பொதுவான கட்டுரைகள் - செய்யும் தொழிலே...
- சோம. வள்ளியப்பன்
ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பயிற்சி வகுப்பெடுக்க அழைத்திருந்தார்கள். அவர்கள் செய்யும் வேலை பற்றி அவர்களுக்கு ஒரு பெருமிதம் வரவேண்டும்; அதன் மூலம் வேலையில் ஈடுபாடும் வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
பயிற்சி வகுப்பில், முதலில், எனக்கு பரிச்சயமான இரண்டு நபர்களைப் பற்றிச் சொன்னேன். அந்த இருவரில்... முதலில் கலா! அந்தப் பெண்ணை நான் கடைசியாகப் பார்த்து 5 ஆண்டு இருக்கலாம்.
கலா ஒரு நிறுவனத்தின் குடியிருப்பில் அமைந்துள்ள தனியார் நடத்தும் பொதுத்தொலைபேசிக் கடையில் வேலை பார்த்தார். தந்தை கிடையாது. தாய் மற்றும் ஒரு தம்பி. கஷ்ட ஜீவனம். அதிகம் படிக்கவில்லை. உயரம் குறைவு, ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபது, இருபத்திரண்டு இருந்திருக்கும்.
அது 24 மணிநேர வேலை
கலாவும் மற்றொருவரும் மாற்றி மாற்றி டூட்டி. கலாவுக்கு எப்பொழுதும் பகல் டூட்டி. காலையில் 8-க்கு வந்துவிட்டு இரவு 8 வரை. நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள தன் வீட்டில் எழுந்து, தாய்க்கும் தம்பிக்கும் காலை, மதிய உணவுகளைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார். வரும் நேரம் காலை 7.40 அல்லது 7.50 இருக்கும்.
வந்ததும் கடை வாசலைப் பெருக்கி, தன் சினேகிதத்தால் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து, வாசல் தெளித்து கோலம் போடுவார்.
அந்தக் கடைக்காரர், பிசிஓ - விலேயே ஒரு லெண்டிங் லைப்ரரி, குளிர்பானங்கள், மோர், ஐஸ்வாட்டர் விற்பவர். எல்லாக் கணக்கையும் வாங்கிக்கொண்டு இரவு வேலை பார்த்தவரை உடன் அனுப்பிவிடுவார் கலா.
அதற்குள் மணி எட்டரையாகிவிடும். வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள். செல்போன் பிரபலமாகாத காலம். அங்குள்ள இரண்டு போன்களையும் மாறி மாறிப் பயன்படுத்துவார்.
வருபவர்கள் அவசரப்படுவார்கள். எனக்கு முதலில், சீக்கிரம், அவசரம்... கலா முகத்தில் ஒரு போதும் புன்னகை மாறவே மாறாது. வருகின்ற ஒவ்வொரு வாடிக்கையாளரையும் கலாவுக்கு நன்கு தெரியும். சிலர் அண்ணன், சிலர் தம்பி, சிலரை பெயர் சொல்லியே அழைப்பார்.
வருபவர்களில் சிலர் தங்கள் உறவினர், அலுவலகத் தொடர்பு எண்களை எடுத்துவர மறந்துவிடுவார்கள். ஆனாலும் பிரச்சினையில்லை. கலாவுக்கு, ஓர் எண்ணை ஒரு முறை கேட்டால் மனனம் ஆகிவிடும். ஆளைப்பார்த்ததும், நாமக்கல்லா, கரூரா என்று கேட்டுவிட்டு அவரே நம்பரை அழுத்தித் தொடர்பு கொடுப்பார்.
இவற்றைச் செய்து கொண்டே பால்பாக்கெட் வியாபாரமும் நூலக வியாபாரமும் பார்ப்பார். முற்பகல் முழுவதும் மூச்சுவிட நேரமின்றி இப்படியே போகும்.
மதியம் இரண்டரை, மூன்றுவாக்கில் தன் சிறிய எவர்சில்வர் டிபன்பாக்ஸைத் திறப்பார். தயிர் சாதமும், கடையில் வாங்கிய ஊறுகாய் பாக்கெட்டும்! சிலசமயம் சாப்பிடத் தொடங்குகையில் ஒரு வாடிக்கையாளர் வருவார். டப்பா உடன் மூடப்படும். "பரவாயில்லையம்மா.... நான் வெயிட் பண்றேன்..'' கலா விடமாட்டார். "நம்பர் சொல்லுங்க சார்....''
மதியம் சிறிதுநேரம் ஒரு பழைய டிரான்ஸ்சிஸ்டரில் பாட்டுக்கேட்டபடி காலையில் நடந்த வியாபாரக் கணக்கினை முடிப்பார். மாலை வரும். முகம் கழுவிக்கொள்வார். பக்கத்தில் குடியிருக்கும் மாமி ஒருவர் காப்பி போட்டுக் கொடுப்பார். பழையபடி கூட்டம் வரத்தொடங்கும். தொடர்ந்து போன்கால்கள், காசு வாங்குதல், புன்சிரிப்பு, சின்னச் சின்ன விசாரிப்புகள்... இப்படியே இரவு மணி எட்டரையாகிவிடும். இரவு டூட்டி நபர், சில சமயம் தாமதமாயும் வருவார்.
காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கால்கள் போட்டுக்கொடுத்தபடி அவர் வந்துவிட்டாரா என்று எட்டி எட்டிப் பார்ப்பார். பின்பு ஒன்பதுக்கோ, ஒன்பதே காலுக்கோ பதைபதைப்புடன் கிளம்பி ஓடுவார்.
