பொதுவான கட்டுரைகள் - பணம் மட்டும் போதாது
- சீத்தலைச் சாத்தன்
விவசாயத் துறை அதிகாரி. விருப்ப ஓய்வில் வெளி வந்தவர். வயது 50. சமீபத்தில் சந்தித்தார். எப்படி ஓடுகிறது வாழ்க்கை? என்றேன். ஏதோ நடக்கிறது என்றார் சலிப்புடன். ஏன் என்றேன். ஒரு காலகட்டத்தில் அரசு ஜீப்பில் பவனி வந்தபோது கீழே பணியாற்றியவர்கள் தந்த மரியாதை, கிராமத்து மக்கள் கொடுத்த கௌரவம் இப்போது இல்லையே என்பது அவரது ஆதங்கம். இதற்கு ஏன் கவலை? விருப்ப ஓய்வில் கிடைத்த கணிசமான தொகை மூலம் கிடைக்கும் மாத வருவாய் மற்றும் ஓய்வூதியம் இவைகளைக் கூட்டினால், பணிக்கால மாத வருவாய்க்கு மேல் வருகிறதே! அப்புறம் என்ன? என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. பணம் வருகிறது உண்மை. விவசாயத் துறை ஆலோசனை மையம் ஆரம்பிக்கலாம் என இருந்தேன். வெளி உலகில் பல ஏமாற்றங்கள். கணிசமான அளவு அரசுச் சம்பளம் வாங்கியவன். தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்துக்குப் போக தன்மானம் தடுக்கிறது. (என்ன தன்மானமோ?) குடும்பத்தில் அடிக்கடி சண்டை. சும்மா தானே இருக்கிறீர்கள். அங்கே போங்கள்; இங்கே போங்கள் என்று! உறவினர் வீட்டுத் திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, பதவியில் இருந்த காலகட்டத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை. நேரம் போக்க குடி பழகிவிட்டேன். அதனால் வாழ்க்கை திசை மாறிவிட்டது என்றார். இதில் இருந்து ஒன்றைப் புரிந்து கொண்டேன். வாழ்க்கைக்குப் பணம் மட்டும் போதாது. அதையும் மீறி ஏதோ ஒன்று தேவை!
வாழ்க்கைக்குப் பணம் அத்தியாவசியத்தேவை. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்வுக்குப் பயன் தாம்பத்தியம். ஆனால் தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லை.
அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை எதுவாக இருப்பினும் ஓய்வு வயதை 55 ஆக ஆக்குவது, வேலை இல்லாத் திண்டாட்டம் போக்க வழி சமைப்பதுடன், விருப்ப ஓய்வு என்ற திட்டத்துக்கு ஒரு சிறு அளவாவது விடுதலை கொடுக்கக்கூடும். 50 வயதில் பணி ஓய்வு பெறுவதைக் காட்டிலும், 55 வயதில் ஓய்வு பெறும் சமயம், பிள்ளைகள் திருமணம், ஆன்மிகம் என்று கவனம் திசை திரும்பி, ஓய்வுக் காலம் உருப்படியாகச் செல்லும்.
பதினைந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் பணி புரிந்தவர்களுக்குத்தான் விருப்ப ஓய்வினைக் கொடுக்க வேண்டும். புதிய அணுகுமுறைகளில் (டெக்னாலஜி) அலுவலர்க்குப் பயிற்சி கொடுங்கள். கற்றுக்கொள்ளத் திறன் இல்லாதவர்களை ஒதுக்குங்கள். கடுமையான தண்டனைதான்! இதன் மூலம் அவர்களுக்குக் கற்றுக்கொள்ளும் வேகம் வரும். அடுத்தவர்களையும் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஆற்றலைத் தேடச் சொல்லும்.
ஓய்வு ஊதியம் என்பது கருணை. சிலர் ஓய்வு ஊதியம் வேண்டாம் என்று மொத்தத் தொகையையும் பணிவிடைபெறும் நேரம் பெறுவதாக எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். பலர் ஓய்வு ஊதியக் கருணைத் தொகைக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். இதில் சில நிறுவனங்கள் வித்தியாசம் காட்டுவது நியாயத்துக்கு அப்பாற்பட்டது. ஒரு கால கட்டத்தில் விலகியவர்களுக்கு, பணி ஓய்வு வயதுக்குப் பின்தான் ஓய்வு ஊதியம் என்றும் இப்போது விலகுபவர்களுக்கு உடனடி ஓய்வு ஊதியம் என்றும் வித்தியாசம் காட்டுவது சட்டத்துக்கும் நீதிக்கும் தர்மத்துக்கும் புறம்பானது என்பது அந்த நிறுவனங்களின் தலைமைக்குத் தெரியாமல் இருக்காது. பணி விலகிய நாள் முதல் எல்லோருக்கும் ஓய்வூதியம் கொடுப்பதால் எந்த நிறுவனத்தின் லாப விழுக்காட்டிலும் பாதிப்பு வந்துவிடாது. கருணைத் தொகை கொடுப்பதைக் கருணையுடன் ஏற்கும் நிறுவனங்களின் நிச்சய வளர்ச்சி உறுதி. பிரார்த்தனை நேரம் என்று சும்மாவா சொன்னார்கள்!
மீண்டும் முதல் கட்டம். விவசாயத் துறை நண்பருக்கு நான் சொன்ன யோசனை. உங்களுக்குத் தெரிந்தது விவசாயத் துறை. ஏன் காய்கறிக் கடை வைக்கக்கூடாது என்றேன். கொஞ்ச நாள் சமுதாயம் கேலி பேசலாம். பொழுது நமக்கு நல்லபடியாகப் புலரும். பணம் மட்டும் முக்கியம் இல்லை. குடும்பத்தில் பிரச்சினை குறையும். குடிப் பழக்கம் மாறும். சிறிய முதலீடு. சிறிய வருவாய். இதைத் தொண்டாக எண்ணிக் கூடச் செய்யலாம். இவ்வளவு படிப்பும், இவ்வளவு பயிற்சியும் வீண் ஆயிற்றே என்று எண்ணாமல் செய்யுங்கள். ஓரிருவருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கலாம் என்றேன். பலத்த யோசனைக்குப் பின் ஏற்றுக்கொண்டார். முன்னாள் விவசாயத்துறை அதிகாரி, இன்று காய்கறிக் கடை முதலாளி ஆக உள்ளார்! பணம் மட்டும் போதாது என்ற உண்மையை உலகுக்குப் போதிப்பது அவரது வாழ்க்கைப் பாடம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
பணம் மட்டும் போதாது - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஓய்வு, துறை, பணம், என்றேன், இல்லை, விருப்ப, வாழ்க்கை, விவசாயத், ஊதியம், மட்டும், என்பது, இப்போது, நேரம்