முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » "அமர்த்யா சென்னின் பொருளியல் பார்வை"
பொருளாதாரக் கட்டுரைகள் - "அமர்த்யா சென்னின் பொருளியல் பார்வை"
- சந்துஷ்
1933இல் வங்காளத்தில் பிறந்த அமர்த்யா சென் இரவீந்திர நாத் தாகூரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சாந்திநிகேதனில் தனது கல்வி வாழ்வைத் தொடங்கினார்.
நோபல் பரிசு பெற்ற ஆறாவது இந்தியர் இவர். பொருளியல் நோபல் பரிசு பெற்ற முதலாவது ஆசிரியர். 1943இல் ஏற்பட்ட மாபெரும் வங்காளப் பஞ்சம், ஒன்பதை வயதுச் சிறுவனாக இருந்த சென்னின் குடும்பத்தையும் பாதித்தது. பஞ்சம் பற்றிய அவரது ஆழமான ஆய்விற்கு அந்நாள் அனுபவங்களும் நினைவுகளும் ஊற்றாய் அமைந்தன என்கிறார் அவர்.
அதற்கு முன் கொஞ்சம்.....,
3 பில்லியன் மக்கள் (அதாவது உலகச்சனத்தொகையில் ஏறக்குறைய அரைவாசியினர்) 2 டொலரை நாட் சம்பளமாகப் பெறுகின்றனர்.
1.3 பில்லியன் மக்கள் ஒரு டொலரை நாட் கூலியாக பெறுகிறார்கள். இது 2015இல் இரண்டு பில்லியனாக உயரலாம்.
உலக மக்களில் முக்கால் பகுதியினர் கிராமங்களில் வாழுகின்றனர்.
1.5 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லை. ஒரு நாளுக்கு தேவையான நீரின் அளவு 1950இல் இருந்ததை விட 50 மடங்குகள் அதிகரித்துள்ளது.
இரண்டு மில்லியன் மனிதர்கள் மின்சாரம் இல்லாது வாழ்கின்றனர்.
130 மில்லியன் பிள்ளைகளுக்கு பாடசாலை வசதிகள் இல்லை. காலமெல்லாம் கல்வியறிவில்லாமல் வாழ வேண்டியுள்ளனர்.
தென்னாசியாவில் 43% மான சனத்தொகையினர் பட்டினியால் வாடுகின்றனர். தென்கிழக்காசியாவில் இது 26%. சகாராப்பகுதி ஆபிரிக்காவில் இது 39%. 2015ல் இதை அரைவாசி ஆக்குவதே பெரிய விசயம்.
இனி....,
பாரம்பரியப் பொருளாதாரக் கல்வியில் வளங்கள், சனத்தொகை, செல்வங்கள் பற்றிப் பாடங்கள் உண்டு. வறுமை பற்றியும் பஞ்சம் பற்றியும் ஒரு அத்தியாயம் இல்லை.
பஞ்சத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள்:-
1. சனத் தொகை.
2. உற்பத்திக் குறைவு.
உணவுப் பற்றாக்குறை மட்டுமே பஞ்சத்திற்குக் காரணமாகாது என்கிறார் சென்.
1. மக்களின் உணவைப்பெறும் தகமை. (இயலுமை)
2. ஜனநாயகமற்ற - சமூக நிலைமைகள். என்பனவற்றின் தாக்கம் அதிகம் என்கிறார்.
உணவிருந்தும், பெறும் இயலுமை இழந்தால் பஞ்சம் நேரும். கல்வியறிவு, சுகாதாரம், பெண்கள், கல்வி, சுத்தமான குடிநீர் என்பன மக்களின் இந்த இயலுமையை பெரிதும் தீர்மானிக்கின்றன என்கிறார் சென். இத்துடன் ஆசிய சமூகங்களில் நிலவும் சாதிய நடைமுறைகளும் இயலுமையைக் கட்டுப்படுத்துகின்றன. ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலை, சர்வாதிகார ஆட்சி - இந்த நிலைகளின் கீழ் உணவிருந்தும் பஞ்சங்களை ஆய்வு செய்த சென் தரவுகள் மூலம் வெளியிடுகிறார்.
வங்காளம் (1943), பங்களாதேஷ்(1974), பின்னாளில் நடந்த சோமாலியாப் பஞ்சம் என்பன முக்கிய உதாரணங்கள்.
