முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » சேது சமுத்திரத் திட்டம் - அபாயங்கள்
பொருளாதாரக் கட்டுரைகள் - சேது சமுத்திரத் திட்டம் - அபாயங்கள்
- ராஜசேகரன்
தமிழகக்கட்சிகளால் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தப்படும் சேது சமுத்திரத் திட்டம் ஒருவகையில் கைகூடி வந்துள்ளதாக மகிழ்ச்சியில் இருக்கின்றன தமிழகக் கட்சிகள். அதிலும் வைகோ நேராக டெல்லிக்குச் சென்று சோனியாவையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்து நன்றி கூறி, அடுத்தபடியாக, "தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்" என்று அக்கறையாகச் சொல்லிவிட்டு வந்துள்ளார்.
பாக். ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் மேட்டு மணற்பகுதியான ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே, வெட்டப்படும் கால்வாய்த்திட்டம் இது. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள வான்தீவில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், இராமேஸ்வரத்தின் சிங்கிலித் தீவில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் இக்கால்வாய் அமையும். கப்பல் செல்வதற்காக கிட்டத்தட்ட 152 கி.மீ. நீளம், 300 மீட்டர் அகலம், 800 அடி ஆழத்துக்கு கால்வாய் தோண்டப்படும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படித் தோண்டப்படும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 21 தேசிய கடல் பூங்காக்களும் அழியக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடல் பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு வெறும் 36 மணி நேரம் பயணம் குறையும் என்பதற்காக, ஒட்டுமொத்த கடல் வளங்களையும், மீனவர்களின் வாழ்க்கையையும் நாசம் செய்வது எந்த வகையில் நியாயம்? என்பதே இவர்களின் கேள்வி. இவர்கள் அச்சம் ஒரு புறமிக்க, சேது சமுத்திரத் திட்டத்தை தமிழகக் கட்சிகள் முன்வைக்கும் கப்பல் பயணத் தூரம் குறைவு, தமிழன் கால்வாய், அன்னியச் செலாவணி ரூ.130 கோடிவரை வரவு என்பது முதல் இதனுள் ஒளிந்திருக்கும் அரசியல், இலாபம் பெறப்போவது யார்? இது உண்மையில் தமிழக மக்களுக்கு பயனுள்ள திட்டமா? என்பது விவாதத்திற்குரியது.
நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துடன் கப்பல் போக்குவரத்து இலாகாவும் டி.ஆர். பாலுவுக்கு கிடைக்காத காரணத்தினால், அமைச்சர் பதவி ஏற்காமல் பாவ்லா காட்டிய திமுக எம்.பிக்கள், இலாகா கிடைத்தவுடன் பதவியேற்றுக் கொண்டனர்.
திமுகவின் இழுத்தடிப்பு வேலையிலிருந்தே, கப்பல் போக்குவரத்துத் துறைக்குள் இருக்கும் லாபமும், சேது சமுத்திரத் திட்டத்திற்குள் ஒளிந்து கிடக்கும் பணமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
பதவியேற்று அமைச்சகக்கோப்பில் கையெழுத்திட்டவுடன் "சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்" என்று அறிக்கையும் விட்டார் டி.ஆர். பாலு.
இத்திட்டத்தின் வழியே பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்கள் அழிவதற்கான அபாயம் இருக்கிறது என்பதை அறிந்தும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது தெரிந்திருந்தும் முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரான டி.ஆர். பாலுவே, கப்பல் போக்குவரத்துத்துறை இலாகாவை கைப்பற்றி இருப்பதும், பதவியேற்றவுடன் அறிக்கை விட்டிருப்பதும் அதனுள் ஒளிந்திருக்கும் லாப நோக்கம் கருதியே.
இன்று வரையிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அனுப்பப்பட்டிருக்கும் மனுக்களையெல்லாம் குப்பைக்கூடையில் தூக்கியெறிந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம், இம்முறையில் சக அமைச்சர் ஏ.ராஜாவைக் கொண்டு து‘க்கியெறிந்ததில் வியப்பேதுமில்லை.
