முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » ஆப்பிள்: வாழ்வின் நுழைவாயில்
பொதுவான கட்டுரைகள் - ஆப்பிள்: வாழ்வின் நுழைவாயில்
- விஸ்வாமித்திரன்
ஒடுக்கப்பட்ட நாடுகளில் நிகழும் படைப்புச் செயல்பாடு தனது பரந்துபட்ட போர் குணத்திலிருந்து எழுவது: வாழ்வின் மீதான சமூக உரிமையை அழுத்தமாகக் கோருவது. அவ்வகைப்பட்ட பின்னணியில் எழுச்சிகொள்ளும் படைப்புக்கள்தான் அதிகாரத்திற்கெதிரான, வன்முறைக் கெதிரான காலத்தின் குரல்களாக பரிணமிக்கின்றன. இத்தகைய படைப்புகளினது அளப்பரிய வீரியத்தின் வெளிப்பாடாகவே பெண்ணுரிமை சினிமா தோற்றம் பெறுகிறது. பெண்ணுரிமை சினிமா - நேரும் தடைகளிலிருந்தும் அடக்கு முறைகளிலிருந்தும் தனது இருப்பை வலுவாக முன் வைப்பது. உலக அரங்கில் ஈரானிய பெண்ணுரிமை சினிமா ஏற்படுத்திய பலத்த தாக்கத்தினை நினைவில் கொண்டு. இவ்வுண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளான போதும் அதன் தளராத ஆன்ம ஒலிகளாக ரக்ஷன் பானி-எடெமத், தஷ்மினா மிலானி போன்ற பெண்படைப்பாளர்கள் வலம் வருகிறார்கள். அவர்களது தொடர்ச்சியான இளம் குரலாக சமீரா மஷ்மல்பஃப் அரங்கேறுகிறார். வெறுமனே பெண் இயக்குநர் என்ற நிலையில் பின்தங்கி விடாமல், உலக கினிமாவில் தனக்கென பிரதான இருக்கையை உருவாக்கிக் கெண்ட சமீரா, ஈரானிய பெண்ணுரிமை சினிமாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் தோற்றமளிக்கிறார்.
தனது 17 வயதுக்குட்பட்ட சிந்தனா தளத்தின் எல்லைப்பாடுகளை மீறி, முதல் படைப்பையே பரிசோதனை முயற்சியுடன் அணுகும் ஆற்றலைப் பெற்ற, சமீராவின் ''ஆப்பிள்'' திரைப்படம் உண்மைச் சம்பவத்தை நேரடிப்பதிவு செய்வது. அப்படத்திற்கான திரைக்கதை எழுதப்படவில்லை. சமீராவின் தந்தையும், உலகப்புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநருமான மொஷ்சன் மஷ்மல்பஃப் கூறிய திரைக்கதை ஆலோசனையும், நேரடிக் காட்சிகளின் வழியாக உருவாகும் கதைத்தளமுமே சமீராவின் படைப்புக்களத்திற்கு உறுதுணையாக இருந்தன.
''ஆப்பிள்'' படத்திற்கு முன்னமே ஈரானிய திரைப்ட மேதை அப்பாஸ் கியாரஸ்டமியின் ''குளோசப்'' படமும் மஷ்மல் பஃப்பின் ''மூவ்மெண்ட் ஆப் இன்னோ சென்ஸ்" மற்றும் ''சலாம் சினிமா'' படமும் ஈரானிய சமூகத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கலாபூர்வமான அணுகு முறையில் நேரடிப்பதிவு செய்த படங்கள். ஆப்பிள் படத்திற்கு இவை வெகுவாகவே ஆதார பலம் தந்திருக்கின்றன. எனினும் கியாரஸ்மியைம் மஷ்மல் பஃப்பும் தமது படைப்பிலக்கிய வரலாற்றில் பெற்ற அனுபவங்கள் அதிகம். அதன் வழியேயான தேர்ச்சியின் துணை கொண்டு, அவர்களால் நேரடி வாழ்வியல் சார்ந்த சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடிந்தது. ஆனால் சமிராவின் பரிசோதனை முயற்சி, அத்தகைய வேரின் தொடர்ச்சியினாலானது என்ற கருதுகோளுடன் முற்றுப் பெறக்கூடியதல்ல. முதல் படைப்பிலேயே பெண்ணுரிமை மீது கண்மூடித்தனமாக தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளை நேரடி சமூகத்திலிருந்தே தடயப்படுத்த சீரிய நோக்கத்தின் மனசாட்சியமாகவும் விரிவு கொள்கிறது."