பங்களாதேஷ் 1974
வெள்ளப்பெருக்குக் காரணமாக அருவி வெட்டு வேலைகள் தடைப்பட்டுப் போக அருவி வெட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் வருவாய் இல்லாமல் போனது. இந்தியா இலங்கை நாடுகளில் இருபோக விளைச்சல்கள்தான். ஆனால் பங்களா தேசில் மூன்று போகங்கள் நெல் விளையும்.
அரிசிக்கு இங்கு தன்னிறைவு உண்டு. 1972 இலிருந்து 1975 வரையான காலத்தைக் கணக்கெடுத்தால் இக்காலங்கள் விளைச்சல் கூடிய காலங்களாகவிருந்தன. அதிசயம் என்னவென்றால் பஞ்சம் ஏற்பட்ட 1974இல் தான் அமோகமான விளைச்சல் கிடைத்தது. அப்படி இருந்தும் அங்கு ஏன் பஞ்சம் வந்தது? அரிசி வாங்குவதற்கான காசு அருவி வெட்டும் தொழிலாளர்களிடம் இருக்கவில்லை.
உணவு விநியோகம், பாதிக்கப்பட்டவர்களிற்கான நிவாரணம் என்பன நடைபெறவில்லை. இவைகளை வெளிக்கொண்டு வரும் சூழ்நிலைகளும் அப்போது நிலவிய சர்வாதிகார ஆட்சியில் சாத்தியமாகவில்லை.
சோமாலியா (90கள்)
1980இல் உலகவங்கி தனது கடனை மீளப் பெறுவதற்கான நிபந்தனைகளை சோமாலியா மீது திணித்தது. சமூக நலத் திட்டங்களை வெட்டுமாறும் பணமதிப்பைக் குறைக்கு மாறும் நிர்பந்தித்தது. இதனால் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. இறக்குமதிப் பொருட்கள் குவிந்தன. இப்படி வெளி நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளிற்கு ''உதவி'' என்ற பெயரில் அமெரிக்கா தான் விற்க முடியாத கோதுமையையும், அரிசியையும் கடனாகக் கொடுத்தது. மலிவாகக் கிடைத்த வெளிநாட்டுத் தானியங்கள் அவர்களின் வழமையான உணவுகளான சோளம் போன்றவற்றின் உற்பத்தியைக் குறைத்ததோடு அந்த உணவுப் பொருட்களை விற்க முடியாத விவசாயிகளை வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளியது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கால்நடைகளின் நாட்டு வைத்திய முறைகளிற்குப் பதிலாக மேற்கத்திய வைத்திய முறைகளும் மருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகச் சந்தையில் இந்த மருந்துகளின் விலைகள் உயர்ந்த பொழுது கால்நடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் அதில் தங்கியிருந்தோரின் வருமானங்களும் குறைந்தது. இந்த நடவடிகையினால் நன்மையடைந்தோர் இராணுவ அதிகாரிகள், பெரும் வியாபாரிகள் மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளும் தான். பாரம்பரிய விவசாயிகளும், மந்தை வளர்ப்போரும் வருமானங்களை இழந்து கொள்வனவுச் சக்தியையும் இழந்து வறுமைக்கும் பஞ்சத்திற்கும் ஆளாயினர்.
1989 ஆம் ஆண்டு ஏற்றுமதிக்காகக் கொடுக்க வேண்டிய வெளிநாட்டு செலவாணியை கடன் வாங்கியே கட்டவேண்டிய சூழலில் சோமாலியா இருந்தது. 1970இல் இருந்த கூலியிலும் பார்க்க 90% வீதத்தால் குறைந்தது. ஒருவரின் சம்பளம் 3 டாலராகக் குறைந்தது. சுகாதாரம் மற்றும் கல்வி முற்றாகச் சீர் குலைந்து போனது. 1982 ஆம் ஆண்டு ஒரு மாணவனுக்குச் செலவு 82 டாலர்கள். இது 90ல் 4 டாலராகக் குறைந்தது.
சோமாலியாவிலும் ''இயலுமை'' முடக்கப்பட்டதால் பஞ்சம் ஏற்பட்டது.
1958ற்கும் 1962ற்கும் இடையில் இரு பெரும் பஞ்சங்கள் சீனாவில் ஏற்பட்டன. மில்லியன் கணக்கான மக்கள் மடிந்தனர். இந்தக் காலத்தில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் உணவுற்பத்தி அதிகமாக இருந்தது. தேவைக்கு அதிகமாக 100 மில்லியன் தொன் உணவு இருப்பில் இருந்தது. பிரதேசங்களிற் கிடையிலான இணைப்புகள் இல்லாமை. கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றிய பிரச்சனைகள் என்பனவற்றால் உணவிருத்தும் அங்கு பஞ்சம் ஏற்பட்டது.
