முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » நனவாகும் உற்பத்திப் புரட்சி
பொருளாதாரக் கட்டுரைகள் - நனவாகும் உற்பத்திப் புரட்சி
- எஸ். ஜானகிராமன்
சீனாவிற்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை இது. இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்கும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 2003-ஆம் ஆண்டு இந்திய உற்பத்தித் துறையின் ஏற்றுமதி 40 பில்லியன் டாலராகும். சீனாவின் 300 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய உற்பத்தித்துறையின் ஏற்றுமதி மிகக் குறைவு எனக் கொண்டாலும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போதைய வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2012-ல் இந்திய உற்பத்தித் துறையின் ஏற்றுமதி 300 பில்லியன் டாலரை எட்டும் என்பது மற்றுமொரு நம்பிக்கை தரும் கணிப்பாகும். தாராளமயமாக்கலுக்குப் பிறகு நம்பிக்கையற்ற உணர்வில் முடங்கிக் கிடந்த இந்தியத் தொழிற்துறை அதிலிருந்து மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளதையே இப்புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. புதிய நம்பிக்கை, புதிய தொலைநோக்குத் திட்டங்களுடன் இந்தியத் தொழிற்துறை உலா வரத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்களையும் ஆராய வேண்டியுள்ளது.
மூலதனமிகு தொழில்களின் எழுச்சியாலோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களாலோ இம்மாற்றம் ஏற்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் தொடர்ச்சியான தாராளமயமாக்கல் நடவடிக்கையாலும், சந்தையில் காணப்படும் போட்டி மிகுதியாலுமே இவை நிகழ்ந்துள்ளன. கடந்த சில வருடங்களாகவே தீவிர சுயபரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இந்தியத் தொழிற்துறை, அதன் முடிவின் அடிப்படையில் அதிகப்படியான நிதி மற்றும் தொழில்நுட்ப சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பன்னாட்டுச் சந்தையில் களமிறங்கியது. மேலும் பெரும்பாலான இந்தியத் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையினை தாண்டிச் சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கியுள்ளமை ஆரோக்கியமான ஆரம்பம்.
இரண்டாவதாக, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஏற்பட்டு வரும் அமைதிப்புரட்சி. அதிலும் குறிப்பாக உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில்களின் வியத்தகு வளர்ச்சி. உதாரணமாக, 2002-ஆம் ஆண்டு மோட்டார் உதிரி பாகங்களின் ஏற்றுமதி 760 மில்லியன் டாலரிலிருந்து, 2003-ஆம் ஆண்டு 1 பில்லியன் டாலரை அதாவது சுமார் 25% வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. தொழில்நுட்ப மாறுதல்களை உள்வாங்கிக்கொணடு சந்தைத் தேவைக்கேற்றாற் போல் பொருள்களை உற்பத்தி செய்வதில் இந்திய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் திறன்படைத்தவை. இந்தியாவின் தற்போதைய உற்பத்திப் புரட்சிக்கு புதிய கொள்கைத் திட்டங்களுடன் செயல்படும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் முக்கியப் பங்கு அளித்து வருகின்றன.
தொழில்நுட்பத் திறன் படைத்த தொழிலாளர்களையும் தொழில்முனைவோரையும் அதிக அளவு கொண்ட நாடு இந்தியா என்ற கூற்றைப் புறக்கணித்து விட்டு உற்பத்திப் புரட்சியினை ஆராய்வது இயலாது. ஏனெனில் இவ்விரண்டும் பல சூழ்நிலைகளில் இந்தியாவிற்குச் சாதகமான விளைவை ஏற்படுத்தித் தந்துள்ளன. உள்நாட்டுச் சந்தையில் உயர்ந்து வரும் போட்டி, இந்தியா மற்றும் சீனாவின் சந்தைத் தேவையில் காணப்படும் விரைவான வளர்ச்சி மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் தளர்த்தப்படும் நடவடிக்கைகள் போன்றவை இந்தியத் தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கான உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவையினைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன. அதே வேளையில், இந்தியா சேவைத்துறையில் போதுமான அளவு தாராளமயமாக்கலை விரைவுபடுத்த வேண்டிய தருணமிது. இணையான சேவைத்துறைப் புரட்சியின்றி, உற்பத்திப் புரட்சி சாத்தியமில்லை.
சீனாவிற்கு ஒரு முதன்மை மாற்றாக இந்தியாவை, உற்பத்தித் துறையில் களமிறக்கும் பொறுப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இந்தியத் தொழில் நிறுவனங்களும் தொடர்ச்சியான செலவுக் கட்டுப்பாடு மற்றும் தர மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கையாண்டு உற்பத்திப் பணியினைச் செம்மைப்படுத்துவதில் கவனஞ் செலுத்துதல் வேண்டும். 3 கோடி கூடுதல் வேலைவாய்ப்பு மற்றும் 1% கூடுதல் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையிலான பொருளாதாரப் பயன்பாடுகளை அளிக்கவல்ல இவ்வுற்பத்திப் புரட்சிக்கு உகந்ததான சூழலை தயார்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கு உண்டு. குறிப்பாக, கூடுதல் துறைமுக வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பொது முதலீட்டை அதிகரித்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரிவுபடுத்துதல் மற்றும் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்துதல் போன்றவற்றைப் பட்டியலிடலாம்.
உலகப் பொருளாதாரத்தில் நிகழ்ந்துவரும் பல குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் இந்தியாவிற்கு, குறிப்பாக இந்தியத் தொழிற்துறைக்கு சாதகமானவைகளாகக் காணப்படுகின்றன. உதாரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடங்கியுள்ள திறன் படைத்த தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு பிரச்சினை உலகப் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையத்தை வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு மாற்றவல்லது. இதன்மூலம் கிடைக்கும் பொருளாதார ரீதியான பயன்பாடு என்பது, எந்த அளவு இந்திய அரசும் உள்நாட்டுத் தொழில்துறையும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து திறன் சார்ந்த உற்பத்திப் பணிகளையும் அவை தொடர்பான ஏற்றுமதியினையும் பெருக்குகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.
நன்றி: தினமணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நனவாகும் உற்பத்திப் புரட்சி - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இந்தியத், இந்திய, உற்பத்திப், பில்லியன், உற்பத்தித், ஏற்றுமதி, இந்தியா, உற்பத்தி, பொருளாதார, கூடுதல், அளவு, திறன், குறிப்பாக, தொழிற்துறை, நம்பிக்கை, பன்னாட்டு, ஆண்டு, வளர்ச்சி, சிறிய, சந்தையில், நடுத்தரத்