலகத்தை உலுக்கி எடுத்த பிரம்மாண்டமான நாடகம்.
தமிழைப் பொறுத்தவரையில் 1930-களிலேயே ''தாய்'' நாவலின் தாக்கம் ஏற்பட்டது. சக்தி கோவிந்தன் ''தாய்'' நாவலை தமிழுக்கு அறிமுகம் செய்த மிக முக்கியமான வெளியீட்டாளர். முதலில் ''தாய்'' நாவலை அறிஞர் ப. ராமசாமியைக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டார். தொ.மு.சி. ரகுநாதனின் மொழிபெயர்ப்புக்கு முந்திய மொழிபெயர்ப்பு இது. ரகுநாதன் மொழி பெயர்ப்பு ஆழமும் அகலமும் கொண்டது ராமசாமியின் மொழிபெயர்ப்பு வாசிப்புத்தன்மையை அதிகம் கொண்டது.
''தாய்'' நாவலின் தாக்கத்தில் உருவான மிக முக்கியமான படைப் பாளிகள். தொ.மு.சி. ரகுநாதனும் விந்தனும். ரகுநாதனின் ''பஞ்சும் பசியும்'' நாவல் பல அம்சங்களில் தாயைக் கொண்டிருக்கும் ''பஞ்சும் பசியும்'' நாவல் தமிழில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வலுவானது. விந்தன் ''தாய்'' நாவலின் தாக்கத்தில் பல சிறுகதைகளை தொழிலாளவர்க்க சார்பாக எழுதினார்.
சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், பொன்னீலன், சமுத்திரம் போன்ற நாவலாசிரியர்கள் ''தாய்'' நாவலின் தாக்கத்தில் தொடர்ந்து எழுதியவர்கள். ராஜம் கிருஷ்ணனின் பிந்திய நாவல்கள் ''தாய்'' நாவலின் தாக்கத்திற்கு உட்பட்டவை. ஆர்.எஸ் ஜேக்கப்பின் ''வாத்தியார்'' நாவல் இந்த வரிசையில் வந்தது. உலகம் முழுவதிலும் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியப்படைப்புகளில் ''தாய்'' நாவலும் ஒன்று. இந்நாவலை மொழி பெயர்த்து வெளியிடாத முக்கிய மொழிகள் இல்லை. பெரும்பாலான இந்திய மொழிகளில் ''தாய்'' நாவல் வெளியிடப் பட்டிருக்கிறது.
இப்பொழுது கலைஞர் கருணாநிதி இந்த நாவலை கவிதை நடையில் மொழி பெயர்த்திருக்கிறார். இது தமிழிலக்கியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் கலைஞரின் இலக்கிய இடம் இன்று மிகவும் முக்கியமானது. கலைஞரின் மொழி படித்த மக்கள் என்ற நிலையிலும் அதற்குக் கீழிறங்கியும் சென்று சாதாரண மக்களை சென்றடையக்கூடிய ஆற்றல் மிகுந்த மொழி. தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல தமிழ் சிந்தனை உலகிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
அதிலும் உலகம் முழுவதும் ''தாய்'' நாவலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற இந்த சூழலில் இந்த நாவலின் கவிதை வடிவம் வெளிவந்திருப்பது என்பது சிறப்பிற்குறியது.
நன்றி: புதிய காற்று..
தேடல் தொடர்பான தகவல்கள்:
உழைக்கும் மக்களின் நாவல் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தாய், நாவலின், நாவல், மொழி, தாக்கத்தை, இலக்கிய, உலகம், நாவலை, அந்த, நாடகம், தாக்கத்தில், கொண்டது, அதிகம், வர்க்க, தொழிலாளி, படைப்பு, தாக்கமும், முக்கியமான, தாக்கம், ரஷ்ய