முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » பழைய கூட்டணியும் பங்குச் சந்தையும்
பொருளாதாரக் கட்டுரைகள் - பழைய கூட்டணியும் பங்குச் சந்தையும்
- சுப. வீரபாண்டியன்
" பார்ப்பன - பனியாக்களின் ஆதிக்கம் என்னும் தொடரை அடிக்கடி தந்தை பெரியார் பயன்படுத்துவார். 'பனியா' என்னும் சொல் முதலில் எனக்குச் சற்று விளங்காமலே இருந்தது. "ராஜஸ்தான் மார்வாரி, குஜராத் சேட்டு எல்லாருமே பனியாதான். காந்தியார் கூட ஒரு பனியாதான் என்று என் அப்பா ஒருமுறை விளக்கம் சொன்னார்.
தமிழ்நாட்டில் அச்சொல் அதிகம் வழக்கில் இல்லை. பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால் வருணமும், வருணம் அற்றவர்களாகக் கூறப்படும் தலித் மக்களும், வட இந்தியாவில் இருப்பது போலவே, தமிழ் நாட்டில் இல்லை.
சத்திரியரும், வைசியரும் வடநாட்டில் தான் உண்டு. தமிழகத்தில் பார்ப்பனர், சூத்திரர், தாழ்த்தப்பட்டோர் என மூன்றே பிரிவுகள்தாம் உண்டு.
படையாச்சி, செட்டியார் என்றெல்லாம் சாதிப் பட்டங்கள் இங்கும் போட்டுக் கொள்ளப்பட்டாலும் பார்ப்பனர்கள் பார்வையில் இங்கு சத்திரியரும் இல்லை. வைசியரும் இல்லை, எல்லோரும் சூத்திரர்களே! ஆகவேதான் 'பனியா' என்னும் சொல் இங்கு மிகுதியாய் அறியப்படவில்லை. அதன் விளைவாகவே, மொழி, பண்பாடு சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்ட அளவிற்குக்கூட, இங்கே பொருளாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போயிற்று.
பார்ப்பன - பனியாக்களின் கூட்டுச் சதியையும், ஆதிக்கத்தையும் சேர்த்து உணர வேண்டியது மிகவும் தேவையான ஒன்று.
இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
(1) 1966 நவம்பரில், தில்லியில் உண்ணாவிரதமிருந்த பூரி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டார். அது வெறும் உண்ணாவிரதப் போராட்டம் இல்லை. பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரி, 'சாதுக்கள்' என்னும் பெயரில் இந்துத்துவப் போக்கிரிகள் அப்போது தில்லியில் வெறியாட்டம் ஆடினர். அவர்களைத் தூண்டிவிட்ட பூரி சங்கராச்சாரி, அதற்கு ஆதரவாகத் தானும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றபோதுதான் கைது செய்யப்பட்டார்.
அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா? குஜராத்திலும், மும்பையிலும் பங்குச் சந்தை செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிப்போய்விட்டன. பங்கு சந்தைகள் திறந்திருந்தன. ஆனால் எந்த பனியாவும் அதில் பங்கேற்கவில்லை. பார்ப்பன குருவுக்கு ஆதரவாகப் பனியா கும்பல் நடத்திய மௌனப் போராட்டம் அது. தில்லி அரசே மிரண்டு போனது.
(2) கடந்த மே 13 அன்று, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. அனைத்து ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தில்லியில் ஆட்சிக்கு வந்தது. உடனடியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில், பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இரண்டே நாள்களில், வரலாறு காணாத வீழ்ச்சி என்றும், மூன்று இலட்சம் கோடி இழப்பு என்றும் நாளேடுகள் தலைப்புச் செய்திகள் வெளியிட்டன. பார்ப்பன பி.ஜே.பி. அரசு கவிழ்ந்தவுடன், இந்நாட்டின் பொருளாதாரமும் வீழ்ந்து போயிற்று என்பது போன்ற மாயையை ஏற்படுத்தவே, இது போன்ற செயற்கை வீழ்ச்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
மேற்கூறப்பட்டுள்ள இரண்டு நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கினால் "பார்ப்பன - பனியாக்களின் ஆதிக்கம் என்னும் பெரியார் கூற்று எவ்வளவு உண்மையானது என்பது நமக்குப் புரியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததாலும் - அதுவும் பொதுவுடைமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததாலும் தான் - இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது போல ஒரு தோற்றம் ஊதிப் பெரிதாக்கப் படுகின்றது. "கம்யூனிஸ்ட்டுகளின் துணையுடன் ஆட்சிக்கு வந்தால் இப்படி எல்லாம்தான் நடக்கும் என்று சாபம் விடுகிறார், ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவில் உள்ள பல நாடுகளிலுமே, இப்படியொரு பங்குச் சந்தை வீழ்ச்சி, இதே காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்புக் குறைந்தாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பினாலும், ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதாகப் பொருளியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தைவான், மலேசியா, தாய்லாந்து ஆகிய கீழை நாடுகளும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற மிகச் சில நாடுகளே, பங்குச்சந்தை வீழ்ச்சியிலிருந்து தப்பியுள்ளன என்று உலகச் செய்திகள் கூறுகின்றன.
இயற்கையாக ஏற்பட்ட ஒரு சரிவை, மேலும் பன்மடங்கு பெருக்கிக் காட்டுவதில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.