நோபல் பரிவை வைத்து சென்னை முக்கியப்படுத்தல் அல்ல இந்த அறிமுகத்தின் நோக்கம். பொருளாதார நோபல் பரிசு கொடுக்கப்படும் விதமும் சூழலும் சென்னின் பங்களிப்பிற்கான முக்கியத்துவத்தை அறிவிக்கின்ற்ன. 1951 இல் ''பொருளாதார தீர்மானங்களில் பெரும்பான்மையினரின் தீர்மானங்கள் அவசியமில்லை'' என்பதை வலியுறுத்தும் ''Impossible Theorem'' ( சாத்தியமற்ற தத்துவம் ) வெளியிட்ட கெனத் அறோவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் ஆளுமையை பரிந்துரை செய்யும் தத்துவமாகும்.
1977இல் பங்குச் சந்தைகளில் இலாபங்களை முன் கூட்டியே அனுமானிக்கும் வாய்ப்பாட்டை முன் மொழிந்த இரு அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் பயன்படுத்திய அதே கணித பொருளியல் தரவுகளையும் வாய்ப்பாடுகளையும் கொண்டு பஞ்சத்தை ஆய்வு செய்தார் அமர்த்யா சென்.
பொருளாதாரம் தத்துவம், கணிதம் ஆகியவற்றின் துணை கொண்டுதான் சென்னும் பிரச்சனைகளை அணுகினார். அத்துடன் பாரம்பரிய பொரளாதார ஆய்வுகளின் தரவுகளை மறுதலித்து வேறோர் தளத்திலிருந்து அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் தளத்திலிருந்து தரவுகளை அவர் எடுக்கின்றார். இவர் ஒரு வித அறப்பரிமாணத்தைப் பொருளாதரத்திற்குக் கொடுக்க முனைகிறார். ஆசியப் பெறுமதிகளில் இருந்து நிறைய உதாரணங்களை எடுத்து தற்போது நிலவுப் பயன்பாட்டு பொருளியலை எதிர்க்கிறார். ''சமூக அரசின் அடிப்படை என்பது அடித்தள தனிமனிதரின் அபிலாசை ஆக வேண்டும்'' என்ற ஜோன் றாவெலின் அறத்தினைப் பல இடங்களில் விதந்துரைக்கின்றார்.
பெரும்பான்மை சிறுபான்மை என்ற பிரிப்பாய்வில் சிறுபான்மையிலும் சிறுபான்மையானவரின் தெரிவுகளும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டுமென்கிறார் சென். பொதுவாக சராசரி தனிமனித வருமானமானது எப்படிக் கணிக்கப்படுகிறது?
ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அதன் சனத் தொகை 500.
50 பேர்களுக்குதோட்டங்களும் வீடுகளும் தொழில்களும் சொந்தமாக இருக்கின்றன்.
இந்த 50 பேரின் வருமானம் 200,000 - (தலைக்கு 4000)
மிகுதி ஜனங்களின் வருமானம் 45,000 - (தலைக்கு 100)
சராசரி தனிமனித வருமானம் 245000/500 = தலைக்கு 490 ஆகும். இந்த பெறுமதி உண்மை நிலையைச் சொல்வதில்லை. தேசிய வருமானத்தையும் இப்படியே கணக்கிடுகிறார்கள்.
இந்த முறைக்கு மாற்றீடாக சென் தன் சூத்திரங்களை முன் வைக்கிறார். வருமான வித்தியாசம் என்ற அலகினை அவர் சூத்திரங்களில் முன் வைக்கிறார். தனது சூத்திரங்களிற்கான தரவுகளை அவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடமிருந்து எடுக்கிறார்.
ஒரு நாட்டிலோ அல்லது ஒரு பிரதேசத்திலோ வறுமை குறைந்து வருகிறதென்றால் அதை எந்த அளவு கோலை வைத்து அளப்பது?
வெவ்வேறு நாடுகளில் சமூகநலப் பங்கீடு அல்லது ஒரு நாட்டின் பங்கீட்டு மாற்றங்கள் பற்றி அறிய அந்த நாட்டு வருமானங்கள் பற்றிய சுட்டெண்கள் தேவைப்படுகின்றன. அதே மாதிரி சமூக ஏற்ற தாழ்விற்கான சுட்டெண்களும் அவசியமாகின்றன.
