பொதுவான கட்டுரைகள் - உன்னை அறிந்தால்...
- ஜோ. ஜாய்ஸ் திலகம்
கடலின் ஆழத்தை அறிந்தாலும், மனத்தின் ஆழத்தை அறிய முடியாது என்பார்கள். அது எத்தனை உண்மை! மற்றவர்களின் மனத்தை அறிய முற்படும் நாம், முதலில் நம் மனத்தைப் பற்றித் தெரிந்திருத்தல் வேண்டும். ஒருவரது மனத்தைக் கணிப்பது என்பது, அத்துணை எளிதான காரியம் அல்ல. ஆயினும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றும், உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் என்றும் கூறுகிறோம். காரணம் நம் மனம் பல வழிகளில் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எண்ணம், சிந்தனை இவற்றை நமது செய்கைகள், நடத்தைகள் காட்டி விடுகின்றன. இந்த உள் மனத்தின் பிரதிபலிப்பு தான் நமது வெளிப்புற நடத்தைகள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், பார்த்ததுமே நெற்றியை சுளித்து கொள்ளுதல் என்பது உள் மனத்தின் பிரதிபலிப்பு. உள்ளத்திற்கு பல பாஷைகள் உண்டு. அவைகளில் சில:
கண்களால் பேசுவது (இரக்கம், பரிவு, கோபம், ஆச்சரியம், அழுகை).
கை, கால்களால் - சைகை செய்வது.
ஓசைகளினால் உணர்த்துவது (பாடல், கவிதை, பொருட்களை தூக்கி எறிதல்).
இவை அனைத்துமே உள்ளத்தை வெளிப்படுத்த பயன்படும் உடல் மொழிகளாகும்.
உடலின் அசைவு, உட்காரும் விதம், - நாற்காலியின் நுனியில் உட்காருதல், காலை ஆட்டிக் கொண்டே இருத்தல், நாற்காலியை முன் பக்கமாகச் சாய்த்து அமர்தல், கால் மீது கால் போடுதல் போன்றவையும் உள்ளம் வெளிப்படுத்தும் குறியீடுகளே! தோற்றத்தின் அடிப்படையிலும் உள்ளம் வெளிப்படுவதுண்டு. (சாதுவான முகம், கோப முகம், விரோத குரோத முகம், அழுமூஞ்சி, சிடுமூஞ்சி, சிரித்த முகம் இப்படி பல.)
காது கேட்காத, கண் தெரியாத குழந்தைகள் கூட இயல்பாகவே சிரித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஒருவர்.
மேலும் முழு உருவத்தை வைத்தும் உள்ளம் வெளிப்படுவது உண்டு. பயந்த உருவம், தைரியமான உருவம், வெட்கப்படும் உருவம், சுத்தமான உருவம், அசுத்தமான உருவம் என்று பலவித உருவ அமைப்புகள் உள்ளதாக ஜெர்மன் நாட்டு மருத்துவ மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் கூறுகிறார். இதனால் மருத்துவம் செய்யும் போதும் கூட உள்ளத்தை அறிய முற்படுதல், வியாதியை முழுமையாகக் குணப்படுத்த வழிவகுக்கிறது என்கிறார்.
உள்ளத்தைப் பற்றி விரிவாக விளக்கும் ரோஜர் என்ற மனோதத்துவ நிபுணர், கண்ணாடியைப் போன்றது நமது உள்ளமும் செய்கைகளும் என்று கூறியுள்ளார்.
சிக்மண்ட் ப்ராய்ட் என்ற மருத்துவ, மனோதத்துவ நிபுணர், உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல எனக் கூறுகிறார். ஒரு மனிதன் சமுதாயத்தில் நடந்து கொள்வது வேறு! நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்வது வேறு. மனிதனுக்கு நன்றாகவே நடிக்கத் தெரியும் - சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், தன்னையும் அறியாது செய்யும் செயல்கள் தன் ஆழ் மனத்தின் அழகை, படம் பிடித்துக் காட்டிவிடுகிறது என்கிறார். உள்ளத்துக்குள்ளே சில உண்மைகள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. சில வெளியே சொல்லக் கூடியவை. சில சொல்லக் கூடாதவை, மறைக்கப்பட்டவை, மறுக்கப்பட்டவை. சில விஷயங்கள் சந்தோஷத்தைத் தரக்கூடிய கதைகளாக இருக்கலாம். அவற்றினால், ஒருவர் மேலும், மேலும் சக்தியூட்டப்படுகிறார்.
சில விஷயங்கள் மறுக்கப்பட்டவை. சில குழந்தைகள் 3 வயதாக இருக்கும் போது, தாய் தன்னை வெறுத்த நிகழ்ச்சி போன்றவை மனதின் ஆழத்தில் பதிந்து, பின்பு வளர வளர, பெண்ணைக் கண்டால் வெறுப்பு, பாசமின்மை, பற்றற்று வாழுதல், மற்றவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பாமல் தனித்து இருத்தல் போன்றவை உருவாகின்றன. சில விஷயங்கள் மறைக்கப்பட்டவை. டீன் ஏஜ் குழந்தைகள் படும்பாடுகளில் இது ஒன்று எனலாம். டீன் ஏஜ் என்கிற பருவம் - இரண்டும் கெட்டான் வயது. தன் தாயோ அல்லது தந்தையோ கொள்ளும் தகாத உறவு முறைகளைக் கண்டால், அவை அவர்களின் உள்ளங்களில் மறைக்கப்பட்டு, பெற்றோர்களை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறுதல், குற்றக்கும்பலில் சேர்ந்துவிடுதல் போன்றவை நடக்கின்றன. இவர்கள் உள்மனத்தில் இருந்து இக்காரணங்களை வெளியே கொண்டு வருவது மிக, மிக அரிதாகிறது.
