முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » உலகில் காலம் கடந்தும் நிற்கக் கூடிய சில விஷயங்கள்...
பொதுவான கட்டுரைகள் - உலகில் காலம் கடந்தும் நிற்கக் கூடிய சில விஷயங்கள்...
- பீ.ஹெச். அப்துல்ஹமீது
பீ.ஹெச். அப்துல்ஹமீதின் குரலை தாராளமாக அந்த லிஸ்டில் சேர்க்கலாம். அவரது கம்பீரம் சுமந்த குரலும் வார்த்தைகளைக் காயப்படுத்தாத உச்சரிப்பும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றென்றைக்கும் ஒலிக்கக்கூடியது.
வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டு ஊடகங்களிலும் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் அப்துல் ஹமீது சாதனைகள் நிரம்பிய தனது கலைப்பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.
என்னுடைய வாழ்க்கையில் இன்றுவரை நான் எதையும் தேடிச் சென்றதில்லை. இதை தற்பெருமைக்காகச் சொல்லவில்லை. சிறுவயதிலிருந்தே அனைத்துமே என்னைத் தேடி வந்த விஷயங்களாகவே அமைந்தன.
பத்து வயதில் நான் வானொலி நிலையத்திற்குச் சென்றது கூட சடுதியில் நடந்த ஒன்று தான். எனது நண்பர் ஒருவரோடு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். சென்ற அன்றே சிறுவர் மலர் நிகழ்ச்சியில் நேரடி ஒலிபரப்பில் எனது குரல் ஒலித்தது அதுவும் நாடகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில்.
அதற்குப் பிறகு இளைஞர் மன்றம் என்றொரு நிகழ்ச்சி. பள்ளியில் படித்துக் கொண்டே அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். இளைஞர் மன்றத்தில் இருக்கும் சமயத்திலேயே பெரியவர்கள் நடிக்கக்கூடிய நாடகங்கள் உரைச் சித்திரங்களில் கலந்து கொள்ளும் எனது குரல் கனமாக இருந்ததன் காரணமாக நிலையக் கலைஞனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த இளம் வயதிலேயே எனக்குக் கை நிறைய வருமானம் கிடைத்தது.
என்னுடைய மூத்த அறிவிப்பாளரின் ஆலோசனைப்படி பகுதி நேர அறிவிப்பாளராகவும் விண்ணப்பித்தேன். அதன் நேர்முகத் தேர்வுக்கு கட்டைக்கழிசானோடு போன என்னை அவர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். எங்கே நான் வழிதவறி வந்து விட்டேனோ என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். என்றாலும் அறிவிப்பாளராக நியமனம் ஆனேன். வானொலியில் மிகமிக இளம் வயதில் அறிவிப்பாளர் ஆனவன் என்கிற பெருமை எனக்குண்டு.
வானொலியில் வெறும் அறிவிப்பாளனாக இல்லாமல் ஒலிபரப்பின் பல்வேறு துறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கான வாய்ப்புகளும் தானாகவே என்னைத் தேடி வந்தன. அந்த வகையில் நேர்முக வர்ணனையாளனாக செய்தி வாசிப்பவனாக நாடகங்களைத் தயாரிப்பவனாக பல்வேறு சஞ்சிகை நிகழ்ச்சிகளை உருவாக்குபவனாக நான் பல்வேறு அவதாரங்களை எடுக்க முடிந்தது. இந்த சமயத்தில் இலங்கை வானொலி பற்றிய சில பெருமைக்குரிய தகவல்களையும் நான் குறிப்பிட வேண்டும்.
வானொலி கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து வருடங்களுக்குள்ளேயே இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பமாகிவிட்டது. வர்த்தக ஒலிபரப்பு என்கிற அம்சத்திற்கு நதிமூலமாக முன்னோடியாக அமைந்ததும் இலங்கை வானொலிதான். எவரெஸ்ட் சிகரத்திலே கூட கேட்கக்கூடிய ஒரே ஒரு வானொலி என்று கின்னஸ் புத்தகத்தில் இலங்கை வானொலி பற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள்.
