பொதுவான கட்டுரைகள் - சக்தி பிறக்கும் கல்வி
- வே. வசந்தி தேவி
புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் ஒரு முறை மாநிலங்கள் அவையில் பேசும் பொழுது சொன்னார்: இந்தியக் கல்வியின் பெரும் சாபக்கேடு புரியாமை என்னும் சுமை. இந்தச் சாபக்கேட்டைத்தான் நம் குழந்தைகள் அனைவரும் தினந்தோறும் வகுப்பறைகளில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையே யஷ்பால் குழு அறிக்கை (1993) குறிப்பிடுகிறது: கற்பிப்பதோ ஏராளம், கற்றுக்கொள்வதோ, புரிந்து கொள்வதோ வெகு குறைவு. ஏன் கற்பிப்பதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை?
அறிவின் பிறப்பே கேள்விகள் தான். ஏன், எவ்வாறு, எதற்காக, யாரால், யாருக்காக - இத்தகைய கேள்விகள் இன்றி அறிவு வளர்ச்சி ஏது?
நம் வகுப்புகளில் குழந்தைகள் கேள்வி கேட்டுவிட முடியுமா? உடனே தலையில் குட்டு, கையில் பிரம்படி விழாதா? குழந்தைகளின் மனத்தில் இயற்கையாகவே ஆயிரம் கேள்விகள் ஊற்றெடுக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் குட்டும் அடியும் கிடைக்கும் போது முளைவிடத் தொடங்கும் ஒவ்வொரு சிறகும் பிய்த்து எறியப்படுகிறது.
குழந்தைகளுக்குச் சிந்திக்கக் கற்றுத் தருவது, அவர்களிடம் பகுத்து அறியும் திறமைகளை ஒன்று உண்மையா பொய்யா, சரியா தவறா என்று ஆராயக்கூடிய திறமைகளை வளர்ப்பது... அது தான் கல்வி, அது தான் அறிவியல். கிளிப்பிள்ளைகளாகப் பாடங்களை மனப்பாடம் செய்து, கொட்டுவதல்ல. இயற்கையாகவே மனிதனிடத்தில் உள்ள பகுத்தறிவுதான் அது. பள்ளிக்குச் சென்று கல்வி கற்காதவரிடமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், கல்வி என்ற பெயரில் மழுங்கடிக்கப்படுகிறது.
முடித்து வைக்கப்பட்ட உண்மைகளாக, சான்றுகள் தேவையற்ற நம்பிக்கைகளாக அறிவியல் கற்றுத் தரப்படுகிறது. சூத்திரங்களாக, மந்திரங்களாக ஓதப்படுகிறது. தேடி, பரிசோதித்து, சான்றுகளின் அடிப்படையில் புரிந்து கொண்ட உண்மைகள் தான், அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர்களாகக் குழந்தைகளை ஆக்க முடியும்.
சமீப காலத்திய மாற்றுக்கல்வி இயக்க அனுபவம் ஒன்றை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானதாக இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் 14 மாவட்டங்களில், 700 பள்ளிகளில் ஏகலைவா என்ற அமைப்பின் மூலம் ஹோஷங்கபாத் அறிவியல் கற்பிக்கும் திட்டம் ஒன்று நடந்தேறியது. குழந்தைகளிடம் சிந்தனை ஆற்றலை வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் உருவான அர்ப்பணம் அந்தத் திட்டம். அதன் ஒரு பகுதியாகப் பழங்குடியினர் வாழும், ஒரு சிறிய ஊர்ப் பள்ளியில் படித்த சோனி என்ற 11 வயது சிறுமியின் கதை இது.
