பொதுவான கட்டுரைகள் - போருக்குப் பின்...
- காஞ்சனா தாமோதரன்
இராக் போர்க் கணங்கள் அமெரிக்க ஊடகங்களில் உறைந்து நிற்கின்றன. இழப்புகளையும் அழிவுகளையும் கண்டு கலங்காத மனித மனங்கள் இல்லை. போரில் பலியான மனித உயிர்களுக்கு அஞ்சலி.
பல கேள்விகள் இன்னும் இருக்கின்றன. சதாம் ஹூசைன் எங்கே இருக்கிறார்? வாஷிங்டனும் மாஸ்கோவும் சேர்ந்து திட்டமிட்டு அவரை மாஸ்கோவில் ஒளித்து வைத்திருப்பதாய் ஒரு வதந்தி. சிரியாவில் தலைமறைவானார் என்று இன்னொரு வதந்தி. அமெரிக்க, ரஷிய, சிரியா அரசுகள் வதந்திகளை மறுத்திருக்கின்றன.
போருக்குக் காரணமாக அமெரிக்க - பிரிட்டிஷ் அரசுகள் சொல்லிய நுண்ணுயிரி - ரசாயன ஆயுதங்கள் கிடைத்தனவா? அமெரிக்காவிடம் சரணடைந்த ஹூசைனின் நுண்ணுயிரி ஆயுதத்துறை விஞ்ஞானி சொல்கிறார்: 1991 குவைத் படையெடுப்புக்குப் பிறகு இராக் மீது விதிக்கப்பட்ட ஐ.நா. பொருளாதாரத் தடைகளினால் நுண்ணுயிரி ஆயுதத்துறைக்குப் போதிய நிதி இல்லை; எனவே, ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டன.
இடைக்கால - நெடுங்கால இராக்கிய அரசு பற்றிய திட்டம் என்ன? முறையான அரசாங்கம் இல்லாத அதிகாரச் சூனியம்' ஏற்படுத்தும் குழப்பநிலை இராக்கில் நீடிக்கிறது. þ- கார்னர் தலைமையிலான உள்நாட்டு நிர்வாகக் குழு மின்சாரம், குடிநீர் போன்ற உள்கட்டமைப்புகளை மீட்பதே முதன்மைப் பொறுப்பு என்கிறது. காவல்துறை உருவாகி வருகிறது. இராக்கிய அரசை இராக்கியரே தேர்ந்தெடுப்பார்கள்; இராக்கை அரசியல்ரீதியாகவோ கலாசார ரீதியாகவோ ஆக்கிரமிக்கத் தம் அரசுக்குத் திட்டமில்லை என்று மிச்சிகனில் வசிக்கும் 90,000 இராக்கிய - அமெரிக்கர்கள் முன் கடந்த வாரம் புஷ் பேசியுள்ளார்.
இராக்கில் பல்வேறு குழுக்களும் கட்சிகளும் சேர்ந்து எதிர்கால ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன; இடைக்கால அரசுக்கான தலைவர் பட்டியலை அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இக்குழுக்கள் தீர்மானிக்குமாம். தற்போது ஒரு புதிய இராக்கியத் தேசிய உணர்வு துளிர்த்திருக்கிறது: ஷியா, சன்னி, குர்து - நாமெல்லாரும் இராக்கியர்கள். நம் நாட்டை நாமே ஆள்வோம். ஹூசைனை விரட்டியதற்கு நன்றி. அமெரிக்கர்களே, பிரிட்டிஷர்களே நீங்களும் சீக்கிரம் கிளம்புங்கள் என்ற ஒருமித்த குரல் கேட்கிறது. அமெரிக்க - பிரிட்டிஷ் அன்னியர்கள் வெளியேறியதும், இந்தத் தேசிய உணர்வு மறைந்து, இராக்கியக் குர்துகள் தனியாய்ப் பிரிந்து, துருக்கியிலுள்ள குர்துகளையும் பிரிவினைவாதப் புரட்சிக்குத் தூண்டுவார்களோ என்பது துருக்கியின் பயம். அண்டைநாடான ஈரானுக்கும் இராக்கின் வருங்கால அரசு பற்றிக் கவலைகள் இருப்பது இயல்பு. எந்த ஆட்சி வந்தாலும் இராக்கின் தேசிய ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்வது அந்தப் பிராந்தியத்தின் சமநிலைக்கும் வளர்ச்சிக்கும் முக்கியம்.