பங்குச் சந்தையில் 'காளைகளும், கரடிகளும்' உண்டு. செயற்கையாகப் பங்குச் சந்தையின் நிலவரத்தை உயர்த்திக் காட்டுபவர்களைக் 'காளைகள்' என்றும், அதே மாதிரிச் செயற்கையாக வீழ்ச்சியைக் காட்டுபவர்களைக் 'கரடிகள்' என்றும் கூறுவார்கள். அர்சத் மேத்தாவை நாம் மறந்திருக்க முடியாது. அவர் பங்குச் சந்தையின் காளை. இப்போது ஏதோ ஒரு கரடி புகுந்துள்ளது. சில 'கரடிகளே' இச்செயற்கை வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ள மேனாள் அமைச்சர் அருண்சௌரி, அவர்களின் பெயர்களைத் தாம் வெளியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். எவ்வளவு பெரிய தேசபக்தர் பாருங்கள். தன் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்திருப்பவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பது எந்த வகையில் நியாயம்? நாட்டின் நலன் கருதியாவது, அந்தப் பெயர்களை அருண்சௌரி வெளியிட வேண்டும் என்று கோரியுள்ள, பொதுவுடைமை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியின் குரல், சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழவே இல்லை. பார்ப்பனர்களின் விருப்பத்திற்கேற்ப, பனியாக்கள் நடந்து கொண்டது போக, இப்போது பார்ப்பனர்கள் பலரே பெரு முதலாளிகளாக பனியாக்களாக ஆகிவிட்டனர்.
எப்போதும் திட்டமிட்டே அவர்கள் செயல்படுகின்றனர். முதலில் கல்வித்துறையைக் கைப்பற்றிய அவர்கள், பிறகு அரசுத் துறையையும், தொழில் துறையையும் கைப்பற்றினர். நீதித்துறை எப்போதும் அவர்களின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இப்போது அவர்கள், தகவல், தொழில் நுட்பத்தைத் தங்கள் வசமாக்கி உள்ளனர். இன்று வேகமாக வளர்ந்துவரும் துறை அதுவே என்பதால், அங்கு அவர்களின் கை ஓங்கி நிற்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் நிற்கும் இன்போசிஸ் (Infosis), போலாரிஸ் (Polaris), விப்ரோ (Wipro) முதலான பல நிறுவனங்கள் இப்போது அவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தை, நாராயணமூர்த்தி என்னும் கன்னடத்துப் பார்ப்பனரும் அவருடைய நண்பர்கள் ஐவருமாய்ச் சேர்ந்து 1981 ஆம் ஆண்டு தொடங்கினர். அப்போது அவர்கள் முதலீடு செய்தது வெறும் 10,000/- ரூபாய் மட்டுமே. இன்று அந்நிறுவனத்தின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டியுள்ளது. நாராயண மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளின் சொத்து மதிப்பு 4500 கோடிக்கும் மேல் என்று இந்தியா டுடே கூறுகின்றது. இவ்வாறு பெரும் தொழில் அதிபர்களாக ஆகிவிட்ட பார்ப்பனர்கள் நினைத்தால், பங்குச் சந்தையைச் செயற்கையாய் முடக்கி விட முடிகின்றது. காங்கிரஸ் ஆட்சியைப் பார்ப்பனர்கள் இன்று ஏற்கவில்லை என்றாலும் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது அவர்களுக்கு ஒரு பரிவும், நம்பிக்கையும் உள்ளது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற முதலாளித்துவக் கொள்கைக்கு முதன் முதலாக வழிவிட்டவர்கள் இவர்கள் இருவருமே என்பதால், பெரு முதலாளிகள் அவர்கள்பால் ஒரு நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஆனால், அந்தக் காலகட்டம் வேறு, இன்றையச் சூழ்நிலை வேறு. பிரதமர் மன்மோகன் சிங், "மூலதனச் சந்தை ஊக்குவிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளியிட அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில், அரசின் பங்கு மூலதனம் 51 சதவீதத்திற்குக் கீழ் குறைக்கப்பட மாட்டாது என்று தெளிவாகக் கூறியுள்ளார். இலாபம் தரும் அரசு, பொது நிறுவனங்களை தனியாரிடம் விற்கும் போக்கு இனி இருக்காது என்று தெரிகிறது. பொருளாதாரத்தில் இத்தகைய போக்கு ஒருவிதமான சமன்மை நிலையினை (Balanced State) உருவாக்கக்கூடும். கடந்த வாரம் பங்குச் சந்தையில் நிலை பெற்றிருந்த குறியீட்டு எண், மெல்ல மேலேறி இந்த வாரம் 5123.23 புள்ளிக்கு வந்துள்ளமையும், எதார்த்த நிலையைக் காட்டுகின்றது. ஆனாலும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பா.ஜ.க. - அ.தி.மு.க. என்னும் புதிய கூட்டணியைத் தேர்தலில் வீழ்த்தியது மட்டும் போதுமானதன்று. பார்ப்பனர்-பனியா என்னும் பழைய கூட்டணியையும் வீழ்த்தியாக வேண்டும். மொழி, பண்பாடு, வரலாற்றுத் தளங்களைத் தாண்டி, பொருளியல் தளத்திலும் நம் போராட்டம் உள்ளது என்பதை என்றும் மறந்துவிடக்கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழைய கூட்டணியும் பங்குச் சந்தையும் - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - என்னும், பங்குச், இல்லை, என்றும், பார்ப்பன, அவர்களின், ", வேண்டும், ஆட்சிக்கு, பார்ப்பனர்கள், இப்போது, தொழில், பனியா, வீழ்ச்சி, எப்போதும், இன்று, உள்ளது, சந்தையில், வெளியிட, சந்தை, உண்டு, பார்ப்பனர், பனியாக்களின், தில்லியில், போராட்டம், பெரிய, காங்கிரஸ், வேறு