எங்கள் வானொலி வழங்கிய பல்வேறு ஒலிபரப்புகளில் நாங்கள் அறிமுகப்படுத்தின நிகழ்ச்சிகள் தான் தமிழகத் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்று விளங்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக அமைந்தன. பாட்டுக்குப் பாட்டு வார்த்தை விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். டாப் 10 என்ற பெயரில் பாடல்களை வரிசைப்படுத்துகிற நிகழ்ச்சியை 30 ஆண்டுகளுக்கு முன்னரே இசை அணித் தேர்வு என்ற பெயரில் நாம் தான் அறிமுகப்படுத்தினோம்.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்காக சமீபத்தில் வைரமுத்து அவர்களை வாழ்த்தினேன். வாழ்த்திய உடனேயே உங்களைப் போன்றவர்களுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு என்றார் அவர். நான் நடத்திய இசை அணித் தேர்வு என்ற நிகழ்ச்சியில் தான் அவரது முதல் பாடலான பொன்மாலைப் பொழுது தொடர்ந்து 52 வாரங்கள் முதல் நிலையில் நீடித்ததோடு அந்த ஆண்டின் சிறந்த பாடலாகவும் ஒலித்து ஒரு புதிய கலைஞனுக்கு வெளிச்சத்தைத் தந்தது என்று அவர் குறிப்பிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.
எங்கள் வானொலியில் புதிய புதிய நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்குமாறு தூண்டிக்கொண்டே இருப்பார்கள். அந்தத் தூண்டுதலால் பல வித்தியாசமான பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க முடிந்தது.
குறிப்பாக நாடகத் துறையிலே எனக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. நடிப்பு என்பது மூச்சாகவே இருந்தது எனலாம். அறிவிப்பாளனாக மட்டுமின்றி வானொலி நடிகனாகவும் நான் இருந்தேன். நாடகத்தில் இருந்த ஆர்வத்தினால் பல புதுமையான விஷயங்களை அத்துறையில் முயற்சி செய்து பார்க்க முடிந்தது.
ஜெமினி கணேசன், ஸ்ரீவித்யா, எஸ்.எஸ்.ஆர். போன்ற இந்தியக் கலைஞர்களும் இலங்கையிலுள்ள கலைஞர்களும் ஒரே இடத்தில் சந்திக்காமலேயே அவர்கள் பேச வேண்டிய வசனங்களை தனித்தனியே ஒலிப்பதிவு செய்துகொண்டு அவற்றை தொழில் நுட்பத்தின் மூலமாக ஒன்றிணைத்து நாங்கள் வழங்கிய நாடகம் பலத்த பாராட்டுதல்களைப் பெற்றது. எப்படி இது சாத்தியமாயிற்று என்று பலரும் வியந்தார்கள்.
இசையிலும் மிக இளம் வயதிலிருந்தே எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கர்நாடக இசையையும் ஓரளவுக்குக் கற்றேன். ஆனால் ஸ்ருதியோடு என்னால் பாடமுடியவில்லையே என்கிற மனக்குறை எப்போதும் இருந்தது. தாழ்வு மனப்பான்மை என்று கூடச் சொல்லலாம். என்றாலும் மற்றவர்கள் பாடுவதை அதிகமாக ரசிப்பேன். அந்த ரசனையின் காரணமாகத்தான் பாடத் தெரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். இசைக் கோலங்கள், இசையும் கதையும் போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளைத் தயாரித்தோம். இலங்கை வானொலியில் நாங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் பாப் இசை அப்போது இலங்கையையும் தாண்டி தமிழகத்திலும் மிகப் பிரபலமாக இருந்தது. சின்ன மாமியே உன் செல்ல மகள் எங்கே? கள்ளுக் கடைப்பக்கம் போகாதே போன்ற பாடல்களெல்லாம் பைலா இசைப் பாணியில் இளைஞர்களை வெகு விரைவில் கவர்ந்திழுத்துவிட்டன.
நாடகங்கள் சஞ்சிகை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை வடிவமைத்தேன். மூன்று மாதங்கள் மட்டும் நடத்துவதாகத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் 28 வருடங்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியில் அந்தாக்ஷரி ஆரம்பிக்கப்பட்டதற்கு மூலகாரணமாக அமைந்ததும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிதான் என்பது பலருக்குத் தெரியாது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த திறமையாளர்கள். மீனவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த மீனவ நண்பன் கிராமத்தின் இதயம் போன்ற நிகழ்ச்சிகள் மிகுந்த மனநிறைவைத் தந்தன.
