முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » மூலிகை ஏற்றுமதியில் இன்னல்கள்
பொருளாதாரக் கட்டுரைகள் - மூலிகை ஏற்றுமதியில் இன்னல்கள்
- சோபாகாந்த் தாஸ்
உலக மூலிகை ஏற்றுமதியில் இந்திய நாட்டின் பங்கு அரை சதவிகிதம் தான். ஆனால் சீனாவில் இருந்து மூலிகைப் பொருள்கள் ரூ. 18,000 கோடி அளவுக்கு ஏற்றுமதியாகின்றன.
மூலிகை ஏற்றுமதி நம் நாட்டில் குறைவாக இருப்பதாலும், உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாகச் சாகுபடி செய்வதனாலும் விலைக் குறைவு ஏற்படுகிறது. உதாரணமாக பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பயிர் செய்யப்பட்ட பூனைகாலி விதை என்ற மூலிகை தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் பெருவாரியாகப் பயிர் செய்யப்படுவதால் அதன் மதிப்பு சரிந்து, நாலில் ஒரு பங்கு என்ற அளவுக்கு விலை இறங்கிவிட்டது. அதே போல் வடமாநிலங்களில் பயிராகி வந்த கஸ்தூரி விதை என்ற வாசனை மூலிகை, ஆந்திர மாநிலத்தில் புதிதாகப் பயிர் செய்யப்பட்டு, பத்தில் ஒரு பங்கு அளவுக்கு விலை சரிந்தது.
தாராளமயமாக்கல் மற்றும் உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்திய நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவு விலை கிடைக்கவில்லை. எனவே கிராமப்புறங்களில் மூலிகை சாகுபடி அதிகரித்தது.
தகவல் தொடர்புச் சாதன வசதி எல்லா கிராமங்களுக்கும் இருப்பதால் மூலிகை விவசாயி அல்லது கிராமத்தில் உள்ள சிறு வணிகர், தொலைபேசி மூலம் அருகேயுள்ள நகர்ப்புற வணிகர்களிடம் விலை விசாரித்து யார் கூடுதல் விலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு சரக்கை எடுத்துச் செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. எனவே வியாபாரிகள் இவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்கள் என்பது முற்றிலும் தவறானது. இது போல் இடைத்தரகர்கள் ஒரு வணிகரிடம் இருந்து மற்றொரு வணிகர் அல்லது ஏற்றுமதியாளருக்கு சொற்பக் கமிஷனில் பொருளை விற்றுக் கொடுக்கின்றனர். எனவே வணிகர்களிடம் இருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடைத்தரகர்கள் கொள்ளை லாபத்திற்கு விற்றுக் கொடுக்கிறார்கள் என்பதும் முற்றிலும் தவறானது.
வணிகர்களுக்கு லாபம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அரசுக்கு விற்பனை வரி, தொழில் வரி, ஏற்றுமதி வரி, சுங்கத் தீர்வை மற்றும் வருமான வரி என்று பல வழிகளில் வருவாய் ஈட்டித் தருகின்றனர். இதில் வணிகருக்குக் கொள்ளை லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மூலிகை சாகுபடிக்கு செயற்கை உரம், ரசாயனப் பூச்சி மருந்து கலப்பு இல்லாத விளை நிலம் தேவை. இப்படிப்பட்ட நிலத்தில் விளைந்த மூலிகைப் பொருள்களுக்குத் தான் உலக நாடுகளில் தேவையுள்ளது. ஆனால் இது போன்ற விளை நிலம் நம் நாட்டில் அனேகமாக இல்லை என்பது தான் உண்மை.
மூலிகை ஏற்றுமதியில் சீனா முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அந்நாட்டில் உள்ள தாராள ஏற்றுமதிக் கொள்கை தான். ஆனால் நமது நாட்டில் தாராள ஏற்றுமதிக் கொள்கை என்பது பெயரளவில் தான்! நம் நாட்டில் மூலிகைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய 5 அரசுத் துறைகளை அணுகி ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதற்கு ஆகக்கூடிய கால விரயத்தில், மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கே பொருள்களைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு நாம் எவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியும்?
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவுரி இலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ. 50 கோடி அளவுக்கு அவுரி இலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்திய வணிகத் துறையின் முரண்பாடான அறிவிப்பு காரணமாக இந்த அவுரி இலை ஏற்றுமதியிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையைச் சரி செய்ய தலைநகர் தில்லி வரை சென்று 3 அரசுத் துறைகளுடன் போராட வேண்டியதாயிற்று. பிறகும் இதன் சிரமம் முற்றிலுமாக நீங்கவில்லை.
ஏற்றுமதியில் தடை செய்யப்பட்ட 29 மூலிகைப் பொருள்கள் போக, தடையில்லாத பிற மூலிகைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் பல சிரமங்கள் உள்ளன. இச்சிரமங்களால் சில ஏற்றுமதிகள் கூட ரத்தாகி விடுகின்றன. இவ்வளவு சிரமங்களை காணும் எந்த வியாபாரிக்கும் ஏற்றுமதி செய்யும் ஆர்வம் ஏற்படுவது கஷ்டமே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூலிகை ஏற்றுமதியில் இன்னல்கள் - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஏற்றுமதி, மூலிகை, விலை, மூலிகைப், தான், பயிர், நாட்டில், அளவுக்கு, செய்ய, அவுரி, என்பது, ஏற்றுமதியில், இருந்து, பங்கு, பொருள்கள்