முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » நிதி மூலதனத்தின் கோரப்பிடியில்...
பொருளாதாரக் கட்டுரைகள் - நிதி மூலதனத்தின் கோரப்பிடியில்...
- ஜா. மாதவராஜ் & சு. வெங்கடேசன்
மிகச் சரியாகச் சொன்னால், சோவியத் வீழ்ச்சியையொட்டியே உலகமயமாக்கல் ஒரு பாய்ச்சல் வேகத்தோடு உலகைச் சுழற்ற ஆரம்பித்தது.
1970 மற்றும் 80களில் முதலாளித்துவ நாடுகளில் தொழில் உற்பத்தி குறைந்து, முதலீடுகளுக்கு லாபகரமான வாய்ப்புகளும் குறைந்து, வந்தது. எனவே சர்வதேச அளவில் முதலீடு செய்து மேலும் மேலும் லாபக் குவியலை நோக்கிச் செல்ல முதலாளித்துவம் முன்னைவிட அதிக நிர்ப்பந்தத்தில் இருந்தது. இந்த நேரத்தில், சோஷலிச உலகின் பின்னடைவானது மொத்த உலகின் பொருளாதார மேலாதிக்கத்தை இவர்களின் கைகளுக்குள் எளிதில் கொண்டு வந்து சேர்த்தது. நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மூலதனத்தின் பிடியில் உலகை முழுமையாகக் கொண்டு வருவதற்குத் துணையானது. ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டமான உலகமயமாக்கலின் நெடுங்கதவுகள் மூன்றாம் உலகநாடுகளின் இரத்த நாளங்களை கிழித்துக்கொண்டு முற்றிலுமாக திறந்துவிடப்பட்டன.
ஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீபரீதத்தை நிகழ்த்திக் காட்டும் சக்தியே நிதி மூலதனம்.
மூலதனம் அதன் தோலை உரித்துக்கொண்டு ''நிதிமூலதனமாக'' உருவெடுத்திருக்கிறது. இந்த நிதி மூலதனம் சர்வ வல்லமை கொண்டவையாக அதன் இயல்பிலேயே இருக்கின்றன. தன்னை உலகின் ஒவ்வொரு துகளிலிருந்து சேகரிப்பதும், மேலும், மேலும் வளர்ப்பதுமே அதன் பிறவி நோக்கமாக இருக்கிறது.
தேசங்களையும், எல்லைகளையும், மிகச் சுதந்திரமாகத் தாண்டுகிறது. இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான், சுதந்திரச் சந்தை, உலகமயமாக்கல் எல்லாம்.
இந்தியாவில் தயாரித்தால் 50 ரூபாய் ஆகும். ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ரூபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதி மூலதனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன. இதன் மூலம் அந்நியச் செலவாணியாய் கிடைக்கும். அமெரிக்க டாலர்கள் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவும், கல்வி கொடுக்கவும் பயன்படாது. மாறாகக் கடனை அடைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும், தொழில் நுட்பம் வாங்குகிறோம் எனவும் மீண்டும் அமெரிக்காவுக்கே போய்ச் சேரும்.
சரி. அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படுவதால் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்று ஒரு வாதம் முன் வைக்கப்படலாம். ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும்போது இந்தியாவில் ஏற்கெனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். விளம்பரம், அரசின் சலுகைகள், அசூரத்தனமான தொழில் நுட்பத்தின் முன்னால் நிற்க முடியாமல் சடசடவென்று உதிர்ந்து போகும். மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் அந்தத் தொழிலில் அந்த பன்னாட்டுக் கம்பெனியே சர்வ ஆதிக்கமும் பெற்றிருக்கும்.
ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் குப்பையெனத் தூக்கி எறியப்பட்டு இருப்பார்கள். பன்னாட்டுக் கம்பெனியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின்னால் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வின் தவிப்புகள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன.
