முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » காலி மனைகளில் தேங்கு குட்டைகள்
பொதுவான கட்டுரைகள் - காலி மனைகளில் தேங்கு குட்டைகள்
- கொடுமுடி சண்முகன்
நகர்ப்புற மழைநீர் சேகரிப்பில் ஒரு நீரியல் கணக்கை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனைப்பரப்பில் (2400 சதுர அடி) ஒரு சென்டிமீட்டர் மழை பெய்தால் 80 கனஅடி நீர் திரளும். ஓர் அங்குல மழை பெய்தால் 200 கனஅடி நீர் வரும்.
தரைமீது ஓடுவது போல தரைக்குள் நீர் வேகமாக இறங்காது. களிமண் பூமியாக இருந்தால் சற்றும் இறங்காது. மணற்பாங்கான இடமாக இருந்தால் ஓரளவு நின்று நிதானமாக இறங்கும். தேங்கித்தான் இறங்கும். இவ்வாறு தண்ணீர் தேங்கி இறங்குவதற்குப் போதிய இடவசதி செய்தாக வேண்டும்.
மணல் காணும் வரை தோண்டித்தான் ஆக வேண்டும். குழியின் அளவு 5 அடி நீளம், 4 அடி அகலம் என்றால் ஓரங்குல மழைக்கு 5 அடி ஆழம் காலியிடமாக இருக்கும் வகையில் குழி அமைய வேண்டும். ஓரங்குல மழையிலேயே குழி நிரம்பிவிடும். அதற்கு மேல் ஓடிவரும் நீரெல்லாம் தரை மீதே ஓடி அடுத்த பள்ளத்தைத் தேடும். அல்லது மழைநீர்க் கால்வாய்க்குச் சென்று கடலுக்கு ஓடிப்போய்விடும். பெய்யும் மழை நின்று நிதானமாகப் பெய்தால் தரைக்குள் நீர் இறங்க இறங்க புது நீரைப் பிடிக்க வாய்ப்புண்டு.
ஏற்கெனவே பயன்படாமல் இருக்கும் பழைய கிணறுகளைத் துப்புரவு செய்து மழைநீரை அதில் பிடிப்பது மிகச் சிறந்த வழியாக இருக்கும். நான்கு மனை ஐந்து மனை போன்ற பெரும்பரப்பாக இருந்தால் நீரின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ற பருமானமுள்ள கிணறு தோண்டுவது நல்லது.
சென்னை போன்ற கடலோர நகரங்களில், மழைநீரைப் பிடிக்காமல் விட்டால் எல்லா நீரும் கடலுக்குத்தான் போய்விடும். மாற்று வழிகளும் உண்டு. காலிமனையில் போதிய இடம் இருந்தால் நிலத்தில் பள்ளம் செய்து தேங்கு குட்டைகள் அமைக்கலாம். அந்தக் குட்டையிலும் ஆகர் மூலம் மணல் காணும் அளவுக்குத் துளையிட்டு பக்கவாட்டில் ஓட்டைகள் நிறைந்த பிளாஸ்ட்டிக் குழாய்கள் பொருத்தலாம். குழாய் வழியே நீர் மணல் பகுதிக்குச் சற்று விரைவாகச் செல்ல வாய்ப்புண்டு. பூங்காக்கள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் இதுபோன்ற தேங்கு குட்டைகள் அமைக்கலாம்.
நமது கோயில் குளங்களெல்லாம் நீர் வரத்தின்றி வறண்டு கிடப்பது ஏன்? திருவாரூரில் மட்டும்தான் கோயில்பாதி குளம் பாதி என்பர். பெரும்பாலான கோயில்கள், குளத்தைப்போல நான்கு பங்கு இருக்கும்.
கோயிலுக்குள் விழும் நீர் வெளியே போகாமல் குளத்துக்கு வர முன்னிருந்த ஏற்பாடுகள் தற்போது தூர்ந்துபோனதே குளங்களின் வறட்சிக்குக் காரணம். குளங்களின் அடியில் வண்டல் படிந்திருக்குமாதலால் நீர்க்கசிவு குறைவாகவே இருக்கும். அதனால் குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோயில் குளத்தில் உள்ள வண்டலைத் தூர் வாரி வெளியேற்றக் கூடாது. மேம்போக்காகத் துப்புரவு செய்தால் போதும்.
மழைநீர் சேகரிக்க ஒருபக்கம் கோடி கோடியாகச் செலவு செய்கின்றோம். மறுபக்கம் நீர் வரத்துள்ள ஏரிகளை, காலிமனைக்காக எடுத்துக் கொள்கிறோம். அலுவலக வளாகங்களாகவோ குடியிருப்புகளாகவோ மாற்றி விடுகிறோம். அப்போதும் ஒரு மாற்று உண்டு. முழுப்பரப்பையும் கட்டடங்களுக்கு ஒதுக்காமல் கால்பங்கை நீர்நிலையாகவே நிறுத்திக் கொள்ளலாம். கலிங்கல் அருகில் ஆழமாக இருக்கும்; மற்ற இடங்களில் உயரமாக்குவதற்குத் தேவைப்படும் மண்ணை இந்தப் பகுதியில் எடுத்துக் கொண்டால் இடம் இன்னும் ஆழமாகும். கோயில் குளம்போல சுற்றுப்படிக்கட்டு அமைத்து மரஞ்செடி கொடிகளும் நட்டு பசுமை வளையம் அமைத்துக் கொள்ளலாம். சுற்றுவட்டாரக் கிணறுகள் ஊற ஏற்பாக இருக்கும்.
அண்மைக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய அநியாயம், ஏரிகளில் சமூகக் காடுகள் என்ற பெயரில் கருவேல் நட்டதுதான். உழவர்கள், வயலுக்கு வண்டல் மண் எடுப்பதை வனத்துறை தடுத்துவிட்டது. குயவர்களும் பானை செய்ய மண் எடுக்க விடாமல் தடுத்து விட்டார்கள். அதனால் ஏரிகளில் வண்டல் வாரப்படாமல் தூர்ந்து போகத் தொடங்கிவிட்டன. கருவேல முள் மண்ணில் கலந்துவிட்டது. மண்ணைக் கையால் பிசையும்போது முள் கீறுவதால் குயவர்கள் பலர் வேலையிழந்து பஞ்சம் பிழைக்க வேண்டி நகரை நோக்கி ஓட வேண்டியதாயிற்று.
சில ஆண்டுகளுக்கு முன்னம் ஆங்காங்கு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லை பெருகுவதாகக் கருதி தரையில் நீர் தேங்க விடாமல் தடுத்து, பள்ளம்பாடுகளை நிரப்பி, மேடாக்கினோம். மழைநீர்க்கால்வாய் அமைத்து எல்லா நீரையும் கடலுக்கு அனுப்பினோம். கொசுத்தொல்லை இன்றும் உண்டு. மழைநீர் சேகர ஏற்பாடுகள் இந்த உண்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மழைநீர் சேமிப்பு, மிகுந்த தொழில்நுட்பம் கொண்டது. தீவிரமான திட்டமிடுதலும், நுட்பமாகச் செயல்படுத்துதலும் அவசியம்.
(கட்டுரையாளர், முன்னாள் பொதுப்பணித்துறைக் கண்காணிப்புப் பொறியாளர்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலி மனைகளில் தேங்கு குட்டைகள் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நீர், இருக்கும், வேண்டும், மழைநீர், இருந்தால், வண்டல், கோயில், உண்டு, பெய்தால், மணல்