வறுமைக்கான சுட்டெண்
P=H*[I+(I-1)*G]
P= வறுமைக்கான சுட்டெண்
H= வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களின் தொகை
I= வருமானப் பங்கீடு
G= வருமானச் சமமின்மையின் விகிதம்
வருமானச் சமமின்மையின் மாற்றங்கள், பங்கீட்டு மாற்றங்கள் போன்ற நுணுக்காமான விடயங்கள் வறுமையின் அளவினைக் காட்டும். வறுமைச் சுட்டெண்ணில் ஏற்படுத்தும் தாக்கங்கள் இங்கு துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன. இத் தரவுகள் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து பெறப்பட்டவை.
அமர்த்யா சென் முன் வைத்த கருத்துக்கள் ஏலவே ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மார்க்சிய நோக்கின் அடிப்படையில் பலரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதுடன் இவரது கருத்துக்கள் பல வேளைகளில் இடைக்காலத் தீர்வுகளைச் சொல்லும் சீர்திருத்தக் கருத்துக்கள் என்றும் நடைமுறைக் கொவ்வாத பல்கலைக்கழக ஆய்வுகள் என்ற அளவில் முடிந்து விடும் பயன்பாட்டுச் சமன்பாடுகள் என்றும் பல விமர்சனங்கள் ஒரு புறமும், உலகமயமாக்கல் திறந்த பொருளாதாரக் கொள்கை இவை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு. இந்த நிலையில் சென்னுக்கு நோபல் பரிசு கொடுப்பதற்கான பின்னணி தொடர்பான நியாயமான சந்தேகங்கள் மறுபுறமும் இருக்கின்றன.
எனினும் தமது சுரண்டலை மிக லாவகமாக மூன்றாமுலக நாடுகளில் நடத்தி வரும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் ஒரு அறிவியல் யுத்தத்தையும் தனது பிரசாரங்கள், கல்வி முறை, தொடர்பு சாதனங்கள் போன்ற ஆய்தங்களைத் தாங்கிச் செய்து வருகின்றனர்.
தமது உள்நாட்டு பிரஜைகளின் மிதமிஞ்சிய நுகர்வு வாழ்க்கை முறையை அவர்கள் எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் இருக்கும் முகமாய் தொடர்பு சாதனங்களையும் கல்வி முறையையும் தந்திரமாக பயன்படுத்தும் இந்த நாட்டு அரசுகளின் பிரச்சாரங்களை அறிவியல் ரீதியாக எதிர்கொள்ளம் ஆய்வுகளும் பொய்களை அம்பலப்படுத்தும் பல எழுத்துக்களும் மூன்றாமுலக தரப்பிலிருந்து வெளி வரத் தொடங்கியுள்ளது.
உலக வறுமைக்கு சனத்தொகைப் பெருக்கத்தை முக்கிய காரணமாகக் காட்டுவது மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான இவர்களது பிரச்சாரங்கள் எல்லாம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் பஞ்சம் பட்டினி என்பவற்றிற்கு இவர்களின் வியாக்கியானங்கள் தொடர்பாக பதிலடி கிடைக்கத் தொடங்கியுள்ளது மூன்றாமுலகில் சுரண்டலுக்கெதிரான குரலிற்குப் பலம் சேர்க்கும் அறிவியல் அம்சங்களை இனங்கண்டு கொள்வது, அந்த அறிதலை விரிவுபடுத்தும் எதிர்ப்புக் குரலிற்கு மேலும் உரப்பூட்டவும் உதவுமே அன்றி தீமையாகாது. இந்த வகையில்தான் அமர்த்யா சென் பற்றிய சிறிய அறிமுகம் அமைகிறது.
நன்றி: அசை
தேடல் தொடர்பான தகவல்கள்:
"அமர்த்யா சென்னின் பொருளியல் பார்வை" - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பஞ்சம், சென், நோபல், முன், பரிசு, கல்வி, குறைந்தது, மில்லியன், அமர்த்யா, கீழ், வருமானம், சமூக, பற்றிய, தனது, அவர், என்கிறார், நாட்டு, அந்த, அறிவியல், ஏற்பட்ட, தரவுகளை, தொடர்பான, மாற்றங்கள், தலைக்கு, சோமாலியா, கோட்டிற்கு, கருத்துக்கள், நாடுகளில், தொகை, வறுமை, இல்லை, மக்கள், இயலுமை, என்பன, பில்லியன், அருவி, முக்கிய, ஆய்வு, தான்