இராக்கில் சூறையாடப்பட்ட அரும்பொருள்களும் எரிந்து போன நூல்களும் திரும்பி வருமா? டைக்ரிஸ் - யூப்ரிட்டீஸ் நதிகளின் நடுவே, அன்றைய மெசப்பட்டோமிய - சுமேரிய நாகரிகம் தழைத்த இடம்தான் இன்றைய இராக். அதன் தேசிய அருங்காட்சியகச் சூறையாடல்களைத் தடுத்து நிறுத்த அமெரிக்கப் படைகள் அங்கு இல்லை. இராக் அரும்பொருள்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்க நிபுணர் குழு அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் போர் தொடங்கும் முன்னரே கூடச் சொல்லியிருந்திருக்கிறது. இராக்கின் எண்ணெய் அமைச்சகத்தைக் காக்கத் தெரிந்த அரசுக்கு ஒரு பழம்பெரும் கலாசாரத்தின் தடயங்களைக் காக்கத் தெரியவில்லையே என்று அமெரிக்கப் பல்கலைக்கழக அறிஞர்கள் பலரும் வெளிப்படையாகவே வருந்தி எழுதுகிறார்கள்.
பாரசீக சைரஸ், அலெக்ஸாண்டர், மங்கோலியர்கள் என்று பலரது ஆக்கிரமிப்புகளிலிருந்து தப்பித்த அரும்பொருள்களும் நூல்களும் இந்தப் போரில் தொலைந்து போனது வருந்தத்தக்கது. கையெழுத்துக் குர்ஆன்களும், அரிய அச்சுப் புத்தகங்களும், அரிய கையெழுத்துப் பிரதிகளும் எரிந்து போனது உணர்வுரீதியான இழப்பு; துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுபூர்வமான இழப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மெசப்பட்டோமிய நாகரிகத்தின் எழுத்து வடிவமான க்யூனிஃபார்ம் பொறித்த ஆயிரக்கணக்கான மண்சுவடிகளும் காணாமல் போய்விட்டன. எழுத்து, ஆயுதம், சந்தைப் பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசாளுவோரும் மக்களும் சமமென்ற நீதி, நீதியை எழுத்தில் வடித்துச் சட்டப் பிரிவுகளாக்கியது என்று பல வழிகளிலும் ஆசியாவின் மெசப்பட்டோமியாவே இன்றைய மேற்கத்தியக் கலாசாரத்தின் தாய் என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகச் சரித்திரப் பேராசிரியர் வெப்பர்.
மெசப்பட்டோமியாவிலிருந்து கற்றதைப் பட்டை தீட்டி உயர்ந்ததே பண்டைய கிரேக்கக் கலாசாரமும், அதன் அடிப்படையில் எழுந்த மேற்கத்தியக் கலாசாரமும் சிந்தனையும் என்கிறார் இவர். இராக்கில் இன்று தொலைந்திருப்பவை மொத்த மனிதச் சரித்திரத்தின் சில முக்கியப் பகுதிகள்.
அமெரிக்க மக்கள் என்ன சொல்லுகிறார்கள்? அமெரிக்க மக்களில் ஒரு கணிசமான பகுதியினர், பேரணிகள் மற்றும் மின்னஞ்சல் இயக்கம் மூலம் இராக் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள். 1960-களின் வியட்நாம் போருக்குப் பின் அமெரிக்க மண்ணில் நடந்த போர் எதிர்ப்பு இது. அரசியல் கட்சி அல்லது குறுங்குழுக்களின் தூண்டுதலினால் நடந்ததல்ல இது. போர் எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையினர், தம் கருத்தைத் தம் அரசுக்கு அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த சராசரி அமெரிக்க ஜனநாயகத்தின் மக்கள். இராக் பிரச்சினைக்குப் போர்தான் பதிலா? போரின் அடிப்படைக் காரணங்கள் சரியா என்பதே இந்த அமெரிக்கர்களின் அறம் சார்ந்த கேள்வி. இராக்கை விட்டு விரைவில் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று சொல்கிறார்கள் போரை எதிர்த்த அமெரிக்கர்கள். உள்நாட்டுப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு நிலவரம் ஆகியவற்றின் மீதும் மக்கள் கவனம் இருக்கிறது. மக்களிடையே புஷ்ஷ•க்கான ஆதரவு 10 மாதங்களுக்கு முன்னிருந்த அதே நிலைக்கு மீண்டும் உயர்ந்திருக்கிறது.