ஆப்பிள் திரைப்படம் உருவான கதை சுவாரசியமானது. தொலைக்காட்சி நிகழ்வொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ''நியூஸ் ரிப்போர்ட்'' சமீராவின் கவனத்தை ஆட்படுத்தியிருக்கிறது. அந்த ''நியூஸ் ரிப்போர்ட்'' - சமீராவை ஈர்த்திட, படமாக்கும் திட்டத்தில் தனது தந்தையிடம் அணுகி, அவரது கேமராவைப் பெற்றுக் கொண்டார். ''பிலிம் ரோல்'' விநியோகம் ஈரான் அரசாங்கத்தால் கட்டுப் படுத்தப்பட்டிருப்பதால் - குறுகிய காலத்தில் அரசிடமிருந்து ''பிலிம் ரோல்'' பெற முடியாத நிலையில் - தந்தை அவரது படத்திற்காக சேகரித்து வைத்திருந்த ''பிலிம் ரோலை''ப் பெற்றுக்கொண்டு ''வலியாசர்'' பகுதிக்கு தனது சிறிய படக் குழுவினரோடு சமிரா பயணப்பட்டிருக்கிறார். முதலில் அவரது பிராயத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் திரைப்பட முயற்சிக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
மூன்றாம் உலக நாடுகளின் சமூக அவதானிப்பைப் பொறுத்தவரை 17 வயது என்பது அறியாமை மிக்க சிறார் வயதுதான். அதிலும் சமீரா ஒரு பெண். அவரால் இயலுமா என்கிற பலத்த சந்தேகம். இந்த மாதிரியான சூழ்நிலையை சமீரா முன்னமே எதிர் பார்த்திருந்தார் அந்த அனுமானங்களை உதாசீனப்படுத்தி, பொது நலத்துறையின் விசாரணையின் போது நதேரியை நேரில் அணுகியிருக்கிறார். சிறிய தயக்கத்திற்குப்பின் முதியவரால் படப்பிடிப்பு ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆப்பிள் ஒரு நேர்த்தியான கதைக்கருவை நோக்கி நகரமுனையும் படமாக உருவாக்கப்படவில்லை. கேமராவுக்கு முன்னே நடைபெறும் தன்னிச்சையான காட்சிகளைப் பதிவு செய்வதும் அதன் மூலம் நாதேரி குடும்பத்தாரின் மனவோட்டங்களைப் பதிவு செய்வதுமே படத்தின் இலக்கு. படத்தில் வரும் அனைவரும் உண்மையான கதாபாத்திரங்கள். தமது சுயபாத்திரங்களையே மறுநிகழ்வு செய்திருக்கிறார்கள். நடிப்பும் உரையாடலும் அவர்களின் சொந்த வெளிப்பாட்டுடனே அணுகப்பட்டுள்ளது.
சமீராவின் தந்தை என்கிற காரணத்தினாலும் படத்தில் மஹ்மல் பஃப்பின் பங்களிப்பே அதிகம். சமீராவின் பங்கேற்பு குறைவானதுதான்'' என்ற குற்றச்சாட்டு ஈரானிய விமர்சகர்களாலும் சில வெளிநாட்டு பார்வையாளர்களாலும் முன் வைக்கப் பட்டது.
அக்குற்றச்சாட்டுக்கு சமிரா பதிலளிக்கையில் ''ஆரம்பத்தில் அப்படி ஒரு விமர்சனம் எழுந்தது உண்மைதான் - குறிப்பாக ஈரானில், அவ்விமர்சனத்தை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன். அது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அத்தகைய விமர்சனத்திற்கு காரணமே ஆப்பிள் ஒரு நல்ல படம் என்பதால்தான். ஆனால் பின்பு சில சமயங்களில் அவ்விமர்சனத்தை எதிர்கொள்ள நேரும்போது சோர்வும் அடைந்தேன் உண்மையில் எனது தந்தையின் பங்களிப்பு இருக்கிறது.
படத்திற்கு அவர்தான் தொகுப்பாளர் மற்றும் திரைக்கதையாளர். மேலும் ''தந்தை'' என்ற உறவும் படத்திற்கு உதவியிருக்கிறது என்றார். எனினும் சமீராவின் பெண்ணுரிமை மீதான ஆன்ம பூர்வமான படைப்புச்சிந்தனை அவரது தந்தையின் படைப்பு முறையிலிருந்தும், மற்ற ஈரானிய படைப்பாளர்களிடமிருந்தும் மாறுபட்ட, தனித்த பாதையினை தேர்ந்துகொண்ட ஒன்று அந்நிலையின் நீட்சியாகத்தான் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் சமூக நலன்மிக்க சாட்சியங்களாக உலக அரங்கில் வலம் வருகின்றன.