அந்தப் பகுதியில் ஒரு திடீர் பீதி கிளம்பிற்று. பச்சை இலைகளில் எல்லாம் படமெடுத்த பாம்பின் வெளிறிய வடிவம் தென்படலாயிற்று. அது நாக தேவதையின் சாபம். ஓர் ஆண் பாம்பின் மீது லாரி ஒன்று ஏறி அதைக் கொன்றுவிட்டது. பெண் பாம்பு சாபமிட்டது. அதன் விளைவுதான் இலைகளில் தோன்றிய பாம்பின் வடிவம். இது வதந்தி. மக்கள் காய்கறிகள் சாப்பிடுவதை நிறுத்தினர். விளைந்ததெல்லாம் குப்பையில் கொட்டப்பட்டது.
இந்தக் கட்டத்தில் தான் சோனியும், அவளது வகுப்புத் தோழிகளும் வருகிறார்கள். சோனி கேள்வி எழுப்ப அனைவரும் சிந்தித்தனர். இந்த வதந்தி தாங்கள் கற்ற அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாக இருக்கிறதே! உண்மையைக் கண்டறிய முற்பட்டார்கள். கையில் ஆளுக்கொரு சிறிய ஊசியுடன் புறப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான இலைகளை ஊசியைக் கொண்டு கீறிப் பார்த்தார்கள். இறுதியில் குற்றவாளியைக் கண்டு பிடித்தே விட்டார்கள். இலைக்குள் பதுங்கியிருந்த ஒரு சிறிய புழு. இலையின் பச்சை நிறத்தை தின்று பருத்துக்கொண்டே போகிறது. இலையின் காம்புப் பகுதியிலிருந்து தின்று பருக்கப் பருக்க, வெளிறிய பகுதி விரிந்து கொண்டே போகிறது. பாம்பின் படம்போல் காணப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு பள்ளியில் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு, சுற்றிலுமுள்ள ஊர்களிலெல்லாம் பரவியது.
அதே பகுதியிலிருந்து ஒரு கல்லூரி மாணவ - ஆசிரியர்களை நீங்கள் ஏன் இதைக் கண்டுபிடிக்க முயலவில்லை என்று கேட்டதற்குக் கிடைத்த பதில்: பரிசோதனைகளுக்குத் தேவையான விலையுயர்ந்த உபகரணங்கள் கல்லூரியில் இல்லை என்பது. தேவை உபகரணங்கள் அல்ல; அறிவியல் கண்ணோட்டம்; உண்மை அறிய வேண்டுமென்ற ஆர்வம். அதைத்தான் நமது கல்வி நிலையங்கள் உருவாக்குவதே இல்லை!
சோனியின் கதை ஒரு வெற்றிக்கதை மட்டும் அல்ல. இத்தகைய பகுத்தறிவுக் கல்வி எத்தகைய விழிப்புணர்வை, விடுதலையை சோனி போன்ற பெண்களிடம் உருவாக்க முடியும்? எத்தகைய சக்தி பெற உதவும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சோனி மிகவும் பின் தங்கிய, ஏழ்மையில் ஆழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவள். மிகச் சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம். 11 வயது சோனியும் ஏற்கெனவே திருமணமானவள். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சோனிக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கண்டு பூரித்த அவள் தாய், சோனியைத் தொடர்ந்து கல்வி கற்க வைக்கிறாள்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது சோனியின் பள்ளித்தோழி ஒருத்தி மக்களின் அச்சம் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க முயன்றாள். வீட்டுச் சமையல் அவள் பொறுப்பானதால் ஒருவருக்கும் தெரியாமல், சாபம் பெற்ற நஞ்சு என்று கருதப்பட்ட இலைகளைச் சாப்பாட்டில் கலந்துவிட்டாள். சாப்பிட்டு சில நாள்கள் கழித்து குடுப்பத்தினரிடம் தான் செய்ததைச் சொல்லி, அந்த இலைகளைச் சாப்பிட்டதனால் எந்தக் கேடும் விளையவில்லை என்று நிரூபித்தாள். இப்படிச் செய்ததற்காக உன்னைக் கோபித்து, அடிக்க மாட்டார்களா? என்று கேட்டதற்கு அவள் அளித்த பதில், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்குக் கொஞ்சம் அடி வாங்கினால்தான் என்ன?