கடந்த ஆட்சியில் இதற்காக குரல் எழுப்பி வந்த திராவிடக் கட்சிகளின் கோரிக்கையைப் புறக்கணித்து வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பா.ஜ.க. இதில் கட்சிகள் லாபமடைவதையும், வட்டாரக் கட்சிகள் லாபமடைவதையும் விரும்பவில்லை. ஆனால் இந்த முறை காங்கிரஸை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்திருந்திருக்கின்றன தமிழ்நாட்டுக் கட்சிகள்.
தனது நெடுநாளைய கனவாக சேது சமுத்திரத்திட்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் வைகோவால், இத்திட்டத்தை நிறைவேற்றப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்த கருணாநிதி, தனது அமைச்சர்களால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும், திமுகவின் மூலமே இத்திட்டம் சாத்தியமாயிற்று என்று நிலை நிறுத்துவதற்கும் முனைந்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டிலும் சேது சமுத்திரத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நிதிதிரட்ட, கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு அமைப்பை ஏற்படுத்தும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரமும் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக, நீர்வள ஆதாரக் கமிட்டியின் ஆய்வுப் பணியும், மண் பரிசோதனையும் ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது தொழில் நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு திட்டத்திற்கான சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் (நீரி) விளைய இருக்கும் பிரச்சனைகளை கணக்கில் கொள்ளாமல், அரசுக்கு அடிபணிந்து, நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையினை தயாரித்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம், இத்திட்டத்திற்காக ஒரு சிறப்பு பிரிவையே ஏற்படுத்த எண்ணியுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியை அந்த சிறப்புப்பிரிவு எழுப்புவதோடு அரசே இந்த நிதி ஒதுக்கீட்டில் பங்கேற்றும், கடன் பெற உத்தரவாதம் வழங்கியும் உத்தரவிடும் என்று தெரிகிறது.
அப்படி உத்தரவிட்டதும் தனியார் கம்பெனிகளின் ஆதரவுடன் அன்னிய முதலீட்டுடனும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். தனியார் கம்பெனிகள் தனது முதலீடுகளின் வழி லாபத்தை கொள்ளையடிக்கும்.
ஸ்பிக், ஸ்டெர்லைட், அனல்மின் நிலையங்கள், கூடங்குளம் அணு உலை, தாராங்க தாரா கெமிக்கல்ஸ் போன்ற தொழிற் சாலைகளின் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கப்பல்கள் இன்று இலங்கையை சுற்றியே வருகின்றன. அதனால் பயணச் செலவும் கூடுதலாகிறது. இத்திட்டம் நிறைவேறினால் குறுகிய நாட்களில் கப்பல் வருவதின் மூலம் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். தூத்துக்குடி துரைமுகம் வளச்சியடைந்து, ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். அதனால் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் உள்நாட்டுத் தரகு வியாபாரிகள். முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். வருடத்திற்கு ரூ.130 கோடிக்கு மேல் அன்னியச்செலவாணி மத்திய அரசுக்கு கிடைக்கும் என்பதால் முதலாளிகளும், அவர்களின் நலனுக்கான அரசும், அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை முழுமையாக ஆதரிப்பதன் நோக்கமாகும்.
நீரி யின் அறிக்கையை முழுமையாகப் படிக்கும் போதே தெரிந்துவிடும். இத்திட்டம் முழுக்க முழுக்க மீனவாகளுக்குத்தான் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது என்று.
கப்பல் புகை போன்ற அசுத்தங்களால் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் உற்ற 21 தீவில் வளரும் தாவரங்கள் கருகிவிடும். கடலின் இயல்பான குளிர்ச்சி மாறி வெப்பம் அதிகமாகி விடும். கப்பல் போக்குவரத்தால் அபூர்வ உயிரினங்கள் சிக்குண்டு அழியும் உலக நாடுகளால் இன்று வரை '' கடல் ஆராய்ச்சியாளர்களின் சொ‘க்கம்'' என்று போற்றிப் பாதுகாக்கப்படும் மன்னார் வளைகுடா சீரழிந்துவிடும்.