ஒலிபரப்பில் பல்வேறு துறைகளை அறிமுகப்படுத்தும் என்ற சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்பு 8-ம் ஆண்டு என்னைத் தேடி வந்தது. ஒரு வானொலி நிலையத்தையே தலைமையேற்று நடத்தக்கூடிய முழுமையான பயிற்சி அது. அந்தப் பயிற்சிக்காக நெதர்லாந்து வானொலி நிலையத்திற்குப் பயணப்பட்ட போது நாம் தான் பதினேழு ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் இருக்கிறோமே புதிதாக என்ன கற்றுக் கொள்ளப் போகிறோம் என்கிற உணர்வுதான் இருந்தது. ஆனால் அங்கே சென்ற பிறகு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆயிற்று. கல்விக்கு கரையில்லை என்பார்களே அதை அப்போது தான் முழுமையாக உணர்ந்தேன்.
ஆறு மாதங்கள் நடைபெற்ற அந்தப் பயிற்சியின் இறுதித் தேர்வில் எட்டு மணிநேர ஒலிபரப்பை நாமே நடத்த வேண்டும். அதற்கொரு தலைவரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பயிற்சியில் மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருமே அவரவர் நாட்டு வானொலியில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் ஒருமனதாக என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததை நான் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். அந்தப் பயிற்சியில் த்ரீ ஸ்டார்ஸ் என்கிற மிக அபூர்வமான அங்கீகாரம் பெற்று மன நிறைவோடு திரும்பினேன்.
98-ம் ஆண்டு வரை வானொலியில் நிரந்தரப் பதவியிலிருந்தேன். ஒலிபரப்புத் துறையில் மிக உயர்ந்த நிலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. வயதிலும் அனுபவத்திலும் தகுதியிலும் மூத்தவன் என்ற அடிப்படையில் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தக்கூடிய துறையிலிருந்து முற்றிலும் வித்தியாசமான நிர்வாகத் துறைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு கலைஞன் நிர்வாகத்துக்குப் பொருத்தமில்லாதவன் என்பது என் கருத்து. நான் அந்தப் பொறுப்பை ஏற்காவிட்டால் என்னைவிட எல்லா விதத்திலும் குறைந்த ஒரு அதிகாரியின் கீழ் பணிபுரிய வேண்டியிருக்கும். மனம் சற்றுக் குழம்பினாலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுதந்திரப் பறவையாக வெளியே வந்தேன். அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. நான் பதவியை ராஜினாமா செய்த அன்றே கதே பசிபிக் விமான நிறுவனத்திலிருந்து எனக்கு போன். கனடாவிலிருந்து பாங்காக் ஹாங்காங் வழியாக கொழும்பு போகும் விமானச் சேவையில் கம்ப்யூட்டர் முறையில் அறிவிப்புகளைச் செய்ய எனது குரலைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன் என்பது என் வாழ்வில் உண்மையாக நடந்தது.
அதன்பிறகு சிங்கப்பூர் லண்டன் மலேசியா இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தொலைக்காட்சிகளில் எனது பங்களிப்பு ஆரம்பித்தது. இன்றைக்கும் உலகத் தமிழர்களுக்காக எனது குரல் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டேன். அவர்களின் பூர்வீகம் தஞ்சாவூரோ அல்லது கோயம்புத்தூரோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. நான் பிறந்தது கொழும்புவில்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வு மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வாய்த்தது. எனவே தமிழில் எனக்கு ஈடுபாடு அதிகம். இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது போல சிங்கள மொழியைக் கற்க மாட்டோம் என்று திரண்ட கூட்டத்தில் முதல்வனாக நிற்கும் அளவுக்குத் தமிழ் வெறியனாக இருந்தேன்.
இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் போதுதான் நமது அறிவு விசாலமாகிறது மனித நேயம் வளர்கிறது என்கிற தெளிவு பின்னர் தான் வந்தது.