உலகமயமாக்கல் மூலதனத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு பன்னாட்டுக் கம்பெனி லண்டனில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். எனவே அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு வேறோரு நாட்டில் குறைவான ஊதியம் கொடுத்து திறக்கலாம். சுதந்திர வாணிபம் அதற்கு முழு உரிமை கொடுத்திருக்கிறது. ஆனால் குறைவான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிலிருந்து அதிகமான ஊதியம் கொடுக்கப்படும் ஒரு நாட்டிற்கு ஒரு தொழிலாளி தனது உழைப்பை அவ்வளவு எளிதில் கொண்டு சென்றிட முடியாது பல விதிகளும் நிபந்தனைகளும் உண்டு. சுதந்திர வாணிபத்தின் சூட்சுமம் இதுதான்.
நிதி மூலதனத்தின் வேகத்தோடுதான் உலக மயமாக்கல் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. உலகமயம் என்பது ஆக்க பூர்வமானது அல்ல என்பதற்கு முக்கிய காரணமே, நிதிமூலதனம், ஓட்டுகிற வாகனமாக அது இருப்பதால்தான், தனக்கு தடங்கலாக நிற்கும் எதையும் அது தகர்த்து முன்னேறுகிற மூர்க்கத்தனம் கொண்டது. மூன்றாம் உலக நாடுகளில் இருக்கக் கூடிய பலவீனமான சட்ட திட்டங்களும் இந்த பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வசதியாக இருக்கிறது. அல்லது தனது அதிகாரத்தால் அந்த நாட்டின் சட்டங்களைக் கூட அரசியல் ரீதியான தலையீடுகளால் பலவீனப்படுத்தும். அதற்குத்தான் இருக்கவே இருக்கின்றன உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் என்னும் மும்மூர்த்திகள்.
இந்த மும்மூர்த்திகளின் மும்முனை அதிகாரங்களால் உலகமயமாக்கலின் கொள்கைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சினையில் தலையிடும் உரிமைகளைத் தன்னகத்தே கொண்ட அமைப்பாக உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் உள்ளன. ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக உருவாக்கப் பட்ட இந்த அமைப்பின் கடன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் நாடுகள், பொருளாதாரத் துறையில் மூச்சமுட்டும் மரண அபாயத்தை சந்திப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எந்தவொரு நாடும் சர்வதேச நிதி நிறுவனத்தில் உறுப்பினரான பின்புதான் உலக வங்கியில் உறுப்பினராக முடியும். இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு சமமான வாக்குகள் என்பது இல்லாமல் பணக்கார நாடுகளே அதிக வாக்குகளைக் கொண்டுள்ளன. அமெரிக்கா மட்டும் 19.3 சதவீதமான வாக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தவொரு முக்கிய முடிவுகளுக்கும் 85 சதவீத வாக்குகள் தேவை. அதாவது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாது.
காட் அமைப்பின் புதிய அவதாரமான உலக வர்த்தக அமைப்பானது நிர்வகிக்கவும், தீர்மானிக்கவும், தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்த பலமான அமைப்பாக 1995ல் உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார மைய அச்சை முறிப்பதையே இலக்காகக் கொண்டு இது தனது கொள்கைகளை முன் வைக்கிறது.
அமெரிக்காவின் பின்னால் நின்று பன்னாட்டுக் கம்பெனிகள் உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் என்னும் பரிவாரங்களோடு உலகை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழைநாடுகளிலும் நிறுவுவதால் அங்கு சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிய அளவில் ஆபத்து நேரிடுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த அலட்சியமாக இருக்க முடிகிறது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி தங்கள் லாபத்தை எள்ளளவும் குறைத்துக்கொள்ள அவை ஒருபோதும் விரும்புவதில்லை. அந்த நாட்டுமக்களும், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் அவர்களுக்கு அற்பமானவையே! போபாலை நாம் மறந்துவிட்டோம். அந்த நள்ளிரவில் யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க கம்பெனியிலிருந்து கசிந்த விஷவாயு விடிவதற்குள் போபால் நகரத்து மக்களை பிணங்களாக உதிர்த்துப் போட்ட கொடூரம் நம் நினைவுகளின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வருத்தமும், சிறு தண்டனையும், இல்லாமல் யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் தன் தொழிலை வழக்கம் போல் நடத்திக் கொண்டிருக்கிறான்.
