முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகம்
பொதுவான கட்டுரைகள் - அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகம்
- எம்.எஸ். பாலு
நல்ல சூழ்நிலையில்தான் ஒருவர் உயர முடியும் என்பது பொதுவான விதி. சூழ்நிலையையும் கடந்து சாதனை செய்பவர்களும் உண்டு. ஆனால், சூழ்நிலையையே உருவாக்கிக் காட்டுபவர்கள்தான் மாமனிதர்களாகின்றனர். அந்த வகையில், விடாமுயற்சி, அயராத உழைப்பால் உரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டே அடித்தளத்திலிருந்து உச்சிமுகட்டிற்கு உயர்ந்து காட்டியவர் அம்பேத்கர்.
தம்முடைய தனிப்பட்ட ஆளுமையை வளர்த்துக் கொண்டதோடு அல்லாமல், இரண்டாயிரமாண்டு கால இருண்ட சமூகச் சூழலையும் மாற்றத்திற்குக் கொண்டு வந்தார்.
கார்ல்மார்க்சின் வறுமை ஒழிப்பு தத்துவம் போன்றே அம்பேத்கரின் சாதி ஒழிப்பு தத்துவமும் உலகச் சிறப்பு வாய்ந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தின் விடுதலை பற்றிய கவலையும் பொறுப்பும் கொண்டிருந்தார் அவர். அதன்பொருட்டு, அவர் எழுதிய பல்வேறு நூல்கள் அவரது பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டும்.
பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள் என்ற நூலை எழுதினார். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இப்பிரிவினையால் அடையப்போகும் லாப நஷ்டங்களை உணர்த்தும்படி அந்நூல் இருந்தது.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய சமுதாயப் புனரமைப்புக் கோட்பாடு என்ற நூலுக்கு அம்பேத்கர் மதிப்புரை எழுதினார். ஒரு பத்திரிகையில் அந்தத் திறனாய்வைக் கண்டு வியந்த ரஸ்ஸல், அம்பேத்கரை நேரில் வரவழைத்தார்; அக்கட்டுரை குறித்து விவாதித்து மகிழ்ந்தார்; இது, அன்றைய காலக்கட்டத்தில் அம்பேத்கரின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த அரிய வெகுமதி எனலாம். அதுபோல, பேச்சாற்றலுக்கு பெயர்போன வின்சென்ட் சர்ச்சிலை ஒருமுறை அம்பேத்கர் பேட்டி கண்டுள்ளார். பின்னர் ஒருமுறை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சர்ச்சிலோடு விவாதிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அம்பேத்கரின் அறிவாற்றலைக் கண்டு வியந்துள்ளார் சர்ச்சில்.
அம்பேத்கரின் ஆழமான சிந்தனைக்கும் அளவுகடந்த பொறுமைக்கும் ஓர் உதாரணம் காட்ட வேண்டுமென்றால், அதற்கு அரசியல் சட்ட நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தைக் கூறலாம். அரசியல் சட்ட வரைவு குறித்து மொத்தம் 114 மணி நேரம் விவாதிக்கப்பட்டது; அந்த விவாதங்களையே பன்னிரண்டு தொகுதிகளாகத் தொகுத்தனர். அவ்வளவு நேரமும் இம்மியளவும் பொறுமையிழக்காமல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் அவர்.
1927 மார்ச் 19-ந் தேதி அம்பேத்கர், தன்னுடைய முதல் போராட்டத்தைத் தொடங்கினார். அந்த நாளை விடுதலை நாள் என்றும் அழைத்தார். அது, சவுதார் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுக்கும் உரிமைக்கான போராட்டம் ஆகும்.
அதிலிருந்து அடுக்கடுக்காகப் போராட்டங்கள் நடத்தி, 1956 அக்டோபர் 14-ந் தேதி நாக்பூரில் புத்த மதத்தைத் தழுவிய உணர்ச்சி மிகுந்த நிகழ்ச்சி வரை அவரது நடவடிக்கைகள் அறப்போராட்டங்களாகவே இருந்தன.
அறவழியில் அடையும் வெற்றியே நிரந்தம்; அஹ’ம்சையே உயர் கொள்கை என்பது அம்பேத்கர் நம்பிக்கை.
அம்பேத்கர் மறைந்து 48 ஆண்டுகள் ஓடினாலும், அவரது புகழ் பெருகி உள்ளது; பெருமைகள் பேசப்படுகின்றன. ஆனால், அந்த அளவுக்கு அவரது விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? அதற்கான முயற்சியாவது எடுக்கப்படுகிறதா?
அம்பேத்கர் அவ்வப்போது விடுத்த எச்சரிக்கைகளை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்பது நாட்டுக்கு நலம் பயக்கும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா, தொடர்ந்து ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமானால், அதனைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளை உணர்தல் வேண்டும்.
அதற்கு, அம்பேத்கரின் முதல் எச்சரிக்கை, தனி நபர் துதி மற்றும் தலைவர் வழிபாடு பற்றியது ஆகும். அது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் வழிகோலும் என்றார் அவர்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற தத்துவம் தேர்தல் வரைக்கும் செல்லுபடியாகிறது. பின்னர், வெற்றி பெறும் தலைவர்களே வரம் கொடுக்கும் தெய்வங்களாய் மாறி விடுகின்றனர். பின் ஜனநாயகம் எப்படி தழைக்கும்? அதுமட்டுமல்ல, இந்தியா எதை வேண்டுமானாலும் இழக்கலாம் - ஆனால், மதச்சார்பின்மையை இழக்கக் கூடாது; ஏனென்றால் மதச்சார்பின்மை என்பது கொள்கை மட்டுமல்ல, அதுவே இந்தப் பண்பாட்டுத் தளத்தின் அமைதிக்கானக் கவசம்; ஜனநாயகத்தின் பாதுகாவலன்.
அதுபோல, சாதிகளின் வீரியம் குறையக் குறைய, சமத்துவப் பாதைக்கான வழி கிடைக்கும். சமத்துவப் பார்வையில்தான் ஜனநாயகம் நம்பிக்கையோடு விளங்கும்.
ஆகவே, அம்பேத்கரின் விருப்பப்படி தனிநபர் துதியை விடுப்போம்! கொள்கை அரசியலை மதிப்போம்! மதசார்பின்மை, சமத்துவ சிந்தனைகளை வளர்ப்போம்! அப்போது உண்மையான ஜனநாயகம் ஒளிவிடும்! (ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அம்பேத்கர், அம்பேத்கரின், அவரது, அந்த, அவர், ஜனநாயகம், கொள்கை, என்பது