சமயம், சந்தர்ப்பம் போன்றவை ஒருவரை பயில வைக்கிறது.
இன்று பிறந்த குழந்தையும் கூட தாய்ப்பால் குடிக்கிறதே! பால் போதுமென்றால், முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பி, போதும் எனத் தெரிவிக்கிறதே!
டீன் ஏஜ் வரும் போது உடலில் ஏற்படும் மாறுபாடான உடல் வளர்ச்சி - உள்ளத்தின், எண்ணத்தின், மன ஆழத்தின் வளர்ச்சியைப் பொருத்தது! உள்ளம் கெடும்போது, உடலும் கெடுகிறது.
உள்ளம் சரியாக, சமநிலையில் இருந்தால் தான் உடல் நலமும் சரியாக, சமநிலையில் இயங்கும். இதனால் தான் நோய் கண்ட மனிதரை அணுகும் போது, நோயை மட்டும் பார்க்காதே! நோய் கண்ட மனிதனின் மனத்தையும் சேர்த்துப் பார்த்தால் தான் தனி மனிதனின் ஒட்டுமொத்த நோய்களையும் பூரணமாக வேரற்றுப் போகச் செய்ய முடியும் என ஜெர்மன் வைத்திய முறையான ஹோமியோபதி கூறுகிறது. இது எக்காலத்திலும் மாறாத ஒன்று.
தன்னைத் தானே எடை (உள்ள எடை) போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் துல்லியமான அளவுகோல் என்று எதுவும் கிடையாது. தன்னைக் குறைவாக எடைபோட்டுக் கொள்பவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகின்றனர். மிக அதிகமாக எடைபோட்டு கொள்பவர்கள், மிகையான மனப்பான்மை உடையவர்களாகின்றனர். இதில் இரண்டுமே தவறுதான்.
வயதானவர்களுக்குத் தர வேண்டியது மரியாதையும், அன்பும், கனிவான பேச்சும் மட்டுமே! உணவு என்பது சிறிதளவு இருந்தாலும் போதும்! இவை இல்லாத போது தான் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேறுதல், காணவில்லை என்ற செய்தி, மனநலம் குன்றியவர் என்ற பட்டப் பெயர், முதியோர் இல்லங்கள் பொங்கி வழிதல் போன்றவை நிகழ்கின்றன.
கணவன் - மனைவி இடையே பிளவு என்பது வேறொரு பக்கம். தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும். மோகம் ஏற்படும் போது வாழ்க்கைத் துணையுடன் தணித்துக் கொள்ள வேண்டும். அவ சிரிச்சி பேசினா போதுங்க... வேற ஒண்ணுமில்ல எனக் கணவர் கூறுவதும், அவர் அன்பா பேசினா போதுங்க... வேற காசு பணம் எல்லாம் வேண்டாங்க.. என்று மனைவி கூறுவதும் எத்தனை ஆழமான உட்கருத்தைக் கொண்டது எனப் புரிகிறதல்லவா?
திரும்பும் பக்கமெல்லாம் தவறு காணும் கண்ணோட்டம் எந்த சமுதாயத்திலும் மாற வேண்டும். நாடு வளர, வீடு மலர, தனி மனிதன் தன் தரம் உணர்தல், தன்னை அறிதல், தன்னை எடை போடுதல் மிக, மிக அவசியம். மற்றவர்களைக் குறைகாணும் முன், தன்னைத் திருத்திக் கொள்வது நல்லது.
குழந்தைகளின் திறனைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப எதிர்காலப் படிப்பைப் பெற்றோர் நிர்ணயம் செய்தல் வேண்டும். அளவுக்கு மீறி, குழந்தைகளிடம் எதிர்பார்த்தல் இழப்பையும் தோல்வியையும் கொடுக்கும்.
தோல்வியைத் தவிர்க்கவும், தொடர்ந்து வெற்றியடையவும், நாட்டில் - வீட்டில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிலைநாட்டவும் நம்மை நாமே அறிதல், தன்னைத்தானே நம்புதல் மிக மிக அவசியம்.
(கட்டுரையாளர், மருத்துவ அதிகாரி - ஓமியோபதி - சென்னை மாநகராட்சி.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
உன்னை அறிந்தால்... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - போது, தான், வேண்டும், போன்றவை, உருவம், உள்ளம், என்பது, நமது, மனத்தின், முகம், கொள்வது, டீன், போதும், தன்னை, விஷயங்கள், என்கிறார், உடல், அறிய, குழந்தைகள், ஜெர்மன், மேலும், மருத்துவ