படத்தில் இடம் பெறும் ஆப்பிள் பழம் வாழ்வை அறிந்துகொள்ள விழையும் ஆவலின் குறியீடு. மேலும் பெண்ணுணர்வின் விழிப்பைத் தூண்டும் குறியீடாகவும் பாத்திரமேற்கிறது. ஆப்பின் படத்தை பார்வையிட்ட பின்பு அந்த இரட்டைச் சிறுமிகளின் மீது வெறும் பரிதாப உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை. அவர்களை அடைத்து வைத்திருந்த முதியவர் மீது கோபமும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக அரணுக்குள் சிக்கிக் கொண்ட பெண்களது சிதைவுற்ற வாழ்வு பார்வையாளரது எண்ணப்பரப்பில் அதிர்வுற வியாபிக்கிறது. சமூகக் கட்டமைப்பில் அவர்களது இருப்பின் விளிம்புநிலை குறித்த மீள் பார்வையைக் கோருகிறது.
படம் முழுக்க நதேரியின் மனைவி முக்காடிட்டபடி தான் வருகிறார். ஒரு காட்சியில் கூட அவரது முகம் காட்டப்படுவதில்லை. அவர் ஈரானிய பெண்களின் இருண்ட மனோநிலையின் பிரதியாக தன்னை அடையாளமிடுகிறார். எனினும் படத்தின் இறுதியில் ஆப்பிள் பழம் அவரது கையில் அகப்பட்டு விடுகிறது. அக்காட்சி விழிப்பிற்கான நம்பிக்கையூட்டுகிறது.
''ஆப்பிள் படத்தின் மூலம் அந்த இரட்டைச் சிறுமிகளை பூட்டப்பட்ட வீட்டிலிருந்து நான் வெளிக் கொண்டு வந்தேன். ஆப்பிள் என்னை எனது நாட்டிலிருந்து வெளிக்கொண்டுவந்தது. இப்பொழுது நான் உலகைக்காண முடிகிறது'' என்கிறார் சமீரா.
விசாரணை
டெஹ்ரான் நகரில் ''வலியாசர்'' எனும் பகுதியில் வசிக்கும், கொர்பான் அலி நதேரி எனும் முதியவரும், கண்பார்வையிழந்த அவரது மனைவியும் இரட்டைச்சிறுமிகளான தனது இரு புதல்விகளையும் பிறந்ததிலிருந்தே 11 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே சிறைப்படுத்தி, பூட்டி வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவத்தை விசாரணை செய்வது.
படத்துவக்கத்தில், நதேரியின் இல்லத்திற்கு அருகில் குடியிருப்பவர்கள் பொதுநலத்துறை அலுவலகத்தில் புகார் செய்ய. குடும்பத்தினரோடு நதேரி அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுகிறார். மனோரீதியாக வளர்ச்சி பெறாமலும், சரளமாகப் பேசமுடியாமலும், தன்னியல்பாக நடக்க முடியாமலும் ஆக்கப்பட்ட அந்தச் சிறுமிகளை, அடைத்துவைத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் கேட்கும்போது. நதேரி தெளிவான பதிலைக் கூறமுடியாமல் விதியின்மீது பழிசுமத்துகிறார். கல்வியறிவற்ற, அறியாமையின் பழமையுணர்வின் இறுக்கம் அடர்ந்திருக்கும் அவரது முகத்தில் வருத்தமும் சோர்வும் மாத்திரமே எஞ்சியிருக்கிறது. அந்த விசாரணை சார்ந்த சித்தரிப்புக் காட்சிகள் வீடியோ மூலம் எடுக்கப்பட்டவை. விசாரணைக்குப் பின்பு குடும்பத்தினரோடு அவர் வீடு திரும்பும் காட்சியிலிருந்தே படச்சுருள் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காட்சியிலிருந்துதான் படம் கதைத்தன்மைக்கான தொனியையும் பெற ஆரம்பிக்கிறது.