அரபு நேசநாடுகள் என்ன சொல்லுகின்றன? இராக்கில் ஒரு நல்ல அரசு அமைவதே இப்போது முக்கியம் என்கிறார் ஜோர்டானிய வெளியுறவு அமைச்சர். அரபுத் தேசக் கூட்டணியின் ஐ.நா. தூதர் உணர்ச்சியுடன் சொல்கிறார்: மேற்காசியப் பிரதேசத்தில் ஹூசைனும் ஒரு பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாலஸ்தீனமே தலையாய பிரச்சினை. இரண்டாவதாய் நடக்க வேண்டியது முதலில் நடந்து விட்டதே? இனியாவது பாலஸ்தீனப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பாலஸ்தீனத்தைத் தனித் தேசம் என்று அங்கீகரிப்பதற்கான முழுத் திட்டம் இருப்பதாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முனைப்புடன் தற்போது செயல்பட்டு வருவதாகவும் புஷ் அரசு அழுத்தமாய்த் தெரிவித்திருக்கிறது.
ஐ.நா. என்ன செய்கிறது? போருக்கு முன், இராக் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழு அங்கத்தினர்கள் ஒரு சமரச முடிவுக்கு வராததற்கு - நாடுகளிடையே உள்ள அரசியல், பொருளாதார, சரித்திரபூர்வமான போட்டி, பொறாமைகள் என்று பன்முகக் காரணங்கள் இருப்பதாய்த் தெரிகிறது. அங்கத்தினர்கள் பல திசைகளிலும் இழுபறி செய்யும்போது, ஐ.நா. என்னும் பொதுநிறுவனம் செயலிழப்பது கண்கூடு. (மனிதநேயத் தளத்தில் ஐ.நா. பல நல்ல காரியங்கள் செய்திருந்தாலும், அதன் அடிப்படைக் குறிக்கோளான உலக அமைதி, போர் நிறுத்தத்துக்காக இதுவரை ஒன்றும் செய்ய முடிந்ததில்லை என்கிறது ஐ.நா. - கோஃபி அன்னானுக்கு இணைந்து வழங்கப்பட்ட 2001 நோபல் பரிசுப் பத்திரம்.) ஐ.நா.வைப் பல ஆண்டுகளாய் எதிர்த்த ஹூசைன் அரசு, ஒன்றாகச் செயல்பட முடியாத பாதுகாப்புக் குழு உறுப்பு நாடுகள், வெட்டிக் கொண்டு போருக்குப் போன அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டணி என்று எல்லார் மேலும் குற்றம்சாட்டி, புனரமைப்பு பற்றி அப்போது பேசிய கோஃபி அன்னான், இராக் புனரமைப்புப் பற்றி இப்போது ஒன்றும் சொல்லவில்லை.
ராஜதந்திர முயற்சிகள் மூலம் பல சர்வதேச உறவுப் பாலங்களையும் பரஸ்பர நம்பிக்கைகளையும் கூடப் புனரமைப்புச் செய்ய வேண்டிய காலம் இது. நம் பிள்ளைகளின் உலகமாவது அமைதியில் வளரட்டுமே.
(கட்டுரையாளர் அமெரிக்கவாழ் எழுத்தாளர்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
போருக்குப் பின்... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அமெரிக்க, இராக், அரசு, இராக்கில், அமெரிக்கப், வேண்டும், போர், குழு, தேசிய, என்ன, என்கிறார், மக்கள், பற்றி, இராக்கிய, பிரிட்டிஷ், நுண்ணுயிரி, இராக்கின், இல்லை