கலாவுக்கு அப்பொழுது மாதச்சம்பளம் ரூ. 900-மோ என்னமோ! கலா லீவு எடுத்ததேயில்லை. ஒருவரையும் கடிந்து பேசிக் கேட்டதில்லை. முக்கியமாய், தன் வேலைபற்றிக் குறை சொல்லியதே இல்லை.
அடுத்து... வாசு என்பவர் பற்றி. வாசுவுக்குத் திருமணமாகிவிட்டது. முதலில் பிறந்தது பெண் குழந்தை. பையனை எதிர்பார்த்து பெற்றுக்கொண்டது மேலும் இரண்டு பெண் குழந்தைகள். ஒரு நிறுவனத்தில் நிரந்தரமில்லாத கடைநிலை ஊழியர் (செக்யூரிடி பணி) - படிப்பு எட்டாவது வரை. சுற்றம் - வறுமையும் பெற்றோரும். நல்ல உழைப்பாளி நேர்மையானவர்.
இப்படியே 12 ஆண்டுகள்! வயது ஏறிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்தார்கள். குடும்பத் தேவைகள் பெருகின. ஆனால் பணிநிலையில் மாற்றம் இல்லை. ஊதியத்திலும் பெரிய உயர்வு இல்லை.
இதோ, அதோ... நிரந்தரமாகிவிடலாம் என்று நம்பி நம்பியே பன்னிரண்டு ஆண்டுகள். பின் அதற்கும் முற்றுப்புள்ளி ... வேலை போனது. அதிர்ந்தார். கைவசம் குறிப்பான திறனோ, தொழிலோ இல்லை.
வேண்டியவர் மூலம் அணுகினார். சென்னைக்கு அருகிலிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆள் தேவைப்படுவது தெரிந்தது. ஒரு "மேன்பவர் ஏஜென்சி' மூலம் அனுப்பினேன்.
மூன்று நாள் கழித்து, வேலை கிடைத்துவிட்டது என்று சொல்லி தொலைபேசி மூலம் நன்றி சொன்னார்.
இரண்டுமாதம் சென்றிருக்கும். ஒரு விசேஷத்தில் வாசுவைச் சந்தித்தேன். என்னவேலை? என்ன சம்பளம்?'' என்றேன். போனதும் "ஹவுஸ் கீப்பிங்'கில் போட்டார்கள் என்றார். வேலை விவரம் கேட்டேன். தரையைப் பெருக்குவது என்றார் பளிச்சென்று.
எனக்குள் திகைப்பு. பன்னிரண்டு வருட அனுபவம் உள்ளவரைப்போய்.... அவரே தொடர்ந்தார். "நான் அந்த வேலையை சூப்பராச் செஞ்சேன் சார். அதைப் பார்த்திட்டு அடுத்தவாரமே பேக்கிங் டிப்பார்ட்மெண்ட்டுக்கு மாத்திட்டாங்க, சம்பளமும் ஏத்திட்டாங்கள்'' என்றார் பெருமை பொங்க.
"அட பரவாயில்லையே' என்று நான் சொல்வதற்குள் தொடர்ந்தார். "பேக்கிங் வேலையையும் ரொம்ப கரீட்டா செஞ்சேன். பாராட்டிவிட்டு,... என்னைப் போன வாரம் அதே இடத்தில் சூப்பர் வைசராக்கிட்டாங்க...'' என்றார்.
"எது குடுத்தாலும் செய்வேன் சார்.. திரும்ப ஹவுஸ்கீப்பிங் போகச் சொன்னாக்கூட போவேன். தினம் வேலை இருக்குதில்லை சார்... தாங்ஸ்...''
எது கிடைத்தாலும் குறை பட்டுக்கொள்பவர்களுக்கு மத்தியில் பூத்துக்குலுங்கும் மலர்களைப் போல பல கலாக்களும் வாசுக்களும் எல்லா வட்டங்களிலும் மட்டங்களிலும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
செய்யும் வேலையை மனமொப்பி மட்டுமல்ல, ஒரு பிரியத்தோடு ஆர்வத்தோடு, அக்கறையாய்ச் செய்கிறவர்கள், ரசித்து அனுபவித்து சந்தோஷமாய் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்! தாய் குழந்தைக்கு உணவு சமைப்பதில், ஆசிரியர் மாணவனுக்கு கல்வி கற்பிப்பதில், ராணுவத்தினர் தாய் நாட்டுக்குச் சேவை செய்வதில் காட்டும் ஈடுபாடு, கவனம், பிரதிபலன் எதிர்பாராமை போன்றவற்றை எத்தனையோ கலாக்களும் வாசுக்களும் தாங்கள் செய்யும் சாதாரண வேலைகளில் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை இப்படிச் செய்யவைப்பது எது? தனக்குப்பிடித்த, தன் மனது லயிக்கும் வேலையைச் செய்ய வாய்ப்புக்கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். உலகில் அதிர்ஷ்டசாலிகள் குறைவு.
பிடித்த வேலையைச் செய்வது ஒருவகை. செய்வது எதுவானாலும் அதனை விரும்பி லயித்துச் செய்வது மற்றொருவகை.
கலாக்களும் வாசுக்களும் இரண்டாம் வகையினர். செய்வதில் ஆர்வம்... ஆர்வம் என்பது கூட ஒரு வலுவில்லாத வார்த்தை. செய்வதில் தீராக்காதல்... ஏன் ஒரு வெறி என்று கூடச் சொல்லலாம்.
இவர்களை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் அவசியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செய்யும் தொழிலே... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", வேலை, சார், என்றார், கலாவுக்கு, இல்லை, இரவு, முதலில், நான், மூலம், கலாக்களும், வாசுக்களும், செய்வது, செய்வதில், இரண்டு, தாய், செய்யும், சிலர், இப்படியே, டூட்டி