விசாரணையின் இறுதியாக, நதேரி மற்றும் அவரது மனைவியிடமிருந்து இரு சிறுமிகளையும் பிரித்துவிட முதலில் ஆலோசிக்கப்பட்டு. பின்பு பெற்றோரிடமே அவர்கள் சுதந்திரமாக வளர வேண்டுமென அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி அந்தச் சிறுமிகளை வீட்டிற்குள் பூட்டிவைக்காமல், மற்ற சிறுவர்களைப் போலவே வெளியுலகில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளின் பேரில் நதேரியிடம் சிறுமிகள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றனர். நதேரி இந்த விதிமுறைகளை ஒப்புக் கொண்ட பின்னரும், வீட்டிற்கு வந்து திரும்பவும் அவர்களை அடைத்து வைத்துவிட்டு, கடைக்குச் செல்கிறார். அப்பொழுது சிறுமிகளைக் கண்காணிக்க பொதுநலத்துறையால் நியமிக்கப்படும் சமூக சேவகி வீட்டிற்கு வந்து கதவு பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறார். முதியவர் திரும்பும் வரை காத்திருந்து அவரை கண்டிக்கிறார்.
முதியவர் தான் கடைக்குச் சென்றதால் பூட்டியதாகவும், பக்கத்தில் வசிக்கும் சிறுவர்கள் விளையாடும் பந்து வீட்டு முற்றத்தில் விழுவதால் (கதவு திறந்திருக்கும் பட்சத்தில்) எடுக்க உள்ளே வருவார்கள் என்றும், தனது புதல்விகளை அவர்கள் தொட்டுப் பேச நேர்ந்துவிட்டால் அது தனக்கு ''மரியாதைகேடு'' என்றும் காரணங்கள் கூறுகிறார். அவரிடம் பேசினபடியே, சமூக சேவகி சிறுமிகளை வீட்டை விட்டு வெளியேற்றி, அவரையும் அவரது மனைவியையும் உள்ளே வைத்து பூட்டிவிடுகிறார் - சிறைக்குள்ளாவது எத்தனை துன்பமயமானது என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக. அவர் உள்ளிருந்தபடியே தான் சிறுவயதில் சேகரித்து வைத்திருந்த புத்தகமொன்றை எடுத்து வந்து, கதவுக் கம்பிகளின் வழியே சேவகியிடம் தந்து '' தந்தைக்கான அறிவுரைகள்'' என்ற தலைப்பில் அந்நூலில் எழுதப்பட்டிருக்கும் ''பெண்கள் பூக்களைப் போன்றவர்கள். அவர்கள் மீது சூரியன் பட்டால் வாடிவிடுவார்கள்'' என்ற மேற்கோளை சுட்டிக்காட்டுகிறார். எனினும் ''இனிமேல் தனது புதல்விகளை அடைத்து வைக்கமாட்டேன்'' என்ற உறுதிமொழியை மீண்டும் அவர் அளித்தபோதிலும், சமூக சேவகி கதவைத் திறந்துவிட மறுத்துவிடுகிறார். அதற்குமாறாக, பக்கத்து, வீட்டில் கம்பியறுக்கும் கருவியொன்றை இரவல் பெற்று அம்முதியவரிடம் தந்து கம்பிகளை அறுத்துவிட்டு, வெளியே வரும்படி ''தண்டனை அளிக்கிறார் - கம்பிகள் அறுபடுவது சிறுமிகளின் நீடித்த சிறையடைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எண்ணத்தில் முதியவர் வேறுவழியில்லாமல் கம்பியை அறுக்க துவங்குகிறார்.
நட்பிற்கான தொடக்கம்
இந்த சம்பவங்களின் மறுபகுதியில், வீட்டிலிருந்து வெளியேறும் சிறுமிகள் வீதியில் மகிழ்வோடு ஓடித்திரிகிறார்கள் . ஐஸ், கிரிம், சாக்லேட் விற்கும் ஒரு சிறுவனிடமிருந்து, அவன் அயர்ந்த நேரம் பார்த்து சாக்லேட்டை ''திருடி'' ஓட்டமெடுக்கிறார்கள். அந்தச் சிறுவன் சாஹ்ராவின் சட்டையைப் பிடித்து, ஆவேசமாகப் பணம்கேட்பதைக் காணும் எதிர்வீட்டுப் பெண்ணொருத்தி, சாக்லேட்டுக்களுக்குரிய பணத்தை அவனுக்குத் தருகிறாள். அந்தச் சிறுவனும் மகிழ்ந்து, சாஹ்ராவிற்கும் அவளது சகோதரிக்கும் சில சாக்லேட்டுக்களை இலவசமாக மனமுவந்து அளிக்கிறான். பதிலுக்கு சாஹ்ரா தன் கையிலுள்ள (சமூக சேவகி பரிசளித்த) கண்ணாடியையும் சீப்பையும் அவனுக்குத் தருகிறாள்.