மேலும் ஆபூர்வமான பவளப் பாறைகள் அழியுமாதலால் கடலரிப்பு ஏற்பட்டு கடல் மட்டம் உயரும். பருவ மாற்றம் நிகழ்ந்து மழை அளவு குறையும் புயல் வீசும் அபாயம் இக்கடலில் அடிக்கடி ஏற்படும். குறிப்பாக மீனினங்களே அழிந்து வருங்காலத்தில் மீனவர்கள் தற்கொலை செய்யநேரிடும். எனவே இப்பகுதியில் இரசாயனத் தொழிற்சாலைகள், மீன் உற்பத்தி நிலையங்கள், கடல் பொறியியல் திட்டங்கள் எதையும் தொடங்குவது கூட ஆபத்தாகும் என்று கடல் வள ஆராய்ச்சியாளர் முனைவர் தி.சண்முகராஜா அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போல சேதுக் கால்வாய்த் திட்டத்தை ஒப்பிடுவது மிகப்பெரும் தவறு. இக்கால்வாய்கள் வெட்டப்பட்ட பகுதி பெரும்பாலும் பாறைகளால் ஆனது. அங்கு மன்னார் வளைகுடா போன்று மணற் பகுதிகள் அவ்வளவாகக் கிடையாது. ஒருமுறை கால்வாய் அமைத்துவிட்டால் போதும் பிறகு து‘ர்வாரத் தேவையில்லை. ஆனால் சேகு திட்டத்தில் இங்கு அப்படியில்லை.
நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் நீரோட்டத்தால் அடித்துவரப்படும் மணலானது பாம்பன் கடல் பகுதியிலும், மன்னார் வளைகுடா கடல் ஓரத்திலும் குவிகின்றன. அதைத் தவிர்க்க இயலாது. இதுபோல மணல் குவிந்ததால்தான் வாலி நோக்கம் துறைமுகத்தின் கரைக்கு, இன்று கப்பல்களை கொண்டு செல்ல முடியவில்லை. அங்கு கப்பல் உடைக்கும் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கப்பல் உடைக்கும் நிறுவனம் மணல் வாரிக்கப்பல் மூலம் இம் மணலை அகற்ற தமிழக அரசைக் கோரியுள்ளது.
எனவே இத்திட்டத்தை நிறைவேற்றினால், சில ஆண்டுகளில் மீண்டும் வந்து குவியும் மணலைத் தோண்டி எடுக்க ஆண்டுதோறும் மத்திய அரசு பல கோடியை ஓதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதாவது இத்திட்டத்தால் 130கோடி ரூபாய் வரவு என்பதற்கும் பதிலாக 200 கோடி ரூபாய் செலவு என்பதற்கே வழிவகுக்கும். அததோடு வளமான கடல் வளத்தை இழந்து, தற்போது கடல் உணவு ஏற்றுமதி மூலம் அரசு பெற்று வரும் பல கோடி அன்னியச் செலாவணியை இழக்க நேரிடும். மேலும் மன்னர் வளைகுடாவில் மணல் குவிந்து பல புதிய தீவுகளும், உருவாகி யுள்ளதை, இக்கால்வாய் அமைக்க ஆய்வு நடத்திய ''நீரி'' கமிட்டி கவனிக்கத் தவறிவிட்டது.
தமிழகமெங்கும் ஆழ்கடலில் அன்னிய நாட்டுக்கப்பல்கள் மீன்வளத்தைப் கொள்ளையிடுகின்றன. சுண்ணாம்பு, சிமெண்ட் தொழிற்சாலைக்கு பயன்படும் பவளப்பாறைகளும், வெளிநாட்டுக்குத் தேவைப்படும் கடலோர கார்னைட் மணலையும் முதலாளிகள் சூறையாடி வருகின்றனா. ஆனால் அதைப்பற்றி கவலையோ அதற்கான போராட்டமோ நடத்த முன்வராமல், பன்னாட்டு, உள்நாட்டு, முதலாளித்துவ நலனுக்காக, சேது கால்வாய் திட்டத்தை ஆதரிப்பது தான் தமிழக இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு.