இன்றுவரை நான் பாதை தடுமாறாமல் இருக்கக் காரணம் என் அன்னை என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான். உறவினர்களிடமும் அயலார்களிடமும் என்னைப் பற்றிச் சொல்லும்போது என் மகன் மது சூது புகைப்பிடித்தல் பழக்கம் இல்லாதவன் என்பதைத்தான் மிகப் பெருமையாகக் குறிப்பிடுவார்கள். வானொலியில் நான் புகழ்பெற்ற கலைஞனாக இருந்ததைப் பற்றிக்கூட அவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. நெதர்லாந்தில் மதுக்கோப்பைகளோடு திரிந்த பல்வேறு நாட்டவர்களுக்கு மத்தியில் நான் ஒரு நாட்டுப்புறத்தான் போலவே தாழ்வு மனப்பான்மையோடு இருந்தேன். ஆனால் என் மனதில் ஒரு சங்கல்பம். என் அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அவர்களின் மனதில் என்னைப் பற்றி என்ன உருவகம் இருந்ததோ அதை இறுதிவரை காப்பாற்ற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
அன்னைக்குப் பிறகு எனக்கு ஆதரவளித்தது என் நண்பர்கள். முழுக்க முழுக்க கலையை சுவாசித்த வேறு சபலங்களுக்கு இடம் கொடுக்காத நல்ல நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். அந்த இளம் வயதிலேயே ஒரு நிலையில் வைத்துத்தான் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். என்னை நேசித்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய காதல் திருமணம் கலப்புத் திருமணம். என் மனைவியின் வீட்டில் என்னை அவர்களின் மகனாகவே ஏற்றுக் கொண்டார்கள். மனைவி மகன் குடும்பம் என வாழ்க்கை நிறைவாகவே இருக்கிறது.
இதுவரையில் எதையும் நான் திட்டமிட்டுச் செய்ததில்லை. அடுத்த மாதம் என்ன நடக்குமென்றுகூட எனக்குத் தெரியாது. மலேசியா கனடா என்று வரிசையாக நிகழ்ச்சிகள் இருக்கின்றன. வாரம் ஒரு நகரம் என்பதாகத்தான் எனது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒலிபரப்பு வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி என்னால் மறக்க முடியாத ஒரே நிகழ்ச்சி எனது அன்னையின் மறைவுதான். அப்போது சக்கரங்கள் என்ற நாடகத் தொடரை நாங்கள் நேரடி ஒலிப்பதிவில் வழங்கிக் கொண்டிருந்தோம். முன்னரே பதிவு செய்து ஒலிபரப்பும் முறை அன்றைக்கு இல்லை. அந்த நாடகத்தை அஸ்ரப்கான் என்பவர் எழுதியிருந்தார். வாழ்க்கை ஒரு நாடகம் என்பார்களே அதுபோல நாடகத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்ட சில சம்பவங்கள் அதில் நடித்தவர்களின் நிஜ வாழ்க்கையிலும் நடக்க ஆரம்பித்தது.
அந்தச் சமயத்தில் எனது அன்னையை கடுமையான சுகவீனத்தின் காரணமாக வைத்திய சாலையில் வைத்திருந்தோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைத்தியர் என்னை அழைத்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை குணமடைந்து விட்டார்கள் என்றெண்ணி, வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வானொலி நிலையம் வந்துவிட்டேன். சக்கரங்கள் நாடகத்தின் நேரடி ஒலிபரப்பு அன்று போயாக வேண்டும். அன்றைய நாடகத்தில் என் தாய் இறந்து போய் விடுவதாகவும் நான் கதறி அழுவதாகவும் காட்சி. ஒத்திகையில் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. அன்னையின் நிலையை எண்ணி மனம் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது. எப்படியோ நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோதே என் அன்னை இறந்துவிட்டார் என்று.
இன்றுவரை இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகில் காலம் கடந்தும் நிற்கக் கூடிய சில விஷயங்கள்... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நான், வானொலி, எனக்கு, எனது, அந்த, வானொலியில், வேண்டும், தான், என்கிற, பல்வேறு, நாடகத்தில், என்னை, அந்தப், இளம், என்பது, என்ன, செய்து, நாங்கள், இருந்தேன், இலங்கை, பதிவு, பிறகு, என்னைத், என்னுடைய, நிகழ்ச்சி, வந்தது, மிகப், தமிழ், அப்போது, இருக்கிறது, அவர்களின், வாழ்க்கை, வாழ்க்கையிலும், திருமணம், அன்னையின், என்னைப், என்னால், இன்றுவரை, நேரடி, நிகழ்ச்சிகள், ஒலிபரப்பு, குரல், முடிந்தது, பாட்டுக்குப், பாட்டு, மிகுந்த, வயதிலேயே, தேடி, வந்த, வித்தியாசமான, நிகழ்ச்சிகளை