எழுத்தறிவற்ற, மிகவும் பின் தங்கிய, பெண்ணடிமையில் மூழ்கிக் கிடக்கும் ஒரு சமுதாயத்தின் குழந்தைகளிடம் சிந்திக்க வைக்கும் கல்வி, ஒரு உலகத்தையே உண்டாக்க முடிந்துள்ளது.
பள்ளியில் கற்பிக்கும் கல்வி, வாழ்வுடன் இணைந்த கல்வியாகவும் இருந்தால்தான் பயனுள்ள கல்வியாக, சக்தியளிக்கும் கல்வியாக இருக்க முடியும். அப்படி வாழ்வுடன் இணைந்த கல்வியை சோனியின் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததால்தான் மூட நம்பிக்கையைத் தகர்த்தெறிய முடிந்தது.
பள்ளியில் படிக்கும் மாணவரின் அறிவு வளர்ச்சிக்கு அவர்களைச் சுற்றிச் சுழலும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களே ஆதாரங்கள். அவர்கள் வாழும் ஊரில் தொடங்கி, அறிவு வட்டம் விரிந்து கொண்டே, பரந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால், நமது பள்ளிகளில் மாணவரின் ஊரைப் பற்றி, சமுதாயத்தைப் பற்றி ஒன்றும் சொல்லித் தருவதில்லை.
சமூக அறிவியலை எடுத்துக்கொள்வோம். அவர்களைச் சுற்றி நடைபெறும் சமூக வாழ்வை உற்று நோக்கி, ஆராய்ந்து, முறையாகப் புரிந்து கொள்ள உதவுவது சமூக அறிவியலின் முக்கிய நோக்கம். ஆனால், நமது பள்ளிப்பாடத் திட்டத்தில் சமூக அறிவியலின் பகுதிகளான வரலாறு, புவியியல் ஆகியவற்றில் மாணவர் சார்ந்த சமுதாயத்தின், வாழும் பகுதியின் வரலாறோ, புவியியலோ குறித்து ஒன்றுமே இல்லை.
மற்றொரு பெரும் குறை - அறிவு என்பது தேடி, ஆராய்ந்து, புரியும் ஒன்றாக, புரிந்ததை மீண்டும் தங்கள் சூழலில் பொருத்திப் பார்த்துத் தெளிவு பெறுவதாக இல்லை. அந்தத் தேடலும் ஆய்வும் அளிக்கும் ஆர்வமும் குதூகலமும், புல்லரிப்பும் மாணவரின் மனத்தில் ஆழப்பதிந்து, நீங்காத அனுபவமாகி விடுவதாக இல்லை. மாறாக, கற்பது அனைத்தும் தொடர்பற்றவை. அன்னியப்பட்டவை. புரியாமல் உருப்போடுபவை. தேர்வு எழுதிய உடனேயே தேவையற்றதாக மறந்து விடுபவை. இந்தக் கல்வி, திறமை அளிக்கும் கல்வியாக, சக்தி ஊட்டும் கல்வியாக எப்படி இருக்க முடியும்?
சிந்திக்கும் திறமை கொண்ட, சிந்திக்கும் துணிவு கொண்ட, சிந்தனையின் வழி செயல்படும் இளைஞர்களிடமிருந்துதான் இன்றைய பிரச்சினைகளை, அபாயங்களை எதிர்கொள்ளும் சவால் பிறக்க வேண்டும். நாம் சந்தித்த சோனியைப் போன்று ஆயிரமாயிரம் சோனிகள், ஆயிரமாயிரம் வகுப்பறைகளில் உருவாக வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சக்தி பிறக்கும் கல்வி - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கல்வி, தான், இல்லை, அறிவியல், பள்ளியில், வேண்டும், சோனி, பாம்பின், சமூக, அறிவு, முடியும், கல்வியாக, அவள், மாணவரின், கொண்டே, சோனியின், நமது, பின், சிறிய, இயற்கையாகவே, கேள்விகள், புரிந்து, ஒன்று, கொண்ட, பெரும், வாழும், இந்தக்