நீரி அமைப்பின் 32 அம்ச கோரிக்கை:
கலாசார, தொல்லியல் ரீதியான அகழ்வாய்வுத்தடயங்கள் ஆழத்தில் கிடைக்கக்கூடும் என நீரி அமைப்பு தனது அறிக்கையில் சந்தேகமாகக் கூறியுள்ளது.
சேதுக்கால்வாய் தோண்டும் பட்சத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கால்வாய் தோண்டுவதற்கு 32 அம்ச செயல்திட்டத்தை நீரி குறிப்பிட்டுள்ளது. அதில் முக்கியமானது...
ஆதம்ஸ் பாலத்தைத் தவிர மன்னார் வளைகுடாவில் வேறு எங்கும் தோண்டக்கூடாது.
மன்னார் தேசிய கடல் பூங்காவில் இருந்து 20 கி.மீ. தள்ளி கால்வாய் வெட்டலாம்.
தனுஷ் கோடி மீனவர்களுக்கு மாற்று வழி கூறப்பட வேண்டும்.
கால்வாய் தோண்டும் பணியின் போது ஆயில், கீரிஸ், பெயிண்ட் போன்றவற்றைக் கசிய விடக்கூடாது.
வண்டல் மணலை அப்புறப்படுத்தும்போது, மீனவர்களின் படகுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
மீனவர் நலனுக்காக, கால்வாயைக் கடப்பதற்கு உரிய நேரமும் கால்வாயின் ஒரு பகுதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
இக்கால்வாய் வழி செல்லும் கப்பல்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் கழிவுகளை அகற்றுவதோ, கழிவு நீரை வெளியேற்றுவதோ கூடாது.
ஆனால் இந்த செயல் திட்டங்கள் எல்லாம் கால்வாய் தோண்டப்படும் போது பின்பற்றப்படாவிடில் மோசமான விளைவுகள் சந்திக்க நேரிடும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்க வருகிறார்கள்.
சேதுக் கால்வாய் அமையும் பகுதியில்...
சேதுக் கால்வாய் தோண்டும் பகுதியில் வான் தீவு, எல்லைத் தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21 பவளப் பாறைத் தீவுகள் உள்ளன. உலகில் உள்ள மொத்த 160 பவளப்பாறைகளில் இந்த கடலில் மட்டும் 137 வகை உள்ளது. இலங்கைக்கும் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதிக்கும் இடைப்பட்ட 623 ஹெக்டேர் பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் உலகில் வேறெங்கும் காண முடியாத அபூர்வ வகையான கடல்வாழ் உயிர்களில் 3600 வகையினங்கள் உள்ளன. இங்கு வாழும் குட்டி போட்டு பால் கொடுக்கும் கடற்பசு தெற்கு ஆகியாவிலேயே வேறு எங்கும் இல்லை. அபூர்வமான கடல் ஆமைகளும், டால்பின் கடல் குதிரை போன்ற 1300க்கு மேற்பட்ட மீன் இனங்களும், பவளம், முத்துச் சிப்பிகள், சங்குகள், கடற்பாசிகள், திமிங்கலம், கடல் ஆமை, கடல் அட்டை ஆகியவையும் உலகிலேயே இப்பகுதியில்தான் அதிகமாகக்காணப்படுகின்றன.
தூத்துக்குடிக்கும், இராமநாதபுரத்திற்கும் இடையில் 21 கடற்பூங்காக்கள் உள்ளன. இந்தப் பகுதியில் விளையும் பவளப் பாறைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதால், மீன் இனப்பெருக்கத்தின் புகலிடமாக உள்ளன. அதோடு ஓராண்டுக்கு 900 மி.மீட்டா மழையளவும் இதனால் பெற முடிகிறது. இந்தக்கடலில் அடர்த்தியாக பவளப்பாறைகள் வளர்வதற்கான காரணமே கடலின் தூய்மையும்தான். மேலும் இக்கடலில் ஆழம் குறைவாக உள்ளதால், சூரிய ஒளி உதவியுடன் பல நுண்ணிய பவளப் பூச்சிகளின் உதவியாலும் இப்பாறைகள் உருவாகின்றன. இப்பவளப் பாறைகளே கடலில் உருவாகும் புயலை கரைக்கு வரவிடாமல் தடுப்பதோடு, கடலரிப்பையும் தடுக்கின்றன. சுத்தமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து. ஓசோன் மண்டல் ஓட்டையை சீரமைத்து, பூமி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இங்குள்ள அபூர்வமான கடல் பாசிகள், கடலோரத்தில் வளரும் அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளாலும் மீன் வளம் பெருகிறது.