மூன்றாம் உலக நாடுகளும், வளரும் நாடுகளும் இந்த சுதந்திரச் சந்தையில் போய் விழுந்து, நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகி, உலக வங்கியிடம் மேலும், மேலும் கடனைத் திருப்பிக் கொடுக்க அவைகள் இடும் கட்டளைக்கு சிரம் தாழ்த்தி பணிந்து கூன்விழுந்து கிடக்கின்றன.
அத்வானிகளுக்கும், சந்திரபாபு நாயுடுகளுக்கும், ஜெயலலிதாக்களுக்கும் இவை தெரியாமல் இல்லை. அமெரிக்காவோடு தங்கள் பணிவான உறவுகளை வளர்த்துக் கொண்டு கக்கூஸ் முதல், கம்ப்யூட்டர் வரை உலகவங்கியிடம் கடன்கள் வாங்கிக் கொண்டு வெட்கமில்லாமல் மக்களுக்காகவே தாங்கள் வாழ்வதாகவும், சிந்திப்பதாகவும், செயல்படுவதாகவும் வித்தைகள் காட்டுவார்கள்.
''சுதந்திரச் சந்தை'' ஆரோக்கியமான போட்டி என்றெல்லாம் நமது ஆட்சியாளர்கள் மக்களிடம்போக்கு காட்டுவார்கள். இது ஒருவழிப் பாதையாகவே இருக்கிறது. திருப்பூர் பனியன்களுக்கு அமெரிக்க மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு சிறு முன்னேற்றத்திற்கான அசைவுதான் அது. அதைக்கூட சகித்துக் கொள்ளமுடியவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. உடனே அமெரிக்கா பனியன் இறக்குமதியை நிறுத்தியது. சொன்ன காரணம் சாத்தானின் வேதமாக ஒலிக்கிறது. ''இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை கெடுத்துக்கொண்டு அந்த பனியன் தயாரிக்கப்படுகிறது. அந்த துயரத்தை நாங்கள் எப்படி இறக்குமதி செய்வது'' என்பதுதான்.
அதுபோலத்தான் நம்மூரில் தயாரிக்கப்படும் பீடிகளுக்கு அமெரிக்கர்களிடம் கிராக்கி வந்தபோது ''குழந்தைகளின் உழைப்பில் தயாரிக்கப்படும் இந்த பீடியை மனிதாபிமானமிக்க நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது'' என்றது.
இந்த போட்டி ஒரு விசித்திரமான பரமபதம் போல. நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் காய்கள் உருட்டும்போது பாம்புகள் கடித்து அதல பாதாளத்தில் மீண்டும் மீண்டும் விழும். அவர்கள் காய்களை உருட்டும்போது மட்டும் ஏணிகள் வந்து தயாராய் இருக்கும். நிதிமூலதனம் செய்யும் கண்கட்டு வித்தை இது. விபரீதமான மாயா பஜார்.
இந்த நிதிமூலதனத்தின் பெரும்பங்கு தனியார் கைகளில்தான் இருக்கிறது. எனவே, நாடுகள், அதன் மக்கள், அவர்களின் நடவடிக்கைகள், தேவைகள் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாய் பன்னாட்டுக் கம்பெனிகளை வைத்திருக்கும் சில தனியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் அமெரிக்க அரசியல் முதற்கொண்டு உலகின் அனைத்து விவகாரங்களிலும் தங்கள் நலன் காக்க தலையிடுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிதி மூலதனத்தின் கோரப்பிடியில்... - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நிதி, அந்த, பன்னாட்டுக், மூன்றாம், அமெரிக்க, கொண்டு, ஊதியம், மேலும், சர்வதேச, தங்கள், தொழில், நிறுவனம், உலகின், இந்தியாவில், இருக்கிறது, அதிக, செய்து, முடியாது, என்பது, என்னும், இல்லாமல், நாடுகள், தனது, வர்த்தக, முக்கிய, கம்பெனிகள், கொடுக்கப்படும், சுதந்திரச், மூலதனம், உலகமயமாக்கல், அளவில், மீண்டும், இங்கு, கம்பெனி