அதன் தொடர்நிகழ்வாக, எதிர்வீட்டுச் சிறுவனொருவன் மாடி ஜன்னலில் அமர்ந்தபடி, ஒரு நூலில் ஆப்பிள் பழத்தைக் கட்டிக்கொண்டு சாஹ்ராவையும், மௌசம்யாவையும் பிடிக்கச் செய்யுமாறு தூண்டிவிடுகிறான். அவர்கள் பழத்தை பறித்துவிட முடியாதபடி, நூலை மேலும் கீழம் ஆட்டி விளையாட்டுக் காட்டுகிறான். பின்பு பழத்தின் மீதான அவர்களது ஆர்வத்தை உணர்ந்து கடைத்தெருவிற்கு அவர்களை அழைத்துக் செல்கிறான். அங்கிருக்கும் பழக்கடையில் ஆப்பிள், கேட்டு பணமில்லாததால் கடைக்காரர் தரமறக்க, சிறுவன் தோழியருடன் வீடு திரும்ப நேர்கிறது.
பின்பு, அந்த சிறுமிகள் தெருவில் விளையாடும் மற்ற இரு சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடச் செல்கிறார்கள். அன்றைய நாள் அவர்களது நட்பிற்கான தொடக்க நாளாகிறது. அதில் ஒரு சிறுமியின் கைக்கடிகாரத்தைப் பார்த்து, தனக்கும் அதுபோல ஒன்று வேண்டுமெனக் கேட்க, அவர்கள் அச்சிறுமிகளைப் பிரதான கடைவீதிக்கு அழைத்துப் போகிறார்கள். கடைக்காரரிடம் கடிகாரம் கேட்க, அவர் தந்தையை அழைத்து வாருங்கள் எனக் கூறுகிறார். நான்கு பேரும் நதேரியைப் பார்க்க வருகிறார்கள். அங்கே கம்பிகளை முழுவதும் அறுக்க இயலாமல்போன சோர்வோடு அவர் நின்று கெண்டிருக்கிறார். வெளியே இருக்கும் சமூக சேவகி சாஹ்ராவிடம் சாவியைத் தந்து கதவைத் திறக்கச் சொல்ல, பெருமுயற்சிக்குப் பின், கதவைத் திறந்து தந்தைக்கு அவள் சுதந்திரம் அளிக்கிறாள்.
நதேரி சுதந்திரத்தின் மனோநிலையை உணர்ந்தவராக, தமது புதல்விகளையும் அவர்களது புதிய தோழிகளையும் அழைத்துக் கொண்டு கடைவீதிக்குச் செல்கிறார். சமூக சேவகி மனநிம்மதி அடைந்து விடைபெற திறந்திருக்கும் கதவு வழியே, நதேரியின் கண்பார்வையற்ற மனைவி சாஹ்ராவை அழைத்தபடி வெயியே வருகிறாள். சிறுமிகளிடம் நூலில் ஆப்பிள் கட்டி விளையாட்டு காட்டின சிறுவன் மீண்டும் அச்சிறுமிகளின் தாயிடம், அதே விளையாட்டை மாடி ஜன்னலிருந்து நிகழ்த்துகிறாள், பழம் அவளது தலையில் மோதுகிறது. அவளைச் சுற்றிவருகிறது. ஒரு துல்லியமான உணர்தல் தருணத்தில் அவள் ஆப்பிளைக் கைப்பற்றுகிறாள். அக்காட்சி உறைந்து படம் நிறைவடைகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிள்: வாழ்வின் நுழைவாயில் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஆப்பிள், அவரது, சமூக, தனது, ஈரானிய, சமீராவின், சேவகி, பின்பு, அவர், நதேரி, அந்த, பெண்ணுரிமை, சமீரா, அவர்களது, படத்திற்கு, கொண்டு, சினிமா, படம், அந்தச், வைத்திருந்த, சிறுமிகளை, முதியவர், எனினும், மீது, விசாரணை, சிறுவன், தான், வந்து, கதவைத், தந்து, நதேரியின், கதவு, சிறுமிகள், படத்தில், பிலிம், தந்தை, தமது, முன்னமே, மீதான, மூலம், படத்தின், பழம், அவர்களை, மற்ற, மேலும், நான், அடைத்து