கால்வாய் அமைய இருக்கும் பகுதியில் ஒன்றிரண்டு வகையான பவளங்கள் காணப்படுவதாகவும் விலை மதிப்பு மிகுந்த மற்றும் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களின் நெருக்கம் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அரசு இதை திட்டமிட்டு மறைத்து வருகிறது.
சேதுக் கால்வாய் அமைந்த பின்...
இக்கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஆதம்ஸ் பாலப்பகுதியில் 6 சதுர கி.மீ அளவுக்கு உயிரினங்களோ தாவரங்களோ எதுவும் இல்லாமல் முழுமையாக அகற்றப்படும். கடல் நீரின் தன்மை கலங்கலாக மாறும். அரிமுனை தனுஷ்கோடி பகுதி மீனவாகள் இடம் பெயர வேண்டியிருக்கும். கால்வாய் தோண்டும் பணியின் போது மீனவர்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்படும். கால்வாய் தோண்டும் போது 8 மில்லியன் கன.மீட்டர் களிமண் 32.5 மில்லியன் க.மீ. வண்டல மண் 25 மில்லியன் க.மீ. மணல் கிடைக்கும். இந்த மண்ணில் நீரியின் 32 அம்ச செயல்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 2 மீட்டா ஆழமுள்ள வண்டல் மண்ணை மட்டும் பாம்பன் நிலப் பகுதியில் கொட்டுவார்கள். மீதமுள்ளதை கடலுக்குள்ளேயே கொட்டப்படும் பட்சத்தில், ஏற்கனவே 12 அடி அழத்தில் மேடாக இருக்கும் ஆதம்ஸ் பாலம் தவிர்த்த இதர கடல் பகுதி, மேலும் மேடாகும். பாம்பன், தங்கச்சிமடம். தனுஷ்கோடி இராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள். மீன் பிடிக்க இயலாமல் தொழிலையே இழக்கநேரிடும். அதோடு இத்திட்டத்தின்போது பிளாஸ்டிக் பைகள் கடலில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் சுமா‘ 12 வகை மீன் இனங்கள் அழியும், கால்வாய் வழி செல்லும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் கடலின் மேற்பகுதியில் படியும். பிசுக்குகள், அழுக்குகள். குப்பைகளால் கடல்பகுதி மாசுபட்டு அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும்.
நன்றி: புதிய காற்று.
09.09.2004
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது சமுத்திரத் திட்டம் - அபாயங்கள் - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கடல், கால்வாய், கப்பல், மன்னார், சேது, பகுதியில், மீன், சமுத்திரத், நீரி, சுற்றுச்சூழல், மேலும், கட்சிகள், கோடி, தோண்டும், திட்டம், மூலம், தனது, இத்திட்டத்தை, ஏற்றுமதி, இன்று, மணல், போது, பகுதி, சேதுக், வளைகுடா, பவளப், ரூபாய், இத்திட்டம், தேசிய, பட்சத்தில், இருக்கும், உள்ள, உற்பத்தி, ஏற்படும், என்பது, திட்டத்தை, செல்லும், பாம்பன், தோண்டப்படும், தீவு, கடலில், மில்லியன், இருந்து, ஆதம்ஸ், அரசு, அம்ச, இக்கால்வாய், அபூர்வ, கடலின், தாக்கல், சிறப்பு, ஏற்கனவே, உயிரினங்கள், வேண்டும், கொண்டு, அறிக்கை, இதனால், சுற்றுச், சூழல், தமிழக, கிடைக்கும், மத்திய, போக்குவரத்து, தெரிகிறது, வகையான, அரசுக்கு, அமைச்சகம்