முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » ஏழை நாடுகளுக்கு எப்போது விடுதலை?
பொருளாதாரக் கட்டுரைகள் - ஏழை நாடுகளுக்கு எப்போது விடுதலை?
- உதயை. மு. வீரையன்
பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் - இந்தப் பழமொழி நமது விவசாயிகளுக்கே மிகப் பொருத்தம். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் மழையும் பொய்த்து, காவிரியும் பொய்த்து அதனால் விவசாயமும் பொய்த்துப் போனது.
இந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இந்தியா முதலிய வளர்ந்து வரும் நாடுகளின் விவசாயத்தையே பாதிக்கக் கூடிய தீர்மானத்தை நிறைவேற்ற முயன்ற செல்வந்த நாடுகளின் முயற்சி நல்ல வேளையாகத் தோல்வியில் முடிந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் செப்டம்பர் 10 முதல் 14 வரை உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடந்தது. இதன் உறுப்பினராகவுள்ள 146 நாடுகளின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 70 அதிகாரிகள் கலந்து கொண்டனர். மெக்சிகோ அதிபர் வின்சென்ட் ஃபாக்ஸ் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
2001-ம் ஆண்டு டோஹாவில் தொடக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, உலகம் தழுவிய வேளாண் விளைபொருள்களின் வர்த்தகத்துக்கான தடைகளை அகற்ற முயற்சிகளை மேற்கொள்ளுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் நடவடிக்கைகள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் ஆங்காங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மாநாடு நடைபெற்ற கான்கன் நகரில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநாடு நடைபெற்ற ஓட்டலை நோக்கி அவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்ற போது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விவசாய சங்கத் தலைவருமான லீ கியூங் கே முழக்கமிட்டபடி கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு உயிர்த் தியாகம் செய்து கொண்ட நிகழ்ச்சி, பிரச்சினையின் பூதாகாரத்தைப் புலப்படுத்தியது.
இந்தியா, சீனா, மலேசியா முதலிய 21 வளரும் நாடுகள் தங்களுக்குள் ஜி-21 என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டன. மாநாட்டுக் குழுவின் தலைவரான மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் லூயிஸ் எர்னஸ்டோ டெர்வெசைச் சந்தித்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஜி-21 நாடுகள் தெரிவித்துள்ள யோசனையைச் சேர்க்கும் வகையில் வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தின. என்றாலும் இறுதிவரை இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
செல்வ வளமிக்க நாடுகள் விவசாயிகளுக்கு பல்லாயிரம் கோடியை மானியமாகக் கொடுப்பதால் ஏழை நாடுகளின் விவசாய விளைபொருள்கள் உலகச் சந்தையில் போட்டியிட முடியவில்லை. உலக மக்கள் தொகையில் 50 விழுக்காடாக உள்ள விவசாயிகளின், இந்தியாவின் 65 கோடி குடியானவர்களின் வாழ்க்கைப் பிரச்சினை இது. எனவே இதில் விட்டுக் கொடுக்க முடியாது என்று இந்தியாவும், மற்ற வளரும் நாடுகளும் பிடிவாதமாகப் போராடியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தோஹாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டிலேயே செல்வ நாடுகள் விவசாய மானியத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதை முடிவு செய்தாகிவிட்டது.
எத்தனை ஆண்டுகளுக்குள் குறைப்பார்கள் என்பதைத்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும். தோஹா மாநாட்டுத் தீர்மான வாசகங்கள் தெளிவாக இருக்கின்றன என்று இந்தியத் தொழில் வர்த்தக அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பதே சரியாகும்.
வளர்ந்த நாடுகள் விவசாயத்துக்காக 15 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாகத் தருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.48,000 கோடி மானியம் அளிக்கின்றன. அதே சமயம் நமது விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும்; விவசாயச் சந்தையை வெளிநாடுகளுக்குத் திறந்து விட வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு மூலமாக வளர்ந்த நாடுகள் கேட்பது என்ன நியாயம்?
உணவுப் பாதுகாப்பும், விவசாயிகள் நலனும் நாட்டுக்கு மிக முக்கியமாகும். எனவே விவசாயத்துக்கு வழங்கப்படும் மானியத்தை இந்தியா குறைக்க முடியாது... என்று மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளது இந்திய விவசாயிகளுக்குக் கொஞ்சம் ஆறுதல்.
உலக வர்த்தக அமைப்பின் செயல் திட்டத்தில் புதிய கருத்துகளைச் சேர்க்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்தை 100க்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
முதலீட்டுக்கான விதிமுறைகள், போட்டிக் கொள்கை ஆகியவற்றைச் சேர்க்க முடியவில்லை. அதே போல வளரும் நாடுகளின் ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வரைவுத் திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படாமல் மாநாடு தோல்வில் முடிந்துள்ளது.
இது தாராள வர்த்தகக் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்தத் தோல்வியிலும் ஒரு வெற்றி அடங்கியிருக்கிறது. வளரும் நாடுகள் ஒரே அணியில் நின்று, வளர்ந்த நாடுகளின் எதேச்சையான திட்டங்களை இம் மாநாட்டில் முறியடித்துள்ளதை வரவேற்க வேண்டும்.
வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாகச் செயல்பட மாட்டார்கள் என்ற மாயை இந்த மாநாட்டில் தகர்ந்துள்ளது. சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்; பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற இயலாது. இதனை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும். அப்போது தான் ஏழை நாடுகளுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழை நாடுகளுக்கு எப்போது விடுதலை? - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நாடுகள், வர்த்தக, நாடுகளின், வளரும், வேண்டும், விவசாய, மாநாடு, மாநாட்டில், அமைப்பின், வளர்ந்த, குறைக்க, கோடி, முடியாது, விவசாயிகளின், இந்தியா, மெக்சிகோ, அமைச்சர்